Pages

Tuesday, January 28, 2014

இராஜநாக காதலன் ரோமியலஸ் !

நிறையப் பேர் வைட் காலர் ஜாப்பிற்கே ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ரோமியலஸ் விடேகர் தமது வாழ்க்கையை காட்டின் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் நுகர்வதற்காக  இயற்கையோடு தம்மை இணைத்துக் கொண்டார்.

யார் இவர் ?  என்ற எனது தேடல் இவரைப் பற்றி ஆச்சர்ய விசயங்களை தந்தது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரோமியலஸ் விடேகர் , இயற்கை ஆர்வளர் மட்டுமல்ல, (conservationist) ஊர்வன நீர்வாழ் உயிரிகளை நேசிப்பவர் மட்டுமல்ல ( herpetologist )அவர் சினிமா தயாரிப்பாளர் (டாக்குமென்ரி) மட்டுமல்ல, சென்னையில் உள்ள பாம்பு பண்னையை நிறுவியவரும் ஆவார்.


மனித வாசனை படாத பழங்குடிகளின் பாதம் கூட படாத அமைதியான காட்டுப்பகுதி அமைதிப்பள்ளத்தாக்கு. இதனை உலகறியச் செய்தவர் ரோமியுலஸ் விடேகர்

இந்திய துணைக்கண்டத்தில் அழியும் நிலையில் இருந்த பாம்பு இனங்கள் இந்த பண்ணையில் பராமரித்துப் பாதுகாக்கப் படுகிறது. கிண்டியில் இந்த பாம்பு பூங்கா 1972 ல் இவரால் ஆரம்பிக்கப் பட்டது. இது தான் இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப் பட்ட பாம்பு பூங்கா. வேர்ட்லைப் ஃபண்ட் ஒத்துழைப்புடன் இதை சாதித்தார்.  அதன் பிறகு (1976)ஆரம்பிக்கப்பட்டது தான் மாமல்லபுரம் சாலையில் உள்ள முதலை பண்ணை  இதில் 15 வகைப்பாட்டியலில் வரும் 3000 முதலைகள் இருக்கின்றன. முக்கியமாக இதில் இருக்கும் 3 வகைகள் அழிவின் விளிம்பில் இருகின்றன என்று சொல்கிறார்கள்.


சிறியவயதில் இருந்து பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்.

அமெரிக்காவில் பிறந்த இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் அதற்கான இவரின் பயண எல்லை விரிந்த அளவிளானது.

க்ரோகடைல் ஹண்டர் ஸ்டீவன் இர்வின் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர் போல செயற்கையான த்ரில்கள் இவரின் டாக்குமென்ரிகளில் பார்க்கமுடியாது. இவருடைய கோப்ரா டாக்குமென்ரிகள் எதார்த்தமானது, செயற்கை கலப்பு இல்லாதது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைக்காடுகளில் ரிசர்ச் செண்டர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இவரது அவா.


இயற்கையையும்,காட்டுயிர்களை பற்றியும் இவரது அனுபவங்களை பேசுகிறது இவர் எழுதிய புத்தகங்கள்.  wild Dreams, Green screen (2002)

 “The Dragon Chronicles,” filmed in 2008 for PBS's series Nature, shows Whitaker cave-diving in ice-cold water for Slovenian olms, climbing trees in pursuit of flying lizards in the Western Ghats, and Komodo dragon-wrestling in Indonesia.

எழுபதுகளில், ரஷ்யன் பிலிம் நண்பருடன் சேர்ந்து “ரிக்கி டிக்கி தாவி” எனும் டாகுமென்ரியை எடுத்தார். அதில் பறவைகளின் முட்டைகளை திருடும் பாம்புதான் முக்கிய கதா பாத்திரம்.

ரோமியலஸ்  சொல்கிறார்  “ 1980 ல் நான் காட்டு வாழ்க்கையை பற்றிய படங்களை எடுத்த போது என்னிடம் டி.வி கிடையாது, இப்படி பட்ட படங்கள் அதிகம் இல்லை அப்போது.  பாம்புகளுடனான எனது பரிசயம் மற்றும் அவைகள் பற்றிய விழிப்புணர்வு ஜனங்களுக்கு சென்று சேரவேண்டும் என்று விருப்பப் பட்டேன்.  பாம்பு பண்ணை ஆரம்பிக்கப் பட்ட பிறகு அவைகளை பற்றி வருடத்திற்கு மில்லியன் பேருக்கு தெரியப் படுத்தப் படுகிறது. ஆனால் அதுவே டி.வி மூலமாக ஒரே நேரத்தில் 20 மில்லியன் பேரை சென்றடைகிறது.”

பள்ளித்தோழர்கள் இருவருடன் சேர்ந்து எடுத்த டாக்குமென்ரி (Snake bite - 1985 ) பாம்பு கடியால் இறப்பவர்களை பற்றியது. இதற்கு 50000 ரூபாய் செலவானது. அரை மணிநேரம் ஓடும் இது பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.  இதற்கு U.S ல் கோல்டன் ஈகிள் விருது கொடுக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது.

இந்த மாதிரியான படங்கள் எடுக்க செல்லும் காட்டுபகுதிகளில் மலைவாழ் மக்களோடு (ஆரவல்லி, பழனி மற்றும் இருளர்கள் )பழகிய அனுபங்கள் மறக்கமுடியாது என சொல்கிறார்.  அந்த பயணங்களின் போது கொடிய விசம் கொண்ட பாம்புகளிடம் இருந்து தப்பித்தேன். ஆனால் அதைவிட NH 47 ல் காரில் செல்வது பயமாய் இருக்கிறது.

இவரது பல டாக்குமென்ரிகளும், அனிமல் ப்ளானட், டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபிகளில் ஓடுகிறது.

விருதின் மூலம் தனக்கு கிடைத்த 30000 பவுண்டுகளை Agumbe Rainforest Research Station ஆரம்பிக்க செலவிட்டார். இங்கு முக்கியமாக ராஜ நாகங்களின் வாழ்வியலை பற்றிய ஆய்வகம் செய்யப் படுகிறது.

கிங் கோப்ரா (ராஜ நாகம்) நேசனல் ஜியாகிரபியில்
எமி அவார்ட்(Emmy award) பெற்று தந்தது. இது சின்னத் திரையில் ஆஸ்கார் போன்றது.

"super sized " முதலை படம் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப் பட்டது.

"I’m 65 years old, and instincts (and some well-meaning friends) say I should slow down and maybe take it a little easier, but how can I? "
Romulus Whitaker

 “I am happiest out in the wild just watching turtles, snakes, crocs and other herps.”

“[Children] are fascinated with snakes. They haven’t got that steely thing that you end up either fearing or hating or despising or loathing them in some way. They are interested.” 

17 நிமிடம் ஓடக்கூடிய காணொளி ராஜ நாகம், முதலை மற்றும் சுற்று சூழலை விளக்குகிறார் ரோம்.., விருப்பப் படுபவர்கள் தரவிறக்கி கொள்ளலாம்.



ராஜ நாகம் பற்றி சில தகவல்கள் :

சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடிய ஜீவன்.  வால் நுனி யில் நேராக தரைமேல் எழும்பி மனிதனை அச்சுறுத்தக் கூடிய வல்லமையும், உலகில் கொடும் விசம் கொண்ட உயிரினங்களில் ஒன்று. இருபது வருடங்கள் உயிர் வாழும்.

அடிப்படையில் மனிதர்களை கண்டால் ஒதுங்கி விடும் ஆனால் கட்டம் கட்டப் படும் போது நேருக்கு நேர் எதிர்த்து தாக்கக்க கூடியது.

இதன் சிறு துளி விசம் 20 மனிதர்களை கொல்லக் கூடியதும், யானையை கொல்லவும் போதுமானது.

மழை காடுகளும் காட்டு பகுதியோடு ஒட்டி மனிதர் வசிப்பிடங்களிலும் இதன் நடமாட்டம் இருக்கும்.

தென்கிழக்காசியா, தென் சீன பகுதிகளிலும் காணப் படும் ராஜ நாகம் இடத்திற்கு தகுந்தாற் போல் நிறங்களில் வேறு படுகிறது. விசமுடைய பாம்புகளையும் விழுங்கக் கூடியது. மரத்தின் மீதேறி பறவை முட்டைகளையும் ஸ்வாகா செய்யும்.

பெண் ராஜ நாகம் முட்டைகளை அடைகாக்க இழை தளைகளை கொண்டு கூடு கட்டும்.  ஆண் ராஜ நாகம் பெண் ராஜ  நாகத்துடன் இணை சேர வில்லை யென்றால் அவைகளை விழுங்குவது ஏன் என்பது இன்னும் புலப்படாத இரகசிய மாக இருக்கிறது.


Labels : ராஜ நாகம், பாம்பு பண்ணை, பாம்பு பூங்கா,snake park,

Thursday, January 23, 2014

"கைம்மா" ன்னா யானையா ?

ஒவ்வொரு மொழியிலும் அதற்கென்று பல சிறப்புகளை கொண்டிருக்கும், சில மொழிகள்  'அடாப்டட் ' என்று சொல்லக்கூடிய ஒரு மொழியையோ அல்லது பல மொழிகளையோ சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இல்லாமல் தமிழ் மொழி  சிறப்புகளை கொண்டிருப்பது ஆய்வுக்கு உரியது.

ஒரு உதாரணம், யானை என்ற வார்த்தைக்கு பல பெயர்களையும் அர்த்தங்களையும் கொண்டிருக்கிறது தமிழ் மொழி.  அதே போல யானையின் பல வகைகளையும் அதன் வாழ்க்கையையும், பாலின வேறுபாடுகளையும், குண நலன்களையும், இனங்காட்டவே பல சொற்கள் பிறபிக்கப்பட்டு சங்ககாலத்தில் இருந்து பேச்சு வழக்கிலும்,  இலக்கியங்களிலும் பயன் படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்.  இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்.

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

(tks to sureshbabusuperphotos )




இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களப மென்றென் பூசுமென்றாள்
மாதங்க வேழ மென்றேன் தின்னும் என்றாள்
பக டென்றேன் உழம் என்றாள்
பழனம் தன்னை கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.


 { - அந்தகக் கவி வீரராகவ முதலியார்- }

அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து,
'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார். அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

இந்த பாடலில் இரு பொருள் தருபவை

களபம் -யானை;சந்தனம்:
மாதங்கம் -யானை; மா(பெறிய)தங்கம்
பம்பு சீர் வேழம் (நற்குணமுடைய) யானை - கரும்பு
பகடு -யானை;எருமைக் கடா
கம்ப மா (எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும்
யானை)-
கம்பு என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மா        
களி செய்ய உதவும்.
கைம்மா (தும்பிக்கையுடைய யானை)

யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.

(tks to முகநூல் நண்பர் Madras memes)

Labels : தமிழ், யானையின் பெயர்கள், கட்டுரை, அனுபவம், தமிழன்



Saturday, January 18, 2014

நடிகர் சிவகுமாரின் அனுபவங்கள் - Part 3

பரதகலை பற்றியது, பரத நாட்டியம் ஆடுவதில் மனிதர்களுக்கு கிடைக்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்.

மனிதன் கதை சொல்லியாக இருந்த ஆரம்ப காலத்திலே இது தோன்றி இருக்க வேண்டும். பின்னர் பொருளார ரீதியாக இது வளர்ந்தது. கதை சொல்லியே காலத்தை ஓட்டியிருக்கிறான். கதை சொல்ல ஆரம்பிச்சான், பாடிட்டு கதை சொன்னான்,பின்னாடி ஆடிட்டே கதை சொல்ல ஆரம்பிச்சான்.

கி.பி 2 நூற்றாண்டில் இருந்து கி.பி 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அஜந்தா எல்லோரா சிலைகள பார்த்தீங்கன்னா பரத நாட்டியம் எந்த அளவு வளர்ந்திருந்ததுன்னு தெரியும்.. அதுக்குமுன்னாடி கி.மு 2 லேயே இது இருந்திருக்கலாம். இந்த கலையை காப்பாற்றியவன் ராஜ ராஜ சோழன் கி.பி 10 நூற்றாண்டில் ஓவியமாகவும், சிலைகளாகவும் படைக்க வெச்சான்.
அவங்களுக்கு ஆதரவு கொடுத்தான், அதுக்கப்புரம் பல்வேறு ஆட்சியாளர்கள் வரும்போது அப்படியே குறைஞ்சு குறைஞ்சு போய்,  அந்த கலை சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கோயிலோடு வாழ்ந்து, திருமணம் செய்து கொள்ளாம போய், ”தேவதாசி” என்று முத்திரை குத்தப் பட்டு ஆடுவதற்கு தடை செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டாங்க. நாடு சுதந்திரம் அடையரதுக்கு ஒரு ஐம்பது வருசம் முன்னாடி, பால சரஸ்வதி,ருக்மனி அன்னை போன்றவங்க எல்லாம் தமிழ்நாட்டில் மரியாதை செய்யப்பட்டாங்க.

பரத நாட்டியம் ஆடும் பொன்னுங்க எல்லாம் “தாயே யஷோதா..ன்னு” பாடிட்டு இருக்க அவங்க ஸ்மைலோட ஆடினா போதும். சினிமாவில் எனக்கு கொடுத்த அசைன்மெண்ட் பாடிட்டே ஆடனும்...பாட்டுன்னா எப்படி  “ அனங்கன் நல் கஜநண்பன் வசந்தன் மன் மதனென்பன் வணங்கும் என் உயிர் மன்னவா...கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவி பொங்கும் தனித்தோங்கும் கயல் கன்னியே, ஆடலுடன் பாடல் இன்பம் ஊடலுடன் கூடல் இன்பம் தேடலும் உன் செயலல்லவா.... ( இணைந்திங்கே சிவம் கானுவோம்...மூச்சுவிடாமல் தொடர்ந்து பாடி முடிக்கிறார் பலத்த கைதட்டல்..என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை)

இப்படி பாடிட்டே ஆடும் போது வாய் சரியா இருந்தா கை மூவ்மெண்ட் போயிடும்..
மூவ்மெண்ட் இருந்தா வாய் போயிடும்..முதன் முதலா டான்ஸ் ஆடும் போது கைய இப்பிடி இப்பிடி மூனு தடவை செஞ்சேன்..கவுண்டரே அளந்திட்டு இருக்கீங்களே எத்தனை முழம்னாங்க..

என்னோட ஸ்ரீவித்யா நடிச்சாங்க அவங்க ஐந்து வயசில இருந்தே ஆடிட்டு இருந்தாங்கலாமா.. கேவி மஹா தேவன் மியூசிக் காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் கே.பி. சுந்தராம்பால் 64 வயசுல பாடிட்டு இருந்தாங்க..

கே.வி.மாஹா தேவனுக்கு பதிலா சேஞ்சுகாக இருக்கட்டுமேனு ஒரு படத்தில குன்னக்குடி வைத்திய நாதனனை மியூசிக் டைரக்டரா போட்டாங்க. ஏ.வி.எம்.. குன்னகுடி வைத்திய நாதனா அவன் பெட்டி போடற பையனாச்சே அவன் எப்படி மியூசிக் போடுவான்னார்.  தயாரிப்பாளர் சீரியசா இருப்பார் போலிருக்கேன்னு சொன்ன உடனே ஆர்மோனிய பெட்டிய தூக்கிட்டு காலைலேயே அவர் வீட்டுக்கு போனாரு வைத்தியநாதன். என்னப்பா பில்லு ஏதாவது இருக்கா அம்பின்னாரு ஏவிஎம். இவரு இல்லீங்க சின்ன பாட்டு ஒன்னு சுரம் சேர்த்து கொண்டாந்திருக்கேன்... சரி போடு பாப்போம்...

தக தகவென தக தகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா.. (பாடலை பாடிக் காட்டுகிறார் இந்த பாடல் 1972ல ) பாட்டை கேட்ட ஏவிஎம் சாகரவரைக்கும் நீதாண்டா மியூசிக் டைரக்டர்னாரு. தம் கட்டி பாடிய கே.பி. சுந்தராம்பாள் யப்பா (அவருக்கு அப்ப 64 வயசு ) என்னப்பா இந்தமாதிரி மூச்சு வாங்குதேன்னாங்க. யாரு பார்வதி...ஸ்ரீவித்யா, சிவன் யாரு...கோயமுத்தூர்லேர்ந்து வந்த பையன் டான்ஸ் ஆடுவானா... இல்ல இனிமேதான் தெரிஞ்சிக்க போறான் ...சரியாப்போச்சு..இனிமே இத கத்துக்கிட்டு ஆயுசு முடிஞ்சுடுமேப்பான்னாங்க. அதுக்கப்புரம் விடாம ஆடி கத்துகிட்டு அந்தப் படத்தில ஆடி நடிச்சேன் போதும் போதும்னு ஆயிடுச்சு. ஓவியனா இருக்கரது வேற விசயம்...நடிகனா இருக்கரது வேற.



மெல்லிசைப் பாடலுக்கும் கர்னாடக சங்கீதத்திற்கு வேறுபாடு எப்படிப் பார்கிறீர்கள்.

ஊருக்குள்ள கரண்டே கிடையாது அரிக்கேன் வெளக்கு வெச்சே படிசிக்கிட்டு இருந்தேன்.. ரேடியாவுல பாட்டு கேக்கரதெங்க.. பாட்டு கேட்காம கர்னாடக சங்கீதம் எப்படி தெரியும். விதி எப்படி விளையாடுது பாருங்க.

டைரக்டர் பாலசந்தர் படம், சிந்துபைரவி பாகவதர் கேரக்டர்,  ஒரு பாறைமேல பத்மாசனம் போட்டு உட்கார்ந்து பாடறமாதிரி ஒரு சீன்வரும் அவங்க செளரியமா மேட்டுமேல கேமரா வெச்சுகிட்டு உட்கார்ந்திருப்பாங்க நடுக்கடல்ல நான் மட்டும் பாறையல உட்கார்ந்து பாடனும்... சாட் எடுக்கும் போது பெரிய அலை வந்து பொத்துன்னு தூக்கி கடல்ல போட்டுரும்.. சட்டைய திரும்ப காயவெச்சு போட்டு எடுக்கனும்... இப்படியே மாத்தி மாத்தி உணர்ச்சிகரமா நான் நடிக்கனும்...அதோட வாயசைப்பு சங்கீத ஸ்ருதிமாறாம வாயசைச்சு பாடனும்.. நிசரிசசச நிச ரிசசச...பமப கமப நிசரி...பகம (பாடிக்காட்டுகிறார்) யோசிச்சு பாருங்க. நமக்கு ஸ்வரமே தெரியாதே..இந்த எழுத்துக்கள ஒன்னொன்ன பிரிச்சு மனப்பாடம் பன்னி அப்புரம், ஜேசுதாசோட பாட்டையும் மண்டகுள்ள போட்டு இமய மலமேல உட்கார வெச்சாலும் அழுத்திரோவோம்ல...

