Followers

Showing posts with label டிராட்ஸ்கி மருது. Show all posts
Showing posts with label டிராட்ஸ்கி மருது. Show all posts

Tuesday, February 18, 2014

ooஓவியர் மருது - நவீன கலைவெளியின் விளைபுலம் 00[பகிர்வு ]





மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயர் நூலின் இரண்டாவது
அத்தியாயம் இப்படித் தொடங்கும்:

“சனிக்கிழமை காலைப் பொழுது தொடங்கியிருந்தது. கோடை உலகம் புதுப்பொலிவோடு ஒளிர்ந்தது; ஜீவன் பொங்கி வழிந்தது; ஒவ்வொரு இதயத்திலும் பாடல் ஒன்று பதிந்திருந்தது;

அந்த இதயம் இளமையாயிருப்பின் உதடுகளில் இசை கசிந்து
கொண்டிருந்தது. ஒவ்வொரு முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்;
எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் வசந்தம் குடிகொண்டிருந்தது. லோகஸ்ட் மரங்கள் பூத்துக் குலுங்கின.  அந்த மலர்களின் வாசம் காற்றில் கலந்திருந்தன.”

மருதுவின் இருப்பில் மார்க் ட்வைனின் இந்தக் கிராமத்து இதமும் வசந்தமும் கலந்திருக்கும். ட்ராட்ஸ்கி மருதுவின் செயல்பாடுகளிலும் உரையாடல்களிலும் உடனிருக்கும்போது பலமுறை இந்த வரிகள் என் நெஞ்சில் நிழலாடுவதை உணர்ந்திருக்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் மருதுவுடன் நிகழ்ந்த சந்திப்புகள் எல்லாம் எனக்கு வைகாசி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன. மணிக்கதவின் தாழ்திறப்பாகத் தொடங்கும் மருதுவின் நேர்ப்பேச்சு, உலகை ஏகதேசமாக்கிக் காட்டும்; தமிழ்த் தொன்மங்களை பேசியும் எழுதியும் சித்திரங்களாக்கியும் சிலாகிக்கும்; அவரது அம்மா
வழி தாத்தா சோலைமலையின் பிம்பம் எழும். அவருடன் நேற்றைய திரை உலக ஆளுமைகளின் முகங்கள் வந்து போகும்.


அவரது கோரிப்பாளையம் வீட்டின் இரண்டு தலைமுறை கலை இலக்கிய அரசியல் வரலாறு அதிர்ந்து கொண்டிருக்கும். அவரது கோட்டோவியங்களில் காணப்படும் தீர்க்கமான கோடுகளும் முகங்களும் நமது வேர்களை அடையாளப் படுத்துவதைப் போல அவரது உதடுகள் தமிழர் சார்ந்த கலை
அரசியல் பண்பாட்டு வெளிகளில் அவரது நிலைப்பாட்டை தீர்க்கமாக உச்சரித்துக் கொண்டிருக்கும். மொன்னைத் தன்மை அறியாதது அவரது மொழி;

எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் மருதுவுக்கு வெளிப்படையான மதிப்பீடுகள் உண்டு. அவரது உணர்வுகளுக்கும் உந்துதல்களுக்கும் வாழ்வியல் அறத்திற்கும் அப்பால் உள்ள எதையும் யாரையும் நிராகரிக்க அல்லது
புறக்கணிக்க அவர் தயங்குவதே இல்லை.

அவர் வாழ்வதும் வரைவதும் ஒரே தளத்தில்தான். வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்து வரும் உறுதியும் தெளிவும் துணிவும் அவரது பதின் வருவ வரலாற்றிலேயே இடம்பிடித்துள்ளன. ‘கல்லூரிக் கல்வி எனக்கு பிரதானமில்லை’ என்று தனது தந்தையிடம் பிரகடனப்படுத்தும் சொற்கள் பொருள் பொதிந்தவை. தனது வாழ்க்கையைத் தானே தகவமைத்துக் கொண்டவர் அவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா தனது ஆசான் மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘அவர் தமிழின் விளைபுலமாக’ விளங்கினார் என்று குறிப்பிடுவார். என்னைப் பொறுத்தவரை நவீன கால தமிழக கலைப் பெருவெளியின் விளைபுலமாக மருது வாழ்கிறார்
என்று எவ்வித தயக்கமுமின்றி உரத்துச் சொல்லமுடியும். அப்படிச் சொல்வதற்கான காரணிகள் நிராகரிக்க முடியாதவை.

கணினியை அறிவியல் உலகத்திற்கான அதிசயப் பொருளாகக் கண்டு காத தூரம் விலகியிருந்த தமிழ்க் கலையுலகில் கணினி தமிழ்க் கலையுலகின் விரைவான விரிவாக்கத்திற்கான திறவுகோல் என்று பேசியும் பயன்படுத்தியும் உணர்த்தியவர் மருது. ஒரு காலக்கட்டத்தில் தமிழகத்தில் டிஜிட்டல் என்ற சொல்லை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கலைஞன் மருதுவாகத்தான் இருக்க முடியும். தமிழில் உலகத்தரமான காமிக்ஸ் புத்தகங்களின் தேவையை  கிராஃபிக்ஸ் நாவல் பற்றிய அறிமுகத்தை இவை சார்ந்த மாபெரும் உலகக் கலைஞர்களை ஓயாமல் ஓதிக் கொண்டிருந்தவரும்
இவரே.

வருங்காலத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பின் பெரும்பகுதி ஒரு பெரிய அறைக்குள்ளே முடிந்துவிடும் என்று அலறிக் கொண்டிருந்த கலைஞனும் இவரே. அனிமேஷன் செய்யப்போகிற அதிசயங்களை திரைப்படத் துறை
நண்பர்களிடம் ஏன் சொல்கிறேன்? எதற்குச் சொல்கிறேன் என்று வினாக்களை எழப்பியபடி 20 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசிவந்த விஷயங்கள் அவரின் தொடுவான எல்லையை தீர்மானிக்க முடியாதபடி நம்மைத் தடுமாறச்
செளிணிகின்றன.

சிற்றிதழ் கூடாரங்களில், நவீன இலக்கிய முகாம்களில் வான்காவும் டாலியும் வலிந்து பேசப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வந்த காலங்களில் மருது 19ஆம்
நூற்றாண்டின் ஈடு இணையற்ற பிரெஞ்சு ஓவியர் புகெரவ்வை   எனக்கு அறிமுகப்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் இழிபுகழைத் தவிர வேறோன்றும் காணாத அந்த மகா கலைஞனின் மனித உருவ சித்தரிப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் அந்த மனிதர்களின் நுட்பமான மனநிலையையும்
ஆளுமையையும் உணர்த்தும் மேதைமையை பேசிக் கொண்டிருந்தார்.

‘எழுத்தாளர்களுக்கு ஓவியர்கள் பக்கவாத்யகாரர்கள் அல்ல’ என்று பகிரங்கமாக பிரகடனம் செளிணித மருதுவுக்கு கலைஞர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை எல்லையற்றது. கலைஞனின் தனித்துவதத்திற்கும் சுதந்திரத்திற்கும் அறிந்தோ அறியாமலோ ஏற்படும் கடுகளவு பிசகைக் கூட அவர் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருமுறை தமிழ்நாட்டின் பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் தனது நூலுக்கான அட்டையை வடிவமைத்து தருமாறு மருதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
மருதுவின் வடிவமைப்பில் நாளுக்கொரு திருத்தங்களைச் சொல்லியதோடு முகப்பு ஓவியத்தின் வண்ணங்களிலும் சிலமாற்றங்களைச் செளிணியுமாறு கூறினார். அவர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டதோடு சரி.
குறுக்கீட்டை விரும்பாத மருது அந்த எழுத்தாளரை புறக்கணித்தார். வடிவமைத்த அட்டையை கிடப்பில் போட்டார். கடைசியாக மருதுவின் மனநிலையை உணர்ந்து தன் மீது ஏதேனும் வருத்தமா? என்று கேட்டார் அந்த பிரபல எழுத்தாளர்.

‘நீங்கள்தான் வாயால் எதையும் வரைந்துவிட முடியும் என்றால் நான் எதற்கு? கலைஞன் உங்கள் கையில் ஒரு கருவியல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்’ என்று காட்டமாகப் பதில் சொன்னார். இது கலைஞர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கான மருதுவின் அறைகூவல். 

மருதுவின் கலைப்பயணம் வானில் சீறிஎழும் வாணவேடிக்கைகளின் வேகத்தோடும் அவை வெடித்துச் சிதறி விண்ணை வண்ணமயமாக்கும் அழகோடும் தொளிணிவின்றித் தொடர்கிறது. மருது ஒரு இறைமறுப்பாளர். பெரியார் அவருக்கு மிகநெருக்கமான ஆசான். தந்தை மருதப்பன் ஒரு
ட்ராட்ஸ்கியிஸ்ட்; தொடக்கத்தில் காந்தி ஆஸ்ரமத்தில் ஓராண்டு காலம் தங்கி பணியாற்றியவர்; இலங்கையிலிருந்து தப்பி வந்த கொமீனா டி செல்வா, என்னம் பெரைரா ஆகிய இரண்டு ட்ராட்ஸ்கியவாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.

பீம்சிங் படங்களுக்கு கதை வசனம் எழுதிய சோலைமலை மருதுவின் அம்மா வழி தாத்தா. இவர்தான் மருதுவின் கலையார்வத்தை சிறுவயதிலேயே இனம் கண்டு அவரை ஊக்குவித்தவர். நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருதுவுக்கு பெரியப்பா
மகன். இத்தகைய குடும்பச் சூழலில் மருதுவின் கலை இலக்கிய வாழ்க்கை பயணப்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல நாற்றங்காலில் முளைவிட்ட பயிர் மருது. இந்த இளம் நாற்று எந்த நிலத்தில் பிடுங்கி நடப்படவேண்டும் என்பதையும் தான் அளிக்கப்போகும் விளைச்சலின் தரத்தையும் மகசூலையும் தீர்மானித்து வைத்திருந்தது.
முதல் முறையாக மருது சென்னைக்கு வந்தது அவரது உறவினர் திருமணம் ஒன்றிற்காக. அது அவரது பதின்பருவம் தொடங்கிய காலகட்டம். அவரை அழைத்துச் செல்ல நடிகர் எஸ். எஸ். ஆர் அவர்கள் ஒரு நீண்ட கார் அனுப்பி
வைத்திருந்தார். தனது குடும்பத்தினரோடு அந்த மோட்டார் வண்டியில் ஏறி முன்சீட்டில் அமர்ந்த மருதுவின் கண்களில் ஸ்டியரிங்வீலில் பதிந்திருந்த எஸ்.எஸ்.ஆர் என்ற வார்த்தைகள் இன்னும் அவரது நினைவில் உள்ளது. சென்னையில் அவர் பயணித்த அதே வண்டியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்
மரணமடைந்த தியாகராஜ பாகவதரின் உடல் திருச்சிக்கு எஸ்.எஸ்.ஆரால் எடுத்துச் செல்லப்பட்டது. இதை எஸ்.எஸ்.ஆர் சொல்லக் கேட்டறிந்திருக்கிறார் மருது. நாடறிய வாழ்ந்த கலைஞனின் அவலம் மிகுந்த கடைசிப் பயணத்துடன் தான் பயணித்த வாகனமும் சம்பந்தப்பட்டிருப்பதைச் சொல்லி மருது நெகிழ்ந்து போவார்.

மருதுவின் வாழ்க்கை சம்பவங்களாலும் மனிதர்களாலும் நிறைந்தது. தீவிர கொள்கைகளோடும் தீர்க்கமான முடிவுகளோடும் இயங்கும் மருது தனது சுயசிந்தனைகளை மையப்படுத்தியே பயணிக்கிறார். வறட்டு வாதங்களுக்கு அவர் இடம் தருவதில்லை. புற அடையாங்களை உவப்பதில்லை. அழகியல்
பார்வையும் அறிவியல் பார்வையும் அவரது வழித்தடங்கள்.

ஒருமுறை நான் சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்கு சிதம்பரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கலைஞன் ரோடின் பார்த்து வியந்த ஆடல்வல்லானுக்கு இரவு 3.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கியது. அற்புதமான அந்த
வெண்கலச் சிலைமீது குடம் குடமாக ஊற்றப்பட்ட தேன் வழிந்தோடியது. வழிகிற கெட்டித்தேன் நடராசரின் முகத்தை மறைத்து நின்றது. முகமற்ற முகத்துடன் நடனம்புரிந்த அழகில் ஆயிரம் மாயவித்தைகளை கண்டுணர முடிந்தது. மருது வரைந்த ஒரு நடராஜர் ஓவியத்திலும் நடராஜர் முகமற்ற
முகத்துடன் இருந்தார். மற்ற ஆராதனைகள் தொடர்ந்தன.

மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட திருநீற்றில் முகமற்றிருந்த நடராசர் மறுஒன்றிலாத ஒளிரும் முகத்துடன் காட்சியளித்தார். பிறகு வண்ண மலர்கள் தூவித் தொழுதனர். ஏறக்குறைய மூன்று மணி நேரம் இந்த ஆராதனை தொடர்ந்தது. இவையணைத்தும் முடிந்தபின் கோயிலை விட்டு வெளியே வந்ததும் முகமற்ற நடராசரைப் பற்றிப் மருதுவிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. காலை 7 மணி இருக்கும். கைபேசி மூலம் மருதுவை தொடர்பு கொண்டேன். அவர் குடும்பத்துடன் பொங்கலுக்காக காரில் மதுரை சென்று கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் பேசினேன்.

“இல்ல மருது. இன்றைக்கு சிதம்பரம் வந்திருந்தேன். நடராஜரின் ஆருத்ரா தரிசனத்திற்காக, மூன்று மணிநேரம் அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிலைமீது குடம் குடமாகத் தேனைக் கொட்டியபோது நடராஜரின் முகம் முழுதுமாகத் தெரியவில்லை. நீங்கள் வரைந்த முகமற்ற நடராஜரை இன்று நேரில் தரிசித்தேன். மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்த ஆராதனையில் அழகின் பேரலைகள் எழுவதை உங்களால் கண்டுகொள்ள முடியும். அடுத்த ஆருத்ரா தரிசனத்திற்கு நீங்களும் உங்களது பிரதம சீடன் கருணாநிதியும் மற்ற இளங்கலைஞர்களுடன் இதைக் காணவேண்டும்” என்று சொன்னேன்.

“ஆஹா பிரமாதம். இதுதான் நான் சொல்றேன். இது எல்லாமே ஒரு ’Theatrical Effect’. உங்களுக்கு பக்தி, எங்களுக்கு கலை. இதை நீங்க புரிஞ்சி வைச்சிருக்கிங்க. அங்கதான் நாம ஒண்ணு சேர்றோம்” என்று என்றைக்குமான ஏகாந்த கிளர்ச்சியோடு பேசினார்.

இறைமறுப்பாளரான மருதுவின் அழகியல் பார்வையில் எந்த வறட்டு தத்துவங்களுக்கும் இடமிருக்காது என்று நான் சொல்லுவது இதை வைத்துத்தான். ‘தரிசனம் என்பது தானாக நிகழ்வது’ என்பார் லா.ச.ரா.
எனக்கு கிடைத்த மருது தரிசனமும் அப்படித்தான். இந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே மருதுவை ஓவியர் என்ற அடைமொழியிட்டு குறிப்பிடவில்லை. நாயக்கர் மஹாலில் ஒரு தூணைக்காட்டி இதுதான் நாயக்கர் மஹால் என்று சொல்ல முடியுமா? அது பரமார்த்த குருவின் சீடர்கள்
யானையைப் பார்த்த கதைதான். உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு நிகழ்த்துக் கலைஞனாக மாறிவிடும் மருதுவின் பல்பரிமாணங்களை கண்டு கொண்டவர்களுக்கு வெறும் ‘ஓவியர் மருது’ என்ற விளி உவப்பாகாது. அவரது நெஞ்சில் தமிழ் மண்ணின் ஈரம் கசியும். அவரது நுண்மான் நுழைபுலத்தில் மேலைத் தேய நவீனங்களுடன்
ஆயிரம் கலைகள் பரவசப்படும்.



"அரசன்"






"2012 ல் ''

இத்தகைய கலைஞனின் வீட்டுக்கு கலைமாமணி மட்டும் வந்து கதவைத் தட்டிச் சென்றுள்ளது. ‘பத்ம’ங்களுக்கு இன்னும் பாதை தெரியவில்லையாம்.
‘நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்’ என்று வேண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்த பொழுது ஆஸ்கார் ஒயில்டு எழுதினான். இன்றைக்கு இந்த வாசகம் மருதுவுக்கும் பொருந்தும். ‘வாளோர் ஆடும் அமலை’ மூலம் கடந்த எட்டாண்டுகளில் மருதுவின் நவீன ஓவியங்கள் நூல் வடிவில் பதிவாகியுள்ளன. இதை வெளியிட்டு மருதுவுக்கு சிறப்பு செளிணிதிருக்கும் தடாகம் அமைப்பு சார்ந்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மிகுந்த கவனம் செலுத்தி அயராமல் இந்த நுலை உருவாக்கி மருதின் கலை ஆளுமையை பதிவு செளிணியும் கவிஞர். வெண்ணிலாவுக்கு எனது வணக்கங்கள். மருதுவுக்கு என்னை
ஆற்றுப்படுத்திய எனதன்புக்குரிய இளையபராதியை நினைவுகூர்ந்து அகமகிழ்கிறேன்.

கட்டுரை : முத்தையா நடராஜன் (சந்தியா பதிப்பகம்)


tks to artist jeevananthan

ஒரு கலைஞனை அவன் வாழும் காலத்திலேயே கொண்டாடுவது என்பது மிக உன்னதமான காரியம்.அதையும் உயரியமுறையில் செய்வதென்பது அதைவிட உன்னதம்.ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது பற்றிய நாற்பது கட்டுரைகளை மருதுவை நன்கு அறிந்த சிறந்த ஆளுமைகள் ஆத்மார்த்தமாக எழுதியுள்ளவை தோழர் அ.வெண்ணிலா,தோழர் முருகேஷ் ஆகியோரின் ஈடுபாடு மிக்க உழைப்பினால் “காலத்தின் திரைச்சீலை” என்று புத்தகமாக வெளி வந்துள்ளது.அவசியம் படிக்க வேண்டிய நூல்.  “அகநி”வெளியீடு,வந்தவாசி -94443 60241/04183-226543அதில் வந்துள்ள ஒரு நல்ல கட்டுரை.நண்பர் (சந்தியாபதிப்பகம்) நடராஜன் எழுதியது. - "ஜீவாநந்தன்"
Labels :  ஓவியர் மருது, டிராட்ஸ்கி மருது, காலத்தின் திரைச்சீலை,


Download As PDF

Monday, February 6, 2012

ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது - ஒரு நேர்காணல்




ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் நேர்காணல் இங்கு மறு பதிவாக வெளியிடுகிறேன் ஓவிய துறையில் அவரது அனுபவங்கள் அதன் மூலமாக நாம் அறியப்படவேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன. (நன்றி : கீற்று )


ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது நேர்காணல்: மினர்வா & நந்தன்




ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். மருதுவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கீற்றுவுக்காக உரையாடினோம். இரண்டு மணி நேரங்கள் நீண்ட அந்த உரையாடலில் இருந்து...




உங்க குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்களேன்...

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை கோரிப்பாளையம். என் குடும்பத்தோடு பூர்வீகம்னு சொன்னா அது அருப்புக்கோட்டை, காரியப்பட்டிக்குப் பக்கத்துலே இருக்கிற மருதங்குடிங்கிற கிராமம்தான். அங்கிருந்து எங்க தாத்தா காலத்துலே மதுரைக்குக் குடியேறினாங்க. அடிப்படையிலே விவசாயக் குடும்பம் எங்களோடது.

குடும்பத்துலே யாரும் கலை, இலக்கியத்தோட சம்பந்தம் இல்லாதவங்கன்னு சொல்லலாமா?


    அப்படி சொல்ல முடியாது. அப்பாவோட தாய்மாமன்கள் எல்லாம் அந்தக் காலத்துலே என்.எஸ்.கிருஷ்னணை வைச்சி விருதுநகர்லே நாடகம் போட்டவங்க. அம்மாவோட ஒரு சித்தப்பா, பேரு எம்.எஸ்.சோலைமலை, சினிமாவுலே முக்கியமான கதை - வசனகர்த்தாவா இருந்தாரு. பதிபக்தி, பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை-ன்னு பீம்சிங் இயக்கிய ‘ப’ வரிசை படங்களுக்கு கதை, வசனம் எழுதியது எங்க தாத்தாதான். அந்தப் படங்கள்லே ராமநாதபுரம் மாவட்ட சாயல் இருந்ததுன்னா அதுக்குக் காரணம் தாத்தாவோட பங்களிப்புதான். ஏன்னா டைரக்டர் பீம்சிங் வட மாநிலத்துலே இருந்து வந்தவரு. அவர் திறமையான இயக்குநரா இருந்து, நல்ல படங்களைக் கொடுத்தாரு. ஆனா கதை தாத்தாவோடது.
    அதே காலகட்டத்துலே சினிமாவுல முன்னணி நடிகரா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்னோட பெரியப்பா பையன்தான். இப்படி எனக்கு ஒரு தலைமுறைக்கு முன்னாடியே எங்க குடும்பத்துக்கு கலைத்துறையிலே தொடர்பு இருந்தது.
    எங்க தாத்தாவுக்கு அப்பா ஒரே பையன். பிரிட்டீஷ் காலத்துலே அப்பா, வார்தாவிலிருக்கிற காந்தி ஆசிரமத்தில் ஒரு வருஷம் இருந்திருக்காரு. அங்க இருந்த ஒருத்தர், அப்பா வீட்டுக்கு ஒரே வாரிசுன்னு தெரிஞ்சு வீட்டுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறாரு.
    அதுக்குப் பிறகு, 1940களில் இலங்கையில் பண்டாரநாயகா காலத்திலே கொமீனா டி சில்வா, என்னம்பெரைரா என்ற இரண்டு டிராட்ஸ்கியவாதிகள் அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டுலே தஞ்சம் அடையிறாங்க. அவங்களோட அப்பாவுக்குத் தொடர்பு ஏற்படுது. அப்பாவும் டிராட்ஸ்கியவாதி ஆகிறார். எனக்கு டிராட்ஸ்கி மருதுன்னு பேரு வைக்கிறார். சின்ன வயசிலேயே எனக்கு உலக இலக்கியங்கள் படிக்கிற வாய்ப்பு கிடைக்குது.

உங்களுக்கு கலையில் ஈடுபாடு வந்தது எப்படி?
    நான் வளர்ந்த சூழலே அற்புதமானது. நாங்க இருந்த ஏரியாவுலே தான் அய்யனார் சிலை மாதிரியான டெரகோட்டா சிற்பங்கள் செய்யிற கலைஞர்கள் இருந்தாங்க. அவங்க மண்ணைக் குழைச்சு சிற்பமா மாத்துறதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். பிறகு மதுரை அழகர் கோயில், மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் மகால் ஆகிய இடங்களில் இருக்கிற சிற்பங்களை அடிக்கடி பார்க்க முடியும். மதுரை அழகர் கோயில் திருவிழாவும் ஒரு முக்கியமான இன்ஸ்பிரேஷன். மதுரையைச் சுத்தி 50, 60 கிலோமீட்டர் தூரத்திலே இருக்கிற எல்லா நாட்டுப்புற கலைஞர்களும் திருவிழாவுக்கு வருவாங்க. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டமா இருந்துச்சி
    அப்ப காந்தி மியூசியத்துலே வாரம் ஒரு இலவச சினிமா போடுவாங்க. அதனால் ரொம்ப சின்ன வயசிலேயே வேர்ல்டு கிளாசிக்ஸ் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது.
    பிறகு எங்க அப்பா மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டது. அப்ப மதுரையிலே பெரிய புத்தகக் கடை பாரதி புத்தகாலயம். அதை நடத்திக்கிட்டு இருந்த சுவாமிநாதன் அப்பாவோட பால்ய நண்பர். அப்பா என்னை வாரத்துக்கு மூணு தடவையாவது அங்க கூட்டிக்கிட்டு போவாரு. அந்தக் கடைக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா மாதிரியான ஆட்கள் எல்லாம் வருவாங்க. ஒரு தடவை போனா, குறைஞ்சது மூணு மணி நேரமாவது இருப்போம். ரொம்ப சின்ன வயசிலேயே உலக இலக்கியங்களோட அறிமுகம் கிடைச்சது.
    ரீகல் தியேட்டர்லே நல்ல இங்கிலீஸ் படம் வந்தா, பரீட்சை இருந்தாக் கூட, அப்பா அதைப் பார்க்கச் சொல்வாரு. ‘Bridge on the river Kiwai-னு ஒரு படம் வந்திருக்கு. புஸ்தகத்துலே படிச்ச பாலைவனத்தை அதிலே பார்க்கலாம்’ன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போவாரு. டாலி, பிக்காஸோ, டிராட்ஸ்கி இவங்களோட ஓவியங்கள் அப்பா மூலம்தான் எனக்கு அறிமுகமாச்சு. இதெல்லாம் நான் எட்டாம் வகுப்பு படிச்சபோதே கிடைச்சதுங்கிறதுதான் ரொம்ப முக்கியம். இவையெல்லாம் தான் என் கலைப்பாதையின் படிக்கட்டுகள்.

நீங்க ஓவியத்துறைக்கு வருவதற்கு மதுரையில் பார்த்த சிற்பங்கள் ஒரு முக்கிய காரணம்னு சொல்றீங்க. ஆனால், தமிழக மரபில் சிற்பங்களுக்கும், கட்டடக் கலைக்கும் இருக்கிற முக்கியத்துவம் ஓவியங்களுக்கு இல்லையே, ஏன்?

    தமிழகத்தில் ஓவியம் என்பது சிற்பத்தோடு இணைந்தேதான் இருந்தது. தனி ஓவியம்னு இல்லை. கி.பி. 4ம் நூற்றாண்டில் அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மீது ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. காலப்போக்குல ஓவியங்கள் நிறமிழந்து போனது. இப்பயும் வெயில் படாம, கோயிலுக்குள் இருக்கிற சிற்பங்கள் மீது ஓவியப் பூச்சு இருப்பதைப் பார்க்க முடியும்.
    இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க? இலக்கியத்துக்கு வரையும்போது, நீங்க எந்த மாதிரியான அணுகுமுறையை வைச்சிருக்கீங்க?
    எழுத்துக்கு வரையும்போது வார்த்தைகள்தான் தூரிகையை நகர்த்துதுன்னு சொல்வாங்க. ஆனா நான் கொஞ்சம் வேற மாதிரிதான் இயங்கியிருக்கிறேன். கடந்த 20 வருஷமா பத்திரிகைகளில் வரைஞ்சிட்டு வர்றேன். எப்போதும் எழுத்தாளர்களோட வார்த்தைகளை நான் தேவவாக்காக எடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா மற்ற ஓவியர்கள் பத்திரிகைகளுக்கு வரையும்போது, அந்த எழுத்திலே இருக்கிற சம்பவங்களை வரைவாங்க. நான் அப்படி வரைஞ்சது கிடையாது. தேவைப்பட்டபோது எடுத்திருக்கேனேயொழிய அதை மட்டுமே வரைஞ்சதில்லை.
    எழுத்து ஒரு விஷயத்தைச் சொல்லும். அது என்ன சொல்லுதோ, அதை நோக்கிய விஷயத்தை என் படமும் சொல்லும். அதுக்கு மேலே என் படம் எதுவும் சொல்லலைன்னும் கிடையாது. எழுத்திலிருந்து படத்தைப் பிரிச்சிட்டாக்கூட, என் படம் அதே விஷயத்தை சொல்றதை நீங்க பார்க்கலாம். ஓவியர் என்பவர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா ஓவியங்கள்தான் எழுத்தை மக்கள் மனசுலே நிறுத்தி வைக்குது.
    இராமாயணம், மகாபாரதம் எல்லாம் வெறும் வார்த்தைகளால மக்கள் மனசுலே இத்தனை வருஷமா நிக்கலை. அதுக்கு இணையா கடந்த இரண்டாயிரம் வருஷமா இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள், கூத்துக்கள் மூலம்தான் நிக்குது. ராமா ராமான்னு என்னதான் எழுதுனாலும், ராமாவோட இமேஜ் கிடைக்கலைன்னா அது இந்தளவுக்குப் போய் சேர்ந்திருக்காது. வெறும் வார்த்தைகள் அனுமானிக்கதான் வைக்கும், கோடுகள்தான் மனசுலே கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப்போனா, வார்த்தைகள் பொய் சொல்லும், கோடுகள் பொய்யே சொல்லாது.

கடந்த இருபது வருஷமா தமிழ் இலக்கியத்தோட இயங்கிட்டு வர்றீங்க. அது எந்தளவுக்கு உங்களை பாதிச்சிருக்கு?

    Marudhuசிலரோட எழுத்துக்கள் என்னைப் பாதிச்சிருக்கு. பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பலை. சிலரோட வடிவம் நல்லா இருக்கும், சிலரோட உள்ளடக்கம் நல்லா இருக்கும். பொதுவா எழுத்து மட்டுமில்லை, எல்லா விஷயங்களும் என்னை பாதிக்குது. எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறேன். பத்திரிகைச் செய்திகள், டிவியிலே வர்ற விளம்பரங்கள், கிராமத்துலே இருந்து வர்ற உறவினர்கள், நாடங்கள் எல்லாம் என்னை influence பண்ணுது.

தமிழ் நாடகங்களை நீங்க எப்படி பார்க்கிறீங்க?

    நவீன நாடகங்களில் மிகப் பெரிய முனைப்பு இருக்குது. ஆனா ஒரு ஆர்டிஸ்டா நான் என்ன நினைக்கிறேன்னா, தமிழ் நாடகத்துலே visual poverty இருக்குது. இதுக்குக் காரணமா பட்ஜெட்னு சொன்னாக்கூட, இருக்கிறதை வைச்சி இன்னும் பெட்டரா பண்ண முடியும். இயலாமையே எளிமைன்னு இங்க ஆயிடுச்சோன்னு கூட தோணுது. பின்ன அதுவே ஒரு standard ஆகி, இப்ப வரைக்கும் அதை யாரும் உடைக்க முயற்சிக்கலைன்னுதான் சொல்லணும்.

    நாடகத்துலே மட்டுமில்லை, பட்ஜெட் பிரச்சினையா இல்லாத சினிமாவுலே கூட இந்தப் பிரச்சினை இருக்கு. இரண்டரை மணி நேரம் ஓடுற சினிமாவுலே இரண்டே கால் மணி நேரம் பேசிக்கிட்டே இருக்காங்க. பேசியே கதையை நகர்த்துறாங்க. இது எனக்கு அயற்சியைத்தான் தருது. பெரிய இயக்குநர்னு சொல்ற மணிரத்னம் மாதிரியான ஆட்களோட படங்கள்லே வேறவிதமான தப்பு இருக்குது. அவங்க மிகைப்படுத்தப்பட்ட visuals-யை காமிக்கிறாங்க.
    பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்தும் கூட இதிலே எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா இவங்க திரைக்கதையை எழுதுறாங்க; விஷூவலா பார்க்கிறது இல்லை. இவர் வசனம் எழுதுன கதை, இவர் எழுதுன கதைன்னு காட்சி ஊடகத்துலே வசனங்களுக்கு முக்கியத்துவம் தர்ற போக்கு இங்கதான் இருக்கு. கூத்து, மேடை நாடகம் இதோட ஒரு தொடர்ச்சியாதான் சினிமா இருக்கே தவிர, அதை காட்சி ஊடகமா யாரும் இங்க பார்க்கலை.

மற்ற கலைகளும் இதோட தொடர்ச்சியாத்தான் இருக்குதா?

    ஆமா. தமிழ்நாட்டை சத்தங்கள்தான் ஆளுது. அலங்காரமா பேசுறவங்கதான் இங்க கொண்டாடப்படுறாங்க. அலங்காரம் என்பது பொய்னு ஜனங்களுக்குத் தெரியறது இல்லை. அலங்காரமா பேசி ஆட்சியைப் பிடிச்சவங்க எல்லாம் அலங்காரமான கலைகளையே கொண்டாடுறாங்க. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த இந்த 40 வருஷத்துலே, அவங்க சினிமாவுலே இருந்து வந்தவங்க என்பதாலே, அவங்க கட்டுன கட்டிடங்கள் எல்லாம் ஜூபிடர் பிலிம்ஸ் செட் மாதிரிதான் இருக்கு. அந்த கட்டிடம் எல்லாம் சிமெண்ட்லே செஞ்ச செட்கள்தான்.
    பெரியார் பிறந்ததாலதான் தமிழ்நாட்டுலே புதிய பாதையே கிடைச்சது. அவர் வந்த பின்னாடிதான் தமிழர் வாழ்க்கையிலே வெளிச்சமே வருது. அவருடைய முக்கிய கொள்கைகள் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு மற்றும் பெண் விடுதலை. கடவுளைத் தூக்கிப் போட்டதும், கதை சொல்றதில் இருந்த மாய மந்திரத் தன்மையும் காணாமப் போயிடுச்சி. ஏன்னா இங்க மாய மந்திரங்கிறது கடவுளோட மட்டுமே இணைச்சி வைச்சிருந்தாங்க.
    அந்த மாய மந்திரத் தன்மை கதை சொல்றதில் இருந்திருந்தா தமிழ் சினிமா விஷுவல் மீடியாவா வளர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஓவியத்துறையில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கு என்ன காரணம்?

    உலக அளவிலேயே இந்தத் துறையில் பெண்களோட எண்ணிக்கை ஆண்களோட ஒப்பிடும்போது மிகக் குறைவுதான். அதிலும் இந்தியாவிலே மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம் இங்க பெண்கள் படிக்க வந்ததே கடந்த 50, 60 வருஷமாத்தான். இங்க சமூகத் தடைகள் ஏராளமா இருக்கு. ஒரு கலைஞராக இருப்பது என்பது lifetime commitment. ஆனா இங்க கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுறாங்க. அதனாலே பிரகாசிக்க முடியாம போயிடுது.

    ஆனா இந்தியாவிலே நவீன ஓவியங்கள்லே முக்கியமான பாதையைத் தொடங்கி வைத்த அமிர்தா சர்கில் ஒரு பெண்தான். ஒரு ஹங்கேரியனுக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவர். இவர்கிட்ட இருந்துதான் இந்திய நவீன ஓவியங்கள் தொடங்குதுன்னு சொல்லலாம்.

ஓவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. நெதர்லாந்து ஓவியர் ரெம்பரெண்ட்-னு சொன்னா, லைட்டிங்கை ரொம்பவும் வீச்சோட தன் ஓவியங்களைப் பயன்படுத்தினவர், பிரான்சில் டேவிட் தன்னோட ஓவியங்கள் மூலமா புரட்சியை மக்கள் மனதில் தூண்டி விட்டவர்னு சொல்லலாம். இந்த மாதிரி இருக்கிற ஆளுமைகளில் உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் யார்? யாரோட ஓவியங்களைத் திரும்பத் திரும்ப ரசிக்கிறீங்க?

    அப்படி ஓரே ஒருத்தரை மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா என்னை பாதிச்சவங்க நிறைய பேரு இருக்காங்க. ஓவியர்கள் மட்டுமில்லாம, என்னைச் சுற்றியிருக்கிற எல்லாமே என்னை influence பண்ணுது - அது அழகர்கோயில் திருவிழாவாக இருக்கலாம், இல்லை நம்முடைய மரபுக்கலைகளாக இருக்கலாம்.

    குறிப்பாக ஓவியர்கள்னு சொல்லனும்னா ஆரம்ப காலகட்டத்தில் கிளாசிக் பெயிண்டர்ஸ் எல்லோரையும் விரும்பிப் பார்த்தேன். பின்னாடி நவீன ஓவியங்களுக்கு வந்தபோது, எனக்கு உருவங்களை வரைவதில் அதிக ஆர்வம் இருப்பதால், அந்த மாதிரி வரையறவங்களை அதிகம் ரசிக்கிறேன். காமிக் புத்தக ஓவியர்கள் மீதும் எனக்குப் பெரிய ஈடுபாடு இருக்கு. அதோடு கிராபிக்ஸ் டிசைனிங்கில் முக்கியமான எல்லோரையும் க்ளோசா வாட்ச் பண்றேன். அதிலே ஜேன் லேனியான் (போலாந்து), மில்டன் கிளேசர் (அமெரிக்கா), ஹேன்ட்ஸ் எடில்மன் (ஜெர்மனி) முதலானவங்களை ரொம்பவும் ரசிக்கிறேன்.

    காமிக் புத்தகங்களில் வரையாம, நவீன ஓவியம்னு சொல்லவும் முடியாத, அதே நேரத்தில் ரொம்ப பவர்புல்லா பத்திரிகைகளில் வரையற ஸால்ட் ஸ்டீபக், ரால்ட் ஸ்டீமன், ரொனால்ட் ஷெர்லி ஆகியோரையும் எனக்குப் புடிக்கும்.

    இந்த வகையில்தான் ரசிக்கிறேன்னு கிடையாது. எல்லாத்தையும் ரசிக்கிறேன். ஏன்னா என்னோட வொர்க் ஸ்டைலே அப்படித்தான் இருக்குது.

    எனக்குப் போட்டோகிராபி பிடிக்கும். ஓரு போட்டோ எடுத்து, அதை பிரிண்ட் பண்ணுவேன். அதுமேல manual-ஆ வரைவேன். வரைஞ்ச ஓவியத்தை கம்ப்யூட்டருக்குக் கொண்டுபோய், கிராபிக்ஸ் பண்ணுவேன். என்னோட படங்கள் எல்லாமே ஒரு mixed paintings. அதிலே போட்டோ இருக்கும், ஓவியம் இருக்கும், கிராபிக்ஸ் இருக்கும். அதனால் ரசனையும் mixed-ஆ தான் இருக்கு.


நீங்க ஐரோப்பாவில் இருக்கிற முக்கியமான ஆர்ட் கேலரி, மியூசியம் எல்லாத்துக்கும் போயிருக்கீங்க. அந்த அனுபவங்களைப் பத்தி சொல்ல முடியுமா?

    சின்ன வயசிலே நான் போட்டோவில பார்த்த ஓவியங்கள் எல்லாத்தையும் நேரில் பார்க்க முடிஞ்சது. போட்டோவுல, பிக்சர்லே பார்த்துட்டு சின்னதா இருக்கும்னு நான் நினைச்ச ஓவியங்கள் எல்லாம் மிகப் பெரியதா இருந்தது. அதே மாதிரி பெரிசா இருக்கும்னு நினைச்ச பல ஓவியங்கள் ரொம்பவும் சிறிசா இருந்தது. இந்த அனுபவம் இந்தியாவிலிருந்த போன பெரும்பாலான ஓவியர்களுக்கு இருந்திருக்கும்.

    டெலாய்ராய்க், டேவிட், மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்சி ஆகியோருடைய படங்களை நேரில், அதுவும் ஒரு அடி கிட்டத்துலே பார்க்கிறது இருக்கே, அது விவரிக்க முடியாத அனுபவம். அதில பல ஓவியங்கள் என் வாழ்நாள் முழுக்க என்னைத் துரத்திக்கிட்டே வருபவை. ஜெர்மன் நாட்டிலே இருக்கிற முன்ஸ்டர்லே ஒரு பெரிய மியூசியம் இருக்கு. அதுல எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைச்சது.

    அந்த மியூசியத்துலே தெருவைப் பத்தின ஓவியம் ஒண்ணு பார்த்தேன். பார்த்துட்டு வெளியே வந்தா, அதே தெரு அப்படியே வெளியே இருக்கு. ‘ஐயோ இப்பதான் இந்தத் தெருவை ஓவியத்திலே பார்த்தேன்’ அப்படின்னு மிகப்பெரிய வியப்பு. ஏன்னா அந்த ஓவியம் 400 வருஷத்துக்கு முந்தினது. அந்த ஓவியத்திலே இருக்கிறமாதிரியே இப்பவும் அந்த தெருவை பராமரிக்கிறாங்க.

    அந்த நகரத்துலே ரெண்டு முனிசிபாலிட்டி இருக்கு. பழைய நகரத்தைப் பராமரிக்க old municipality, புதிய நகரத்தைப் பராமரிக்க new municipality. பழைய நகரத்துலே இருக்கிறவங்க தன்னோட வீட்டின் வெளிப்புறத்தை கொஞ்சம்கூட மாத்த மாட்டாங்க. தாழ்ப்பாள் பழுதானக்கூட அதே கலர்லே, அதே டிசைன்லே தாழ்ப்பாள் செஞ்சுதான் மாத்துறாங்க. அதே நேரத்துலே வீட்டுக்குள்ளே என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாம். பழைமையைப் பாதுகாக்கிறதில் அவங்க காட்டுற ஆர்வம் என்னை மலைக்க வைச்சது.

    பின்னே சிசிலி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள் பெரும்பாலானவற்றைப் பார்வையிட முடிஞ்சது. இத்தாலியில் ஒரு அனுபவம். 1940களில் இரண்டாவது உலகப் போர் நடந்தபோது, 4 மாடிக் கட்டிடம் ஒண்ணு குண்டு வீசித் தாக்கப்படுது. தாக்குதலுக்குப் பின்னாடி அந்தக் கட்டிடத்தோட ஓரே ஒரு சுவர் மட்டும் நான்கு மாடி அளவுக்கு இடிபடாம தப்பியிருக்கு. போருக்குப் பின்னாடி அந்த இடத்தை வாங்குனவரு, அந்த சுவரை இடிக்காம, தன்னோட புதிய கட்டிடத்துக்கு ஒரு பக்க சுவரா அதை இணைச்சுக்கிட்டாரு. பழைமைக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவம் அப்படி.

    பாரீஸ்லே ஒரு இடம் இருக்கு. நம்ம லேண்ட்மார்க்கை விட மூணு மடங்கு பரப்பளவுல விஸ்தீரணமா இருக்கும். அது மாதிரி மூணு மாடி. அதுலே ஒரு மாடி முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள். எனக்கு அது ஒரு கனவுலகம்னு சொல்லணும். கடந்த 150 வருஷத்துலே வந்த முக்கியமான எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அங்க இருக்கு.

    காலையிலே 9 மணிக்கு நண்பர்கள் என்னை அங்க விட்டுட்டுப் போவாங்க. கையிலே ஒரு பேக். அதிலே கொஞ்சம் சாண்ட்விச். மதியம் வரைக்கும் சுத்துவேன். பின்னே ஒரு பார்க்கிற்கு வந்து, கொண்டு வந்த சாண்ட்விச்சை சாப்பிடுவேன். மறுபடியும் உள்ளே போயிடுவேன். ராத்திரி எட்டரை மணிக்கு நண்பர்கள் வந்து பிக்கப் பண்ணிக்கிடுவாங்க. இப்படி 4 நாள் அங்கே மட்டுமே சுத்திப் பார்த்தேன்.

    காமிக்ஸ் புத்தகத்துலே ஏதாவது ஒரு பக்கம் ரொம்பவும் பிரமாதமான ஓவியமாக இருக்கும். அதை புளோ-அப் பண்ணி, வரைஞ்சவங்க கையெழுத்தோட விற்கிறாங்க. அது 10,000 டாலருக்கு விலை போகுது. ஒரு பெயிண்டிங்க்கு கொடுக்கிற விலையை காமிக் புத்தகத்தோட ஒரு பக்கத்துக்குக் கொடுக்கிறாங்க. அந்த இடத்தைப் பார்க்கிறதுக்கு எனக்கு சொர்க்கம் மாதிரி தெரியுது.

    வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வந்த பிறகு என்னோட ஓவியங்களை ஒரு self review பண்ன முடிஞ்சது.


ஓவியர்களைக் கொண்டாடுற தேசங்களுக்குப் போயிட்டு வந்த பிறகு, ஓவியங்களுக்கு பெரிய மரியாதை இல்லாத நம்ம நாட்டு சூழலை எப்படிப் பார்க்கிறீங்க?

    கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நம் நாட்டுலே நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருந்தது. சென்னையிலே மிஞ்சிப் போனா ரெண்டு அல்லது மூணு கேலரிதான் இருக்கும். ரொம்பவும் கஷ்டப்பட்டாதான் கூட்டம் சேர்க்க முடியும். ஆனா இப்ப நிலைமை மாறியிருக்கு. நல்ல தரத்தோட 30 கேலரிகள் இருக்கு. கண்காட்சி நடத்துனா கூட்டம் வருது. ரசிக்கிறாங்க.

    ஓவியம் ஒரு தொழிலா வளர்ந்துட்டு இருக்கு. ஓவியம் சார்ந்த அறிவு எல்லோருக்கும் தேவைப்படுது. ஒரு Web designerக்கு டிசைனிங் பண்ணும்போது கலர் சென்ஸ் தேவைப்படுது. முன்னே நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தபோது அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமே இல்லை. இப்ப நிறைய பேருக்கு அனிமேஷன் பத்தி நல்ல ஐடியா இருக்குது. இந்த நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்னு தோணுது.


மீண்டும் மீண்டும் வரையத் தூண்டுகிற மாதிரியான ஒரு object ஒவ்வொரு ஓவியருக்கும் இருக்கும். உங்களை அது மாதிரி விடாமல் வரையத் தூண்டும் object எது?

    எனக்கு அசைவுகளை வரைவதில் அலாதி ஆர்வம். என் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு மூவ்மெண்ட்டை பேசுறதாத்தான் இருக்கும். அதனால்தான் என்னுடைய ஓவியங்களில் மனிதர்களும், விலங்குகளும் அதிகமாக இருக்கிறார்கள். அசைவுகளின் மீது இருக்கும் ஆர்வத்தால்தான், நான் அனிமேஷனுக்குப் போனேன். அதனால்தான் ரொம்ப சீக்கிரமாவே கம்ப்யூட்டரை பயன்படுத்தவும் ஆரம்பிச்சேன்.


நீங்க சினிமாவில் அனிமேஷன், ஆர்ட் டைரக்ஷன் ஈடுபட்டு வர்றீங்க. அந்த அனுபவங்களைப் பற்றி?

    சினிமாவில் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேதான் நான் வேலை பார்த்திருக்கேன். வித்தியாசமா வொர்க் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கிற படங்களில் மட்டும்தான் பண்ணியிருக்கேன். நாசரோட ‘தேவதை’, செல்வமணியோட ‘அசுரன்’ மாதிரியான படங்களில்தான் எனக்கு ஆர்வம்.

    Marudhuகொஞ்சம் படங்களில் அனிமேஷன் வொர்க் பண்ணியிருக்கேன். ஆர்ட் டைரக்ஷன்லேயும் கிரியேட்டிவிட்டிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிற படங்களைத்தான் பண்ணியிருக்கேன்.

    மகேந்திரனின் சாசனம் படத்திலே வேலை பார்த்ததில் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சது. ஆனால், உண்மை என்னன்னா, படத்தில் நான் பண்ணி வெச்சிருந்த நிறைய பொருட்கள் பயன்படுத்தப்படலை. செட்டிநாடு தொடர்பா என்கிட்ட நிறைய இருந்தது. நானும் நிறைய வொர்க் பண்ணினேன். அதெல்லாம் முழுமையா படத்திலே வரலை. இருந்தாலும் என்னால முடிஞ்சவரைக்கும் செட்டிநாட்டு சூழலை படத்திலே கொண்டு வந்தேன்.

    நம்ம தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் வர்ற வரைக்கும் நாற்காலிகள் கிடையாது. வெறும் திண்டுகளைத்தான் மன்னர்கள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. அந்த மாதிரியான நிஜமான சரித்திரப் பின்புலம் உள்ள படங்கள்லே வேலை பார்க்கணும்னு ஆசை.

நீங்க கத்துக்கிட்டதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொடுக்கறீங்க?

    நான் படிக்கற காலத்துலே அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமில்லைன்னு சொன்னேன் இல்லையா? ரொம்ப நாளைக்கு அப்படித்தான் இருந்தது. அனிமேஷன் பத்தி நான் நிறைய படிச்சி தெரிஞ்சிக்கிட்டதுதான். அதுலே வொர்க் பண்றதுக்கு நான் 18 வருஷம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    இப்ப அப்படியில்லை. என்கிட்டே ஜூனியரா இருந்த 40 பேர் இப்போ நல்ல அனிமேஷன் கிரியேட்டரா பீல்டுல இருக்காங்க.

    அதுதவிர குழந்தைகளுக்கு அனிமேஷன் பயிற்சி வகுப்பை கடந்த 10 வருஷமா பண்ணிட்டிருக்கேன். அதிலே படிச்சவங்க இப்போ நல்ல குறும்பட இயக்குநர்களா வளர்ந்திருக்காங்க.


போட்டோகிராபியில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

    நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தபோது, மதுரை டவுன் ஹால் ரோட்டிலே பாரிலேண்ட்னு ஒரு கடை இருந்தது. அதிலே சினிமா புரொஜெக்டர் ஒண்ணை விற்பனைக்கு வைச்சிருந்தான். நான் அந்தக் கடை வழியா போகும்போதெல்லாம் அதை பார்ப்பேன். பிறகு கொஞ்சநாள்லே என்கிட்டே இருந்த பாக்கெட் மணியெல்லாம் சேர்த்து மொத்தம் 35 ரூ வந்துச்சி. அதை எடுத்துக்கிட்டு நேரே கடைக்குப் போனேன்.

    கடையில் ரெண்டு மார்வாடிங்க இருந்தாங்க. புரொஜெக்டர் வேணும்னு சொன்னேன். அதிலே பெரியவரா இருந்த ஒருத்தர், இன்னொருத்தர்கிட்டே, ‘இந்த மாதிரி சின்னப் பசங்கிட்டே வியாபாரம் பண்ணாதே’ அப்படினு இந்தியிலே சொன்னார். எனக்குப் பாஷை புரியாட்டாலும் அவர் என்ன சொல்றாருன்னு புரிஞ்சது. ‘இல்லையில்லை, என்னாலே எந்தப் பிரச்சினையும் வராது’ன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்.

    வீட்டிலே வந்து ஆபரேட் பண்ணிப் பார்த்தா நான் எதிர்பார்த்த மாதிரியான விஷூவல் அதிலே கிடைக்கலே. அம்மா ஒரே திட்டு, இப்படி காசை வேஸ்ட் பண்ணிட்டியேன்னு. மறுபடியும் கடைக்குப் போனேன். எனக்குப் புரொஜெக்டர் வேண்டாம்னு சொன்னேன்.

    பெரியவர், ‘நான் சொன்னேன் கேட்டியா? இந்த மாதிரி பையங்கிட்டே பிசினஸ் பண்ணாதே’. நான் சொன்னேன், ‘நான் தப்பா எதுவும் வியாபாரம் பண்ணலை. நான் எதிர்பார்த்த எபெக்ட் கிடைக்கலை. அதனால இதைக் கொடுத்துட்டு ஒரு ஸ்டில் கேமிரா வாங்கிக்கிறேன்.’

    அப்படித்தான் முதல்லே கேமிரா வாங்கினேன். அன்னையிலிருந்து என்கிட்டே அந்தந்த காலகட்டத்துலே வேற வேற கேமிராக்கள் வந்து போயிட்டிருக்கு. இப்ப டிஜிட்டல் கேமிரா யூஸ் பண்றேன். கேமிரா, கம்ப்யூட்டர் இதெல்லாம் எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் முழு சுதந்திரத்தோட வேலை பார்க்க முடியாது. ஒரு பெரிய கதவு திறந்திருக்குது. நான் வேலை செய்யறதுக்கு ஒரு பெரிய ஸ்பேஸ் கிடைச்சிருக்கு. அதனால்தான் என் பெயிண்டிங்ஸ்ல ஒரு வெரைட்டி பார்க்க முடியுது.


நீங்க எப்படி அறியப்படணும்னு விரும்புறீங்க?

    நான் வெறும் ஓவியர் கிடையாது. அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட்களுக்கு நான் தான் முன்னோடி. ஏன்னா இனி வர்ற ஆர்டிஸ்ட்டுக்கு எல்லாம் தெரியணும். பிலிம் கிராமர், பெயிண்டிங், போட்டோகிராபி, அனிமேஷன் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. அதே நேரத்தில் நான் நகர்ந்துக்கிட்டிருந்த பாதைக்கு பக்கமா காலமும் நகர்ந்து வந்தது.

    ஓவியத்திலிருந்து தான் போட்டோகிராபி பிரிஞ்சுது. அதுலேயிருந்து அனிமேஷன் வந்தது. இப்போ இது எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஒண்ணாக்கிருச்சு. இப்ப எல்லா ஊடகமும் கலந்து ஒரு ஊடகமா மாறிடுச்சு. இந்தப் பாதையிலே நான் முதல் ஆள்னு நான் என்னைக் கருதுறேன். அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட் எப்படி தயாராகணுமோ அப்படித்தான் நான் தயாராகிக்கிட்டு வந்தேன். நான் தயாராகி வந்த இடத்துக்குத்தான் உலகம் வந்திருக்கிறதா நினைக்கிறேன்.




மேற்கண்ட பேட்டி வெளியான ஆண்டு : ஜூலை 2009 (நன்றி : கீற்று ) Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)