Pages

Wednesday, May 29, 2013

மீண்டும் பிறப்பாயடா ? ஜெல்லியின் விநோதம்


நாம் நம்முடைய வயதை குறைத்துக்கொள்ள முடியுமா ? ஆனால் ஒரு ஜெல்லி மீனால் இதை செய்ய முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறதா?
சில ஜெல்லி மீன்களின் வாழ்க்கை சில மாதங்களிலும்;  சிலவகை பல வருடங்களும் உயிர் வாழும்.

டுரிப்டாப்ஸிஸ் நியூட்ரிகுலா [Turritopsis Nutricula ]எனும் ஜெல்லி மீன் வகை அழிவில்லாமல் வாழ்கிறது. அதாவது வயதாகி பின் திரும்ப முதலில் இருந்து வாழ்க்கையை தொடங்குகிறது.

ஆண் ஜெல்லி மீன் தனது உயிரணுவை (விந்து) தண்ணீரில் விட்டுவிடுகிறது இந்த உயிரணு பெண் ஜெல்லி மீனின் கருமுட்டையுடன் இணைந்து கொள்கிறது. ப்லானுலே (planulae) (லார்வா பருவம்) எனும் பருவம் அடைந்ததும் பெண் ஜெல்லியிடமிருந்து பிரிந்து தரையை நோக்கி பயனித்து பாறைகளில் தொற்றிக்கொள்கிறது. பாலிப் எனும் பருவமாக ஒரு தாவரம் போல இது வளர்கிறது. இன்னும் சொல்லப்போனால் பூஞ்சை (பாசி) போல வளர்கிறது. அவை ஒன்றிணைந்து பல்கி பெருகி வளர்கின்றன. சில வருடங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட பருவத்தில் இவற்றில் இருந்து நீந்தி திரியும் ஜெல்லி மீன்கள் உருவாகின்றன.

இந்த ஜெல்லி மீன்கள் கடல் நீரோட்டத்தில் கலந்து தம் வாழ்வை துவக்குகின்றன. இவற்றிற்கு ஏதேனும் நிகழுமானால் அல்லது இதன் உடல் சிதைக்கப்பட்டால் இதன் மீதமான செல் வளர்ந்து பின் இணைந்து பாலிப் உருவத்தை பெற்று மீண்டும் ஜெல்லியாக பிறக்கிறது. அதாவது முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்குகிறது.

இதன் மரபணு தொடர்ந்து செயல்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது.  இது ஒரு உயிரியல் விநோதம்.



top of image "Giant Nomura Jellyfish"








                                                                             "jelly polyp"

இதன் நீளமான கொடுக்கு நிமாடோசைட்ஸ் (nematocysts)  என்று அழைக்கப்படுகிறது. சிலவகை ஜெல்லிகள் இந்த நீள் கொடுக்குமூலம் உணவை பற்றி மின்சாரத்தை பாய்ச்சுகிறது. (இதனுள் உள்ள சில வேதிப்பொருட்கள் இந்த தகவமைப்பை இதற்கு கொடுத்திருக்கிறது )
இறந்த ஜெல்லியினுள் இந்த மின்னூட்டமானது படிப்படியாகவே குறைகிறது. அதாவது இறந்த ஜெல்லியை தொட்டாலும் ஷாக்கடிக்கும்.


உடலில் பற்றிகொண்ட ஜெல்லியை தண்ணீரை ஊற்றி எல்லாம் கழுவ முடியாது அதன் வேதி மாற்றம் அதிகரிக்கும், கத்தியால் லாகவமாக சுரண்டி எடுக்க வேண்டுமாம்.( மின் தாகுதலில் இருந்து தப்பிக்க). ஜெல்லியிடம் கடி வாங்கினால் அடி பட்ட இடத்தில் வினிகரை உற்றினால் அதன் தாக்கம் குறையும் ஆனால் கண்ணில் பட்டால் என்ன செய்யமுடியும் ?
மனிதன் மிகப் பெரிய ஜெல்லி கூட்டத்திடம் இருந்து தப்பிப்பது கடினமே?
ஜெல்லிகள் 500 - 700 மில்லியன் ஆண்டுகளாக இந்த உலகில் வாழ்ந்து வருகிறது.

புரிதலுக்காக இவை ஜெல்லிமீன்கள் என அழைக்கப்படுகின்றன ஆனால் மீனினத்திற்கும் இவைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

ஜெல்லிகளுக்கு மூளை உண்டா ?