யோகாசனம் எத்தனை ஆண்டுகளாக செய்கிறீர்கள் ? ப்ரானாயாமத்தின் பயன் என்ன?

இப்பத்தான் இப்பத்தான் ஒரு 55 வருசமா பன்னிட்டு இருக்கேன்..

காபி டீ கூட சாப்பிடுரது இல்ல. ப்ரானாயாமம் இதை திருமூலர் அழகா சொல்லிட்டுப் போய்ட்டார்,...

ஊரார்கூடி ஒலிக்க அழவிட்டு
பேதமை நீங்கி பிணம் என்று பெயரிட்டு
சூரகன் காட்டிடை கொண்டுபோய்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நிலை பெற்றோரே.

எப்பேர்பட்ட கொம்பனா இருந்தாலும் இறந்துபோன கடைசில
பிணம் -ன்னுதான் சொல்லுவார்கள்... சாருக்கு மூக்குல பஞ்சு வைன்னு சொல்லமாட்டான்.. பிணத்து மூக்கில ன்னுதான் சொல்லுவான். தூக்கிட்டு போவான் எரிப்பான் இல்லன்ன புதைப்பான். வாழ்க்கைல என்னத்த கண்ட  மாப்ள என்று அழுவார்கள்... செத்துபோனவன் சம்பாரிச்ச சொத்து இதுதான்.

யாக்கைன்னா உடம்பு, யாக்கை நிலையாமை இந்த உடம்பு
காப்பாற்ற என்ன வழி.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

உடம்ப காப்பாத்து, தண்ணி அடிக்காத, பீடி சிகரெட் குடிக்காத, டயத்துக்கு சாப்பிடு, ஏழுமணி நேரம் தூங்கு இதத்தான் சொன்னாரு. அதுல ஒசத்தியான விசயம்னா ஒருமனுசன் சாப்பாடு இல்லாம ஒருவாரம் பத்துநாளு   இருக்கலாம் தண்ணி குடிக்காம நலஞ்சு நாளு இருக்கலாம்...ஆனா சுவாசிக்காம இருக்க முடியாது. ப்ராணம் இல்லாம இருக்க முடியாது. இறந்து போனா ப்ராணம் போயிருச்சுன்னு சொல்லுவாங்க.

இடது பக்க நாசிவழியா காத்த உள்ளிழுத்து வலதுபக்க நாசிவழியா 172 முறை வெளிய விடுறது. இதேமாதிரி வலது நாசிவழியா காத்த உள்ளிழுத்து இடது நாசிவழியா 172 முறை வெளியே விடறது. இந்த மாதிரி செஞ்சா ஒருத்தன் 172 வருசம் வாழலாமாம்.  இதுமாதிரி நாஞ்சென்சுபார்த்தேன்.... பாழாப் போன உலகத்துல 172 வருசம் வாழனுமா 86 வருசம் வாழ்ந்தாப் போதும்னுட்டு பாதியா குறைச்சுட்டேன். ப்ராணாயாமம் கரது உயிரோட இருக்கறதுக்கான விசயம். தூங்கிட்டு இருக்காம காலைல நாலரை மணிக்கு எந்திருச்சு சூரியன பாருங்க... சூரியன பார்த்தா ரொம்ப வருசம் உயிரோட இருக்கலாம்.

அக்கால ஆசிரியர் மாணவர் உறவு இக்கால உறவு குறித்து சொல்லுங்கள்.?

இது கொஞ்சம் சீரியசான கேள்வி... மாணவன் டீச்சரை கத்தியால் குத்துவது, பல்லை உடைப்பது...பத்திரிக்கைகல்ல படிக்கிறோம். உலகம் இப்படி போயிட்டு இருக்குது.  நான் கலங்கல்ல தான் படிச்சேன். கல்யாண சுந்தரம் வாத்தியார் ஒழுங்கா படிக்கலேன்னா கொன்னுடுவாருங்க... கொன்னே போடுவார். அப்படி பட்ட வாத்தியாரிடமே படிச்சேன். கால் அரைக்கால் காசுக்கு நாலரைக்கால் கத்திரிக்கான்னா ஒரு காலுக்கு எவ்வளோ... சொல்லி முடிக்கும் போது 3 பைசான்னு போட்டிருக்கனும், தங்கமான வாத்தியாருங்க.. எங்கூருக்கு போற வழில தோட்டத்தில குடி இருந்தாரு ஒருநாளு அவர போய் பார்த்தேன். (என்னோட ஒரிஜினல் பேரு...தண்டபாணி)

"தண்டபாணி மழை ஏமாத்திடுச்சுடா வெள்ளாம ஒன்னும் இல்ல, காட்ல ஒன்னும் விளைய மாட்டீங்குது. மாடு கன்னு தீவனமில்ல அதையும் வித்தாச்சு.. ஒன்னும் முடில நீ ஒரு தபா காட்டுக்குள்ள போய்டுவான்னாரு.." எனக்கொன்னும் புரியல... யோசிச்சேன். கால் பூமில படனும்கிராரு

"ஐயா ...நனொன்னும் ராமபிரான் இல்லே பூமி அகலிகை இல்லே "ன்னேன்... எலேய் ராமாயணம் நாங்க தான் உனக்கு சொல்லி குடுத்தோம் எனக்கே பாடம் எடுக்கறயா... போடா...போடா -ன்னாரு. பத்தடி போய்ட்டு வந்தேன். சாதாரண ஸ்டூடன்டு என் கால் அவரு பூமில படனுமேன்னு சொல்றாரே எனக்கு அழுகையா வந்திச்சு.

மூனு வருசம் கழிச்சு திரும்ப பார்த்தேன். தண்டபானி பரவாயில்ல இடத்த ப்ளாட் போட்டு வித்திட்டேன். பெரிய புள்ளக்கு 4 லட்ச ரூவா, சின்ன புள்ளக்கு 3 லட்ச ரூவா, பேங்கல 5 லட்ச ரூவா போட்டுவெச்சிருக்கேன்னாரு. இது நம்ம நால இல்ல...காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.

இப்ப ஏதுன்னாலும் வாத்தியார சஸ்பன்ட் செய்யராங்க இது நல்லா இல்ல. அப்ப பையன் கண்ணு ரெண்டையும் மட்டு விட்டுட்டு தோல உரிச்சுடும்பாங்க... அந்த உறவு போச்சு.

 "கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது


தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு,  ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.., நடிகர் சிவகுமார்,  அவரின் பேச்சை கேட்டவர்களுக்கு தெரியும் கட கடவென பேசுவார்...ஓரளவு அப்படியே கொடுத்திருப்பதாக என்னுகிறேன்.

தொடர்கிறேன்....

நன்றி

கலாகுமரன்.

தொடர்புடைய பகுதிகள் :  

சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 1

சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 2




Tuesday, January 14, 2014

போலியோ அற்ற நாடு மைல் கல்லை எட்டிய இந்தியா

போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது
(13 ஜனவரி, 2014 )

இந்தியாவில் ஒழிக்கப்படும் இரண்டாவது கொடும் நோய் போலியோ
கடந்த மூன்றாண்டுகளில் ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூட வெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை இன்று எட்டியிருக்கிறது.
இந்திய அரசின் இந்த அறிவிப்பு இன்று வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.
இந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது.
2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.
இந்த காலகட்டங்களில் பொதுமக்களுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதன் மூலமே இந்தச் சாதனை எட்டப்பட்டிருக்கிறது .
இது பெரும்பாலும் இந்தியாவின் பொதுச்சுகாதாரத் துறையில் பெரும் வெற்றியாகக் கருதப்படலாம்.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், சுமார் 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் 209 மிலியன் வீடுகளுக்கு சென்று, சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தந்தனர்.
"பிரம்மாண்டமான மைல் கல்"
இந்தியாவில் போலியோ ஒழிப்பை ஒரு " பிரம்மாண்டமான மைல் கல்" என்று வர்ணித்த ஐ.நா மன்ற குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்தியப் பிரிவின் , போலியோ தடுப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கான தலைவி, நிக்கோல் டாய்ட்ச், இனி புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது என்றார்.
ஆனால் வாய்வழியாகக் கொடுக்கும் சொட்டு மருந்துகள் மட்டிலுமே தரப்பட்ட இந்தியாவில் , போலியோ ஒழிக்கப்பட்டிருந்தாலும், அபூர்வமாக இந்த நோய் மீண்டும் தலைதூக்காதிருக்க வேண்டுமானால், ஊசிவழியாகவும் இந்த மருந்து தரப்படவேண்டும் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் பொதுச்சுகாதரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ

கடந்த ஆண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் , போலியோ அதிகமாகப் பரவியிருக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து, இந்தியாவை நீக்கியது.
இன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.
1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்படுகிறது.
போலியோ என்ற இந்தக் கொடிய நோய் தாக்கிய ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே மரணம் ஏற்படலாம், அல்லது முழுமையாக அவயங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படலாம்.
பழங்காலங்களிலிருந்து சமூகங்களைப் பீடித்த இந்த நோய், 1980களில் கூட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்பட்டது. அப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் போலியோ நோயால் தாக்கப்பட்டனர்.

' பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய பொது வசதிகள் இல்லை'
இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், போலியாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், இயல்பு வாழ்க்கையை நடத்த போதிய பொது ஏற்பாடுகள் இல்லை என்கிறார் போலியோவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செய்தியாளர் எச்.ராமகிருஷ்ணன்

நன்றி ; பி.பி.சி. செய்திகள்

ஜோனஸ் ஸாக் போலியோ தடுப்பூசி மருந்திற்கு பேடன்ட் செய்யவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அவரின் பதில் "சூரியனை நீங்கள் பேடன்ட் செய்வீர்களா ? "

Monday, January 13, 2014

நடிகர் சிவகுமாரின் ஓவிய அனுபவம் - Part 2

கோவையை பற்றிய வருத்தம் எனக்கு எப்பவுமே ஒன்று உண்டு. 1917 லேயே ஊமைப் பட காலத்திலேயே கோவை மண்ணைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர்தான் திரைப்படங்களை மக்களுக்கு போட்டு காட்டினார். பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்ரல் ஸ்டுடியோ இருந்தது இப்ப காணாம போயிடுச்சு. தொழில் துறை வளர்ந்த அளவுக்கு கலைகள் இங்க வளர்த்தப் படவில்லை,  ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம்...அமெச்சூர் நாடகம் போடுவாங்க. கலைக்காக இந்த மண்ணில் பர்மனெண்ட்டா ஒரு கல்சுரல் சென்டரை உருவாக்கிய கலைஞன் திரு.சீனிவாசன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் ஓவிய கல்லூரியில் படித்தபோது பார்த்த ஓவியங்கள்..18ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை, இங்கு நிறைய காட்சிப் படுத்தப் பட்டு இருக்கு. எகிப்து, இந்தியா, தாய்வான்,ஜப்பான் தயாரிப்பு ஓவியங்கள் இங்கு வெச்சு இருக்காங்க..வேர்ல்ட் பைன் ஆர்ட்ஸ் தனியா இருக்கு, அது போக 2003 லிருந்து கடந்த பத்து ஆண்டுகளில் 125 எக்ஸிபிசன் நடத்தி இருக்காங்க. என்பது உண்மையிலேயே ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. வாழ்நாள் முழுக்க இவங்க பணி தொடரனும்.

ஓவிய கல்லூரி வாழ்க்கை...அந்த நாட்களில், ஆசிரியர்கள், மாணவர்கள்...இனிய நினைவுகள் பற்றி சொல்லுங்கள்.

இன்னொரு பிறவி இருந்ததென்றால் பழையபடி அதே ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.  அப்ப எனக்கு வீட்டில் போடப் பட்டு இருந்த கண்டிசனச் சொல்லனும் எந்த பொட்ட புள்ளயையும் பார்க்கக் கூடாது நல்ல புள்ளயா இருந்தாலும் கெட்டபுள்ளயா இருந்தாலும் பொட்ட புள்ளய பார்க்கக் கூடாது என்று பட்ட போட்டு அனுபிச்சாங்க..பார்த்தா கொண்டே போடுவேன் என்று சொன்ன காலம். ஆனா ஏகப்பட்ட பொண்னுங்க வருவாங்க பெங்காலி,மார்வாடி,குஜராத்தி,மலையாளி,ஆந்திரா...இங்கிருந்தெல்லாம்..ஆனா ஒன்னும் பன்னமுடியாது அம்மா அப்பா குறுக்க வந்திட்டே இருப்பாங்க...வாத்தியாருங்களே பொன்னுங்கள லவ் பன்னி கல்யாணம் பன்னிக்கிட்டாங்க. நடிகனானேன் அதுக்கப்புரம் 14 வருசம் கழிச்சு  ஓவியர் கோபுலு அவர்களை அப்ப சந்திச்சேன்...

இந்தியாவில் பீஷ்மர் பிதாமகர் மாதிரி ஓவியர் கோபுலு அவரை,(90 வயதை தாண்டிய மனிதர்) பார்க்கிறேன். நடிகன்னு என்ன அறிமுகப் படுத்திக்க எனக்கு அவமானமா இருந்தது நான் வரைஞ்ச ஓவியங்கள காந்திபடத்தையும்,மதுரை,தஞ்சாவூர் படத்தை அவருகிட்ட காட்டினேன். தஞ்சாவூர் படம் 8 மணிநேரம் ரோட்ல உட்கார்ந்து வரைஞ்ச படங்கள்னு சொன்னேன்.

யேசுநாதர் பிறப்பு படத்தை ஒரு நாளைக்கு 4 மணிநேரம் பத்துநாட்கள்ல வரைஞ்சேன்னு சொன்னேன். வாங்கி பார்த்திட்டு அப்படியே என் கைய தடவுனாரு,..வாட் எ ஒண்டர்புல் ஹாண்ட்ஸ்னு சொன்னாரு  படக்குன்னு என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.

"  ஏன் என்ன ஆச்சுன்னு " கேட்டாரு...சாகும் வரை பெயிண்டரா இருக்கனும்னு ஆசைப் பட்டு மெட்ராஸ் வந்தேன் விதி வசத்தால “நடிகனாயிட்டேன் அவமானமா இருக்குதுன்னு சொன்னேன்”

 அவர் சொன்னாரு ”யூ டேக்கன் எ ரைட் டெசிஸிசன் ” ஏன்னா இந்தியாவில ஓவியருக்கு மரியாதை கிடையாதுன்னாரு.  ஓவியன்னு சொல்லிட்டு வீட்டு வந்திருந்தீனா உள்ளயே விட்டு இருக்கமாட்டேன்..நீ வேறு துறையை தேர்ந்தெடுத்ததால காருல வந்திருக்கே..

ஓவியரா இருந்திருந்தா பெட்ரோல்  போட முடியாத சூழல் இருந்து இருக்கும்.  ஏன் நீ ஸ்கூட்டர் கூட வாங்கி இருக்க முடியாது, அப்பரம் எங்கே பெட்ரோல் போடுவேன்னாரு. அந்த வாழ்க்கை ப்ரமாதமா இருந்தது.

அப்ப தேவைகள் ரொம்ப குறைவு,  எவன் ஒருவனுக்கு தேவைகள் குறைவோ அவன் தான் நிறைந்த செல்வந்தன். இரண்டு வருசம் இந்தியா பூரா சுத்தி படம் வரையரதுக்கு 7500 ரூபா இப்ப முடியுமான்னு யோசிச்சு பாருங்க.

திருப்பதி கோயிலுக்கு மக்களோட மக்களா கோயிந்தா போட்டுட்டு ரோட்ல படுத்துப்பேன்... சாப்பிடுவதற்கு வாங்கிய மசால் பூரி வாங்கிட்டுப் போய் மலை மலையா சுத்திப்பார்த்து வரைஞ்சிட்டு இருப்பேன் வாங்கி வெச்சது , கெழங்கு கெட்டு போயிருக்கும் தூக்கி வீசிட்டு வெறும் பூரிய மட்டும் சாப்பிட்டுக்குவேன். இப்படியெல்லாம் ஓவியம் வரைஞ்சேன்.

இந்தியாவில் ஓவியனா பிறக்கனுமான்னு தோனும். ஏன் இந்தியாவிலே பிறக்கனுமானு தோனும்...இப்ப இருக்கற சூழ் நிலை அப்படி.

படத்தில் ஓவியர் ஜீவா, சிவகுமார் (tks to photos from artist Jeeva)

 "கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது

#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 2



தொடர்கிறேன்...


அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துகள் !!


நன்றி , கலாகுமரன்

Saturday, January 11, 2014

நடிகர் சிவகுமாரின் ஓவிய அனுபவம்

ஓவிய கலைஞன் தான் கண்ட காட்சியை ஓவியமாக்கும் போது அவன் கைக்கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன? குறிப்பாக மனித உருவங்களை வரையும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?

ஒன்னும் பெரிய விசயம் கிடையாது போட்டாகிராபிக் கண்ணு நமக்கு வேணும் பார்த்தவுனடே நாம என்ன பார்கிறமோ அத மனசில பதிஞ்சிருக்க வேனும், பதிவானது அப்படியே மேல போயி அப்படியே சுத்திட்டு இருக்கும் (தலையை தொட்டு காட்டுகிறார்)

 உதாரணமா இந்தியாவில 127 கோடி பேரு இருக்காங்கன்னு சொல்றோம் அத்தன பேரோட முகத்த போட்டோ எடுத்து இந்த ஹால்ல இருந்து ஏர்போர்ட் வரை மொத்தமா ஒட்டிவெச்சு பார்த்தோம்னா... எல்லாத்திலேயும் ரெண்டு கண்ணு,  மூக்கு, இரண்டு காது இருக்கும்.. இந்த முகங்கள்ள எந்த ஒரு பேஸ் கூட ஒரே மாதிரி இருக்காது. புருவங்கள்,மூக்கு தூவாரங்கள் இதில எதுவுமே ஒன்னுபோல இருக்காது. இது தான் இயற்கையோட அற்புதம்.

 இறைவனோட படைப்பு. அதுமட்டும் இல்ல ட்வின்சுன்னு சொல்றோம்.  ராமன் லச்சுமன்னு பேர் வைப்போம் தனியா பார்த்தா யார் ராமன் யாரு லட்சுமன்னு குழப்பமா இருக்கும். ரெண்டு பேரையும் நேரா நிக்க வைச்சு பார்த்தம்னா. இரண்டு பேர்த்துல சின்ன டிபரண்ட் இருக்கும், கலர் வித்தியாசம் இருக்கும், ஒருத்தன் ப்ரைட்டா இருப்பான் ஒருத்தன் டார்க்கா இருப்பான். முடில வித்யாசம் இருக்கும், ஹைட்ல சின்ன வேரியேசன் இருக்கும். புருவ முடில சின்ன சேஞ்சஸ் இருக்கும்,பேசும் போது தொண்டை சவுண்ட்ல வித்யாசம் இருக்கும்.

அதுக்கே நீங்க போகாதீங்க...ஸ்டெயிர்ட்டா எடுத்த உங்க போட்டோவுலயே பாஸ்போர்ட்லேர்ந்து  12 x 10 பெரிசா எடுத்துக்கிட்டு நெற்றியில் இருந்து ஒரு நேர் கோடு போட்ட மாதிரி கட் பன்னி எடுத்து வெச்சு பார்த்தம்னா ..சூரியாவுக்கு கூட வலது கன்னு பெரிசா இடது கண்ணு சின்னதா தெரியும், அதேமாதிரி ரஜினிக்கு; மூக்கு தூவாங்கள், உதடுகள் இப்படி பகுதிக்கு பகுதியே வித்தியாசம் இருக்கும். எம்ஜியார்,சிவாஜிக்கு வலது தாடை பெருசா இருக்கும் (யாராவது கவனிச்சிருக்கீங்களா), எந்த தாடையை அதிகமா பயன் படுதரமோ அது வலிமை மிகுந்து பெரிசாயிரும். நூத்தில 85 பேருக்கு இப்படித்தான் இருக்கும்.  ஜெயலலிதா, நாகேஷ், நான் மூனுபேருக்கும் இடது தாடை பெரிசா தெரியும்.  இந்த மாதிரி உலகத்திலேயே சின்ன வயசிலேயே மோசமான தோற்றம் உடையவங்க இரண்டுபேரு ஒருத்தர் மஹாத்மா காந்தி இன்னொருத்தர் லிங்கன் சந்தேகம் இருந்தா ஜீவா கிட்ட கேட்டு பாருங்க (ஓவியர் ஜீவா) காது எலி காது மாதிரி பெரிசா இருக்கும், நெஞ்சு குறுகலா இருக்கும் (கிண்டல் பன்றதா எடுத்துக்காதீங்க... பெயின் டரா சொல்றேன்) ரெண்டு கன்ன எழும்பும் துருத்திட்டு இருக்கும் அப்படியான முகம் வாழ்க்கையில் மேம் படும் போது அவங்க முகம் அழகாகிடுது. நான் வரைஞ்ச காந்தி போர்ட்ரேய்ட் பாருங்க தெரியும்.

லிங்கன் போர்ட்ராய்ட் பார்த்தீங்கன்னா தெரியும் கன்னம் எல்லாம் ஒடிங்கிப் போய் இருக்கும் தாடி வெச்சு இருப்பாரு, கண்ணு உள்ள போன கண்ணு நீண்ட கைகள்...

அழகான முகம்னா நேரு, இந்திரா காந்தி தீட்சயமான கண்கள், நீளமான மூக்கு,  நேரா போட்டோ எடுத்தா மூக்கின் தூவாரம் தெரிய கூடாது இரண்டு கண்களும் ஒரே அளவாக,இடைவெளி (டிவைடர் வெச்சு மெஸர் பன்னீங்கன்னா) சமமா இருக்கனும், நெற்றி,மூக்கு, உதடு தாடை இவைகளுக்கு இடையேயான இடைவெளி சரிசமமா இருந்தா அந்த முகம் அழகானதா தெரியும். இதுதான் சாமுத்ரிகா லட்சனம். கோவில் சிலைகள் இதன் அடிப்படையில் கண்டிப்பா இருக்கும், இந்த அளவுகள் கரெக்டா இருக்கனும்.  காது புறப்பட வேண்டிய இடம் கண்ணுலிருந்து நேரா கோடு போட்டீங்கன்ன கொஞ்சம் மேலிருந்து காதுமடல் ஆரம்பிக்கும். அதுக்கு மேல வரஞ்சீங்கன்ன அது மொராஜி தேசாய் காது( பெரிசா இருக்கும்).  அதே மாதிரி பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கும் போது, மேல் உதடு கொஞ்சம் வெளியேயும் கீழ் உதடு கொஞ்சம் உள்ளேயும் இருக்கனும், உள்டாவும் இருக்கும், சந்தரகலான்னு ஒரு நடிகை இருந்தாங்க அவங்களுக்கு மேல் உதடு சின்னதாகவும் கீழ் உதடு பெரிசாகவும் இருக்கும், இது இயற்கையோடு படைப்பு.

ஹூயூமன் பாடில..உடம்புடைய அளவு பார்த்தீங்கன்னா, பத்மினி, வைஜெயந்திமாலா இருவரும் அழகானவங்க ஆனா சிலைபோன்ற அழகு உடையவங்க வைஜெயந்திமாலா. ஒரே உயரம் உடைய கணவன் மனைவி ரெண்டு பேர்ல தனியா பார்த்தா அம்மா கொஞ்சம் உயரமா இருப்பாங்க போலிருக்கேம்பாங்க இதுக்கு காரணம் உடை. ஆண்களுக்கு முதுகெலும்பு நீளம் ஜாஸ்தி, பெண்களுக்கு குறைவு, சிம்பிள் தியரி யாருக்கு கால் நீளமா இருக்கோ அவங்க உயரமா தெரிவாங்க.  இந்த மாதிரி உருவ அமைப்பை ஸ்டடிபன்னிதான் வரையனும்.


இயற்கை காட்சிகளை வரையும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?

கொடைக்கானல் போரீங்க எந்த பகுதியை வரையனும் தெரியாது.. அப்படியே பார்த்துட்டு போனீங்கன்னா குறிப்பிட்ட பகுதி அழகா இருக்கும் வரையலாம்னு உங்களுக்கே ஐடியா கிடைக்கும். அடிப்படை விசயம் என்னன்னா நாலு முனைப் பகுதில எந்த பகுதியும் சொட்டையா இருக்க கூடாது.  காட்சியோட அமைப்பு உங்க மனசுல பதிஞ்சு வெச்சுகனும். திருவண்ணாமலை கோயில வரையப் போயிருந்தப்ப ஒரு வீட்ல பர்மிசன் வாங்கி வரைய ஆரம்பிச்சேன்.  வரைய ஆரம்பிச்ச உடனே மேகங்கள வரைந்தேன் ஏன்னா மேகம் 3 நிமிசத்தில மறைஞ்சி போயிரும்... அதுக்கப்புரம் கோவில் மலைகள வரைஞ்சேன். இதுமாதிரி ஸ்பாட்ல முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் இருக்கும். அதே மாதிரி தஞ்சாவூர் கோவில் வரைந்தப்ப காலை 6 மணிக்கு ஆரம்பிச்சு மத்தியானம் 2.30 மணிவரைக்கும் சிங்கில் சிட்டிங்ல 8 மணிநேரம் வரைஞ்சேன்.  காலைல ஆறரைமணி..ஏழு..ஏழரைமணில சூரிய உதிச்சு கோயில் மேல அடிக்கும் உச்சி நேரத்துக்கப்புரம் ஷேடோ விழ ஆரம்பிச்சுடும்

மூனுமணிங்கும் போது கருப்பா விழ ஆரம்பிச்சுடும்...அதுக்கப்புரம் வரையறது கஷ்டம். 6 மணிக்கு வரையும் போதே பேசிக்கல் லைட் அண்ட் ஷேடிங் வரைஞ்சிடனும்..மத்த டீட்டெய்ல்கள அப்புரம் வரையலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும் இதுபோல வே வரைஞ்சேன். 10 மணிநேரம் ஆச்சு.  திருப்பதி கோயில் வரையும் போது பாதில மழை வந்திடுச்சு. ஷேடிங் ஞாபகம் வெச்சு வரைய வேண்டியதாப் போச்சு. இந்த மாதிரி லேண்ட் ஸ்கேப் வரையும் போது சிக்கல்கள் இருக்கு.

ஓவியர் நடிகரான போது சந்தித்த சங்கடங்கள் என்னென்ன?

அவற்றை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்.

ஓவியர் வாழ்நாள் பூரா பேச வேண்டியதில்ல கை பேசுதில்ல. நடிகனுக்கு வேற வழி இல்ல பேசியே ஆகனும். 1950 - 60 கள்ள சினிமாவில் நல்ல தமிழ் இருந்தது அதை மறுக்க முடியாது. 45 பைசா குடுத்தாலே படம் பார்க்க முடிந்தது, நடிகனுக்கு அடிப்படை விசயம் உச்சரிப்பு, மேடை பயம் இருக்கக் கூடாது, நினைவாற்றல் இருக்கனும். சிவாஜி எம்ஜி ஆர் நாடகங்கள்ல நடிச்சு வந்தவங்க அவங்களோட நடிக்கனும்னா நாடகத்தில நடிச்சு பயிற்சியும் அவசியமா இருந்தது. 7 ஆண்டுகள் நாடகத்தில் நடித்தேன். கந்தனென்பார், கடம்பனென்பார்,கார்திகேயனென்பார்,குகனென்பார்,சண்முகனென்பார் உம்மையும் படைத்தபின் சூரனையும் வதைத்த திண் தோள்கலெங்கே...ன்னு வசனம் பேசும் போது வீட்டுக்கே ஓடிப் போயரலாமான்னு தோனும். (கட்டபொம்மன் முழுநீள வசனம் பேசி காட்டுகிறார்...கிஸ்தி திறை வரி வட்டி வேடிக்கை வானம் பொழிகிறது பூமி விழைகிறது,... யாரிடம் கேட்கிறாய் வரி மானம் கெட்டவனே... ) நல்ல புள்ளயா இருந்தாலும், கெட்ட புள்ளயா இருந்தாலும் பொட்ட புள்ளய பார்க்கக்கூடாது என்கிற கண்டிசன்லயே சினிமாவுக்கு வந்தேன்.

"கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது

#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 1



தொடர்கிறேன்...

நன்றி , கலாகுமரன்

Wednesday, January 8, 2014

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

"ஙப் போல் வளை என்றால் ஙே என்று முழிப்பது ஏன்?"  என்ற பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவை வாசிக்க கேட்டு கொள்கிறேன்.


ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.


பண்டைய தமிழ் எழுத்து "ங" வும் பல்லவர் காலத்து 
கொடியையும் விளக்கும் படம்






இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை

Thursday, January 2, 2014

ஓடாதிருக்கும் எஸ்கலேட்டரில் ஏற தடுமாறுவது ஏன்?

வெகு ஜனங்கள் நின்று போய்விடும் நகரும் படிகட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏறுவதற்கு தடுமாறுவதை பார்க்கிறோம்.

அதே போல புதிதாக அதில் ஏறுவதற்கு பெண்கள் உள்ளூர பயப் படவும் செய்கிறார்கள். (முக்கியமாக சேலை அணிந்திருப்பவர்கள்). குழந்தைகள் இதை பழகிக் கொண்டால் அதில் போய் வருவதையே கொண்டாட்டமாக உணர்கிறார்கள்.

நாலஞ்சு தடவை அதில் ஏறி இறங்கி பழகி விட்டால் மூளை அதன் இயக்கத்தை அனுமானித்து விடுகிறது பதிவும் செய்து வைக்கிறது.

சரி ஓடிக் கொண்டு இருக்கும் எஸ்கலேட்டர் நின்றிருக்கிறது அதில் மேலே ஏற முயற்சிக்கிறீர்கள் தடுமாற்றம் ஏற்படுகிறது ஏன்?

காதுக்குள் இருக்கும் நுண்ணிய நரம்பு முடிச்சு எதிர் பாராத உடல் தகவமைப்பை மூளைக்கு உணர்த்தும் வேலையை செய்கிறது.  நின்றிருக்கும் எஸ்கலேட்டர் என்பதை அதில் ஏறி முடிக்கும் வரை பல தடவைகள் மூளை சூழ்நிலையை கால்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் உணர்த்திக்கொண்டே இருக்கும்.  (ஸ்டீல் படிகள், வடிவமைப்பு இப்படி). இதன் காரணமாகவே சாதாரணமாக படிகளில் ஏறுவதற்கும் நகரும் படியில் ஏறிச் செல்வதற்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதை உள்ளுணர்வு தடுமாற்றம் (ஆங்கிலத்தில் "Broken escalator phenomenon" ) என்று சொல்லலாம்.

இங்கிலாந்து இம்பீரியல் காலேஜில் 2004ல் இது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில் (ஓட ஓட நிறுத்தி) சுமார் 20 யோசனைகளுக்குப் பிறகே சாதாரணமாக மூளை இது இயங்காத "படி" நிற்காமல் நடக்கலாம் என்பதை உணர்த்துவதாக அறியப்பட்டது.

இந்த தடுமாற்றம் யாவருக்கும் பொதுவானதே.