Pages

Tuesday, December 31, 2013

எண்ண அலைகளின் இயக்கமும் ஆழ்மன ஈடுபாடும்.


"tks to artist Jeeva"

ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அது வெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை. அந்த விருப்பமானது நிறைவேற்ற முயற்சி தேவை. சரி முயற்சி செய்கிறோம் எப்போது சாத்தியப்படும்?

" விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்தியமாகிறது."

மின் அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.

கிருஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிதகோரஸ் என்ற கணித மேதை,  உலகில் நாம் காணும் அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொன்னார். இந்த உண்மையை அணு விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.

அணைத்து பொருள்களும் அலை வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. நமது எண்ணங்களும் அலை வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.

எனவே வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும். ஆழ் மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக இருக்கிறது.

ஆழ்மனதை பெரிய மகான்களும் தலைவர்களும் மட்டும் தான் பயன் படுத்த முடியும் என எண்ண வேண்டாம் ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

மனிதனின் எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' என்று அழைக்கப்படுகிறது.

நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இந்த சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மழையை வரவழைக்க மேகராகக்குறிஞ்சி என்ற ராகத்தை வாசிப்பது பண்டைய தமிழகத்தின் ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது.

கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியை நம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

தனிமனிதனானாலும் சமூக மானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைபெறத் தொடங்குகின்றன.

மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணத்தை உருவாக்கி கொள்கிறபோது அந்த வேலை கிடைப்பதற்கான வழிவகைகள் தானாக தென்படும் அதற்காக மனதில் நினைத்தால் வேலை கிடைத்துவிடும் என பொருள் இல்லை.

எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.   அதற்காண தீர்வு வழிமுறைகள் உங்களுக்கு தென்படும் அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம் உங்களுக்கு கொடுக்கும்.

இதற்கு அடிப்படைத் தேவை 'image creation' தான் நீங்கள் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஈடுபடும் காரியங்கள் வெற்றி கண்டிருப்பதை நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு அணுகுகின்ற
காரியங்கள் தோற்றுப் போய் இருப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.

உள்ளபடியே மனப்பூர்வமாக அந்த காரியத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று நீங்கள் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? என்பது தான் முக்கியம்.

நல்ல எண்ணங்களையே எப்போதும் சிதறவிடுங்கள்...அது பூமராங் போல உம்மிடமே திரும்ப வரும்.

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

by Kalakumaran

Thursday, December 26, 2013

சாப்ளின் உதிர்த்த பொன்மொழிகள் [பகுதி 1 ]



  •  ஒழுங்கீனமான உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை; நம்முடைய தொல்லைகளும் தான். 

  • வாழ்க்கை அழகானதும் அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல..

  • நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.

  • எப்போதும் மழையில் நனைந்த படியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்த்துவிட முடியாதே; 



  •  ஒரு மனிதனின் உண்மையான சொரூபம் ; அவன் குடித்திருக்கும் போது தெரியவரும்.

  • நாம் ரொம்ப அதிகமா யோசிக்கறோம்; ரொம்ப குறைவா உணர்கிறோம்.

  • இவ்வுலகத்தில் ஒவ்வொருதருக்கும் இடமிருக்கு ; எல்லோருக்கும் கொடையளிக்கும் அளவுக்கு வளமையானது இவ்வுலகம். வாழ்க்கைக்கான பாதையும் அழகா இருக்கு; ஆனால் வழியைத்தான் தொலைத்துவிட்டோம்.

  • பேராசை மனிதன் மனத்தை விஷமாக்குகிறது; தன்னைச்சுற்றி வெறுப்பெனும் வேலியமைத்துக் கொள்கிறான். முட்டாள்தனமான நடவடிக்கையால் துக்கங்களை தேக்கி வைக்கிறான். வேகம் வளர்த்துகொண்டு அதில் நம்மை அடக்கிவிட்டோம்.

  • இயந்திரங்கள் அளவுக்கதிகமான நம் தேவையை பூர்த்திசெய்கிறது.  அறிவு நம்மை சிடுமூஞ்சியாக்கிவிட்டது. நம் புத்திசாலித்தனம் மென்மை இழந்து பண்பற்றதாகிப்போனது.

  • எந்திரங்களை காட்டிலும் நமக்கு மனிச தன்மையும்; புத்திசாலிதனத்தை காட்டிலும் நமக்கு நல்ல பண்பும், இனிய குண நலன்களும் தேவை. இவைகள் இல்லை என்றால் வாழ்க்கை போராட்டமாகவும்; எதுவும் இல்லாமலும் போகும்.

  • மதிப்புடைய வாழ்கையை தேடி கண்டுபிடிக்கலாம்... உன் புன்சிரிப்பால்.

by : kalakumaran

Labels : Charlie chaplin Quotes in tamil, சாப்ளின் பொன்மொழி, சாப்ளின்

Tuesday, December 24, 2013

நகைச்சுவைகள்...ரசிப்போம் சிரிப்போம்

ஜோக்ஸ்  சிலது சொந்த சரக்கு மற்றது படித்து ரசித்தவை
 ( மு.கு : வலைச்சரத்தில் ஏற்கனவே இந்த பதிவு வெளியாகி இருக்கு. )

ஒரு பியானோ வாசிப்பவர் முதன் முதலா ஒரு படத்திற்காக வாசித்து கொடுத்தார்.  தயாரிப்பாளரிடம் கேட்டார்

 “ படத்த நான் பார்காமலே வாசிச்சிருக்கேன் இந்த டியூன் போதுமா ?”

தயாரிப்பாளர் அதெல்லாம் டைரக்டர் பார்த்துப்பார்.

"சரி எப்ப நான் அந்த படத்த பார்க்கலாம்? "  படம் ரிலீஸ் செய்வாங்க அப்ப பார்துக்குங்க.

அது ஒரு மாதிரியான படம், படம் ரிலீஸ் ஆச்சு இவரோட சேர்த்து மூனு பேர் அவங்க ரெண்டு பேரும் கணவனும் மனைவியும்.

இவருக்கு சங்கோஜமா போச்சு அவங்க கிட்ட சொன்னார்
 “ நான் இந்த படத்த பார்க்க வரல என்னோட மியூசிக்க கேட்க வந்தேன்’’

கணவன் சொன்னான் " நாங்களும் எங்களோட நாய் குட்டிய தான் பார்க்க வந்தோம்."


@@@@@@@@@@@@@

நடிகை தோழியிடம் : இன்னும் ஒரு இருபத்திமூனு வருசத்துக்கு நடிச்சுகிட்டே  இருக்கனும் இதுக்கு ஏதுன்னா வழி இருக்கா?

ஒ இருக்கே சீரியல்ல நடிக்க ஒத்துக்கோ.

@@@@@@@@@@@@@

என்னய்யா இது மேடையில் சேருக்கு பதில் ஊஞ்சல் கட்டி வைச்சிருக்கு ?

அது விளையாட்டு துறை அமைச்சருக்கான சீட்டு.

@@@@@@@@@@@@@

ஓட்டு போட அப்ப எல்லாம் வாக்கு சீட்டு இருந்துச்சு

அதுக்கப்புரம்...

ஓட்டு மெசின் வெச்சாங்க

இப்ப

ஐ பேட் வைச்சிருக்காங்க

@@@@@@@@@@@@@

அவள் அவன் கன்னத்தை பார்த்து : நீங்க எத்தனை முறை சேவ் செய்வீங்க

அவன் :  ஒரு நாளைக்கு 20 - 30

அவள் : * & $ ^ ! ஙே...

அவன் : என்னோட தொழிலே அதானே

@@@@@@@@@@@@@

(பெண் டாக்டரும் , வைத்தியம் பார்க்க வந்த பெண்னும்)

டாக்டர் ஏன் அந்த பேசண்ட திட்டி அனுப்பீட்டீங்க

பின்ன என்ன அவரு கதை ஆசிரியராமா எங்கிட்ட வந்து கதைக்கு கரு கிடைக்குமான்னு கேட்கறான்.

@@@@@@@@@@@@@


ஆசிரியர்  : வெரும் வயத்தில எத்தனை இட்டிலி சாப்பிட முடியும் ?
ஒவ்வொருத்தரும் 6, 10, 12 ன்னு அடிச்சிவிட்டாங்க அதுல ஒரு பையன் மாத்திரம் சார் ஒன்னுதான் சார்.

ஆமா சார் ஒரு இட்லி சாப்பிட்டதுக்கு அப்புரம் அது வெறும் வயிரா இருக்காதே.

@@@@@@@@@@@@@

ஒன்பது நட்சத்திரங்களின் பெயர் எழுது ?
கேள்விக்கு மாணவன் எழுதிய பதில்
“நயன்தாரா”

(நமக்கு ஒன்னு விளங்குது மாணவனுக்கு இங்கிலீசும் இந்தியும் தெரிஞ்சிருக்கு)

@@@@@@@@@@@@@

டாக்டர் பக்கத்தில எதுக்கு ஒரு மந்திர வாதிய பக்கத்திலேயே
உட்கார வச்சிருக்கார்.

இறந்து போன பேசண்ட் ”ஆவியா” வந்து தொல்ல குடுக்கறாங்களாமா அதுங்கள விரட்ட தான்.

@@@@@@@@@@@@@

உன் புருசன் தொன தொனன்னு பேசிட்டே இருப்பாருன்ன அமைதியா இருக்காரு.

நேற்று தீபாவளிக்கு ஆசையா அல்வா கேட்டாருன்னு செஞ்சு குடுத்தேன்
அப்போதிலிருந்து வாயே திறக்கலையே.

@@@@@@@@@@@@@

நாம எங்காவது அவரசர வேலையா போயிட்டு இருப்போம்
இந்த எடத்துக்கு எப்படிபோறதுன்னு வழி கேட்பாங்க இப்படியும் ஒரு பொது ஜனம் ;

இங்கிட்டு போஸ்டாபீஸ் எங்க இருக்கு

ஒரு கிலோமீட்டர் தாண்டி போகனும்

இரண்டடி வெச்சவன் திரும்ப வந்தான்...

ஒரு கிலோமீட்டர எப்படி தாண்டறது ?.

@@@@@@@@@@@@@


இன்ஸ்பெக்டர் : திருட்டு DVD யா விக்கிற நட ஸ்டேசனுக்கு

ஐயா...நான் தான் இந்த பட தயாரிப்பாளர்யா... இந்த படத்த இப்படி வித்தாதான் உண்டு.

(என்ன கொடுமை சரவணன்! )
(tks to கி.ரவிகுமார்)
@@@@@@@@@@
காதலி நீங்க லவ் லெட்டர் குடுத்த விசயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு..
காதலன : ஹையய்யோ உன் தங்கசிக்குமா?
(#எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்! அவ்..)

@@@@@@@@

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”

அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற

அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!

(tks to shahulhamid hamid)

(என்னா ஒரு கொல வெறி !)
@@@@@@@
அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை. கடைசியாக பணம் தர
வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள்,
அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள்
இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அதை பார்த்த ஓபாமாவுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த
பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர்
எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும்
அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பைய
னுக்கு குஷி தாளவில்லை.

நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள்..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல்
அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த ஓபாமா
திருடி விட்டார்.....
(tks to Kanna Kanna)

@@@@@@@@@@@@@@@
மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,
போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிறிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலரல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.

அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...

கோப்பி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் எமது படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

பகிர்வு : தமிழ்குளோன்
( வெளிநாட்டில் இது சகஜம் போலிருக்கு! )

நன்றி

 கலாகுமரன்

Monday, December 23, 2013

ஓநாயும் ஆட்டு குட்டியும் - நடிகர் ஷாஜியின் திரை அனுபவம்

மிஷ்கின் ஓநாயும் ஆட்டு குட்டியும் படத்தில், எதார்த்தமான அலட்டல் இல்லாத நடிப்பும், கதாபாத்திரத்திற்கு தேவையான பாடி லாங்குவேஜ், தெளிவான வசன உச்சரிப்பும் கொடுத்து நடித்திருப்பார் ஷாஜி.  அப் படத்தில் அவரது அனுபங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். நடிகரும், எழுத்தாளரும், வலைப்பதிவருமான  ஷாஜி ...அவரின் வலைபூவில் இருந்து :



ஒரு ஊரில் ஒரு ஓநாய் இருந்ததாம்... அந்த ஓநாய்க்கு ஆட்டுக்குட்டிகளின் மாமிசம் ரொம்ப பிடிக்குமாம்... அதனால் அந்த ஓநாய் இறந்த ஒரு ஆட்டுக்குட்டியின் தோலை எடுத்து தன்மேல் போர்த்தி, மேய்ப்பன் இல்லாத நேரம் பார்த்து ஒரு ஆட்டு மந்தைக்குள்ளே புகுந்ததாம்... விபரம் புரியாத ஆட்டுக்குட்டிகளுக்கிடையே இணக்கமாக தங்கி அவற்றில் ஒவ்வொன்றையாக கொன்று தின்ன ஆரம்பித்ததாம்.... எங்கும் பாற்கடலென நிலவொளி பரவிக்கிடக்கும் ஓர் இரவில், பனி பெய்யும் மேகங்கள் தாழ்ந்திறங்கும் நேரத்தில் மேய்ப்பன் திரும்பி வந்தானாம். தனது ஆட்டுக்குட்டிகளின் எலும்புகளைப் பார்த்து கதறி அழுது, தான் பொறுப்பற்று விட்டுப் போனதாலேயே அந்த அப்பிராணிகள் உயிரிழந்தன என்று தவித்து, துயரமான ஒரு பாடலை பாடத்துவங்கினானாம். இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இடிமுழக்கம்போல் ஒலித்த அப்பாடலின் கனத்தில் பயந்து நடுங்கிய ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவுக்கு இடம் தேடியதாம்... இடமேதும் கிடைக்காமல் இறுதியில் அது மனிதனின் இதயத்தில் புகுந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதாம்...

காலம்காலமாக இருக்கும் ஒரு நீதிக்கதைக்குமேல் நான் போர்த்திய ஒரு கட்டுக்கதை இது. ஆறுவயதான என் மகளுக்கு இதை நான் சொல்லும்போது அவளுக்கே நன்றாகத் தெரிகிறது இது ஓநாய் குறித்தோ ஆட்டுக்குட்டி குறித்தோ மேய்ப்பன் குறித்தோ உள்ள கதை அல்ல என்பது! ஓநாயும் ஆடுகளும் ஆட்டுமந்தையும் நிலவொளி பரவிய அந்த இரவும் நிஜமாக இருக்கக் கூடியவைதான் என்றாலும், அவற்றின் வழியாக சொல்லப்படும் கருத்து அது எதுவுமல்ல என்பது ஒரு குழந்தைக்கே எளிதில் தெரிவது. ஒரு ஓநாய் ஆட்டுத்தோல் போர்த்தி மாறுவேடம் போடுமா? மேய்ப்பன் ஏன் ஆடுகளை அப்படி விட்டுப் போனான்? ஆடுகள் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவன் ஏன் பாட்டு பாடினான்? ஏன் அவனால் அந்த ஓநாயை பிடிக்க முடியவில்லை? ஒரு ஓநாய் மனிதனின் இதயத்தில் புகுவது எப்படி? என்றெல்லாம் ஒருபோதும் என் மகள் கேள்வி கேட்க மாட்டாள்.

மாயை அல்லது பொய்த்தோற்றத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே நடக்கும் வினோதமான விளையாட்டுதான் தனக்கு பிடித்தமான திரை உத்தி என்று அகிரா குரொசாவா சொல்லியிருக்கிறார். தனது பல படங்கள் வழியாக அதை விளக்கியுமிருக்கிறார். அதீத யதார்த்தம் என்றோ மீ யதார்த்தம் என்றோ இந்த உத்தியை வகை வகுக்கலாம். இதில் கலைப்படங்கள், வணிகப்படங்கள் என்கிற பாகுபாடுகள் எதுவுமில்லை.

மேலோட்டமான காரண ஆய்வுகளுக்குப் பொருந்தாத, முரண்பாடாகத் தோன்றக்கூடிய உருவகங்களின் அணிவகுப்பு தான் அத்தகைய திரைப்படக் காட்சிகள். பாத்திரங்களின் மன ஓட்டங்களும் மனப் பிராந்திகளுமெல்லாம் அவற்றில் காட்சியாக்கமாக விரிகின்றன. படிமங்களாக, உவமைகளாக, குறியீடுகளாக கவிதையிலும் இலக்கியத்திலும் கையாளப்படும் இந்த உத்தியை, உலக சினிமாவின் சிறந்த ஆசான்களான பெர்க்மேன், புனுவேல் போன்ற பலர் எழுபதாண்டுகளுக்கு முன்பிருந்தே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் வணிக சினிமாவுக்குள் முதன்முதலாக ஆற்றலுடன் இதைச் சாத்தியப்படுத்திக் காட்டிய திரைப்படம் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

மனிதனின் ஆழ்மன உணர்வுகளை காட்சிப்படுத்துவதற்கே தொடர்ச்சியாக முயன்ற  பெர்க்மேன் ஓநாயின் மணிநேரம் (Hour of the Wolf) என்று ஒரு படமே எடுத்திருக்கிறார்! ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பிலேயே அது ஒரு யதார்த்தப் படமில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினின் எந்தவொரு படத்தையுமே யதார்த்தப் படம் என்று சொல்ல முடியாது. யதார்த்தப் படங்கள் எடுப்பதில் அவருக்கு நாட்டமுமில்லை. யதார்த்தமும் நாடகப் பாணியும்  ஓங்கிய இசையும் நடன அமைப்பும் கூடியாட்டத் தன்மையும் இடை கலந்து வருபவை அவரது படங்கள். ஆனால் யதார்த்தப் படங்கள் என்று சொல்லப்படுபவையில் இங்கு பயன்படுத்தப்படும் யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான ஷேக்ஸ்பியர் காலத்து நாடக உத்தியான மனக்குரல் (Mind voice) போன்றவற்றை மிஷ்கின் எப்போதுமே தவிற்கிரார்!

மிஷ்கின் குரொசாவாவின் அதி தீவிர ரசிகர். குரொசாவா பற்றி பேசுமிடத்தில் தன்னைப் பற்றி பேசுவதைக்கூட விரும்பாதவர். குரொசாவா, தர்காவ்ஸ்கி போன்றவர்களெல்லாம் மிக அரிதான ரத்தினக்கற்களைப் போன்றவர்கள் என்றும் அவர்களை ஒரளவுக்கு புரிவதற்கே நமக்கு இன்னும் பல பதிற்றாண்டுகள் தேவைப்படும் என்றும் சொல்பவர் அவர்! அவர்களின் தரத்திற்கு நம்மால் என்றைக்குமே படங்களை எடுக்க முடியாது என்பது மிஷ்கினின் கருத்து. அவரே ஒப்புக்கொள்வதுபோல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் குறைகளற்ற படம் அல்ல. ஆனால் உலக சினிமாவின் அற்புத இயக்குநர்கள் வெகுதூரம் நடந்து சென்ற பாதையின் துவக்கத்தில், முதல் அடி எடுத்து வைப்பதற்கான மிஷ்கினின் முயற்சிதான் இப்படம்.

முன்முடிவுகள் எதுவுமே இல்லாமல் திரைப்படங்களை பார்க்கும் எளிய மனம் கொண்ட பார்வையாளர்களையும் உண்மையான சிந்தனைத்திறன் கொண்டவர்களையும் ஒரேபோல் கவர்ந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். உலகம் முழுவதுமிருந்து பலதரப்பினைச் சார்ந்தவர்கள்  ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பதிவு செய்த கருத்துக்களும், தனிப்பட்ட முறையில் எனக்கு வந்த பல்லாயிரக்கணக்கான  மடல்களும் அழைப்புகளும் அதன் அழியா சாட்சியங்கள். குடும்பத்துடன் திரையரங்கில் வந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்த இயக்குநர் பாலா என்னிடம் சொன்னார் “மிஷ்கின் அசாத்தியமான இயக்குநர். அவர் போன்று இன்னொருவர் இங்கில்லை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் வரம் அவர்” என்று!

கலைரீதியாக பெருமளவில் கொண்டாடப்பட்டு, ஏற்கத்தகுந்த வணிக வெற்றியையும் பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய தருணங்கள் ஒவ்வொன்றும் என்னை மேலும் பணிவான, சுயநலமும் தற்பெருமையும் அற்ற மனிதனாக மாற்றியவை! யதார்த்தம் என்று நினைக்கக் கூடிய சூழல்களுக்குமேல் கட்டப்பட்ட அதீத யதார்த்தம்தான் இப்படம் என்பது போலவே இதன் படப்பிடிப்புக்கு நடுவே நிகழ்ந்த பல சம்பவங்களும் மிகுந்த கற்பனைத் தன்மையுடன் தான் இருந்தன!

காவல் துறையின் குற்ற விசாரணைப் பிரிவில் அதிகாரியாக வரும் எனது பாத்திரம், ஆணையரின் அலுவலகத்தில் அவரிடமும் அவரது நண்பரான மருத்துவரிடமும் வாதிடும் காட்சிதான் முதன்முதலில் படமாக்கப்பட்டது. ஒரு பக்கத்துக்குமேல் வரும் வசனத்தை மனப்பாடம் செய்து ஒரே எடுப்பில் பேசவேண்டும்! அத்துடன் உணர்ச்சிகள் திடமாகவும் வலுவாகவும் வெளிப்பட வேண்டும்! காட்சிகளை எப்போதுமே நீளமாக எடுக்கும் மிஷ்கினின் சிக்கலான காட்சியமைப்பு வேறு! ஒன்று சரி வரும்போது எனக்கு இன்னொன்று தவறிவிடும். திரையில் இப்போதிருக்கும் காட்சியை விட சிறப்பாக அமைந்த சில எடுப்புகள் இருந்தன! ஆனால் அவற்றின் கடைசிப் பகுதிகளில் எனது முன் அனுபவமின்மையால் தவறுகள் நடந்து விட்டன! 62ஆவது எடுப்பு தான் திரையில் இப்போது நீங்கள் பார்க்கும் அந்த காட்சி! அதைப் படமாக்கிய பின்னர் மிஷ்கின் என்னைக் கட்டியணைத்தார். அன்றைக்கு என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. சிபிசிஐடி லால் ஆக நான் என்னை உணரத் துவங்கியிருந்தேன்!

அந்த நாட்களில் நான் பாடக நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்ட வண்ணமே இருந்தேன். எனது வீட்டிலும் வாகனத்திலும் எப்போதும் சந்திரபாபு பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும்போது அந்த மகா கலைஞனின் அலாதியான மேதமையும் அவரது துயரமான வாழ்க்கையும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கடைசிக் காட்சிகளில் வரும் அந்த கல்லறைத் தோட்டத்திற்குள்ளே படப்பிடிப்பிற்காக நுழையும்போது மிஷ்கின் என்னை ஒரு கல்லறையின் பக்கம் அழைத்து சென்றார். பதின்பருவத்தை எட்டிய அவரது மகளும் கூடவே இருந்தாள். மிஷ்கின் அக்கல்லறையத் தொட்டு முத்தமிட்டார். அப்போதுதான் நான் அதைக் கவனித்தேன். அது சந்திரபாபுவின் கல்லறை! ”அப்பா வணங்கும் ஒரு மாபெரும் கலைஞனின் கல்லறை இது. தொட்டுக் கும்பிட்டுக்கோ” என்று மகளையும் கும்பிட வைத்து என்னை அங்கே தனியாக விட்டுச் சென்றார் மிஷ்கின். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒரு மணிநேரத்துக்கும் மேல் சந்திரபாபுவைப் பற்றி யோசித்தபடியே கண்ணீருடன் நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.                
அந்த கல்லறைத் தோட்டத்திற்குள் பல இரவுகளை நாங்கள் கழித்தோம். கல்லறைகளுக்குமேல் அமர்ந்து, அங்கேயே உண்டு, தாங்க முடியாத கொசுத்தொல்லைக்கு நடுவேயும் அவ்வப்போது எதாவது ஒரு கல்லைறைக்கு மேலே படுத்து கண்ணயர்ந்து...! இறந்து போனவர்கள் நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு இரவில் கல்லறைத் தோட்டத்திற்கு பின்னாலிருக்கும் புதர்கள் மண்டிய இடத்தில் மனிதர்களின் எலும்புகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டேன். புதிய புதைகுழிகள் தோண்டும்போது கிடைத்த பழைய மனிதற்களின் எலும்புகள்!

ஸ்ரீ நடிக்கும் கதாநாயகப் பாத்திரம், எனது உதவியாளனை அடித்து விழவைத்து எங்கள் துப்பாக்கிகளை பலவந்தமாக எடுத்து அங்கிருந்து தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்ட இரவு மறக்க முடியாதது. முதலில் ஓநாயால் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஸ்ரீயை நான் கட்டறுத்து விடவேண்டும். அதற்கு சற்று முன்புதான் அங்கேயே கண்தெரியாத ஒரு பாத்திரத்தை நான் தெரியாமல் சுட்டுக் கொல்கிறேன். அந்த காட்சியின் உணர்வில் திளைத்து நிற்கிறார் மிஷ்கின்!

ஸ்ரீயின் கைக்கட்டை அறுக்க என்னிடம் கொடுத்த கத்திக்கு கூர்மையே இல்லை! காட்சி படமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்! பாலாஜி ரங்காவின் கேமரா என் பக்கம் வரும் முன் நான் ஒரு உதவி இயக்குநரிடமிருந்த தொட்டால் வெட்டும் ஒரு சிறிய வெட்டுச் சாதனத்தை வாங்கினேன். எடுப்பின்போது ஸ்ரீயின் கை அறுந்திடக்கூடாது என்ற கவனத்தில் எனது விரலை நான் மோசமாக அறுத்து விட்டேன். கொட்டிய ரத்தம் காட்சி எடுப்பை சிக்கலாக்கியது. படப்பிடிப்பு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அன்று எனக்குப் பிறந்த நாள்!

தனது பாத்திரத்திற்கு வலிமை சேர்க்க ஸ்ரீ எடுத்த முயற்சிகள் அலாதியானது. பெரும்பாலான நேரங்களில் சாப்பிடாமல், தண்ணீர் கூடக் குடிக்காமல் அப்பாத்திரத்தின் மனநிலையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார். மிஷ்கின் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கனக் கச்சிதமாக உள்வாங்கி நடிக்கும் ஆற்றலை எப்போதுமே வெளிப்படுத்தினார். அப்பாத்திரத்தின் முழுநிறைவுக்காக தனது உடலையும் மனதையும் மிகவும் வருத்தினார். ரயில் பாலத்திலிருந்து கயிற்றில் தொங்கி கீழிறங்கும் காட்சியில் கையில் அணிந்திருந்த உறை கிழிந்து அவரது உள்ளங்கையிலிருக்கும் தோல் உரிந்துபோனது. ஆரம்பக் காட்சிகளில் பலமுறை தன்னை விட இருமடங்கு எடை கொண்ட மிஷ்கினை தோளில் தூக்கியெடுத்து நடந்து படிக்கட்டுகள் ஏறினார்!

மிஷ்கினின் வலங்கையான இணை இயக்குநர் புவனேஷ் கண்தெரியாத இருபது பேரை அழைத்து வந்தார். அவர்கள் வரும்போது ஒரு மூலையில் அமர்ந்து அன்று அவர்கள் பாடி நடிக்க வேண்டிய பாடலின் வரிகளை எழுதிக்கொண்டிருந்தார் மிஷ்கின். அரைமணி நேரத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் அண்டோனின் ட்வோர்ஷாக் அமைத்த ஸ்டபாட் மாடெர் எனும் இசையை மையமாக வைத்து ’போகும் பாதை தூரமில்லை, வாழும் வாழ்க்கை பாரமில்லை’ எனும் பாடலை உருவாக்கினார். அது அந்த பார்வையற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் துவங்கினார். அவர்களில் யாருமே நன்றாகப் பாடக்கூடியவர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னரும் மிகுந்த பொறுமையுடனும் நேசத்துடனும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது மிஷ்கினிடம் நான் பேட்ரிக் ரொசாரியோவைப் பற்றிச் சொன்னேன். அவரும் கண் பார்வையற்றவர். அக்கார்டியன் எனும் இசைக் கருவியை மிகச்சிறப்பாக இசைக்கக் கூடியவர். எனது ’இசையின் தனிமை’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்ப இசை வழங்கியபோது மிஷ்கினும் அவரை பார்த்திருக்கிறார். உடனடியாக அவரை அழைத்து வரும்படி சொன்னார். அவர் வந்துசேரும் வரை காத்திருந்து அந்த கண்தெரியாதவர்களின் பாடலுக்கு அக்கார்டியன் வாசிப்பவராக அவரையும் நடிக்க வைத்து, அவரது இசையின் துணையுடன் அக்காட்சியை பதிவு செய்தார். பின்னர் குரல் பதிவின்போது பேட்ரிக்கை ஒலிப்பதிவு கூடத்திற்கு வரவழைத்து அப்பாடலின் அசல் வடிவத்தைப் பதிவு செய்தார். திரையில் தனது நடிப்பை ‘பார்ப்பது’ மிகவும் சந்தோஷமாகயிருந்தது என்று பேட்ரிக் பின்னர் என்னிடம் சொன்னார்.

வடபழனியில் உள்ள ஒரு மாபெரும் அடுக்குமாடி அங்காடித் தொகுதியின் வாகனங்கள் நிறுத்தும் நாங்காவது அடித்தளத்தில்தான் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பதிவான அந்த சண்டைக் காட்சியின்போது மிஷ்கினின் கால்கள் பல இடத்தில் காயம்பட்டன. அக்கால்களை வைத்துக்கொண்டே அந்த பெண்மணியையும் குழந்தையையும் தோளில் தூக்கி ஓடிக்கொண்டேயிருந்தார்! படப்பிடிப்பின் கடைசி நாளில் மிஷ்கின் நடித்த ஓநாய் பாத்திரம் இறந்துவிழும் காட்சி படமாக்கப்படும்போது கார்த்தி எனும் குழந்தையாக நடித்த சைதுப் பாப்பா மயக்கமாகி விழுந்தாள். அந்த காட்சியின் உக்கிரம் அக்குழந்தையின் மனதை அவ்வளவு பாதித்திருந்தது. காவல் துறையினராக நடித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் மயக்கம்போட்டு விழுந்தனர்!

ஒரு சாதாரண திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் வசதிகளோ பாதுகாப்புகளோ எதுவுமில்லாமல் எடுத்து முடிக்கப்பட்ட படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்! மிஷ்கின் பாயும் மின் ரயிலிலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டதும் மிகக்குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான். அன்றும் தனது மகளுடன் படப்பிடிப்புக்கு வந்தார் மிஷ்கின். அக்காட்சிகளில் நான் இல்லாதபோதிலும் என்னையும் வரவழைத்தார். ”இன்றிரவு முழுவதும் என்னுடன் இருங்கள்” என்றார். பாயும் ரயிலிலிருந்து குதித்து அவர் கீழே விழப்போகும் இடத்தில் தடுப்பு மெத்தைகள் போடப்பட்டிருந்தன. ஒத்திகைக்காக ரயில் ஓட்டப்பட்டபோதுதான் ரயிலின் அசுர வேகம் எனக்கு விளங்கியது. அந்த வேகத்தில் ரயிலிலிருந்து குதித்தால் தடுப்பு மெத்தைகளின்மேல் தான் அவர் விழுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

நாலாபக்கமும் துருத்தி நிற்கும் கனமான இரும்பு தூலங்களும் உத்தரங்களும்! அதைச்சுற்றி கடும் காரைச் சுவர்கள். ஒரு நொடியில் எதுவும் நடக்கக் கூடும். தனது கலையில் யார் அறிவுரைகளையுமே ஏற்றுக்கொள்ள மாட்டார் மிஷ்கின் என்பதை நன்கு தெரிந்திருந்தும்  ’பயிற்சி பெற்ற நகல் நடிகரை வைத்து எடுக்கலாமே’ என்று பலவீனமான குரலில் சொன்னேன். அதற்கு அவர் சிரித்தபடியே ”இதைச் சொல்லவா உங்களை வரச் சொன்னேன்? எனக்கு எதாவது நடந்தாலும் என் மகளுக்கு நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் என்ற மன நிம்மதிக்காகத் தானே” என்று சொல்லி ரயிலேறினார். சில நொடிகளில் அதிவேகத்தில் பாயும் ரயிலிலிருந்து அவர் கீழே குதித்தார். எனது மனம் ஒருகணம் உறைந்துபோனது. மெத்தை மேல் விழுந்து எழுந்து நின்றார். ஆபத்தான குதிப்புகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார் மிஷ்கின். பெரும்பாலும் அவர் தடுப்பு மெத்தைகளின்மேல் விழுவதேயில்லை. இருந்தும் எழுந்து வந்துகொண்டேயிருக்கிறார்... அடுத்த குதிப்புக்கு ஆயத்தமாக... ஓநாய்க்களின் நிழல்படாத இதயத்துடன்....

ஷாஜி

Labels : ஓநாயும் ஆட்டு குட்டியும்,மிஷ்கின்


Saturday, December 21, 2013

கடலுக்கு அடியில் ஒரு மியூசியம்!


கடலுக்கடியில் ஒரு மியூசியம் செயல்படுகிறது.  இது தனியரின் பராமரிப்பில் உள்ளது. இந்த மியூசியம் மெக்ஸிகோவின் கேன்கம் (Cancum) பகுதியில் கடல் ஓர அடித்தளத்தில் நீருக்கடியில் அமைக்கப் பட்டு உள்ளது. 150 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 460 ஆள் உயர சிலைகள்


இங்கிலாந்தை சேர்ந்த  ஓவியக் கலைஞர் ஜெஸான் (Jason de Caires taylor) அவருடைய குழுவினர், நேசனல் பார்க் தலைவர் ஒருவர், நாடிகல் அஸோசியேசன் தலைவர்  இவர்கள் எல்லாம் குழுக்களாக சேர்ந்து இந்த மியூசியத்தை உருவாக்கினார்கள்.  2009 ல் ஆரம்பித்தார்கள் அப்போது புயலினால் சேதம் அடைந்து விட்டது அதன்பிறகு சரிசெய்து இருக்கிறார்கள்.

சிலைகள் PH-Neutral marine காண்கிரீட்டாலும், ஒருவகை களிமண் சேர்ந்த கலவையாளும் உருவாக்கப் படுகின்றன.

டூரிஸ்டுகள் பிரத்தியோக கண்டாடி கூண்டு அமைக்கப்பட்ட படகுகளிலும்,  ஸ்கூபா நீச்சல் காரர்கள் அருகில் இருந்தும் பார்க்கலாம்.
இவைகளை எதற்காக கடலின் அடித்தளத்தில் அமைக்க வேண்டும்.

1. இது ஒரு கலை அம்சம்.

2. கடலடி உயிரினங்கள், கடற்பாசி (coral reef) காப்பகமாகவும், இயற்கையோடு இயைந்த ஒரு சுற்று சூழல் திட்டம்(Environment concept ).

ஒவ்வொரு மனித உருவமும் மாடல்களை கொண்டு மோல்ட் செய்யப்பட்டு வடிவமைக்கப் பட்டவை. உள்ளூர் பிரபலங்களும் இதில் அடங்குவர்.





                                                 பொருளாதாரம் போச்சே (பேங்கர்)


                கண்காட்சியை அழகு படுத்தும் ஏஞ்சல் மீன்கள்


பல துளைகளோடு அமைக்கப்பட்ட மீனவரின் சிலையில் நெருப்பு போல வளர்ந்திருக்கும் பாசிகள்.

கடலடியில் புதைந்து போன எகிப்திய நகரம்


மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன.  மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion ) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும், தங்க தகடுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர். ப்ரெங் கோடியோ(Dr.Franck Goddio, European Institute) மற்றும் அவரது குழுவினர் 2000 ல்  நடத்திய ஆய்வில்  கடலின் அடி மட்டத்தின் கீழாக 30 அடியில் அபெளகிர் குடா (அலெக்ஸாண்டிரியா) பகுதியில் சிலைகள் புதைந்திருப்பது கண்டறியப் பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப் பட்ட ஆய்வின் பின் கிடைத்த தகவல்கள், இந்த இடமானது (Thonis-Heracleion) உலக அளவிய துறைமுகம் மட்டுமல்ல, மத சம்பந்தமான முக்கிய பகுதியாகவும் இது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி படுத்தப் பட்டது.
                                                              tks to Huffworldpost

கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் : 
64 உடைந்த  கப்பல் களின் பகுதிகள், 700 நங்கூரங்கள், தங்க காசுகள், பிரம்மாண்ட கல்வெட்டுகள்(எகிப்திய மற்றும் கிரேக்க) இவை  உலக வணிக மையம் என்பதற்கான ஆதாரங்கள்.

இவை தவிர 16 அடி உயர சிலைகள் கோவில் இருந்திருக்கும் என கருதப் படும் பகுதியில் இருந்து, சுண்ணாம்பு படிமமாக மாறிப் போன பதப்படுத்தப் பட்ட (மம்மிகளை  போல) விலங்குகள் .
அலாவுதினுடைய அற்புத விளக்கோ ?



எழுத்துக்கள் பொறிப்பட்ட தங்க தகடு



இதேபோல தமிழக கரைப் பகுதிகளிலும் கடல் கொள்ளப்பட்ட சங்ககால நகரமும் சிலைகளும் ,பொற்காசுகளும், இந்திய கடல் ஆராய்சியாளர்களால் கைப் பற்றப் படும் என நம்புகிறேன் (ஹையோ..சே.. பகல் கனவு !)

காணொளி :


  பி.கு : வலைச்சரத்தில் வெளியான பதிவின் மீள் பதிவு

Thursday, December 19, 2013

சிட்டி லைட்தந்த நகைச்சுவை சக்ரவர்த்தி சார்லிசாப்ளின்


சிட்டி லைட்ஸ்  1931 ல் வெளியான வசனங்களற்ற திரைக்காவியம் நீங்கள் பார்க்க வில்லை என்றால் உங்கள் வாழ்க்கை ஒரு காற்புள்ளி.



சினிமா படங்களில் ஒலி ஒளிப்பதிவுகள் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பின்னே எடுத்த இவர் படங்களில் பேச்சொலி தேவையில்லை என்பதே அவரின் முடிவாக இருந்தது. அவர் தேர்ந்தெடுத்த பாதை ஒன் அன் ஒன்லி என்று கூடச் சொல்லலாம். ஆனால் பின்னனி இசை காட்சி அமைப்பிற்கு மிகப் பொருத்தமானதாகவும், கண்களை மூடி இசையை கேட்டாலே காட்சி மனக் கண்முன் ஓடும் படியாக ஒன்றிணைந்திருந்தது.


படம் பார்ப்பவனுக்கு வசனங்கள் தேவையில்லை அது வெறும் ஆரவாரம் காட்சியை உணர வசனங்கள் பெரும் தடை. ஒவ்வொரு காட்சி தொடங்கும் போதும் காட்சியை பற்றிய ஒரு ஸ்லைட் காட்டப்படுகிறது. இருட்டில் இருந்து தொடங்கி இருட்டில் முடியும். இதுதான் அவரின் வெற்றி பார்முலா.  சிட்டி லைப் படத்தின் இறுதி காட்சி எப்படி இருக்கவேண்டும் “நான் அந்த காட்சியில் நடிக்கவில்லை வெறுமனே நின்று கொண்டிருந்தேன்” என்று சொன்னார். அந்த காட்சியில் டக்கென்று நேருக்கு நேராக காதலியை பார்க்கிறார் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்குகிறது, அடுத்த செகண்டே அவர் முகம் மாறுகிறது ஏன்? காதலியின் ஏளனப் பார்வை. சுக்கு நூறாக இவர் மனது உடைவதை கைகளில் உதிரும் ரோஜா இதழ்கள் உதிர்கின்றன.  இவள் நமக்கு எட்டாக் கனி விலகி ஓடுகிறார் பின்னாலேயே அவள் விரைந்து அவர் களில் புது ரோஜாவை கொடுத்து தொடும் உணர்ச்சி தேடலில், மென்மை உள்ளத்தின் சொந்தக்காரன் இவனா ? நம் வாழ்க்கையின் ஒளி கொடுத்தவன் இவனா?  நீங்களா கேள்விக்கணை தொடுக்கிறாள், புன்சிரிப்புடன் மெல்ல தலை அசைக்கிறார் யூ கேன் ஸீ நவ் ?” “யெஸ் ஐ கேன் ஸீ நவ்” காட்சிகள் மெல்ல மெல்ல இருளுக்குள் சென்று எண்ட் கார்ட் போடப் படுகிறது.


இந்த படத்தில் காதலியுடன் ரோஜா மலரும் பேசுகிறது. இது பேசா படம் என்பதே நமக்கு மறந்து போகிறது.

கதை சுருக்...தெருகூட்டும் தொழிலாளி பார்வை அற்ற பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அவளுக்காக ஜெயிலுக்கு போகிறான். காதலியின் கண் பார்வைக்காக தன் வாழ்க்கையையே பணையம் வைக்கிறான். இறுதியில் காதலியுடன் சேர்கிறானா ?, அவ்வளவுதான்.


படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் நகைச்சுவையின் எல்லை வரை உங்களை இட்டு செல்கிறது. படம் முடியும் போது உங்கள் மனம் லேசாக இருப்பதை உணரமுடியும். இந்த திருப்தியை இந்த காலத்து படங்கள் கொடுக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. (இத சொல்றதனால என்னை வயசானவன்னு நினைச்சிகாதீங்க...)


படம் முழுக்க நகைச்சுவைதான்...இருந்தாலும் நான் ரசித்த நகைச்சுவைகாட்சிகள் சில...







க்ரீகோ ரோமன் கற்சிலை திறப்பு விழாவில் திரை விலக பெண்சிலையின் மடியில் தூங்கிக் கொண்டு இருப்பார்..சாப்ளின். எல்லோரும் தேசிய கீதத்திற்கு சல்யூட் அடிக்க ஓட்டை டவுசர் சிலையின் கத்தியில் சொருகிக் கொள்ள... தத்தளிக்கும் காட்சி

பார்ட்டி ஒன்றில் நூடில்ஸோடு அலங்கார காகிதங்களை சாப்பிடும் காட்சி. இசையின் உணர்ச்சி எல்லையில் எல்லோரும் துணையோடு ஆட நமக்கு யாரும் இல்லையே என்ற இவரின் தவிப்பும்... சட்டென ஒரு பெண்மணியை பிடித்தாடுவார் சாப்ளின்... வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் காட்சிகள்...

"Tomorrow the birds will sing!" and "Be brave! Face life!"

தற்கொலை செய்து கொள்ள வரும் மில்லியனர், சாப்ளினை சாவில் இருந்து காப்பாற்றும் காட்சி, குடி போதையில் இருக்கும் போது மட்டுமே இவரை நண்பராக ஏற்றுக் கொள்ளும் பணக்காரர்.(Harry Myers)

எதிர்பாராமல் விசில் தொண்டையில் மாட்டிக்கொள்ள விக்கலும் விசிலும்... அந்த இறுதிகாட்சியில் நாய் ஒன்று இவர் விசில் சப்தத்திற்கு அவரோட மூஞ்சிக்கு முன்னாடி  நிற்கும் பாருங்க...ஹா..ஹா

குதிரை லத்திக்கு பயந்து ,பக்கத்து தெருவில் செல்வார் அங்கு யானை லத்தி போட்டு கடந்து செல்லும்....காட்சி.

காதலியின் கண் அறுவை சிகிச்சைக்காக தன் உயிரையே பனையம் வைக்கும் பாக்ஸிங் காட்சி நம்மை சீட்டின் நுனியில் இருத்தி வைக்கும்.

இது என்ன பிதற்றல் என்று உங்களுக்கு தோன்றலாம்... நிச்சயமாக சொல்லலாம் இந்த படத்தை நீங்கள் பார்த்து முடித்திருக்கும் நீங்கள் வயதானவரென்றால் இளைஞராகவும், இளைஞர் என்றால் குழந்தையாகவும் உரு மாறி இருப்பீர்கள். (குழந்தை யென்றால் ? இந்த குசும்புதானே வேண்டாங்கரது)

படத்தை பார்க்க வேண்டும் என்று விருப்பப் படுபவர்கள் உங்கள் மின் அஞ்சலை என்னை தொடர்புகொள்ள என்ற பக்கத்தில் உள்ள பெட்டியில் போடவும் லிங்க் தருகிறேன்...

                                           ஐன்ஸ்டீன் உடன் சாப்ளின்


நடிகர் நடிகையர் City Lights (1931), "A Comedy Romance in Pantomime,"

Charles Chaplin (the tramp), Virginia Cherrill (the blind girl), Harry Myers (the drunken millionaire), Florence Lee (grandmother), Allan Garcia (butler), Jean Harlow, Henry Bergman, Albert Austin,

by kalakumaran

Wednesday, December 4, 2013

சிந்தனை சிதறல்..

புத்தர் எட்டுவழிகளை போதித்தார் என்று சொல்கிறார்கள். அந்த வழிகளை நாம் நடை முறைப் படுத்துவதையோ ஏன் தெரிந்து கொள்ள விரும்புவதையோ என்றோ மறந்துவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும்.

அந்த எட்டு தத்துவ விளக்கங்கள் இவை ; 
  1. சரியாக புரிந்து கொள்; வாழ்வையும் உலக இயல்புகளையும், வாழ வேண்டிய நெறிகளையும், புரிந்து கொள்.
  2. சரியாக எண்ணு; மனதில் தூய்மை இருக்கட்டும்.  கொடுமையையும், கெட்ட எண்ணத்தையும், ஆசை வெறியையும் அகற்று.
  3. சரியானபடி பேசு; சாந்தமாகப் பேசு, பொய் சொல்லாதே, புறஞ்சொல்லாதே, கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே. வம்பு பேசாதே.
  4. சரியான செயல்களில் ஈடுபடு; உன் செயல் தூய்மையான செயலாக இருக்கட்டும்.  துன்பம் கொடுக்காதே, அழிக்காதே, அவர்களது நிதானத்திற்குப் பங்கம் ஏற்படுத்தாதே.
  5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு; நாணயமான தொழிலைச் செய்; பிறருக்குக் கேடு செய்யாதே நியாயமற்றவைகளை செய்யாதே.
  6. சரியான முயற்சியில் ஈடுபடு; உழைப்பதிலும், முயற்சியிலும் ஈடுபடும்போது கெட்ட எண்ணம் எழாது.  நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்.
  7. சரியான சிந்தனை; மனத்தைப் பற்றி உடலைப் பற்றி உன் உணர்வுகளைப் பற்றி இயற்கையைப் பற்றி சரியாக சிந்தித்துத் தெரிந்து கொள்.
  8. சரியான கவனம்; மன சக்தியை ஒன்று திரட்டிக் கருத்தில் செலுத்து அமைதி பெறுவாய்.  உள்ளொளி பெறுவாய்.

இந்த 8 அம்சங்களில் நான் தெரிந்து கொண்டது கடவுளை வழிபாடு செய் உன் துயரம் தீர்பார் என அவர் பரிந்துரைக்கவில்லை.

என் பார்வையில் இந்த உலகம் ஒவ்வொரு கணத்திலும் அபாயத்தை வெளிகாட்டுவதாகவே தெரிகிறது.  எல்லாம் மாயை என்று சொல்வது போல்
மக்களின் போக்கு வெகுவாக மாறிவிட்டது.   யாரும் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வது இல்லை.  எல்லா நேரங்களிலும் ஒரு மாய உலகத்தில் இருப்பதை போன்றே உணர்கிறார்கள்.  நிதர்சனம் என்ன என்பதை யாரும் சட்டை செய்வதே இல்லை.

என்னைப் பொருத்த வரை இந்த நிமிடத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் போதும் என எண்ணுகிறேன்.  ஆனால் அப்படி இருப்பதையோ நினைப்பதையே இந்த உலகம் கிண்டலடிக்கிறது.  ஏன் என்றால் நான் ரசனையில் இருக்கும் போது நான் பின் தங்கி விடுகிறேன், வேகமாக செல்லும் உலகம் இது.

ஆன்மீக வாதியை விடவும் நாத்திக வாதி ஆன்மீகத்தை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.   அவனை விடவும் இவனுக்கு தேடுதல் அதிகம்.  அப்படித்தான் பெரியாரின் தமிழ் சீர் திருத்த எழுத்தும் ஆன்மீக வாதிக்கு தெரியாதது இவருக்கு தெரிந்தது.


நாம் எப்போது வலிமை இழக்கிறோம் என்றால் மனம் தளர்ந்து விடுகிற போது என்று என்று சொல்லலாம்.  அப்போது நம் உடலில் எண்டார்பின்னும், லிம்போசைட்ஸும் குறைந்து போகிறது.

Endorphin  என்றால் ரத்தத்தில் வலியை குறைக்கும் ரசாயணம்.
Lymphocytes  என்றால் நோய்கிருமிகளை கொல்லும் பொருள்.

நீ என்னவாக இருக்க விரும்புகிறாய் என்று என்னைக் கேட்டால்
எனது பதில் நான் ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை விஞ்-ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்.  (ஒன்றை கண்டுபித்தவர்கள் விஞ்ஞானிகள், மற்றதை கண்டுபிடித்தவர்கள் ஞானிகள்.)

கண்டுபிடிப்புகள் காலத்தால் அழியாது ஆனால் அது உருமாறும் மாற்றம் பெரும். எட்வின் லாண்ட் கண்டுபிடித்தது உடனடி போட்டோ மெக்கானிசம். டார்க் ரூமில் வைத்து பிரிண்ட் போட தேவை இல்லை. அப்போது அது பெரிய வித்தை தான் ஆனால் இப்போது டிஜிட்டல் வந்து விட்டது இருந்தாலும் அது அதுதான் இது இதுதான். 

 ”எண்ணங்கள் ரகசியமானவை அவற்றை மறைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள் மக்கள் ஆனால் அவற்றை ஒருநாளும் நாம் ஒளித்து வைக்க முடியாது “ ------- ஜேம்ஸ் ஆலன்


வலைச்சரத்தில் வெளியான் பதிவின் மீள்பதிவு :  by Kalakumaran