Pages

Wednesday, October 30, 2013

ஐம்பது ரூபாய்க்கு எழுதிய சினிமா பாட்டு - கவிஞர் வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து, தலைமுறைகள் தாண்டித் தடம்பதித்து நிற்பவர். 15000 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டாலும் அவர் பாடல்களில் இன்னும் நவீனமும் உயிர்ப்பும் குறையவில்லை. ஒரு பொன்மாலைப் பொழுதில்..,

கவிதை என்பது உயிர் உந்துதல் -வைரமுத்துவின் நேர்காணல் தி இந்து தீபாவளி 2013 மலரில் வெளியாகி உள்ளது. (பேட்டி கண்டவர்: அருள்செல்வன்)


நீங்கள் பிரமிப்புடன் பார்த்தவர்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் சமகாலத்தவர்களுக்கும் எழுதியிருக்கிறீர்கள், உங்கள் பிரமிப்புடன் பார்ப்பவர்களுக்கும் எழுதுகிறீர்கள். என்ன வேறுபாடு உணர முடிகிறது ? இந்த மூன்று தலைமுறை வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒப்பிட முடியுமா?
தலைமுறைகள் மாறினாலும் தமிழ் ஒன்றுதான். நான் வியந்து பார்த்தவர்களுக்கும் என்னை வியந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரிதான் உழைக்கிறேன்.  காரணம் தமிழ் என்பது யாருக்குப் போய்ச் சேர்கிறதோ அவர்களின் பெயரால் அழைக்கப்படுவதில்லை;  தமிழ் படைத்தவன் பெயரால் தான் அழைக்கப்படுகிறது.  அதனால் யாருக்குப் பாட்டெழுதினாலும் வைரமுத்து பாட்டா என்று அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பது என் கருத்து.  ஒரு பாணியை உண்டாக்கிட காலம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது.  என் சுவடுகளைப் பாடலில் விட்டுச் செல்ல ஆசைப் படுகிறேன்.

காலம் தோறும் பண்பாட்டு விழுமியங்கள் மாறுகிற போது என் அடிப்படைப் பண்புகள் குறைந்து விடாதபடி பார்க்கிறேன்.  ஹீதருக்குப் பாட்டெழுதினேன்.  அதன் பிறகு பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், ஷ்ங்கர் போன்றவர்களுக்கும் எழுதினேன்.  இன்று இளைய தலைமுறையினருக்கும் பாட்டெழுதுகிறேன்.

சமகாலத்தோடு என்னையும் என்னைச் சம காலத்தோடும் பின்னிப் பிணைந்திருக்குமாறு வரித்துக் கொண்டு பாட்டெழுதுகிறேன்.  பாடலும் நானும் பழையதாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

கிராமத்திலிருந்து வந்த உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்?  இதற்கு காரணம் ஏதாவது உள்ளதா?  எந்த வயதுவரை சாமி கும்பிட நேர்ந்தது. ?

உணவு, உடை, கலாசாரம் எல்லாமே சொல்லிக் கொடுத்தது வருவதே பழக்கங்கள்.  குல தெய்வ வழிபாடு சிறந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவந்தான் நான்.  ஆகவே கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஒரு பழக்கமாக இருந்தது.  கோயிலுக்கு என் பெற்றோரோடும் உறவினரோடும் போய்க் கொண்டிருந்தேன்.  அதை ஒரு பழக்கமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

பின்னாளில் இந்த உருவ வழிபாடு பற்றி எனக்குக் கேள்வி வந்தது.  கடவுளுக்கு ஒரே உருவம்தான் இருந்திருக்க முடியும்.  கடவுளுக்கு உருவம் என்பது வடிவத்தில் இல்லை என்று தெரிந்தது.  அப்படி இருந்தால் சூரியனுக்கு ஒரு வடிவம், நிலவுக்கு ஒருவடிவம் மனிதனுக்கு ஒரு வடிவம் என்று இருப்பது. மாதிரி கடவுளுக்கும் ஒரே வடிவம் தான் இருந்திருக்க வேண்டும். என்று கருதினேன்.  ஆனால் கடவுளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருப்பதை பார்த்து குழம்பினேன்.  அந்த குழப்பம் வந்த போது கடவுளைக் கும்பிடுவதையும் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் திராவிட இயக்க கொள்கைகளில் என்னைத் தோய்த்துக் கொண்ட போது என் கேள்விகளுக்கு விடை கிடைத்தது.  கடவுள் என்பது உருவம் சம்பந்தப்பட்டதல்ல உளவியல் சம்பந்தப்பட்ட தென்று புரிந்து கொண்டேன்.

அறிவியல் கருத்துக்களையும் உண்மைகளையும் பாடல் வழியே தமிழ் ரசிகர்களுக்குக் கடத்தியிருகிறீர்கள்.  இதற்கு உங்களுக்கு தூண்டுதல் எது?

நான் திரையுலகதிற்கு வந்த போது பாடல் மொழி களைத்துப் போயிருந்தது.  காதலைப் பாடி அலுத்துப் போயிருந்தது.  ஏறாளமான அற்புதமான பதிவுகளை எல்லாம் கவிஞர்கள் செய்துவிட்டு போயிருந்தார்கள்.  எழுதுவதற்கு எதுவுமில்லையோ எல்லாம் சொல்லிவிட்டார்களே,  நாம் எழுத ஒன்றுமில்லையோ என்கிற வியப்பும் அச்சமும் வந்தது.

அப்போது அவர்கள் சொல்லாத செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டு வர வேண்டுமென்றால் எது சிறந்தது என்று யோசித்தேன்.   காதலைக் கூட விஞ்ஞானபூர்வமாகப் பார்க்க வேண்டும்; வாழ்கையைக்கூட விஞ்ஞான பூர்வமாக பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.   பாட்டு என்பது களிப்பூட்டுகிற கருவியாக மட்டுமல்லாமல், கற்றுத் தருகிற கருவியாகவும் இருக்க வேண்டும் என்றூ தீர்மானித்தேன்.

நான் ஏற்கனவே பியூசியில் விஞ்ஞான மாணவன். கடவுள் நம்பிக்கை அற்றவனுக்கு விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வரும்.  அதன்படி விஞ்ஞானச் செய்தியைப் பாட்டுக்குள் கொண்டுவந்து வைத்த போது பாட்டுக்கு அர்த்தமும் புது நிறமும் கிடைத்தன.

குத்துப் பாட்டு - குடிகாரப் பாட்டு என்று சினிமாவில் ஒரு கவிஞன் தள்ளப் படும் போது குற்ற உணர்ச்சி மற்றும் சங்கடம் இருக்குமா?

இருக்கத்தான் செய்கிறது.  மறைக்க விரும்பவில்லை நான் இதற்காகவா தமிழ் செய்ய வந்தேன் என்கிற கோபமும் சலிப்பும் இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் அதுவும் சேர்ந்ததே கலை என்று எனக்குத் தெரிகிறது.  சுத்தமான காற்றை எல்லோரும் சுவாசித்துவிட முடியாது.  நம் உடம்பே கரியமில வாய்வை வெளியேற்றும்படிதான் படைக்கப்பட்டுள்ளது.  ஆகவே நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்வும் கலையும்,  எனவே இரண்டுக்கும் உடன்பட வேண்டியிருக்கிறது.   நான் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறேன் என்றால் அது நல்ல் நுரையீரலாக இருக்க முடியாது.

இப்படிப்பட்ட பாடலை நான் எழுத மாட்டேன் என்று நீங்கள் எழுத மறுத்த அனுபவம் உண்டா?

மிகவும் கொச்சையாக எழுதச் சொன்னபோது அப்படி நான் சொன்னதுண்டு.  ஆடை கட்டிய வார்த்தையிலும் பாலுணர்வைச் சொல்ல முடியும் என்று போராடி மாற்றி எழுதிக் கொடுத்ததுண்டு.

முதல் தேசிய விருது, ஆறாவது தேசிய விருது அனுபவங்களை ஒப்பிடிவீர்களா ?

முதல் தேசிய விருது ஒரு பரவசம், சின்னதாக ஒரு ஆனந்தக் கண்ணீர்,  ஆறாவது தேசிய விருது ஒரு செய்தி.

நன்றாக எழுதும்போது குறைவாகக் கொடுத்தார்கள்; மோசமாக எழுதும்போது அள்ளித் தருகிறார்கள் இதுதான் சினிமா “ என்றார் வாலி, உங்களுக்கு இப்படி நேர்ந்ததுண்டா?

அவர் சொன்ன உண்மைகளில் இதுவும் ஒன்று.  வாலி சொல்லிவிட்டார்.  நான் சொல்ல முடிவதில்லை.

திரைப்படம்- பாடல் இன்று கேளிக்கை, கொண்டாட்டம் என்று பொழுது போக்குக் கலாசாரத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்றனவே?

இது உண்மைதான்.  எல்லாக் காலத்திலும் பொழுது போக்கு இருந்திருக்கிறது.  உழைப்புக்குப் பிறகுதான் துய்ப்பு என்று இருந்தது போய்,  துய்ப்பே உழைப்பு என்று ஆகிறபோது ஒரு சமுதாயம் மேம்பட முடியாது.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு பங்களிப்பு செய்து விட்டுத்தான் துய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இது சம்பந்தமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீங்கள் எழுதியதில் குறைந்த சம்பளம் பெற்ற பாடல் எது?  அதிகம் பெற்றது எது?

குறைந்த சம்பளம் பெற்ற பாடல் முதல் பாடல்.  பாரதிராஜா ஐம்பது ரூபாய்க் கட்டைக் கொடுத்து எடுத்துக் கொள்ளச்சொன்னார்.  நான் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டேன்.  ‘ பொன்மாலைப் பொழுது’ பாடலுக்கு நான் எடுத்துக் கொண்ட சம்பளம் ஐம்பது ரூபாய்.  அதிகம் பெற்ற பாடல்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிற பல படங்கள்.

கடவுள் மறுப்புக் கொள்கையால் பக்தி சார்ந்த சிலவித பாடல்களை எழுதும் வாய்ப்பை இழந்திருக்கிறீர்களே?

அதைப் பற்றி நான் வருத்தப் படவில்லை.  கடவுளே அதுபற்றிக் கவலைப்படாத போது நான் ஏன் கவலைப் பட வேண்டும்.

திரைப்படம் பார்ப்பதில் நீங்கள் எந்த ரகம்?  அவ்வப்போது பார்பீர்களா? ஒரே நேரத்தில் பல படங்களையா?

தினந்தோறும் ஒரு படம் என்று பார்க்கிற வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.  புதிய படங்களோடு நான் பழைய படங்களின் ரசிகனாகவும் இருக்கிறேன்.

ரஜினி, கமல் இருவரிடமும் இறுக்கமான நெருக்கமான நட்பு உண்டு உங்களுக்கு, அவர்களிடம் வியந்த நிகழ்ச்சிகள் பல இருக்கும்.  ருசிக்க முந்திரியாக தலா ஒன்று கூறுவீர்களா?

ரஜினிகாந்த் உடல் நலம் தேறிவந்த போது அவரை முதன் முதலாகச் சந்தித்தேன்.  அந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.  அப்போது நான் ஒன்று தெரிந்து கொண்டேன். இவர் உணமையாகவே மனதில் பக்குவப் பட்ட மனிதர் என்று.  கிட்டத்தட்ட வாழ்வை இழந்து மீண்டும் பெற்று வந்த நிலையில் வாழ்வு, மரணம் இரண்டையும் சமமாகப் பார்கிற மனநிலையை எண்ணி வியந்தேன், ஆச்சர்யப்பட்டேன்.  எனக்குப் பெருமையாக இருந்தது.  உண்மையிலேயே வாழ்க்கை அவரைப் பழுக்க வைத்துப் பக்குவப்படுத்தியிருக்கிறது, என்று உணர்ந்தேன்.

கமலிடம் நான் பார்த்து வியந்தது ஒன்று உண்டு.  போர்க்களம் என்று ஒன்று வருகிறபோதுதான் ஒருவரது மேன்மை தெரியும்.  ‘விஸ்வரூபம்” படத்திற்குச் சிக்கல் வந்த போது அதை அவர் கையாண்ட விதம் அவர் மிகவும் பக்குவமான மனிதர், நெளிவு சுளிவு தெரிந்த ஒரு ராஜதந்திரி, எந்த நிலையிலும் வார்த்தைகளைச் சிதறவிடாதவர் என்று புரிந்து வியந்தேன்.  அந்த நிலையில் வேறு ஒருவராக இருந்திருந்தால் சிதறிப் போயிருப்பார்கள்.  தன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவர் பண்பு, மேலும் அவர் மேல் மதிப்பைக் கூட்டியது.

இந்த இருவரும் பக்குவத்தில் முழு மனிதர்களாகத் தெரிகிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள்.  அப்பழுக்கற்ற இலக்கிய நண்பர்களைக் கட்சிக்கு ஒருவர் வீதம் கூற முடியுமா?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நட்புக் கூட இலக்கியம் சார்ந்த நட்புதான்.  வைகோ அவர்களின் நட்பு இலக்கியம் சார்ந்ததுதான்.  பாரதீய ஜனதா கட்சியின் இல.கணேசன் நல்ல இலக்கிய நண்பர்.  கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் இலக்கியம் பேசும் நண்பர்.  காங்கிரஸில் குமரி அனந்தன்.  இப்படி நண்பர்கள் இருக்கிறார்கள்.  அ.தி.மு.கவில் நண்பர் காளிமுத்து முன்பு இருந்தார். அவர் இப்போது இல்லையே.

காகிதத் தமிழ் கணிப்பொறித் தமிழாகிவிட்ட சூழலில், நீங்கள் எப்படி வாகனம் மாற்றிப் பயணம் செய்கிறீர்கள் ?

மாறித்தானே தீர வேண்டும்.  வாகனங்கள் மாறியது மாதிரி.  நான் கட்டை வண்டியிலிருந்து விமானத்திற்கு மாறியது மாதிரி.  இந்த வாகனத்திற்கும் மாறித்தான் ஆக வேண்டும்.

கணினி யுகத்தில் தாய்மொழியில் படிப்பது குறையும் அபாயம் உள்ளதே ?

குறைந்து கொண்டே போகிறது என்பது கவலை தருகிறது.  மொழிக்கல்வி என்பது வயிற்றோடு சம்பந்தப் படுத்தப்பட்டால் தமிழ் தேய்ந்து போய்விடும்.  தாய் மொழி என்பது பண்பாட்டோடு சம்பந்தப் படுத்தப்பட்டது என்று நம்பினால் தமிழ் மொழி வளரும்.  தாய்மொழி என்பது உங்கள் கலாசாரத்தோடு தொடர்புடையது என்று பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

15 comments:

  1. இவருடன் படித்தவர் எங்கள் ஆலையில் எனது துறையில் தான் வேலை பார்த்தார்... எதைப் பற்றியும் கேட்டால் கவிதைகள் உடனே வந்து விழும்...! ம்... காலம் அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை...

    அருள்செல்வன் அவர்களுக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. எனது இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்... DD

      Delete
  2. வைரமூத்து பேட்டி அற்புதம்... நன்றி.

    ReplyDelete
  3. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஹ..ஹா மொய்க்கு மொய் நன்றி நம்பள்கி.

      Delete
  4. கவிஞர் வைரமுத்துவின் அருமையான பேட்டிப் பகிர்வு!

    அவரைப் பற்றி நல்ல பல விடயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. பகிர்வினுக்கு மிக்கநன்றி!

    உங்களுக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி, தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

      Delete
  5. நல்லதொரு பகிர்வு! நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நான் அவருடைய கவிதைகளின் ரசிகன்..என் வீட்டில் இருக்கும் அனைத்து கவிதை புத்தகங்கள் அனைத்தும் அவருடையது மட்டுமே..கட்சி வேறுபாடு பார்க்காமல் சினிமா நூற்றாண்டு விழாவில் கௌரவப்படுத்தியிருக்க வேண்டிய ஒரு அற்புதமான கவிஞர்..பாமரனையும் ரசிக்கவைக்கும் கவிதைகள் அவருடையது..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...கலியபெருமாள்.

      Delete
  7. படித்ததை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !! அருமையான பேட்டி ! :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !