Pages

Wednesday, March 21, 2012

பழங்கால தமிழர்களின் பெருவழிப்பாதை - கொங்கு மண்டலத்தின் வரலாற்று சான்று. (highway of kongu culture / tamil historical evidence of commerce activity)

கொங்கு தலைநகரான கோவையிலுள்ள பேரூர், வெள்ளலூர் பகுதிகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இதற்கு இங்குள்ள கோவில்களே சான்று.
சர்வதேச தொடர்பில் இருந்த தமிழர் வரலாற்றில், கொங்கு மண்ணுக்கும் இடம் உண்டு. இதற்கு ராசகேசரி பெருவழி கல்வெட்டு முக்கிய சான்று.

கொங்குநாட்டின் வரலாற்றை உறுதி செய்வதில் பெருவழியும் ஒன்று. முக்காலத்தில் பெருவழி என்பது இக்கால நெடுஞ்சாலையைப் போன்றது. ராசகேசரி பெருவழி, அசுர மலைப் பெருவழி, சோழமாதேவி பெருவழி, வீரநாராயண பெருவழி, அதியமான் பெருவழி என 20 வழித்தடங்கள் வரை கொங்கு நாட்டில் இருந்துள்ளன.

இதில் சோழநாடு, சேர நாட்டை இணைப்பதில் ராசகேசரி பெருவழி முதன்மையானது. இது கரூரில் தொடங்கி சூலூர், வெள்ளலூர், பேரூர் வழியாக ராச கேசரி பெருவழி பாலக்காடு வரை சென்றிருக்கிறது. இந்த வழியானது பேரூரில் இருந்து சுண்டக்காமுத்தூர் அடுத்துள்ள தர்மலிங்க மலைக்கு மேற்கிலும், அய்யாசாமி மலைக்கு கிழக்கிலும் கடந்துள்ளது. அதாவது திமிலிமலை சொரி மலை இடையிலான பச்சை பள்ளத்தின் வழியாக சுண்டக்காமுத்தூர் - எட்டிமடையை இணைத்தது.



பச்சை பள்ளத்தில், நீர் கணுவாய்' (சுனை) என்ற இடத்தில், அரிய கல்வெட்டு உள்ளது. வட்டெழுத்துத்தில் வடிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு வரை மக்கள் தொடர்பு இருந்துள்ளது. தற்போது வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த காடாக மாறியதால் கல்வெட்டின் அழிவை வெளியுலகம் அறியாமல் இருக்கிறது.மழை வெயில் என இயற்கை அழிவை சந்தித்து கல்வெட்டின் எழுத்துக்கள் உருவத்தை இழந்து விட்டன. மேலும் ஒருபகுதி உடைந்துள்ளது.

கோவையில் அழியும் நிலையில் உள்ள 1100 ஆண்டு பழமையான அரிய இக்கல்வெட்டை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


பேரூர் தமிழ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சென்னியப்பன் அவர்கள் தமது குறிப்புகளில் இருந்து ஆதாரங்களுடன் விளக்கம்.

சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை பாடல் வரியில் "உல்குடைப் பெருவழி" என்று பெருவழி குறிப்பிடப்படுகிறது. வணிகம், மக்கள் போக்குவரத்து படையெடுப்பு ஆகியவற்றுக்கு பெருவழி பயன்பட்டது.

ஆதித்த சோழன் காலத்தில் 30 அடி அகலமுடைய ராசகேசரி பெருவழி (கி.பி..871 - 907) செப்பனிடப்பட்டுள்ளது. இவ்வழியாக, கிரேக்கர்களூம், ரோமானியரும் வந்து வணிகம் செய்திருப்பர்.
இன்றளவும் பேரூரில் பழங்கால நாணயங்கள் கிடைத்து வருகின்றன. கல்வெட்டு, வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்தால் எழுதப் பட்டது. தொல்பொருள் அதிகாரி மற்றும் மாணவர்களுடன் சென்று 35 ஆண்டுகளுக்கு முன் பார்த்துள்ளேன்.

"திரு நிழலும் மன்னுயிரும் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள்
மேலோங்கி பெருநிழல் போல்
வாழிய கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு"


என்று அந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தது.

வெண்பாவால் அமைக்கப்பட்ட பாடல் இது. இதன் மூலம் மன்னருடன் அறிஞர், புலவர் போன்றோர் இருந்ததற்கான சான்று கிடைக்கிறது. ஒரு வழிக் கென்று கல்வெட்டு இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. கல்வெட்டு சிதிலமடையாமல் பாது காப்பது அரசின் கடமை.

(நன்றி தினமலர் - 19 மார்ச் 2012)

5 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, குணா.

      Delete
  2. மிகச் சிறப்பான ஆக்கம். மிக நன்றியுடன் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தமிழ், தமிழர் என்று பேசுகிறார்கள். சம்பந்தபட்டவர்கள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் அவா. நன்றி சகோதரி.

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !