Pages

Monday, March 5, 2012

ஹைகூ கவிதை பற்றி கவிகோ அப்துல் ரகுமான் எழுதிய கவியோடை

Untitled Document

உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது " ஹைகூ" தான். அது சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம். வடிவத்தை பார்த்தால் வாமணன் மாதிரி ஆனால்;  தாரை வார்த்தாலோ விசுக்கென்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபமெடுத்து மூவுலகையும் அளந்து விடும். திரிவிக்கிரமன் மாதிரி ஹைகூ' க்கும் மூன்றடிதான்.

ஹைகூ வைப் படிப்பதற்கு முன் ஒரு வார்த்தை ; கவிதையின் மூன்று அடிகளையும் ஒரே மூச்சில் விழுங்கி விடாதீர்கள். முதல் இரண்டடிகளை மெதுவாகப் படித்து நிறுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தான் மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும்.

இப்போது படியுங்கள்

உதிர்ந்து வீழ்ந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறது ...

ஓ! வண்ணத்துப்பூச்சி!

( கவிஞர் - மோரிடாகே)

அழகிய பொருட்கள் நிலையற்றவை;கணத்தில் மின்னி மறையக் கூடியவை ஆனால் அழகு என்ற தத்துவம் நிரந்தரமானது இந்த ஸென் புத்தமத தத்துவத்தையும் இந்த ஹைகூ கலைப்பொட்டலம் கட்டி நம் கையில் கொடுத்து விடுகிறது.

எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருப்பது கவிதையின் வேலை இல்லை கட்டுரையின் வேலை. ஒருகாட்சியை காட்டுவதோடு ஹைகூவின் வேலை முடிந்து விடும் அதில் உள்ள அர்த்தங்களை தோண்டி இறைத்துக் கொள்வது வாசகன் பொறுப்பு. இந்த வகையில் வாசகனும் கவிதையில் ஒரு கூட்டு படைப்பாளி.

எளிய உயிரினங்களையும் நேசித்து இணக்கமாக வாழ்வது ஜப்பானியரின் பண்பாடு.

யாராவது எனக்கு நீர் கொடுங்களேன்
என் கிணற்றைப் பிடித்துக் கொண்டது ...
பூத்த இளங்கொடி

<<கவிஞர் .சியோனியோ>>

இந்த அழகிய கிண்ணத்தில்
பூக்களை அடுக்கிவைப்போம்
அரிசி தான் இல்லையே!

<<கவிஞர். பாஷோ>>

என் வீடு எரிந்து போனதால்
நன்றாக பார்க்க முடிகிறது
உதிக்கும் நிலாவை

<< கவிஞர். மாஷாஹிடே >>

இந்த அழகிய பூக்களிடையே
ஒரு மரங்கொத்தி தேடுகிறது...
செத்த மரத்தை !

<< ஜோசோ>>

நாற்று நடும் பெண்கள்
எங்கும் சேறு...
அவர்கள் பாட்டைத் தவிர

<<ரைஸான்>>

மெதுவாக என் தோளைப் பற்றிய
இறந்த நண்பனின் கை போல்...
இந்த இலையுதிர் கால வெயில் 

<<குசடா ஓ>>

ஆலய மணி மீது
ஓய்ந்து உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி 

<< பூசன்>>

சிறை பிடித்த விரல்களில்
தீபம் ஏற்றியது
மின் மினி

<< தைகி>>

ஒவ்வொரு ஹைகூவும் ஒரு மின் மினிதான்.

நன்றி : கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் "இன்றிரவு பகலில்" எனும் விமர்சன கவிதை  புத்தகம்.

2 comments:

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !