Pages

Sunday, June 23, 2013

கொங்கு சீமையின் முதுமக்கள் தாழி

பெண்கள் கட்டிக் கொள்ளும் தாலி தெரியும், இது என்ன முதுமக்கள் தாழி ?.

அப்போது எனக்கு வயது பதினான்கு இருக்கலாம், நண்பர்கள் பேரூர் (கோவை) ஏழூர் மாரியம்மன் கோவிலின் பின்னால் ஆற்று படுகைப்பகுதியில் இரண்டு தாழிகள் கிடைச்சிருக்காம் வாடா பார்கலாம் என அழைத்து போனார்கள்.  என் தலைக்கு மேலே ஒன்னரை அடி  உயரம் இருந்தது. எல்லோரும் அதில் எட்டி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  சிரமப்பட்டு நண்பனின் உதவியால் எட்டிப் பார்த்தேன்.  ஆளுயர பெரிய பானைக்குள் மண்ணோடு சேர்ந்து எழும்பு துண்டுகள் இருந்தன. அப்போதுதான் எனக்கு அறிமுகமானது “முதுமக்கள் தாழி”.

முதுமக்கள் தாழி பெருங்கற்காலத்தின் அடையாளம்.  வாழ்ந்து மறைந்த முன்னோர்களை இந்த தாழியில் அமர வைத்து மூடுவார்கள். நிலத்தில் ஊன்ற வசதியாக ஒரு தாழியின் அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அகன்ற மறு பக்கத்தில் அகலமான வாய் பகுதி இருக்கும். இதனுள் உடலை கிடத்தி பெருங்கற்பலகைகள் கொண்டு மூடி வைப்பார்கள். அடர்ந்த வன எல்லைப் பகுதியில் தான் முதுமக்கள் தாழியில் வைத்து அழியா வண்ணம் புதைக்கப்பட்டனர்.


காட்டுவிலங்குகள் மண்ணைத் தோண்டி எடுக்காவண்ணம் ஆழமாக இந்த தாழியை மண்ணில் புதைப்பார்கள்.  அந்த இடத்தின் அடையாளமாக பெருங்கற்பலகைகளை அடையாள குறிகளுடன் வைப்பர்.

தாழியில் உள்ளே என்னென்ன பொருட்கள் கிடைத்தன ?
முதுமக்கள் ஆசையாக பயன்படுத்திய பொருட்கள், சுடுமண் காதணிகள், வெட்டு கத்திகள்(கூரான பாறை), மர ஆபரணங்கள் இருந்தன.

கோவை இருகூர் பகுதி முதுமக்கள் தாழிக்கும், ஈம பேழைக்கும் பெயர் பெற்றது.  இங்கு மட்டும் முன்னூறுக்கும் அதிகமான தாழிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  வீட்டின் அஸ்திவாரம் தோண்டும் போது இவை கிடைத்துள்ளன.

முதுமக்கள் தாழிகள் சுமார் 100 கிலோ முதல் 700 கிலோ வரை உள்ள பிரம்மாண்ட தாழிகளும் உண்டு. மண்ணால் செய்யப்பட்ட இந்த தாழிகள் கருங்கற்கலை விடவும் கடினமாக இருப்பது ஆச்சர்யமளிக்கும் தகவல்.

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இந்த பழக்கம், 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் கைவிடப்பட்டிருக்கிறது.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில்,  வெள்ளலூர், ஆலாந்துறை, சூலூர், பல்லடம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


வசதி படைத்த செல்வந்தர்கள் இறந்தால் சொகுசு தாழியில் (ஈமபேழை) அடக்கம் செய்தனர். இது சுமார் 5 அடிகள் முதல் 8 அடிகள் வரை உயரம் இருக்கும். இதனுள் இறந்தவர்களை படுக்க வைத்த நிலையில் புதைப்பர். சிறியவர்களுக்கு தொட்டில் பேழை.

முதுமக்கள் தாழி, ஈம பேழைகள் தமிழர் வாழ்வில் இருந்து காலப்போக்கில் அழிந்து விட்டது.

10 comments:

  1. எப்படித்தான் இவைகளை செய்தார்களோ....! தகவல்களுக்கு நன்றி... (தமிழ் மணம் +1 இணைத்து விட்டேன்)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தமிழர் தொன் நாகரீகத்தில் இன்னும் எத்தனையோ அறியாத புரியாத விசயங்கள் இருக்குது இல்லீங்களா.. நன்றி டிடி !

      Delete
  2. வயதானவர்கள் 100 வயதுக்கும் மேலாகியும் சாகாதவர்களை இந்தர்க்குள் வைத்து கொஞ்சம் உணவும், ஒரு விளக்கும் வைத்து கொண்டு பொய் புதைத்து விடுவார்களாமே? உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி கேள்விப் பட்டதில்லை...நீடித்த ஆயுலோட இற‌ந்தவங்களை வழிவழியா வணங்குவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம். முன்னோர்களை போற்றுதல் தமிழர் வழக்கத்தில் ஒன்னு.

      Delete
  3. முது மக்கள் தாழிகள் தமிழர் பழமை கூறும் ஒப்பற்ற செல்வம், கிடைத்தவற்றை நன்றாக பாதுகாத்து ஆராயவும், புதிதாய் கிடைப்பவற்றை சேதப் படுத்தாமல் பாதுகாத்து அரசிடம் ஒப்படைக்கவும் வழி செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கண்மாயில் சென்ற ஆண்டு தொல்லியல் துறையினர் மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் ஊர்மக்கள் உதவியோட முதுமக்கள் தாழியை மீட்டு எடுத்ததாக படித்தேன். மக்களுக்கு இதைப்பற்றிய அறிவுத்தல் அவசியமே! நன்றிங்க நிரஞ்சன் தம்பி.

      Delete
  4. இதைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன் கலா! பாக்கற பாக்கியம்தான் கிடைச்சதில்ல.... நீ்ங்க லக்கி!

    ReplyDelete
    Replies
    1. சேலம் பேர்லேண்ட்ஸில் அரசு இசைப்பள்ளி அருகே அருங்காட்சியகத்தில் வைத்து இருக்காங்க சந்தர்ப்பம் கிடைச்சா பாருங்க.

      Delete
  5. அன்றைய பதனபடுத்தும் பெட்டி பற்றி மிக சிறப்பான படங்களுடன் கூடிய தகவல்கள் அருமை அதுவும் நம்மூரில் இருக்கும் இந்த தாலிகளை பார்க்கும் போது மூதாதையரின் மூளையை கண்டு வியப்பு ஏற்படுகிறது தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. வரலாற்று பாடத்தில் படித்தது! நீங்க நேரடியாக பார்த்து இருக்கிறீர்கள் கூடுதல் தகவல்கள் அறிய முடிந்தது! நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !