Pages

Saturday, April 28, 2012

தசாவதாரமும் டார்வினிசமும் !


இந்திய இந்து புராணங்கள் அணைத்தும் உண்மை தத்துவங்களை மக்கள் மனதில் எளிதில் பதிய கற்பனை கலந்து எழுதப்பட்ட காவியங்கள், கதைகள். அவற்றின் உள்ள கருத்துகளை மேம் போக்காக பார்க்காமல் ஊன்றி கவனித்தால் மட்டுமே அவ்வுண்மைகளை புரிந்து கொள்ள இயலும்.

தசவதாரம் அதில் ஒன்று. தசாவதாரம் நமக்கு சொல்லும் கருத்துகள் இவ்வுலகம் தோன்றியது எப்படி ? மற்றும் அதில் உயிர்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பது. இது டார்வின் கோட்பாடான பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளை நமக்குத்தெரிவிக்கிறது.

இந்திய நாட்டில் வாழ்ந்த பேரறிஞர்கள் தெள்ளத்தெளிவாகவும் பரிணாமக்கொள்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.  

பரிணாம வளர்ச்சியின் தோற்றம் நீரிலிருந்து தொடங்குகிறது. முதலில் நீர் பாசி இதிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி,எருமை,யானை, ஓநாய்,புலி,சிங்கம், முதலிய ஜீவப் பிராணிகள் தோன்றின இறுதியில் குரங்கு. குரங்கிலிருந்து  மூதாதையினத்தின் ஒரு பிரிவு கால கிரம வளர்ச்சியின் பின் மனிதன்.

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து ஒன்று என்பதை கவனத்தில் கொள்ளவும்.
73 வருடங்கள் வாழ்ந்த மாமேதை டார்வின் [1809 - 1882] பற்றி சில தகவல்கள் :
இரண்டாயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டு பேரறிஞன் அரிஸ்டாட்டில் பரிணாமதத்துவத்திற்கு வித்திட்டார்.


அவறின் கூற்று சத்தியத்தின் உரைக்கல் ஞானம் அல்ல இயற்கைதான் அதற்கு உரைக்கல் 

வைத்தியரான இராமஸ் டார்வின் (சார்லஸ் டார்வினுடைய தாத்தா) லிச்பீல்டு (இங்கிலாந்து) ல் வசித்தவர். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் பரிணாம ரீதியில் வளர்ச்சி பெற்றவை என்ற கருத்தை எழுதி வைத்திருந்தார். ( மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தவர்) இவரின் மறைவுக்கு (1802) பிறகு பிரஞ்சு நாட்டின் விலங்கியில் வல்லுனர் லாமார்க்  இவரின் கருத்துக்களை மூலாதாரமாக வைத்து விலங்கு சாஸ்திர தத்துவம் (1809) முதுகெலும்பு மிருகங்களின் சரித்திரம்.(1815) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

பரிணாம வளர்ச்சி பற்றி அவர் வகுத்த கொள்கைகள் ஒரே தினத்தில் எழுதப்பட்டவை அல்ல.

1859 ல் சார்லஸ் டார்வின் ஜீவராசிகளின் பரிணாமத் தத்துவத்தை வெளியிட்டார் (ஜீவராசிகளின் மூலம் 230 பக்கங்கள்) உலகின் எல்லா மதங்களும் இந்த தத்துவத்தை எதிர்த்தன. சம்பிரதாயப்பிடிகளை விட்டுவிட எந்த மதமும் ஒப்புக்கொள்ளலாது. அதனால் கண்ணைமூடி மறுதளித்தன. இன்றுவரை அவரின் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் நிரூபிக்கப் படவில்லை.

இந்து மதத் தத்துவங்களை குறிப்பாக ஆதிகால சிருஷ்டி தத்துவங்கள் சிலவற்றை மற்ற மதங்கள் தத்து எடுத்து கொண்டதாக சொல்கிறார்கள். பழைய ஏற்பாடான விவிலியத்தில் சொல்லப்படும் நோவா கால ஜல பிரளய கதை, ரோமானியர்கள் வணங்கும் நீரஸ் என்ற கடவுள் (மச்சவதாரம் - மீனுடல் மனித தலை) இவை சில உதாரணங்கள் [ ... இங்கு தசாவதாரம் -  டார்வினிஸத்தை பற்றி எழுதுவதால் இந்த கருத்துக்குள் அதிகம் செல்லவேண்டாம் என நினைக்கிறேன்...]

இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1831)  தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரி வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.

ஒரு ஆச்சர்யமான தகவல் " மூட நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்த டார்வின் இளவயதில் மதகுருவாக ஆசைப்பட்டவர்."

டார்வினிஸத்திற்கும் இந்து மத தத்துவத்திற்கு முள்ள ஒப்புமைகள்.

இந்துக்களால் போற்றப்படும் விஷ்ணுவின் தசாவதாரம் டார்வினிஸத்துடன் ஒத்துப் போகிறது.

தசாவதாரத்தை கருத்தில் கொள்ளும் போது டார்வின் வகுத்தளித்த கருத்துகள் முன்னமேயே இந்திஸத்தில் போதிக்கப்பட்டு வந்துள்ளது விளங்கும்.

முக்கிய வளர்ச்சி பருவத்தைக் கொண்டு முதல் 5 அவதாரங்களின் உருவ அமைப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு தாய் தந்தை இல்லை. ஒவ்வொரு அவதாரத்திற்கும் நான்கு கைகள்(வாமன அவதாரத்தை தவிர). அவ்விலங்கு பருவங்கள் நான்கு கால் உயிரினங்கள்.

முதல் அவதாரம் : மச்ச அவதாரம் (மீன்)
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் -  400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.



இரண்டாம் அவதாரம்: கூர்மம் (ஆமை)

நீரிலிருந்து நிலத்தில் நடப்பவை (amphibians) வளர்ச்சி 100 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.





மூன்றாம் அவதாரம் : வராகம் (பன்றி) : தரையில் வாழும்
பாலூட்டி விலங்கு (mammals) 60 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை.

நான்காவது அவதாரம் : நரசிம்மம் (மனித உருவில் உள்ள சிங்கம்) : பாதி மனிதன் பாதி சிங்கம் 30 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை



ஐந்தாவது அவதாரம்:வாமன (குள்ளமான கரடி) Homo Erectus : ஆயுதம் அற்ற இரண்டு காலில் நடக்கும் உருவம். காலம் 5மிலியன் முதல் 2மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இந்த ஐந்து அவதாரங்ளுக்கு அடுத்து வரும் 5 அவதார தத்துவங்கள் மனித இனத்தின் படிபடியான நாகரீக வளர்ச்சியை விளக்குவதாகும். ஆதிகால மனிதன் முதலில் நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டான் இது பரசுராம அவதாரம்.[ Homo Sapiens (350,000-100,000 years ago)] ஏற்கலப்பையுடன் இருப்பது காண்க.

பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது கிருஷ்ணவதாரம்( மாடு மேய்ப்பவர்.)

இறுதியில் சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்றார்கள் மனித பரம்பரையின் வளர்ச்சி சரித்திரம். பிற்பட்ட அவதாரங்களின் விளக்கம்.

இராம அவதாரத்தில் துணைப்பாத்திரமாக அதி புத்திசாலியாகவும், பலம் பொருந்திய அனுமன் (குரங்கு) சித்தரிக்கப்பட்டது ஏன் ? இதை பரிசீலிக்கும் பொழுது முதல் ஐந்து அவதாரங்கள் முன்பே வெளிப்படுத்த பட்ட பின்னரே அடுத்த அவதாரங்கள் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கத்தின் போதே சிங்கத்திலிருந்து மனித உருவம் தோன்றவில்லை குரங்கினத்திலிருந்தே மனித இனம் தோன்றியது இதை முக்கிய தகவலாக இடை செருகப்பட்ட முக்கிய கதாபாத்திரமே அனுமன் என விளங்கிக்கொள்ளலாம்.

Wednesday, April 25, 2012

அணுவும் தொல் தமிழனும் ! [ Atom Vs tamizhan ]


          பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம்   லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.

          தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .

          கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு  இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே
                                          - திருமந்திரம் 2008 [ திருமூலர் ] 

இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்"

திருவாசகத்தின் இன்னொரு சான்றையும் உங்கள் முன் வைக்கிறேன்.

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப் பெருந்தன்மை வளப் பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரையலச்
சிறியவாகப் பெரியோன் தெரியின்  
திருவாசகம் - திருவண்டப்பகுதி [மாணிக்க வாசகர் ]

         இதன் சுருக்கமான பொருள் " அண்டங்கள் பலவாக உள்ளன அவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தாலோ நூற்றொரு கோடிக்கு மேற்பட்டு நிற்பனவல்லாமல், ஒன்றை விட ஒன்று அளவிட்டறிய முடியாதபடி அழகு பொருந்தியவாகவும் உள்ளது இவ்வண்டங்கள் அணைத்தும் இறைவனின் முன்பு வீட்டின் கூரையில் உள்ள மிகச்சிறிய துவாரத்தின் விழியாக நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றித் தெரியும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் தன்மையதே"


திருமூலர் 4525 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.  18 சித்தர்களில் முதன்மையானவர்.  திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த  அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். 


சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்
மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர்.  பாண்டிநாட்டின் அமைச்சராகவும் இருந்தார். 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை, திருவாசகம்,திருக்கோவை இவரால் எழுதப்பட்டவை. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்.

அணுவை பற்றிய தகவல்கள் : )

         உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் நிரம்பியுள்ளது. நேர்மின் தன்மை கொண்ட புரோட்டான் அணுவின் மையத்தில் உள்ளது (1.0073 amu நிறை) எதிர்மின் தன்மை கொண்ட எலக்ட்ரான் மையத்தை சுற்றி சுழன்று வரும்.புரோட்டானுக்கு சமாமான மின்சக்தி கொண்டிருக்கும்.புரோட்டானைவிட 2000 மடங்கு நிறை குறைந்தது (0.000549 amu). நியுட்ரான் ஒரு அணுவில் இல்லாமலும் இருக்கும் (நிறை 1.0087amu)

புரோட்டான்களின் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண்.

2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.

கிரேக்க தத்துவஞானி டெமோகிரிடஸ் (DEMOCRITUS) கி.பி 470 ல் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மூலக்கூறை அணு (atom) என்று கூறி ஆரம்பித்து வைத்தார். பிறகு 1800 வரை நிறுபிக்க படாத ஒன்றாக இருந்தது. டால்டன் (DOLTON) தான் அணுவின் பொருண்மை குறித்த அணுவியல் கோட்பாடுகளை
1808 ல் வெளியிட்டார்.

பின்வந்த ஸ்வீடிஷ் வேதியலார் ஜான் பெர்ஜிலியஸ் (Jons Berzelius) அணுவின் நிறையை நுண்ணியமாக  கணக்கிட்டார். உதாரணமாக இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் சேர்ந்த கலவைதான் நீர் என நிறுபித்தார் H2O என்ற குறியீடையும் அளித்தார்.

140 ஆண்டுகள் கழித்து அணுவின் சக்தியை கண்டுபிடித்தார் அவோகாட்ரோ (AVOGADRO) ஆங்கிலத்தில் மாலிக்யூல் என்பது லத்தீன் வார்த்தை மாஸ் லிருந்து எடுத்தெழுதினார். மூலக்கூறின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை அறுதியிட்டு கணக்கிட்டார்.

22 லிட்டர் வாயுவில் 602 பில்லியன் டிரில்லியன் மாலிக்யூல்ஸ் உள்ளது. சுருக்கமாக இதை 6.02 x 1023 Mole-1 என்று எழுதினார். இதுவரை இந்த மாறிலி தான் அடிப்படை.

அணு சக்தி : நியூட்ரான்கள் மூலம் அணுவின் உட்கருவை துளைக்கும் போது மேலும் நியூட்ரான்களை சிதறடித்து அவை அண்மை அணுக்களை துளைத்து தகர்க்க இந்த சங்கிலி ரியாக்சனில் அபரிமிதமான சக்தி வெளிப்படுவது.

ஐன்ஸ்டின் அணுவை யுரேனியத்தில் இருந்து பிரித்தெடுத்து அதிலிருந்து பெரும் சக்தி கிடைக்கும் என்ற கருத்தை அறிவித்தார். இவர் ஜெர்மன் நாட்டிலிருந்து உயிர் பிழைக்க அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை வைத்து அமெரிக்கா தயாரித்த அணு குண்டு ஹிரோஷிமாவின் அழிவுக்கு வித்திட்டது. இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை.

அவர் இறப்பதற்கு(நவம்பர் 1954) ஐந்து மாதங்களுக்கு முன் அணு ஆயுதம் குறித்து "என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு" எழுதினார். இப்படி பின் விழைவைப் ஏற்படுத்திய அணுகுண்டை இனி எப்போதும் யாரும் பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.


Monday, April 23, 2012

தேனீக்களிடம் நடத்திய ஞாபகசக்தி ஆய்வு.


சுறுசுறுப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதில் பெயர் பெற்றவை தேனீக்கள். சமீபத்தில் ஆக்லாண்டு, ஜெர்மன்,நியுசிலாந்து புலனறிவு ஆராய்சியாளர்கள் (தனித் தனியாக) தேனீக்களுக்கு மூன்று மணிக்கொருமுறை ஐசோஃபுளுரன் மயக்கமருந்து (isoflurane) கொடுத்து ஆராய்ந்தார்கள். மனிதனின் அறுவை சிகிச்சைக்கு இம்மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. சரி இந்த ஆராய்ச்சி எதற்கு ? 

நம்மில் சிலர் எப்படி சரியான நேரத்திற்கு அலாரம் வெச்ச மாதிரி தூக்கத்திலிருந்து விழிக்கிறார்கள் ?  நமது மூலையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்சைம் சுரந்து எழுப்பிவிடுவதாக சொல்கிறார்கள். அப்படி இந்த என்சைம் சுரப்பதற்காண கோடிங் DNA ( ஜீன் செல்) வில் பதியப்படும்.  இம்மாற்றம் பற்றிய இந்த டைமிங் சென்ஸ் பற்றிய மரபியல் ஆய்வு (ஜெனிடிக்) தான் இது.

மற்ற விலங்குகளை (குரங்கு, எலி ) விட தேனீக்களுக்கு டைமிங் சென்ஸ் அதிகம் அதனால் அவைகளை இந்த ஆராய்சிக்கு உட்படுத்தினார்கள். தேனீக்களுக்கு நுண்ணிய டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டு மூன்று மணிக்கொருதரம் மேற்சொன்ன மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சில பல தூரங்களில் விட்டும் அவற்றின் கூட்டிலேயே விட்டும் இப்படி பல விதங்களில் சோதித்தார்கள்.

இப்படி தொடர்ந்த இடை வெளியில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட தேனீக்கள் நேரம் தவறின, கூடு இருந்த இடத்தை மறந்தன. அவற்றின் செயல்பாடுகளில் அந்த மூன்று மணி வித்தியாசம் இருந்தது.  அவற்றின் ஜீன் களில் mRNA ( நம்ம DNA மாதிரி) மூலக்கூறு செல்களில் இந்த வேதிவினை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் இரவில் கொடுக்கப்பட்ட மருந்து வேலை செய்யவில்லை என்கிறார்கள். இன்னும் இது குறித்த ஆய்வு தொடர்கிறது.

தேனீக்களை பற்றிய சில சுவையான தகவல்கள் :

சுறுசுறுப்பு மற்றும் கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்றவை தேனீக்கள். அதேபோல சரியான பூக்களில் தேன் சேகரிக்க குறித்த நேரத்திற்கு செல்கிறது திரும்புகிறது.  சூரியன் தான் இவற்றிற்கு திசை காட்டி(காம்பஸ்).

தேனீக்கள் 35 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக அறிகிறோம். பெரும்பாலான தேனடைகளில் ஒரேஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். ஆண் பூச்சிகள் சோம்பேரிகள் அவற்றிற்கு கொடுக்குகள் கிடையாது தேன் சேகரிக்க வெளியில் எங்கும் செல்வதும் இல்லை.  இவை செய்யும் ஒரே வேலை ராணி தேனியுடன் இணைவது (டம்மி பீஸ் ?!)

ராணி தேனீ அளவில் பெரியவை நன்கு வளர்ந்தவுடன் கூட்டை விட்டு 1000 அடி உயரத்தில் பறக்கும் தொடந்து செல்லும் 10 முதல் 20 ஆண் தேனீக்களுடன் அந்தரத்தில் இது இணையும்.  அதன் பிறகு இறகு பீய்ந்த ஆண் தேனீக்கள் இறந்து விடும். அதன் பிறகு ராணி தேனீக்கள் உறவு கொள்வதில்லை தக்க வைத்துக்கொண்ட ஸ்பேர்ம்களை வைத்துக்கொண்டு தினமும் 1500 முதல் 3000 முட்டைகளை இடுகிறது. அவற்றின் வேலை முட்டை இட்டு கொண்டிருப்பதே. வயதான பின் முட்டையிடுவதை நிறுத்திவிடும். ஒரு கூட்டில் பெரும்பாலும் ஒரு ராணி ஈ தான் இருக்கும். அதற்கு மேல் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு இறந்து ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே உயிருடன் இருக்கும்.

ராணி தேனீ எப்படி உருவாகின்றன ?   ராணி தேனீ லார்வா எனப்படும் புழுப்பருவத்தில் அது உண்ணும் ஊட்டசத்து மிக்க ஒரு வகை நொதிப்பொருளினால் அதன் உடலில் ஏற்படும் மாற்றமே அவற்றை உருவாக்குகிறது. அந்த நொதிப்பொருளுக்கு TOR (Target of Rapamycin) ராப்பாமைசின் அடைவி என்று பெயர்.

நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான தேனீக்கள் இருக்கும்.
அவற்றில் நிர்வாக கோளாரோ, குளருபடியோ ஏற்படுவதில்லை. தேன்கூடுகள் பெண்களின் ராஜ்ஜியம்.

வேலைக்கார தேனீக்கள் அனைத்தும் பெண் தேனீக்கள் ஆனால் மலடுகள். ராணி தேனீக்கு இவை கட்டுப்பட்டவை.  சுறுசுறுப்பிற்கும் கட்டுபாட்டிற்கும் பெயர் பெற்றவை. 24 மணிநேரமும் உழைக்கப் பிறந்தவை.  தேனை சேகரிப்பது கூட்டை நிர்மானிப்பது, லார்வா, ராணி ஈ, ஆண் ஈ, இவற்றிற்கு உணவளிப்பது இப்படி. எதிரிகளை தாக்க இவை கொடுக்கினால் கொட்டுகின்றன. கொடுக்கினை இழந்த தேனீக்கள் இறந்துவிடும். ( தற்கொலைப்படை ?!) 

அறுங்கோண அறைகளையே கட்டுகிறது. கட்டுமாணங்களில் சிறந்த வடிவமைப்பு இந்த அறுங்கோணம் இதற்கு பழுதாங்கும் மற்றும் இழுவை திறன் அதிகம். (வாட் எ ஜீனியஸ் !! )

மர பிசின்களைக்கொண்டும் அவற்றில் சுரக்கும் நொதியங்களை வைத்தும் புரோபோலின் எனப்படும் பிசினைக்கொண்டு மெழுகாலான பலவித பயன்பாடு கொண்ட அறைகளை (கூட்டை hive ) கட்டுகிறது.

ஊணவு கிடைக்குமிடம், திசை, ஆபத்து, இப்படி பல விசயங்களை நடனம் மூலம் பறிமாறிக் கொள்கின்றன.  சுற்றி சுற்றிப்பறப்பது, நேர்கோட்டில் சென்று நடுநடுங்கி பறந்து பின் வளைந்து திரும்புவது இப்படி பல சமிஞ்சைகள். (காணொளி காண்க)

இதன் வகைகள் மலைத்தேனீ (Epis Dorsata), கொம்புத்தேனீ - (Apis Florea), அடுக்குத்தேனீ - (Apis Indica) கொசுத்தேனீ - (Apis Melipona), மேற்குலகத்தேனீக்கள் மற்றும் ஆசிய தேனீக்கள்



மரங்களின் வேரில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய கொடும் பாவிகள் !





மரங்களை வெட்டும் செயல் எல்லா இடங்களிலும் நடக்கிறது.
மரங்களை வெட்டினார்கள் என்று செய்திகளை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது எந்த தாக்கத்தையும் ஏற்படுவதில்லை.  இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான (23.4.2012) செய்தியின் தலைப்பு
"மரங்களின் வேரில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய கொடுமை ! ( கோவை பதிப்பு)"

இச்செய்தியை படிப்பவர்கள் மனதில் முதலில் தோன்றுவது என்ன மனிதர்கள் இவர்கள். அய்யா உங்க வீட்டில் கோழி அடித்து குழம்பு வைத்தால் யாரும் கேட்க போவதில்லை.  நடைபாதை அல்லது சாலை ஓர மரங்களை வெட்டும் போது தான் அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு.

செய்தியின் சாராம்சம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் (ஆங்கிலேயர்கள் நிறைய மரங்களை நட்டு நிர்மானித்த பகுதி) ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரின் வெளியே சாலை ஓரத்தில் இருந்த மரங்களை அழிக்க முயற்சி நடந்துள்ளது. இருந்த 12 மரங்களின் அடி பாகத்தை கொஞ்சம் வெட்டி அதன் வழியாக 1 அடிக்கு ட்ரில் செய்து ஆசிட்டை ஊற்றி வைத்தது. சுற்று சூழல் ஆர்வலரும் கண்டக்டருமான லோகநாதன் கூறுகையில் ' வளர்ந்து வரும் மரங்கள் நம் குழந்தைகள் மாதிரி இதை வெட்ட எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை இந்த இடத்தில் இனி மரமல்ல சிறு செடிகூட முளைக்காது. இந்த செயல் ஒரு படுகொலை என சாடியுள்ளார்.

எப்படிப்பட்ட மரங்களை வெட்டுகிறார்கள் தேவை இல்லா மரங்களா, பட்டுபோனவையா, விழும் ஆபத்து நிலையா? வீட்டிற்கோ வேறு செயல் பாட்டிற்கே இடைஞ்சல் கொடுப்பவையா இப்படி பல கேள்விகள் இறுதி பதில் தேவை, தேவை இல்ல அவ்வளவுதான். முறையான அனுமதியின்றி வெட்ட கூடாது.

காரில் ஏ.சி போட்டுக் கொண்டு செல்லும் இவர்களுக்கு இயற்கை காற்றின் வெகுமதி பற்றி தெரியாதது நியாயம் தான். ஆனால் அவர்களின் மனசாட்சியை கேட்டு சொல்லட்டும் ஒரு முறை கூட சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிக்கவில்லையா ?

ஒரு மரம் நமக்களிக்கும் நன்மைகள் பல மனிதன் வெளிவிடும் நச்சுகாற்றை,வாகனங்கள் வெளிவிடும் நச்சு புகையை தூய்மைப்படுத்துகிறது அதில் ஒன்று. படிகாதவர்களை விட இப்படி படித்தவர்கள் தான் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள்

சுற்று சூழல் ஆர்வளர்கள் இதுமாதிரியான மரம் வெட்டும் செயலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. இது போன்று கண்மூடித்தனமான செயலை செய்பவர்களை ஆயிரம் மரங்களை நட்டு பராமரிக்கும் தண்டனை அளித்தால் தான் எவரும் இயற்கை மீது நடத்தும் இது போன்ற கொடுமையை செய்யாமலிருப்பார்கள்.

எனது கருத்து கொடுமையான வெயிலில் சேற்றில் நடு வயலில் களை எடுத்து பாத்தி கட்டும் தண்டனையும் சேர்த்து கொடுக்கவேண்டும்.

தங்கள் கருத்துகளை பதிவிட அழைக்கிறேன்.

Saturday, April 21, 2012

சரித்திரம் - கவிஞர் கண்ணதாசன் கட்டுரை


தமிழ் கூறும் நல்லுழகத்தில் உள்ள சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர். கண்ணதாசன் சரித்திரம் பற்றி அவர் எழுதிய கட்டுரை இது. எளிமையான மொழிநடை மடை திறந்த வெள்ளமென பொங்கிப்பாயும் அவரின் தமிழ் எழுத்துகளைப் படிப்போமா ?

(இதை உடனே படிக்க இயலாதாவர்கள் இங்குள்ள PDF மின் பக்கத்தை தரவிரக்கிக் கொள்ளவும்)
(நன்றி ஓவியர் திரு.ஜீவா)
                                                                    
சரித்திரம்

சரித்திர நதியின் ஓட்டத்தை நிறுத்தியவனும் இல்லை; திருந்தியவனும் இல்லை.

அதன் இரண்டு கரைகளில் ஒன்று வெற்றி; ஒன்று தோல்வி !

வெற்றிக் கரை பசுமையாக இருக்கிறது; தோல்விக் கரை சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.

பசுமையான நிலப்பரப்பை விட சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பிவழிவதை பார்த்த பிறகும், அடுத்து வருகின்றவன் தன்னுடைய, பசுமை நிரந்தரமான தென்றே கருதுகிறான்.

அந்தச் சுடுகாட்டில் அலெக்சாண்டரைப் பார்த்த பிறகும், அகில ஐரோப்பாவுக்கும் முடி சூட்டிக் கொள்ள முயன்று, அங்கேயே போய்ச் சேர்ந்தான் நெப்போலியன்.

அந்த நெப்போலியனின் எலும்புக் கூடுகள் சாட்சி சொல்லியும் கூட, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்குப் பக்கத்திலேயே படுக்கை விரித்துக் கொண்டான்  ஹிட்லர்.

அந்த ஹிட்லரை எப்போதும் தனியாக விடாத முசோலினி, அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போய் அவனுக்கு இடம் தேடி வைத்தான்.

அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள், ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிக் காலங் காலங்களாகச் சாட்சியங்கள் இருந்தும் கூட கண்மூடித்தனமான அதிகார வெறி இருந்து கொண்டே இருக்கிறதே, ஏன்?

அதுதான் இறைவன் பூமிக்கு வழங்கிய தர்மம் !

அழிய வேண்டியவன், ஆடி முடித்துத்தான் அழிய வேண்டும் என்பது காலத்தின் விதி.

பதவி என்னும் பச்சை மோகினியின் கரங்களில் பிடிபட்டவனிடமிருந்து அடக்கம் விடைபெற்றுக் கொள்கிறது; ஆணவம் தலை தூக்கி நிற்கிறது !

வெற்றி வெற்றி என்று தொடர்ந்து வர வர, தோல்வி என்பது தன் அகராதியிலேயே இல்லை என்ற துணிச்சல் வருகிறது !

கண்ணுக்கு முன்னாலிருக்கும் பயங்கரப் படுகுழிகூட தனக்காகக் கட்டப்பட்ட நீச்சல் குளம் போல் தோன்றுகிறது.

விழுந்த பிறகு, எலும்பு முறிந்த பிறகுதான் மாயை விலகுகிறது; மயக்கம் தெளிகிறது !

ஒரு மனிதனின் கரங்களுக்குள் உலகத்தின் சுக துக்கங்கள் விளையாட, இறைவன் ஒரு போதுமே அநுமதித்ததில்லை.

அடித்த பந்து, திரும்பி வந்து தாக்கும் போது தான் இந்த உண்மை புலப்படுகிறது.

ஆணவக்காரன் ஒவ்வொருவராக விரோதித்துக் கொள்கிறான்.

பிறகு அவனே எல்லா எதிரிகளையும் ஒன்றாகச் சேர்த்து விடுகிறான்.

அவர்கள் தனக்கு எதிராக விசுவரூபம் எடுத்து நிற்கும்போது, ' யாரோ செய்த சதி' என்று அலறுகிறான்.

சர்வாதிகாரத்திலேயே ஆணவ அதிகாரம் சாஸ்வதமில்லை யென்றால், ஜனநாயகத்தில் எப்படிச் சாத்தியமாகும் ?