பெரும்பான்மையான ஜெல்லிகளுக்கு அப்படி ஒரு உறுப்பு இல்லை. கூட்டுணர் உறுப்புகள் உண்டு. ஆனால் பாக்ஸ் எனும் ஜெல்லி வகைக்கு நான்கு மூளை போன்ற உறுப்புகள் உண்டாம் ( யப்ப்பா ? ) இவற்றிற்கு 24 கண்கள் இருக்கு. நிறங்களை பிரித்தரியும் தன்மை இதற்கு உண்டு.

ஜெல்லிகள் சின்னதா மட்டும் தான் இருக்குமா?

அப்படி சொல்ல முடியாது சிங்க பிடறி ஜெல்லிகள் (Lion’s Mane Jelly) 120 அடிகள் நீளம் வளருதாம் ( அடேங்கப்பா !) 

(Giant Nomura Jellyfish )பிரம்மாண்ட நோமுறா வகையில் மணி போன்ற இதன் தலைப்பாகத்தின் குறுக்கு விட்டம் 7 அடிகள். இதன் எடை சுமார் 440 பவுண்டுகள் ( 1 பவுண்டு = அரைகிலோ 16 அவுன்சு) இவை சீன, ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது அதிக விஷம் கொண்டவை.

 காணொளி

Wednesday, May 22, 2013

பனிகண்ட யானை மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா?

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் வருவது போல அழிந்து போன உயிரினத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா ? அதாவது உருவாக்க முடியுமா ? என்ற தீவிர ஆய்வு தற்போது வெற்றியடைந்து உள்ளது.

ஆஸ்திரேலிய நுண்ணியல் உயிரியல் அறிவியலாளர்கள் 1979 ஆம் ஆண்டோடு சுத்தமாக அழிந்து போன ஒரு தவளை இனத்தை தற்போது குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கியுள்ளார்கள்.


 படத்தில் காணப்படும் அருவருப்பான தோற்றம் கொண்ட இந்த தவளை கருவை விழுங்கி பின் வயிற்றில் அடைகாத்து வாயில் பிரசவிக்கும் ஒரு ஜீவன் (Gastric brooding frog  அறிவியல் பெயர் -Rheobatrachus silus) இதன் வாழ்விடம் ஆஸ்திரேலியா.

விஞ்ஞானிகள் இறந்த கடைசி தவளைகள் சிலவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதன் உயிரின திசுக்கள் செயல்பாட்டுடன் இருந்தன.

நியூசவுத் வேல்ஸ் பல்கலைகழகத்தை (சிட்னி) சேர்ந்த பேராசிரியர் மைக் ஆர்ச்சர் குழு இந்த தவளை குடும்பத்தை சேர்ந்த (great barred frog) பிரிதொரு தவளையின் கருமுட்டையில் உள்ள நியூகிளி (nuclei) யை நீக்கி விட்டு மேற்படி தவளையின் நியூகிளியை மாற்றி வைத்து குளோனிங் முறைப்படி அழிந்து போன தவளை இனத்தை மீட்டு எடுத்துள்ளனர்.

ரஷ்ய மற்றும் தென்கொரிய விஞ்ஞானிகளின் பார்வை, திரண்ட முடியுடைய பனிகண்ட யானையின் (woolly mammooth ) மேல் விழுந்து உள்ளது. இதே டெக்னாலஜியை பயன்படுத்தி இவற்றை உயிர்பிக்கமுடியுமா ? சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறார்கள் (எவ்வளவோ செஞ்சுட்டோம் இத செய்யமாட்டமா? )


விஞ்ஞானிகள் இப்போது கோரஸாக சொல்லுவது  "அழிவுநிலை விலங்குகளின் ஜீன்களை சேகரிக்கும் ஜீன் -வங்கியை உலக அளவில் விரிவு படுத்த வேண்டும்"

Tuesday, May 21, 2013

உலகின் மிகப்பெரிய திறந்தவெளி வைரச்சுரங்கம்



இதுதான் உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி வைர சுரங்கம். இதனுடையா ஆழம் (525 மீட்டர்கள்) 1722 அடிகள் குறுக்கு விட்டம் 3900 அடிகள் (இதன் தரையில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக ஐந்து சுதந்திர தேவி சிலையை அடுக்கி வைக்கலாமாம் அவ்ளோ ஆழம்னா பாத்துக்கங்க! ) கிழக்கு சைபீரியாவின் மிர்னியில் உள்ளது இந்த சுரங்கம்.


இச்சுரங்கத்தினூடாக ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு தடையுள்ளது உள் நுழைந்து செல்லும் காற்றின் அழுத்தம் அதிகம். இந்த சுரங்கத்தை 1957 ல் இருந்து தோண்டி இருக்கிறார்கள். சோவியத் புவியியலாளர்கள், இரண்டாண்டுகள் கழித்து இதனுள் கிம்பர்லைட் எனும் எரிமலை பாறைகள் இருக்க கண்டார்கள்.

1960களில் வருடத்திற்கு 10 மில்லியன் காரெட் எடை கொண்ட வைரங்கள் (2000 கிலோ வா ! ) வெட்டி எடுக்கப்பட்டன. சோவியத் உலக அளவில் தன்னை முன்னிருத்தும் முயற்சிக்கு இது உதவிகரமாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அதிக உற்பத்தி விலையை சரிய செய்யும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆப்பிரிக்க வைரத்தின் மதிப்பிற்கு இந்த வைரங்கள் மதிப்பு குறைந்தவையே.
 
டீபீர்ஸ் எனும் நிறுவனம் அப்போது உலக வைர மார்கெட்டை நிர்ணயித்தது. மிர்னியில் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் இந்த நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்படும் ஒப்பந்தம் அப்போது நடைமுறையில் இருந்தது.

சாதாரணமாக நிலத்தின் கீழே அதிக அழுத்தத்தில் சுமார் 125 கி.மீ  ஆழத்தில் வைரங்கள் உருவாகும் சுழ்நிலை இருக்குமாம். எரிமலை குழம்பானது பைப்பில் தண்ணீர் பீறிட்டு பாய்வது போல நிலத்தின் அடியில் பயணித்து பாறைகளுக்கு இடையே அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் பல ஆண்டுகளில் இறுகி வைரமாக உருவெடுக்கிறதாம். நீரோட்டத்தைப் போல இந்த குறிப்பிட்ட இடத்தை கண்டு பிடித்துவிட்டால் நூல் பிடித்தது போல கேரட் வடிவ  வைரங்களை தோண்டி எடுக்க வேண்டியதுதான். இந்த மிர் சுரங்கம் அந்த வைரப்பாதையின் மேல் மட்டத்தில் இருக்கிறது.

சோவியத் பிளவிற்கு (1990) பின் இச் சுரங்க செயல் பாடுகள் குறைந்தன. மேற்படி சுரங்கமானது 2004 ல் நிரந்தரமாக இதன் செயல் பாட்டை மூடிவிட்டார்கள்.
==================================================================
சிந்தனைக்கு

நம் உடலின் எல்லா நகங்களும் ஒரே அளவில் வளர்கிறதா? அப்படி இல்லை என்றால் எந்த விரலின் நகம் சீக்கிரமாகவும் எந்த விரலின் நகம் மிக மெதுவாகவும் வளர்கிறது ?


உங்கள் பதிலை சரிபார்க்க இங்கே சொடுக்கவும்

Sunday, May 19, 2013

ஏன்..எதற்கு ? தொன்மையான பாக்தாத் மின்குடுவை

1938 ல் பாக்தாத் அருகில், இரண்டாயிரம் ஆண்டு பழமையான கிராமத்தில் எதற்காகவோ நிலத்தை தோண்டிய பொழுது வேலையாட்களுக்கு நிலத்தினடியில் ஒரு பொருள் கிடைத்தது. அது பார்பதற்கு ஒரு பூச்சாடி அல்லது குடுவை போல இருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தில் களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது(6 இன்ச் உயரம்). 5 க்கு 1.5 இன்சுகள் உள்ள தாமிர தகட்டால் உருளை வடிவ அடிப்பகம் கருங்காறையால் (asphalt) பற்று வைக்கும் தொழில் நுட்பத்துடன் மூடப்பட்டு இருந்தது. இதனுள் பொருத்தும்படியான ஒரு இரும்பு துண்டு அதன்மேல் முனை கருங்காறையால் மூடப்பட்டிருந்தது.

(இப் பொருளின் காலம் : பார்தியன் காலம் 248 BCE and 226 CE, circa 250 BC to AD 225 )


பாக்தாத் மியூசியத்தில் உள்ள பேட்டரி









தெற்கு ஈராக்கிலும் (2500 BCE) தாமிரத்தால் ஆனா குடுவையும் வெள்ளியிலான உருளை பொருத்தப்பட்ட இதே போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது (சுமேரியன் காலத்திய இடங்கள் !)

இதே போல் இவற்றின் சில பகுதிகள் எகிப்திலும் தொல்லியல் துறையினருக்கு கிடைத்திருக்கிறது.

ஜெர்மானிய தொல்பொருள் ஆராய்சியாளர் வில்ஹெம் கோனிக் ( Wilheilm König ) (1940) இதை ஆய்வு செய்து, இது அக்காலத்திய பேட்டரி என்று உறுதிப்படுத்தினார். அவரால் இந்த கண்டுபிடிப்பை பற்றி அப்போதே பிரபலப்படுத்தப்படாமல் போனதற்கு காரணம் உலகப்போர். இது அப்படியே மறந்து போனது.

1970 ஆம் வாக்கில் இதனுள் திராட்சை பழ ரசத்தை ஊற்றி பரிசோதித்ததில் இதிலிருந்து 0.87 வோல்ட் மின்சாரம் உருவானது. (அக்காலத்தில் இப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்ற ஒரு அனுமானம்)

அலெஸான்ரோ வோல்டா கி.பி 1799 ல் எலக்ரோ வேதியியல் மின்கலனை (electro chemical cell) கண்டுபிடித்தார்.

மிகச்சிறிய அளவு கிடைத்த இந்த மின்சாரத்தை வைத்து என்ன செய்திருப்பார்கள்(ஏறக்குறைய 2 வோல்ட்)  ஏன் எதற்காக இத்தகைய ஆய்வு ?
இந்த கலன் நமக்கு முதலில் உணர்த்துவது பெர்சியன் விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஆனால் வயர் போன்ற எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

மருத்துவத்தில், அக்குபஞ்சர் போல ஊசியை வைத்து வலி உள்ள இடங்களில் இதை பயன்படுத்தி மின்சாரத்தை செலுத்திப் பார்த்திருக்கலாம். ஆனாலும் இது பிரியோசனப்பட்டிருக்காது.

பள்ளியில் இது குறித்து சொல்லி தர உபயோகித்திருக்கலாம்.
 
தாமிர சிலைகளின் உள்ளே பல மின்கலன்களை உபயோகித்து இதை வைத்து கடவுள் நம்பிக்கையை வளர்த்த இதை பயன் படுத்தியிருக்கலாம் என்பது ஒரு சாரரின் கணிப்பு. ( இதுல வைப்ரேசன் இருக்கு தெறிதா? சக்தி இருக்கு புரியுதா? ..இப்படி !! )

இருப்பினும் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பேட்டரி இதுதான்.

Wednesday, May 8, 2013

மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! - ஒரு ஆய்வு

 நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.

இதே யுத்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.

பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் “ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின்  முக்கிய உறுப்பு.  இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது... நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.

நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு,  உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம்...இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.

நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர் “டாங் சே கெய் “ [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது.

ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில் NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.

நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது.

ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.

NF -kB ஹைபோதாலமஸில் GnRH (Gonadotropin Releasing Hormone)  (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது.

வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு “ - கெய்

”குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது“ என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்).

இந்த ஆய்வு குறித்து “ நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.

இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய், வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் )

திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70 சதவீதம் நீட்டிக்கிறதாம்.

பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.

Sunday, May 5, 2013

பனிமலைகள் உருகுவதால் உலகுக்கு ஏற்படப்போகும் ஆபத்து.

கடல் மட்டம் உயர்ந்தால், தமிழகத்தின் தாழ்வான பகுதிகள், இலங்கை உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு பாதிப்பு உண்டா?
(மேல் படம் கிரீன்லாந்தின் ஒரு பகுதி)

புவி வெப்பமயமாதலினால் பனிபாளங்கள் பனிமலைகள் உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் உருகும் போது கடலில் கலக்கும் கடல் நீர் மட்டம் உயரும். ஆனால் மலைகள் பள்ளத்தாக்குகளின் நிலை மாறும்.

புவி வெப்பமயமாதலினால் கடல் நீர் சூட்டினால் வட கோளார்த்ததிலும் ஆர்டிக் அண்டார்டிக் பகுதியிலும் பனி மலைகளை உருக்குகிறது சொல்லப்போனால் பனிமலைகளை ஸ்வாக செய்து வருகிறது வெப்பமான கடல்நீர். (மேல் புற வெப்பத்தை விடவும் கடலின் சூடு பனியை அதிகமாக உருக்குகிறதாம்)

அமெரிக்க புவியியல் புள்ளிவிவர துறையில் பணியாற்றிய இயற்பியலாளர் ராபர்ட் வுட்வேர்ட் 1888 ல் முதல் முதலில் பனிமலைகள் உருகினால் கடல் மட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தியரியை வெளியிட்டார்.

அவருக்குப் பின் 100 வருடங்கள் கழித்து வில்லியம் ஃபரேல் மற்றும் ஜேம்ஸ் கிளார்க் இதுபற்றிய மேலும் பல தகவல்களை வெளியிட்டனர். வடகோளார்த்ததில் பனி மலைகள் உருகினால் கடல் மட்டம் பரவலாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே சமயத்தில் வட கடல் பகுதிகளில் கடல் மட்டம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர், கடைசி பனிக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு இவர்களின் ஆய்வு இருந்தது.

அப்போதைக்கு இப்போது டெக்னாலஜி வளர்ச்சி கண்டுள்ளது கடலின் மாற்றங்கள் தினமும் கண்காணிக்கப்படுகிறது. ”டைட் கேஜ் (tide gauge)” டேட்டா பராமரிக்கப்படுகிறது. இந்த டேட்டவின் படி புவியில் நூற்றுகணக்கான இடங்களில் கடல் மட்டத்தின் அளவு மெல்ல மெல்ல உயர்ந்து வருவதை உறுதி செய்கிறார்கள். ஆனால் பெரும் நிலப்பரப்புகளில் இந்த மாற்றத்தை உணர்வது சற்று கடினமே.

(கிரீன்லாந்தில்) பனி அதிகமாக உருகாத வரை  கடல் மட்டம் நீர் இழுவிசை காரணமாக மேலேயே இருக்கும். சுத்தமாக உருகிவிட்டால் இழுவிசை இல்லாமல் கடல் நீர் உள்வாங்கிவிடும். இந்த படம் கடல் மட்டத்தை பற்றி விளக்குகிறது. அதோடு பனிமலை உருகுவதால் ஏற்படும் நில மாற்றத்தையும் விளக்குகிறது.


கடல் நீர் மட்டம் உயர்ந்தால் ஏற்படும் மாற்றங்கள் :

முதல் கட்டமாக, கடல் மட்டம் உயரும் போது கடல் நீர் முகத்துவாரங்களின் ஊடாக பயணித்து நன்நீரை உவர்ப்பு நீராக மாற்றும். கடலோர நீர் நிலைகளின் உப்பின் அளவு அதிகரிக்கும்.

16000 வருடங்களுக்கு முன் பனி உருகியதால் தான் பல தீவுகள் கடலினுள் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் அணைத்தும் உருகினால் அப்பகுதியில் கடல் மட்டம் 100 மீட்டர்கள் கீழிரங்கும் (உள்வாங்கும்).

காற்றின் வேகம் மற்றும் திசைகளில் மாற்றம் பெரும். அதோடு கூட பெரும் புயல்கள் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.

கடல் நீரோட்டங்கள் மாறிவிடும் (மொத்தத்தில் கடல் நகரும்.) அதனால் உலக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும். (கடல் நீரோட்டங்கள் தான் பூமியின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் பெரிய காரணி)

1990 ஆண்டின் மத்தியத்தில் இருந்து பசிபிக் பெருங்கடல் ஆண்டிற்கு ஒரு சென்டி மீட்டர் உயருவதாக ஹாவாய் பல்கலைகழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்னொரு கோணம் :

கீரீன்லாந்தில் பனிமலைகள் உருகுவதால் அழுத்தக்குறைவு ஏற்பட்டு புவியின் அச்சில் (சாய்மானம்) மாற்றம் ஏற்படும். இது அண்டார்டிக் பகுதியில் ஏற்பட்டாலும் தான். (*பூமி பம்பரம் போல சற்று சாய்ந்தபடி சுழலுவது தெரிந்தது தானே)

பனி உருகுவதால் உலகின் கடல் மட்டம் எப்படி மாறும் என்பதை காட்டும் படம்.


தற்போதைய கணிப்பின் படி அப்படி பூரா பனிமலைகளும்( பனிப் பாளங்களும்) இபோதே உருகிவிடாது என்று சொல்கிறார்கள் ( அப்பாடா ! ) அப்படி முழுவதுமாக உருகுவதற்கு சில பல நூற்றாண்டுகள் ஆகலாமாம்.

இப்போதைக்கு பயப்படத்தேவை இல்லை என்பதே சற்று ஆறுதலான விசயம்.

Thursday, May 2, 2013

விதி வலியதா ?

வாழ்க்கையில் விதி வலியது என்று சொல்வார்கள். நம்முடைய வாழ்கையில் எதிர்பாராது ஏற்படும் சம்பவங்களை மனித மனம் எளிதில் விதியின் மேல் பழிபோட்டு விலகி நிற்கும்.  இழப்புகள் நம் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. எதையாவது ஒன்றை இழந்தால் தான் நாம் இன்னொன்றை பெறமுடியும் என்பது வாழ்கையின் எழுதப்படாத நியதி.

அழுத்தமான கதை அல்லது திரைக்கதையின் சோக கட்டம் நம் மனதில் ” பசுமரத்து ஆணி” போல பதிந்துவிடும்.  அது எளிதில் நம் மனதை விட்டு அகழ்வது இல்லை.

இதற்கு ஒரு உதாரணம், ”கும்கி” திரைப்படம்,  உற்ற நண்பனாக கருதும் யானை அவனுக்காக செய்யும் உயிர் தியாகம், தீயிர் கருகிய சித்தப்பா மற்றும் நண்பனை கதாநாயகன் இழந்து தவிக்கும் இறுதிக்காட்சியை சொல்லலாம்.
"எனக்கு வாழ்க்கையின் எதார்த்தங்களை கற்றுக்கொடுத்த தந்தையை ஒரு சாம்பல் கூடாக பார்க்கும் சந்தர்பமும் ஏற்பட்டது.  அப்போதும் அவர் உறங்கிக் கொண்டு இருப்பதை போல் தான் தோன்றியது, வெட்டியான் ஒரு மண் சட்டியில், மூன்று முக்கிய எலும்புதுண்டுகளையும் சாம்பலையும் ஒரு குச்சியில் தட்டி, தட்டி எடுத்து போடும் வரை.”

நாம் தினமுமோ அல்லது சில சந்தர்பங்களிலோ சுடுகாட்டை கடந்து செல்கிறோம். நம் உறவுகள் பிரிந்து செல்லும் இறுதி இடமும் அது தான்.

தொழில்கள் பல விதம் அதில் வெட்டியான் தொழில் சந்தர்ப்ப வசத்தால் பெரும்பாலும் திணிக்கப்படுகிறது.

இந்த வகையில் பெண்கள் வெட்டியாளாக இருப்பது மிக மிக அரிதான ஒன்று. சமீபத்தில் ஒருவரை ஈர நெஞ்சம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் சந்திக்க நேர்ந்தது. அவரது பெயர் வைரமணி.  தன் குடும்பச் சூழல் காரணமாகவும் தன் தந்தைக்குப் பின் இந்த பணியை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  அவரை பாராட்டி என் கையால் நினைவு பரிசு அளிக்கப்பட்ட போது உணர்ச்சிப் பெருக்கால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.







இங்கு நண்பர் ஈர நெஞ்சம் மகி என்ற மகேந்திரனை பற்றி குறிப்பிட வேண்டும். இலட்சோப இலட்சத்தில் அவர் ஒருவர். இவரின் சமூக சேவை எளிதானது அல்ல. குறிப்பிட்டு சொல்வது என்றால் அவரின் சமூக பணியில், தொலைந்து போன மனநிலை சரியில்லாதவர்களை அவர்களின் உறவுகளை கண்டு பிடித்து சேர்ப்பது, உறவுகளற்ற வயதானவர்களை காப்பகங்கள் மூலமாக பாதுகாப்பது, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்வது...இன்னும் பல.  கோவைக்கு கிடைத்த நல்முத்து அவர்.


கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு (குறள் : 211)
Duty demands nothing in turn;  how can the world recompense rain ?

[ கைமாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைமாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் ]

பி.கு : மேலதிக தகவல்களுக்கு ”கலரா”  தெரியும் வார்த்தைகளை சொடுக்கவும்.