விழித்துக் கொண்டே வெற்றிகளைப் பெற்ற ஹிட்லரை, நார்மண்டி முற்றுகையின் போது, தூங்கிக் கொண்டே தோல்வியைத் தழுவ வைத்த இறைவன், உலகத்தில் பதவியையும் பணத்தையும் சமப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

எங்கேயும் எதுவும் அளவுக்கு மேல், காலா காலங்களுக்கு நின்று விடுவதை அவன் அனுமதிப்பதில்லை.

ஆகவே, அதிகாரமுள்ளவனிடம் அடக்கத்தையும் பதவியிலுள்ளவனிடம் பணிவையும் நாடு எதிர் பார்க்கிறது.

புகழ்ச்சிகள் மிகுதியாக மிகுதியாக ஹிருதயம், விமரிசனத்தைத் தாங்குவதற்குச் சக்தி இல்லமல் போய் விடுகிறது.

எந்த விமரிசனத்தையும் தாங்கக்கூடிய சக்தி எவனிடமிருக்கின்றதோ, அவனுடைய தோல்வி கூட மோசமான தோல்வியாக இருக்காது.

நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனசாரப் புகழ்வேன்; விமரிசிக்க வேண்டிய கட்டத்தில் மனசார விமரிசிப்பேன்.

நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, இருந்தும் அவர்கள் பேச்சைக் கேட்காததாலோ தான் பல மன்னர்வர்கள் முடி இழந்திருக்கிறார்கள்.  பல மந்திரிகள் முடிவடைந்திருக்கிறார்கள்.

இயற்கையின் நியாயங்கள்; நண்பர்களின் வாதங்கள் அனைத்தையும் பரிசீலித்து, ஒழுங்காகச் சாலையை வகுத்துக் கொள்வோர்ருக்கு என்றும் அழிவில்லை.

அவர்களது நதிக்கரை, என்றும் பசுமையாகவே இருக்கும்.

நான் நண்பன் என்று நம்புவோர் எனது இந்த வாதத்தை விருப்பு வெறுப்பில்லாமல் பரிசீலிப்பார்களா ?

மேலே நீங்கள் படித்த கட்டுரை நான் இப்போது எழுதியது அல்ல.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 1962 ல் தி.மு.க வினர் ஐம்பது பேர் வெற்றி பெற்றுச் சட்டசபைக்குள் நுழைந்தபோது எழுதியது.

என்னுடைய எழுத்துகளில் சில, காலங்கடந்து நிற்கும் என்பதற்கு இது சான்று.
                                                       
                                                           *******************

Friday, April 20, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 3)

                                                                 <<முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும்>>

கோயில் கட்டிடக்கலைக்கு பல்வேறு அம்சங்கள் அல்லது நுணுக்கங்கள் தேவைப்படும்.  கட்டிட சாஸ்திரங்கள் அடுத்து கலை நுணுக்கம் இவை இரண்டும் அடிப்படை எனலாம்.  சிலை மற்றும் கற்தூண்கள் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் கல்வகை மற்றும் கற்பாறையின் ஸ்திரதன்மை முக்கியமானது.

ஓவியம் மற்றும் நாட்டிய முத்திரைகள், பாவம், நளினம், கணக்கீடு, கற்பனை திறன், நுணுக்கம், முக்கியமாக பொருமை, கலையின் மேலான பக்தி இவையெல்லாம் இல்லாமல் ஒரு கற்சிலை உயிர்ப்பு தன்மை பெருவதில்லை.

சிதம்பரம் கோவில் சிலைகள், தூண் அமைப்பு, இடவமைப்பு, தத்துவங்கள், இப்படி பல ஒப்புமைகளை உடையதாக பேரூர் கோயில் திகழ்கிறது அதனாலே இது "மேலை சிதம்பரம்" என அழைக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் காரணம் அக்கோவிலின் நிர்மானித்தவரும் அக்குழுவும் இங்கும் பணிசெய்திருப்பது தான்.

கனகசபை மண்டபம் :

நடராஜரும், சிவகாமசுந்தரியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த கனகசபை மண்டபத்திற்கு தனி வரலாற்றுச் சிறப்பு உண்டு.

பேரூர் கோவிலின் கனகசபை மண்டபம் கி.பி. 1625 முதல் 1659 வரை தொடர்ந்து 34 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்ப்பட்டது. அதாவது சுமார் 382 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது.

இந்த கனகசபை மண்டபம் 36 தத்துவங்களை உணர்த்தும் வகையில் 36 தூண்களை கொண்டது. மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.  இவை பல்வேறு கதைகளை சொல்கிறது.

சபை மண்டபத்தின் மேற் கூரையின் மையத்தில் நான்கு கற் சங்கிலிகள் மற்றும் அதன் உள்வட்டத்தில் தாமரை வடிவம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.  இந்த கற் சங்கிலியில் பல ஆண்டுகளுக்கு முன் ஊஞ்சல் கட்டி விக்கிரக  வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்தது.   அப்படி ஊஞ்சல் ஆட்டப்படும் போது கூரையின் தாமரை வடிவ கற்சிலையின் நடு மொட்டு கரகரவென சுழழும் என கேள்விப்பட்டுள்ளேன். அதனாலெயே இது "சுழழும் தாமரை" என அழைக்கப்படுகிறது.  கற்சங்கிலி ஒரு கண்ணி உடைந்த பிற்பாடு இப்பூசை வழிபாடு வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.  (இச்சிற்பங்களின் படங்களை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)

கற்தூண் சிற்பங்களில் ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரம் ஒன்று அறியக் கிடைக்கிறது.



"முன்னங்கால்கள் இரண்டை தூக்கி கொண்டுள்ள மூர்க்கமான குதிரையின் மீது ஒரு வீரன். குதிரை தூக்கிய கால்களின் கீழே சிறுத்தையுடன் போரிடும் மற்றொரு வீரன். அவ்வீரன் ஒருகையில் கேடயம் மறுகையில் இருக்கும் வால் சிறுத்தையின் உடலில் புகுந்து மறுபுறம் வெளிப்படும் அதன் முனை"

இன்னொரு சிறப்பு மேற்சொன்ன தோற்றம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அச்சு அசலாக எதிர் எதிரெ இடது வலது நிலைகளுடன் பார்பவர்களை பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மகோன்னதத்தை பறைசாற்றுகிறது.

மேற்சொன்ன கற்தூண் சிற்பங்கள் நான்கில் ஒன்று உடைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. அதாவது அந்த தூணின் குதிரையின் இருகால்கள் மற்றும் குதிரைவீரனின் இரு கால்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. மேற்சொன்ன மற்ற எவையும் இல்லை.

இது பற்றிய காலங்காலமாக ஒரு உண்மை சம்பவம் சொல்லப்பட்டு வருகிறது.

ஒரு இளைஞன் தம் தகப்பனாரை தேடி நெடுந்தூரத்திலிருந்து பேரூர் வருகிறான். சிறு குழந்தையாக இருக்கும் போதே இங்கு சிற்பம் செய்ய வந்த தன் தகப்பனை பார்பதற்காக இங்கு தேடி வருகிறான்.

அப்போது இக்கோயிலின் கனகசபை மண்டபம் முக்கால் பாகம் முடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

சிற்பக்கலை தெரிந்த அவன் இங்கேயே பணி செய்து சிற்பியான தமது தந்தையை தேட முடிவு செய்கிறான்.  பல நாட்கள் சென்ற நிலையில் மேற்சொன்ன கற்றூணை காண்கிறான்.  அந்த தூணில் ஒச்சம் இருப்பதாக கூறுகிறான்.   அதாவது நன்கு ஆராயாமல் சிலை வடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தூணில் நீரோட்டம் மற்றும் மிகச்சிறு தவளை போன்ற தேரை கல்லினுள் இருப்பதாக அருதியிட்டு கூறுகிறான். (கல்லினுள் தேரை என்பது மாம்பழத்தினுள் வண்டு எப்படியோ அது போல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்)


இது போன்று ஒச்சம் உள்ள கற்கலில் சிலை வடிக்க கூடாது என்பது மரபு. பிற்காலத்தில் இந்த தூண் பழுதடையும் அல்லது சுவாமி சந்நிதியில் கல்லினுள் உயிர் உள்ள சிலை இருக்ககூடாது.

இந்த சர்சையின் இறுதியில் இந்த கல் தூண் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து தேரை இருப்பது நிரூபிக்கப்பட்டது.   அந்த இளைஞன் தேடிவந்த தந்தை வேறு யாருமல்ல அழகாத்திரி நாயக்கர் என்று சொல்கிறார்கள்.  இந்த இளைஞன் பிரதி உபகாரமாக தன் கையால் செய்து கொடுத்த சந்தன மரத்தாலான கலை வேலைப்பாடு மிக்க பெரிய ஜன்னல் இன்றும் கலை நயத்தை பறைசாற்றுகிறது.

                                                               <<சுவடுகளைத் தேடி ...தொடர்கிறது >>

Wednesday, April 18, 2012

கலந்து கொள்ளும் போட்டியில் பாஸிடீவ் அப்ரோச் ? பள்ளி மாணவியின் கருத்து


வெல்த் ஃப்ரெம் வேஸ்ட் -  பள்ளிகளில் வைக்கப்படும் ஒரு போட்டி.

எந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டாலும் நமக்கு எப்படியும் ஒரு பரிசு அல்லது முதல் மூன்று பரிசுகளில் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரும், மாணவியும் நினைக்கிறார்கள்.  சரி இது சரியானது தானே என்கிறீர்கள்.  ஆனால் நமக்கு பரிசு கிடைக்காமல் போனால் ? என்று சந்தேகத்துடன் கலந்து கொள்ளும் போதுதான் தோல்வியின் முதல் படியில் கால் வைப்பதாக அர்த்தம்.   ஆனால் நாம் இந்த போட்டியில் கலந்து கொள்வோம் பரிசு கிடைப்பதும் கிடைக்காததும் இரண்டாம் பட்சம் என்று மனதை பக்குவப்படுத்தி கொள்ளும் போது அடுத்த முறை வெற்றிக்கான் முதல் படியில் கால் வைத்துள்ளோம் என பாஸிடீவ் அப்ரோச் தான் நல்லது.   தோல்வி எதனால் ஏற்பட்டது என்பது அடுத்த கட்ட நடவடிக்கை.


வெல்த் ஃப்ரெம் வேஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட ஆறாம் வகுப்பு மாணவி திவ்யாநிவேதிதா தனது அணுபவத்தை நமக்கு சொல்கிறார்.

வெல்த் ஃப்ரெம் வேஸ்ட் -  இதப்பத்தி என்ன சொல்ல ... வேஸ்டா போன திங்ஸ் வெச்சு ஒரு யூஸ்புல் திங் செய்யரது. இந்த போட்டில கலந்துக்கும் போது எந்த ஐடியாவும் இல்ல...

அப்புரம் எங்க அப்பாட்ட கேட்டேன் நீயுஸ் பேப்பர வைச்சு ஒரு மேஜிக் ஃபேன் செய்யலாம்னாரு. எனக்கொண்ணும் புரியல அவரே எனக்கு எக்ஸ்பிலைன் பன்னார்.

ம்..எங்க அம்மாவா.. இதுக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம் ...இந்த பக்கமே வரமாட்டங்க.  

இந்த மேஜிக் விசிறி நீங்க நினைக்கிறமாதிரி ரொம்ப கஸ்டமெல்லாம் கிடையாது. என்ன மேஜிக்னா முதல்ல இத பார்க்க ஒரு பைப் மாதிரி இருக்கும் விரல்ல பிடிச்சு வெளியே இழுத்தா அழகா ஒரு விசிறி வெளில வரும்.  பைப்பை உள்ளே தள்ளினா விசிறி மடிஞ்சி உள்ள போயிரும். அவ்லோதான்.

இத எப்படி செய்யரது ? எங்கப்பா அப்புரமா சொல்லுவார்.

முக்கியமா நா சொல்லவர்ரது என்ன..ன்னா..
இத ஸ்கூல்ல செஞ்சி வெச்சதும் யாருமே இத கண்டுக்கலா..
சரி நல்லால்ல போலன்னு விட்டுட்டேன்.



ஜட்ஜா இருந்த மிஸ் கிளாஸ்க்கு வந்தாங்க.

அப்புரம் ஏதோ பேசும்போது எ பிரண்டு
"மிஸ்,  திவ்யா செஞ்சிருந்த மாடல் நல்லா இருந்ததில்லன்னா."
அப்பதா மிஸ், " என்ன செஞ்சிருந்தே ன்னாங்க.."

நா எடுத்து அது எப்படி வேல செய்துன்னு செஞ்சி காட்டினேன்.  
மிஸ்,  " ரொம்ப நல்ல யுஸ்புல் திங் " இத அப்பவே நீ எக்ஸ்பிளைன் செய்யாம விட்டுட்டியேன்னாங்க.  

இப்ப நான் என்ன சொல்ல வந்தேன்னா நாம,  எதை செஞ்சாலும் மத்தவங்களுக்கு அதோட உபயோகம், இல்லேன்னா... ஸ்பெசல் பத்தி சரியா டிஸ்பிலே செய்யலேன்னா தோல்விதான்.  

எப்படியோ டீச்சரோட ரெக்கமண்ட்ல தேர்ட் பிரைஸ் கிடச்சிச்சு
அவ்வ்ளோதான் மூச்சிறைக்க சொல்லி முடித்தாள்.

*********
என்னோட டேர்ன்,  மேஜிக் விசிறி எப்படி செய்வது என்பதை இங்குள்ள PDF பைலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அரவிந்த் குப்தா என்பவர் குழந்தைகளுக்காண இது மாதிரியான பல விசயங்களை அவரோட வளைத்தளத்தில் காணொலியுடன் பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்.  பல அவார்டுகள் அவரை தேடி வந்தன. நான் கண்ட வரையில் குழந்தைகளுக்கு, மாணவ மாணவியருக்கு இம்மாதிரியான அறிவியல் பூர்வமான இந்திய வளைத்தளத்தை காண்பது அரிது.

அந்த முகவரி :

http://www.arvindguptatoys.com

Tuesday, April 17, 2012

விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா


கோபால்சாமி துரைசாமி நாயுடு இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று அன்பாக அழைக்கப்ட்ட பல்துறைகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.  
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் ஊருக்கு வந்த சர்வேயர் (பிரிட்டிஸ்காரர்) ஒருவரின் மோட்டார் பைக்கை பார்த்து ஆசைப்பட்டு வீட்டை விட்டு கோவைக்கு வந்து ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்து மூன்று ஆண்டுகளில் ரூ.400 சேர்த்து வைத்தார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அதே பிரிட்டிஸ்காரரின் காலடியில் வைத்து தனக்கென சொந்த பைக்கை அவரிடம் இருந்து பெற்று அதை வைத்து பல ஆராய்சிகள் செய்தார்.  பின்னர் 1920ல் பஸ் போக்குவரத்து நிறுவனம் ( UMS )  ஆரம்பித்தார்.
இவர் வியத்தகு சாதனைகள் புரிந்த துறைகள் எலக்டிரிகல், மெக்கானிகல், விவசாயம் (வீரிய ஒட்டு ரகங்கள்), மற்றும் ஆட்டோமோபைல்.

கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்கள் எழுதிய சுய சரிதை நூலுக்கு முகவுரை எழுதி இருந்தார் 


ஜெர்மனியிலிருந்து 25.8.1960 ல் ஜி.டி நாயுடு அவர்கள் எழுதிய அந்த முகவுரை யிலிருந்து சில பகுதிகள், அப்படியே தருகிறேன்

என்னை பொறுத்த வரையில் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவின் வழிகளையும் ஆலோசனைகளையும் கொண்டுதான் அப்பொழுதே எலெக்டிரிக் மோட்டார்களையும், ஷவர பிளேடுகளையும் உற்பத்தி செய்வதற்கும், இவைகளுக்கான இயந்திரங்களை செய்வதற்கும் ஆரம்பித்தேன்.  
இங்கு செய்த இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட சவர பிளேடுகளுக்கு 1936 ல் ஜெர்மனியிலேயே முதல் பரிசு கிடைத்தது.  இங்கு தயாரிக்கப்பட்ட எலெக்டிரிக் மோட்டார்கள், அலிப்பூரிலும், கிண்டியிலும் செய்த பரிட்சைகளில், மேலை நாடுகளில் செய்யப்பட்ட மோட்டார்களை விட சிறந்தவை என நிரூபனம் செய்யப்பட்டது.

          சமீப வருசத்தில் ஒரு நாள் நான், திரு. ஆர்.வி. சுவாமிநாதன், மைசூர் ராஜ்ய முன்னால் தொலில் மந்திரி திரு. சித்தலிங்கையா ஆகிய மூவரும் சர். எம். விஸ்வேஸ்வரய்யாவின் வீட்டில் இருந்த போது, நாங்கள் சில கடிதங்களை படித்துக் கொண்டிருந்தோம்.  நாங்களெல்லோரும் மூக்கு கண்ணாடி உபயோகித்து படிப்பதை அவர் கவனித்து தானும் ஒரு பத்திரிக்கையை எடுத்து கண்ணாடியின் உதவியின்றி படிக்க ஆரம்பித்தார்.

        பிறகு எப்படி அவரால் கண்ணாடி இல்லமல் படிக்க முடிந்தது என்று நான் கேட்டதற்கு,  கண் பார்வையைச் சரிவர பாது காப்பதற்கு தினமும் விழியை இடது புறமும் வலப்புறமும் 70 தடவைகளும், மேலும் கீழுமாக 40 தடவைகளும் அசைத்து பிறகு கண் இமையை விரல்களினால் சில விநாடிகளுக்கு அழுத்தி விட வேண்டுமென்ற ஒரு எளிய பயிற்சியை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

       இந்த முறையை விடாமல் அனுசரித்தால் கண்ணாடியின் உதவி இல்லாமல் படிபதற்கு உங்கள் கண்கள் எப்பொழுதும் தயாராக இருக்கும் என்றும் சொன்னார்.

       மேலும் அவர் கூறியதாவது நல்ல ஓய்வும் தூக்கமும் பெறுவதற்கு தினமும் சில மைல்கள் நடக்க வேண்டும் வயிறு புடைக்கச் சாப்பிடாமல் தேவையான அளவு மாத்திரமே சாப்பிட வேண்டும். அதனால் நல்ல பசி ஏற்படும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது அற்ப சந்தோசங்களில் மன நாட்டம் கொள்ளாதீர்.  நீங்கள் இவைகளைப் பின்பற்றினால் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியளிக்கும்.  

       இப்பொன்மொழிகளை நான் மறக்க இயலாது.  தினமும் அவர் இந்தப் பயிற்சிகளை செய்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.





Saturday, April 14, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 2)



இதற்குமுன்னர் பிறவா பனை எனும் அதிசய மரத்தை பற்றி எழுதி இருந்தேன்.

             இன்னொரு மரம் "பிறவா புளி" எனும் புளிய மரம் பேரூர் பேருந்து நிறுத்ததின் அருகில் உள்ளது. பல நூற்றாண்டுகளை கடந்த இம்மரத்தின் புளியங்கொட்டையை எங்கு விதைத்தாலும் முளைப்பதில்லை.  இது குறித்து ஆராயும் போது சில உண்மைகள் பிடி பட்டன. அதாவது இந்த புளியம் பழமானது பழுத்த நிலையில் புளியங்கொட்டை முற்றி நிலத்தில் விதைத்தால் முளைக்கும் ஆனால் இந்நிலைக்கு வரும் சூழ்நிலையில் விதையில் துளை ஏற்பட்டு பட்டுபோய் விடுகிறது.  ஆனால் எது எப்படியோ மக்களிடம் ஒரு நம்பிக்கையை மட்டும் ஆணித்தரமாக விதைக்கிறது அது

"இவ்விடம் பிறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்பதை உணர்த்துகிறது "

           முற்பிறவி, மறுபிறவி இந்த ஆராய்ச்சிக்கு நாம் செல்ல போவதில்லை. நம்புவதும் நம்பாமையும் அவரவர் கருத்து சுதந்திரம் அதில் பிறர் கருத்துகளை திணிப்பது அல்லது தலையிடுவது சரியல்ல என்பது எனது கருத்து.


           அடுத்து கொங்கு மண்டலத்தின் நாகரீகம், பண்பாடு,கலாச்சாரம்  நொய்யலாறு தொடங்கி முடியும் இடம் வரை கரையோர கிராமங்களில் வேறூன்றி ஒரேமாதிரியாக காணப்படுகிறது.  நொய்யல் குறித்த எனது கவிதை ;

நுரைதெறித்து மனங்குளிர வருவாய் குதித்தோடி 
சப்தமென்ன சந்தமென்ன இசைப்பாய் செந்தமிழே ! 
கருவாகி கதிர்தழைக்க உருவானாய் தமிழ்மகளே - தமிழர் 
வீரமென்ன வெற்றியென்ன? கதைப்பாய் முத்தமிழே !

(கவிதை எழுதுவதில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை சொற்பிழை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்)

   
          காஞ்சிமாநதியான நொய்யலின் பிறப்பிடம் மேற்கு மலைத்தொடரின் வெள்ளியங்கிரி மலை. இங்கு பெரியார், சேயார் எனும் சிற்றாறுகள் நொய்யலுடன் சாடிவயலில் துணை சேர்கின்றன.

         பெரியார் சிறுவாணி மலையிலிருந்து கோவைக்குற்றால அருவியாக விழுகிறது.

         நொய்யல் 160 கிலோமீட்டர்கள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்ந்து கொடுமுடி (ஈரோடு) அருகில் காவிரியுடன் கலக்கிறது இவ்விடம் நொய்யல் கிராமம் (கரூர்) என அழைக்கப்படுகிறது.

         கரை புரண்டோடும் நொய்யல் வழியில் 23 அணைக்கட்டுகள், 23 கால்வாய்களின் வழி பாசணத்திற்கு செல்கிறது.  100 சதுரகிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட 31 குளங்களை நிரப்புகிறது எண்ணற்ற ஓடைகள் இதனுடன் சேர்கிறது. 20,000 ஏக்கர் நிலங்களை பசுமையாக்குகிறது.  30,000 ஏக்கர்கள் பாசனவசதி பெருகின்றன. இந்நதி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழிபாய்ந்து செழிப்பாக்குகிறது.

         இவ்வாற்றின் மொத்த பரப்பு 3500 சதுர கிலோ மீட்டர்கள்.

        வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையில் இருந்து இந்நதிக்கு நீர் சேகரமாகிறது. கோயமுத்தூரின் நீர் மட்டம் நடுநிலையுடன் இருக்க இங்குள்ள குளங்களே நீர் ஆதாரம் என்பது மிகையல்ல.

        சாளுக்கிய சோழவம்சம் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் அனேக கால்வாய்களை வெட்டி குளங்களை அமைத்து நீர் வளம் பெருக்கினார்கள்.  வெள்ளம் பெருக்கெடுத்து சொல்லும் போது சுற்றியுள்ள கிராமங்களுக்கு எவ்வித சேதரமும் ஏற்படுத்தாமல் இந்த கால்வாய்களின் மூலம் ஏரி குளங்களை நிறப்ப சமயோசித ஏற்ப்பாட்டினை வழிவந்த கொங்கு மன்னர்கள் திறம்பட செய்திருந்தார்கள். குளங்களங்களின் கொள்ளலவும் மீறும் போது வாய்கால்களின் மூலம் திரும்ப நொய்யலுக்கு வந்து சேரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கொங்கு வரலாற்றின் சுருக்கம் அறிவோமா ?

         தமிழகத்தின் மேற்கு பாகம் கொங்குநாடு என அழைக்கப்படுகிறது. சேரர்களின் பிரதான பகுதி கொங்குநாடு. இதன் தலை நகராக கரூர் விளங்கியது.

அதன் பிறகு வந்த கொங்கு வம்சத்தினரின் தலைநகர் தாராபுரம் (பழங்கால பெயர் தர்க்கபுரி மற்றும் விஜயஸ்கந்தபுரம்) அதன்பின் சோழர்களின் வம்சாவழியினர் கட்டுப்பாட்டில் வந்தது (ஐந்து அரசர்கள் வீரசோழா முதல் ராஜராஜன் வரை கொங்குதேச ராஜாக்கள் என குறிப்பிடப்படுகிறது)

அதன்பின், ஹொய்சால வம்சத்தினரின் துணைகொண்டு பாளையக்காரர்கள் சோழர்களை தோற்கடித்தனர். சில காலம் விஜயநகரம்,மைசூர் ராஜ்ஜியங்களின் கீழும், தீரன் சின்னமலையின் கீழும் கொங்கு ஆளப்பட்டது.  இறுதியில் ( 1805 ) பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியக் கம்பெனியுடன் இணைக்கப்பட்டது.

       கிரேக்கர்கள் மற்றும் ரோமானியருடனான வணிகத்தொடர்பு இருந்ததற்காண நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. (இது குறித்த மற்றொரு பதிவு)


      சிற்பக்கலையின் சிறப்புடன் திகழும் பேரூர் கோயிலின் சிறப்புகளை அடுத்து காண்போம்.
                               

Thursday, April 12, 2012

நானும் என் விகடனும் ...


        இந்த வார (18.4.2012) ஆனந்த விகடன் இதழுடன் இணைப்பு என் விகடனில்  வலையோசையில் எனது வலைப்பக்கம் குறித்து எழுதியுள்ளார்கள்.

       என்விகடன் கோவை எடிசன்..ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,சேலம்,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளை உள்ளடக்கியது.

       என்னைவிடவும் சந்தோசப்பட்டவர்கள் என் அம்மா, மனைவி மற்றும் மகள்.

       புத்தகம் படிக்கும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஆரம்பிக்கிறது. (...பாடபுத்தகம் அல்ல)   ஆனா முக்கியமா புத்தகம் படிக்கனும்கர ஆர்வம் சுய சிந்தனையா இருந்தாலும் யாரவது ஒரு தூண்டுதல் காரணமா இருக்கும். எனக்கு சின்ன வயசுலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை தூண்டியவர் ஆசிரியரான எனது தந்தை திரு.நடராஜன்.   இப்போது அவர் நினைவுகள் மட்டுமே என்னோடு....

         அவரோட வாழ்நாள் முழுக்க ஒரு வாசகனாவே இருந்தார்.  எனக்கு தெரிஞ்சு இறுதி நாட்களில் மட்டுமே படிக்கரத நிறுத்தினார்.

         புத்தகங்களின் அறிமுகம் என்ற வகையில், என் கரம்பிடித்து அழைத்து சென்ற நூலகங்கள் என் மனக்கண்ணில் தோன்றுகிறது.  கோவை மாநகராட்சி இருக்கும் அந்த பழமையான கட்டிடத்தில் ஒரு நூலகம் இயங்கி வந்தது.

       வாயிலின் உள்ளே நுழைந்ததும் மரத்திலான சுழற்படிக்கட்டு (சுருள் வடிவ படிக்கட்டுங்க ...எக்ஸ்லேட்டர் மாதிரி சுத்தி போகும்னு நினைச்சுக்காதீங்க..) தென்படும் அதன் மேல் ஏறிச் சென்றதும். அத்தனைப் புத்தகங்கள் என் கண்கள் விரியப்பார்க்கிறேன். அதற்கு முன் அவ்வளவு புத்தகங்களை ஒரு சேரப் பார்த்ததில்லை.

        அடுத்து ஒரு நூலகம் சலீவன் வீதியில் இருந்தது.    அதன் பின் எனக்கு அறிமுகமான பேரூர் நூலகம்.  இது பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் கிழக்கு துணைவாயிலின் உள்புறக் கதவிணை அடைத்து ஒரு அறை முழுக்க புத்தகங்கள் நிறைந்திருக்கும்.

        படிப்பதற்கு அங்கு நிலவிய நிசப்தமான சூழ்நிலை ... படபடக்கும் சிறகுகள் அடித்து கீச் கீச் என நம்முடன் படிக்கும் சிட்டுக்குருவிகள், ...கால்களில் கட்டிய சங்கிலியின் ஒலியுடன் கழுத்தில் கட்டிய மணி சப்ததத்துடன் கம்பீரமாக நடந்து செல்லும் யானையின் ஒலி ...என படிக்கும் சூழ்நிலை வித்தியாசமானது. வார இறுதி நாட்களில் சாப்பாட்டை மறந்து நூலகத்திலேயே படித்துக் கொண்டிருப்பேன்.
தற்போது தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.


        எனக்கு இந்த வார புத்தகங்கள் இருந்தால் போதும் எதுவும் வேண்டாம் அப்படி ஒரு ஆர்வம் அந்த பள்ளி பருவத்தில்.   சரி விசயத்திற்கு வருகிறேன் விகடன் பரிசயமானது அப்போது தான்.

        அதில் முக்கியமா என்னைக் கவர்ந்த பகுதி வார்த்தை இல்லா கார்டூன் சிரிப்புகள். பிரபல எழுத்தாளர்களின் கதைகள் அதற்கு ஓவியர்களின் ஓவியங்கள்.  ஓவியங்களைப் பார்த்து கவரப்பட்டு கதைகள் படிக்க ஆரம்பித்தேன்.   ஓவியங்களின் கீழே இருக்கும் கையெழுத்த பார்க்காமலே இந்த படம் இவரு வரைஞ்சது என்கிற ஞானம் இருந்தது.

        இப்பொழுது பழைய பக்கங்களை "பொக்கிஷம்" என்கிற தலைப்பில் வெளியிடுகிறார்கள். அவைகளில் சில, அப்போது படித்த நாட்களை நினைவு படுத்துகிறது.  ( பொக்கிஷமா ...இவரு ரொம்ப வயசானவர்ன்னு அண்டர் எஸ்டிமேட் வேண்டாம்.. அதுக்குத்தான் " அவைகளில் சில" -க்கு அடிக்கோடு போட்டிருக்கேன்..! )



         நமக்கென ஒரு வலைப்பகுதி ஆரம்பித்து எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவை என் தந்தை ஆர்வமுடன் வாங்கிப்போட்ட அந்த புத்தகங்கள் என்றால் அது மிகையாகாது. ஒரு சில புத்தகங்களை வாசிக்கும் போது அவர் என்னுடன் சேர்ந்து படிப்பது போலவும், பேசுவது போலவும் உணர்கிறேன்.

       முகம்தெரியாத அன்பு உள்ளங்கள் என் எழுத்துக்கு கொடுத்த வரவேற்புகள், வாழ்த்துகள்,  விகடனைச் சென்றடைந்து என்விகடனில் "வலையோசையில்" அறிமுக அங்கீகாரத்தை இவ்வளவு விரைவில் கொடுத்துள்ளது.

       ஆனந்த விகடன் குழுமத்தாருக்கும், திரு.சஞ்சீவ் குமார், விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

       பதிவர்களில் அறிமுகப்பதிவராக இந்த "இனியவை கூறலை" அறிமுகம் செய்து பல வாசகர்களை படிக்க வைத்த திரு.சதீஷ் (சங்கவி),  இந்த பதிவ வெளியிட்டு இவ்வளவு நேரமாச்சு என நேரத்தேட குறிப்பிட்டு வரவேற்பு கொடுக்கும் திரு.சி.பாலசுப்ரமணியன் (பாலா பக்கங்கள்)  அவர்களுக்கு என்நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

      இங்க முக்கியமா ஒன்னு சொல்லிக்கிறேன் என் முகமறியாமல் என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்தவங்க.

      இன்டலி வழி தொடர்ந்த ஆதரவு கொடுக்கும் அன்பர்கள் - நண்பர்கள்,
குணாதமிழ், மஞ்சு, ஆரிப்ஸ்டார், முகவரி, வழிப்போக்கன், நிலவன்பன்(நிலாப்பொண்ணுக்கு), கிருஷ்ணா கார்திக், திண்டுக்கல் தனபாலன், சம்பத், ராஜராஜேஸ்வரி(ஜெகாமணி)...

      மற்றும் கூகிள் வழி தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்
அப்துல் பாசித்(பிளாக்கர் நண்பன்), ம.பாண்டியராஜன் (எலக்ட்ரிக்கல் ஹிஸ்ட்ரி), ராஜா MVS, கலை (கிராமத்து கருவாச்சி), வேதா.லங்காதிலகம்,ரத்தினவேல் நடராஜன், சென்னைபித்தன் அவர்கள், முனைவர்.இரா.குணசீலன் (வேர்களைத்தேடி), NICE VENTURES (சொல்வனம்), பாலா, ஜீவா(கோவைநேரம்)....


      வலை திரட்டிகள்..இன்டலி,தமிழ்வெளி,தமிழ்மணம்,ஹாரம்,தேன்கூடு,
தமிழ்10,வலைப்பூக்கள்,உலவு,தமிழ் இணயங்கள்,திரட்டி...


"தொடந்து என்பதிவுகளை படித்து வரும் அனைவருக்கும்
என்னோட மகிழ்ச்சியையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்."

Wednesday, April 11, 2012

சுவடுகளைத் தேடி...


                  சுவடுகளைத் தேடி எனும் இத்தொடர் கட்டுரை குறிப்பாக நொய்யல் ஆறு மற்றும் கொங்கு மண்டலத்தின் கோவை மாநகரின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழமையான ஊர் பேரூர் குறித்த வரலாற்று தகவல்களை எழுத இருக்கிறேன் வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவுடன்.                        >>>>>கலாகுமரன்<<<<<<<


வரலாற்றுப் பெட்டகம் பேரூர்.

            கொங்கு மண்டலத்தின் வரலாற்றைப்பற்றி எழுதுபவர்களின் டைரியில் தவிர்க்க முடியாத அங்கம் பேரூர்.




           பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு அரசவனமாக இருந்துள்ளது.   பேரூரில் கோவில் எழுப்பப்பட்ட பிறகு சுற்றியுள்ள நிலங்கள் அதற்கு தானமாக கொடுக்கப்பட்டு இருந்தது.  கிழக்கு எல்லை யாக முத்தண்ணன் குளம் இருந்தது. அதாவது இன்றைய காந்தி பார்க் பகுதி.   அக்காலத்தில் மக்களின் போக்குவரத்து மிகுந்த ஊராக பேரூர் இருந்தது.

           பேரூரை சிறப்பு பெற்ற தளமாக விளங்க முக்கிய வரலாற்று சாட்சியாக கம்பீரமாக வீற்றிருக்கும் பட்டீஸ்வரர் (சிவன்) கோவில்.

          எந்த ஒரு நாகரீகமும் நதிக்கரையில் தொடக்கம். நாமும் ஜீவ நதியாக ஓடும் நொய்யல் நதியில் இருந்து தொடங்குகிறோம். காவிரியின் செல்ல மகள் என கருதப்படுவது.   செலிப்பான வற்றாத ஜீவநதி இன்று அதன் தன்மையை இழந்து நிற்பது நிதற்சன உண்மை. மனிதன் தன் சுயநலங்களுக்காக ஏற்படுத்திய பல ஆக்கிரமிப்புகள்,  இயற்கை வள சுரண்டல்கள். தனக்கு தானே அழிவைத் தேடுகிறான் என்றே சொல்லவேண்டும்.   இயற்கையின் சீறழிவுகளுக்குப் பிறகும் நமக்கு நன்மை ஒன்றையே செய்பவை ஆறுகள் என்பது மிகையில்லை. (...இந்நதியை பற்றி பிறகு விரிவாக பார்போம்.)

           காஞ்சிமாநதி எனும் நொய்யல் ஆற்றின் பேரூர் படித்துறை சோழர்களால் கட்டப்பட்டது.

           இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பட்டையங்கள், ஓலை சுவடிகளில் இருந்து பல பெயர்கள் நாம் அறிய கிடைக்கிறது.  விக்கிரம சோழன், வீரசோழன், வீரராஜேந்திர சோழன், கரிகாற்சோழன், வீரபாண்டியன், மாதையன், மூன்றாம் வீரவல்லாளன் ...இப்படி பல.

இவர்களைப்பற்றிய வரலாற்று சான்றுகளை பின்னர் விரிவாக காண்போம்.

          கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர் புராணத்தில் இம் மேலை சிதம்பரம் குறித்து பல ஆதாரங்களை நாம் காண முடிகிறது.

          நாம் வழிவழியாக கேள்விப்பட்ட ஒரு செய்தி இப் பகுதி ஆற்றில் எலும்பைப் போட்டால் 48 நாட்களில் அது கல்லாக மாறுவது.  ( கேள்விப்பட்ட செய்தி இபோது உண்மை தான் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிப்பது கடினம் என்று நினைக்கிறேன்.)

           இப்பகுதியில் வளர்ந்த புற்கள் மற்றும் இலைகளை மட்டுமே சாப்பிட்டு வளரும் கால்நடைகள் போடும் சாணம் புழுப்பதில்லை.  அதாவது புழுக்கள் ஊறி வளர்வதில்லை அப்படியே மண்னோடு மக்கிப்போய்விடுகிறது. ( கவனிக்கவும் இயற்கை உணவு உண்ணும் மாடு அல்லது பசு போடும் சாணம். அவற்றிக்கு வைக்கப்படும் தவிடு, பிண்ணாக்கு  இத்யாதி  இத்யாதி.. இதில் சேர்த்தி இல்லை.) இன்னொரு குறிப்பு, அவை இயற்கையாக இறக்கும் போது அவற்றின் வலது காதை மேல் நோக்கி வைத்த வண்ணமே இறக்கின்றன.  (இங்கு பிறந்த எவ்வுயிரும் என்றும் சொல்வர்)

        இங்குள்ள ஆற்றின் கரைப்பகுதியில் வடகைலாயநாதர் கோவில் அருகே இருக்கும் ஒரு பனை மரம் நெடு நெடுவென உயர்ந்து நிற்கிறது. இது இறவாப்பனை என்று அழைக்கப்படுகிறது.  இது இயற்கைக்கு அப்பாற்பட்டு பல தலைமுறை கடந்து இன்னும் செழிப்புடன் இருக்கும் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது.       இது நமக்கு சொல்லும் தெரிவிக்கும் உண்மை அல்லது தத்துவம் என்ன?




அதிகபட்சமாக சாதாரணமாக நல்ல செழிப்பான ஒரு பனை மரம் 80 முதல் 120 ஆண்டுகள் வாழும் என்று சொல்கிறார்கள்.  
 
கற்சிலையும் கவிபாடுமா?, களிநடனம் புரியுமா ? ஒவ்வொரு கல்தூணும் சிற்பங்களும் பல சம்பவங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் மௌனமாய்  கூறும்.... இன்னும் பல அரிய தகவல்களுடன் தொடர்கிறேன்.

Monday, April 9, 2012

அறிவியல் சிதறல்கள்


டாப்ளர் பின்விளைவு (Doppler Shifts)






படத்தைப்பாருங்கள் இவ் விளைவின் எளிய விளக்கம்.

சைரன் ஒலிக்க ஒரு கார் சென்றுகொண்டுள்ளது. ஒலியை கேட்கும் முதலாமவர் நிலை கார் அவரை கடந்து சென்றுவிட்டது. ஒலியானது இவருக்கு கார் ஓட்டுனரை விட குறைவாக கேட்கும். 2ம் நிலையில் உள்ளவருக்கு ஒலியானது கார் ஓட்டுனரை விடவும் அதிகமாக கேட்கும் ஏனென்றால் கார் அவரை நெருங்குகிறது.

டாப்ளர் பிற முக்கிய ஆய்வு:
ஒளி அலைகளின் நீளம் (நீலம் மற்றும் சிகப்பு) மற்றும் ஒலி அளவைக்கொண்டு தொலைவை நிர்ணயிக்கும் முறை.  இந்த ஆய்வைக்கொண்டு தான் பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்ற கருத்து வெளியிடப்பட்டது.


டாப்ளர் செய்த ஆய்வு :

அவரின் ஆராய்சி என்னவென்றால் பிளாட்பாரத்தில் இவர் நின்று கொண்டு ரயில் போகும் போது ஒரு இசைக்குழுவை ரயிலின் உள்ளே அமரச்செய்து ஒரே ரிதம் பீட்டில் (குறிப்பொலியை)  வாசிக்க வைத்து குறிப்பெடுத்தார்.
(...ஆரம்ப காலங்களில் ரயிலின் வேகம் 30 kmph தான்...)

மீண்டும் இவர் போகும் ரயிலின்  உள்ளே உட்கார்ந்துகொண்டு பிளாட்பாரத்தில் அதே குறிப்பொலியை அதே இசைக்குழுவை வாசிக்கச் செய்தார். இதையெல்லாம் பார்பவர்கள் என்ன முட்டாள் தனமான ஆராய்ச்சி என்று ஏளனம் செய்தார்கள்.

இந்த ஆராய்சியின் கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவு (Doppler Shifts) என அழைக்கப்பட்டது.  

"டாப்ளர் விளைவு" குறிப்புகளைக் கொண்டுதான் கோள்களின் தொலைவு மற்றும் கேளக்சி களுக்கிடையேயான தொடர்பு என்று விண்ணியலை தவிரவும் 12 அறிவியல் துறைகளில் இவரின் ஆய்வுதான் அடிப்படை.

அவர் வாழ்ந்த காலத்தில் இவரின் கண்டுபிடிப்புக்கு வரவேற்பே இல்லை என்று சொல்லவேண்டும்.  போக்குவரத்து மற்றும் சிக்னல்களின் ஒலி ஒளி உபயம் அவர்தான். பல விபத்துகளை தடுக்கும் இக்கருவிகளின் காரண கர்த்தா.

கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டபோது,அவர் பெரிதும் புகழப்பட்டார் டூ லேட் !   அவர் மறைவுக்குப்பின்னரே (1853).


ஈயத்தை தங்கமா மாற்றுவது ?



                              1880- ல அமெரிக்க விஞ்ஞானி க்லென் செபோர்க் (Glenn Seaborg ) ஈயத்தை (LEAD) தங்கமா  மாற்றிக்காட்டினார்.  எப்படின்னா சைக்ளோட்டரான் மூலமா லெட் (மூலக்கூறு எண் 62)  இருக்கர மூலக்கூறிலிருந்து புரோட்டான் நியூட்ரான்களை நீக்கி தங்கம் (மூலக்கூறு எண் 82) உருவாக்கி காட்டினார்.   இது ரொம்ப செலவு பிடிச்ச சமாச்சாரம் எப்படின்னா ஒரு கண்ணுக்கு தெரியாத தங்க மூலக்கூறுக்கு செலவளிச்ச காசுல அப்பவே ஒரு அவுண்சு தங்க வாங்கிடலாம்.  ( அப்புரமென்ன பொன்முட்ட அபாயிலாயிடுச்சு ....)

                 இவருக்கு நம்ம சித்தருங்களப்பத்தி தெரிஞ்சிருக்க வாய்பில்லைன்னு நினைக்கிறேன் !!!.
டாலி (Dolly) எனும் செம்மறி ஆடு 



             மரபுகள், குணநலன்களின் தன்மை குறித்து 1865 ல்  ஆராய்ச்சி செய்தவர் கிரிகெர் மென்டல் (GREGOR MENDEL)  (ஆஸ்திரிய விஞ்ஞானி).      இவரின் ஆராய்சிகளை அடிப்படையாக வைத்தே DNA மரபியலில் பெரிய மாற்றமான குளோனிங்.     அம்மாவின் மரபணுவை மட்டுமே கொண்டு அச்சு அசலாக  டாலி (Dolly) எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது 1997 லில் ஸ்காட்டிஸ் லேபில்.   ( ... 135 வருடங்கள் கழித்து தான்...) 

இப்ப இருக்ககூடிய ஆராய்சியின் படி உங்களுக்கே தெரியாம உங்களக்கூட அச்சு அசலா உருவாக்க முடியும்.  

Thursday, April 5, 2012

ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்

இந்த மண்ணில் இருந்து விளையும் பொருள்களில் இருந்து உயிர்ச்சத்து நமது உடலில்,குருதியில் இருக்கிறது.  நிறத்தால்,இனத்தால், மதத்தால்,மொழியால் நாம் வெவ்வேறாயினும் இந்தியன். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.  மண்ணில் செய்த பொம்மைகளை வெளி நாட்டில் விற்கிறோம். அது வணிகம்.  ஆனால் மகாத்மா சிந்திய குருதி தோய்ந்த மண்ணும் அதுவும் ஒன்றா ? என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

gandhi blood grass soil
காந்தியின் ரத்தக்கறையுடன் மண், புல்
மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.
இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது.
காந்தி பயன்படுத்திய வட்டவடிவமான மூக்குக் கண்ணாடி மற்றும் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட ஒரு கைராட்டையும் ஏலத்துக்கு வரவுள்ளன.
இந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், காந்தியின் ரத்தத்துடன் கூடிய மண் மற்றும் புற்கதிர்களுக்கான அடிப்படை மதிப்பீட்டுத் தொகை 16 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரையிலான அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவரது ரத்தக்கறையுடன் கூடிய மண்ணும், புற்கதிர்களும் கண்ணாடி மூடியுடன் கூடிய ஒரு சிறிய மரப்பெட்டிக்குள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இதுதவிர காந்தி ஆங்கிலத்திலும் குஜராத்தி மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் 1946 ஆம் ஆண்டு லண்டனில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் முல்லாக்ஸ் நிறுவனத்தால் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.
இத்துடன், மகாராஜா ரஞ்சித் சிங்கின் உருவம் வரையப்பட்ட நுண்ணிய ஓவியம் ஒன்றும் ஏலத்துக்கு வருகிறது.
gandhiji letters and spectacles
காந்தியின் மூக்குக் கண்ணாடி, கடிதங்கள்
உறவினர்கள் ஆட்சேபம்
இதனிடையே, காந்தியின் ரத்தக்கறை படிந்த மண், புற் கதிர்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைக்கு காந்தியடிகளின் வழித்தோன்றல்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இதுபற்றிக் கூறும்போது, ரத்தக்கறை படிந்த மண், புற்கதிர்களை ஏலம் விடுவது ஆரோக்கியமற்ற செயல் என்றும், அதே நேரத்தில், மூக்குக் கண்ணாடி, கடிதங்கள், ராட்டை போன்றவற்றை ஒரு தனியார் நிறுவனம் ஏலத்தில் விடுவதைத் தடுக்க முடியாது என்றும், அதே நேரத்தில் அந்தப் பொருட்களி்ன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி : BBC Tamil செய்திக்குறிப்பில் வெளியான தகவல் :  3 ஏப்ரல், 2012 - 15:50 ஜிஎம்டி