Pages

Saturday, June 30, 2012

காதல் மைனாக்கள்...[ஓரு பக்க கதை ]



இரண்டு நாட்களாக வீட்டில் ஒரே இடி, மின்னல்...

வீட்டிலா...? திகைக்காதீர்கள் வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை அதைத்தான் இப்படி சொன்னேன்.

பிரச்சினை ஓயவில்லை...

ஏங்க உங்களால வர முடியுமா..? முடியாதா..? சொல்லுங்க...

நான் ஏதும் போசவில்லை...

உங்க ஆளுங்க விசேசம்னா..தட்டாம வந்தீங்க...

இல்ல அதப்பத்தி சொல்லல... வேல..

ஆமா பொல்லாத வேல எப்பப்ப...பாரு... க்..உ..
முகத்தை திருப்பிக் கொண்டாள்.

விசயம் இதுதான். அவளின் உறவினர் திருமண நிச்சய ஏற்பாடு...வரும் புதன் கிழமை...எனக்கு ஆடிட் வேலை ஆட்டத்தை சரி பண்ணனும். முன்பே முடித்துவிடலாம் என்றிருந்தேன்.

ஏங்க மறுபடி சொல்றேன் அப்புரம்..உங்க (..உங்க ஆளுங்க..)
எந்த விசேசத்துக்கும் என்ன கூப்பிடாதீங்க...ஆமா...

இப்படியே வாக்குவாதம் ஒன்றுகில்லாத பிரச்சினை பெரிதாகிக் கொண்டே சென்றது.

சாப்பிடும் தட்டை நங்..என வைக்கிறாள்...விக்கல் எடுத்தால் முகத்தை திருப்பி வைத்துக் கொள்கிறாள்.

இதைப் பார்த்த என்மகளும் அவளோடு ஒட்டிக்கொண்டாள்...

கூட்டணி இல்லாத கட்சி போல தனித்து விடப்பட்டேன்..

புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வரவில்லை...எப்பொழுது தூங்கினேன் தெரியவில்லை.

திறந்திருந்த ஜன்னல் வழியே ஊர் குருவிகளின் க்ரிச்..குரிச்..க்ரிச்..கீச்... கூச்சல் சப்தம்.

விடிந்த காலை நேரத்தின் வெளிச்சமும் சேர்ந்து என்னை எழுப்பியது.

மெல்ல எட்டிப் பார்தேன் ஜன்னலின் கீழேதான் சப்தம்.
நான் கண்ட காட்சி ஆச்சர்யமும் சற்று அதிர்ச்சியையும் கொடுத்தது.

ஒரு மைனா தரையில் மல்லாந்து கிடக்கிறது எழ முயற்சிக்கிறது.

அதை விடாமல் சினிமா வில்லனைப் போல் ஒரு காலால் மிதித்த படி இன்னொரு மைனா ஆக்ரோசமாக கொத்தி தாக்கிக் கொண்டிருந்தது.

வில்லனா...? கதாநாயகனா...?

அருகில் இன்னொரு மைனா இரு இறக்கைகளையும் விரித்தபடி தடுக்க முயற்சிக்கிறது. [ மே பீ கேர்ல் பேர்ட் ]

அதை சுற்றிலும் ஊர் குருவிகள் குதித்து குதித்து கத்தியபடி க்ரிச்...குரிச்..க்ரிச்..கீச்... இவையும் வேண்டாம் சண்டை என தடுக்க முயற்சிக்கின்றன.

சமையல் அறையில் இருந்த மனைவியை;  ஓசைப்படுத்தாமல் சைகைசெய்தபடியே அவளின் கையை பிடித்து அழைத்து வந்தேன்.

உஷ் ..உதட்டின் மேல் விரல் வைத்தபடி.. பார்க்க சைகை செய்தேன். என் காதின் அருகில் சன்னமாக " பாவங்க.." என்றாள்.

ஹேய்...  சட்டென அணைத்தும் பறந்தன.

கீழே கிடந்த மைனா சுதாரித்து எழுந்து பறந்தது.  வில்லன் மறுபடி தாக்கப் பறந்தது.  எல்லாம் ஜாகையை மாற்றிக் கொண்டன.

எனக்கு புரிந்துவிட்டது. இது பறவைகளின் காதல் சண்டை.

அதுவும் தன் காதலில் தோற்ற பறவை மற்றதை இப்படி பழி வாங்கப் புறப்படுமா?...எனக்கு ஆச்சர்யம் தான்.

இருக்கலாம்...பறவைகளுக்குள்ளும் நம்மளைப் போல் பல வித உணர்வுகள் இருக்கிறது இல்லையா..?

கோழிச்சண்டை பார்த்திருக்கிறேன் ஆனால் மைனாக்கள் சண்டை எனக்கு புதிது தான்.

காலையில் பேப்பர் வந்தது. படிக்க கண்ணாடி தேடினேன். டி.வி. விளம்பரத்தில் வருவதைப்போல் மணக்க மணக்க காஃபி கொண்டுவந்தாள்.

 " ம்..ம்.."  எடுத்துக்கங்க ஜாடை.

லீவு போட்டரேன்...நிச்சயத்திற்கு போலாம். சொல்லி விட்டு
நிமிர்ந்து பார்க்கிறேன். அவள் முகம் மலர்ச்சியில் ;

...மைனாக்களின் சண்டை நம்ம சண்டைக்கு எண்ட் கார்ட் போட்டுருச்சே..!

-------------------------------------------------------------------------------------------------------
இக்கதை புரட்சி FM (இணைய வானொலி)யில் ஒலிபரப்பப்பட்டது.  ஒலி கீற்றினைக் கேட்க தரவிரக்க லிங்க் ;

-------------------------------------------------------------------------------------------------------
இக்கதை அதீதம் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  [ திரு. வாமணன், திரு.எல்.கே அவர்களுக்கு எனது நன்றி ] 
லிங்க் ;  http://www.atheetham.com/?p=1514


Monday, June 25, 2012

[ RMS Queen Mary ] கப்பலில் ஆவிகள் உலவும் திகில் மர்மம்...




"RMS குயின் மேரி" இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட பிரம்மாண்ட கப்பல்.  இது இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹோட்டல்.
இந்த கப்பலில் இரவு தங்கும் சூயுட்ஸ்கள்(365) , டைனிங் ஹால்கள், பங்விட் [Banquet ] எனப்படும் இரவு நினைவு பார்டிகள், வரலாற்று தேடல்களுக்கான சுற்றுலா, எல்லவற்றிற்கும் மேலாக ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களை பெற அழைப்பு விடுக்கிறார்கள். இந்த ஹோட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மிலியன் பேர் வந்து செல்கிறார்கள்.

ஹவுண்டேட் பகுதியாக சொல்லப்படுகிற இந்த பிரம்மாண்ட கப்பல் குறித்த தகவல்களை காண்போம்.

ஜான் ப்ரெளண் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் பொருளாதார நெருக்கடியினால் முக்கால் பாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில்  1931 ல் இருந்தது,  பின்னர் இந்த நிறுவனம் "வைட் ஸ்டார் லைன்" கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்.

இந்த வைட் ஸ்டார் லைன் தான் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம்.  அதனுடைய சாயல்கள் இந்த கப்பலில் பார்க்கலாம்.
அதை விடவும் இது பெரியது. இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி,  உயரம் 181 அடி புகைகூண்டு வரை,எடை 81,237 டண்கள், இதன் எஞ்சின் 1,60,000 குதிரைதிறன் கொண்டது . 3000 பேர் சொகுசாக பயணிக்கலாம். இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் " கிரே கோஸ்ட்...! "  
 
மே 27, 1936 ல் வெள்ளோட்டத்தை துவக்கி சிறப்பித்தவர்கள் எட்டாம் எட்வர்ட்  அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத்,டச்சு பிரபுக்கள். 1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்து செப்டம்பர் 19, 1967 ல் ஓட்டத்தை நிறுத்தியது அதாவது 31 வருடங்கள் உழைத்தது.இதனுடைய பெரிய உருவம் காரணமாக பனாம கால்வாய் வழியாக செல்ல முடியவில்லை.

அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் [ஸ்ப்ரிட்] குறித்த ஆராய்சியாளர் பீட்டர் ஜேம்ஸ். 1991 இல் இருந்து இக்கப்பலில் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். 

அவர் இப்படி கூறுகிறார் 

" எனது ஆராய்சியின் படி குயின் மேரி அதித பேய்கள் நடமாட்டப் பகுதியாக கருதுகிறேன். பேய் குறித்த ஆராய்சிகள் உலகின் பல பகுதிகளில் மேற்கொண்டேன். இந்த கப்பலில் 600 ஆவிகள் ஏக்டிவாக இருக்கு, அநேக துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 16000 துருப்புகளை ஏற்றி இறக்கி உள்ளது. இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அச்சமயத்தில் ஒருமணியில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் U.S கூட்டணி துருப்புகள் பிடித்த ஜெர்மன் மற்றும் இதாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கொடுமைக்கு பயந்து அநேகர் தற்கொலை செய்து கொண்டனர்.  சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். [ எண்ணிக்கை தெரியவில்லை...] அந்த கால கட்டங்களில் சர்வீஸ் ராணுவத்தின் கையில் இருந்திருக்கிறது.

இதன் " குராகோ " எனும் பாதுகாப்பு [எஸ்கார்டு போட்டுகள்] கப்பல்களின் மேல் மோதி 300 பேர் வரை அப்போர் சமயத்தில் மூழ்கி இறந்தனர்.


இக்கப்பலில் விநோத சப்தங்களும்..காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்களும் ஓலங்களும் சில பகுதிகளில் கேட்கிறது.

இதில் இருந்த நீச்சல் குளத்தில் பல பேர் செத்துள்ளார்கள்.  13 நம்பர் அறை காற்று புகாவண்ணம் அடைக்கப்பட்டுள்ளது.

"கப்பலின் மையப்பகுதியில் முதல் தர நீச்சல் குளத்தின் அருகில் 4 - 5 வயதுள்ள சிறுமி தன்னோடு பேசியதாகவும்; கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அழைத்ததாகவும்; இச்சிறுமியின் பெயர் ஜாக்கி எனவும்; சில சமயங்களில் இவளைத் தேடி சாரா எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் வந்து சென்றதாகவும் கூறுகிறார்.  அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது; மேற்படி இருவரும் அந்த நீச்சல் குளத்தில் முழ்கி இறந்தவர்கள்...கப்பலின் கேப்டன் ஸ்டார்க் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும்.. ஸ்பிரிட் சிறுமி ஜாக்கி நகர்த்திய பொம்மை பற்றிய வீடியோ டேப் பதிவு உள்ளதாகவும் ; இச்சிறுமியை தான் மட்டுமல்ல நூறுபேர் ஒரேசமயத்தில் பார்த்துள்ள சாட்சி இருக்கிறது என்கிறார்...சாரா நகத்தால் கையில் பிராண்டியது;...
இப்படி பல தகவல்களை பீட்டர் ஜேம்ஸ் அடுக்குகிறார்.

ரூபின் வாக்னர் எனும் பெண்மணி, இதன் மார்கெட்டிங் கம்யூனிகேசன் டைரக்டர்.
" ஒரு கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு, விமான பயண அதிகரிப்பு, அதிகரித்த செலவு இவை காரணமாக இக்கப்பல் பயணம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்.  ஐரோப்பா மற்றும் யூனைடேட் மாகாணத்திற்கிடையே இக்கப்பல் இயங்கிவந்ததாகவும் இதன் பெரிய உருவம் காரணமாக பனாமா கால்வாய் கடல் பகுதியில் நுழையாமல் போனதலும் இதன் இயக்கம் நிறுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கிறார். அவருக்கு ஸ்ப்ரிட் அணுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆனால் சக ஊழியர்களுக்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் தன்னோடு பகிர்ந்து கொள்ளப்ப்பட்ட தாகவும் சொல்கிறார்."  

அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடும் கதவுகள்;  பழங்கால உடையணிந்த உருவங்களின் நடமாட்டம்;  கப்பலின் வெவ்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள்; கை; கால்கள்; உருவங்கள் தோன்றி மறைதல்;...என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.

முனுமுனுக்கும் குரல்கள், அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட சப்தங்கள்..; சர்சில் சூயூட் பகுதியில் ரூமின் சுவரில் அவரின் நேம் போர்டு தோன்றி மறந்த நிகழ்வு;  [கப்பலில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது]  சுருட்டு புகை..; வாசனை நடுநிசி மர்மங்கள்; சில்லிட்ட உணர்வு..; சில ரூம்களில் கட்டில் நகர்வு...சுவரினுள்ளிருந்து வெளியே தோன்றி மறைந்த உருவங்கள்.., அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரிந்து அணையும் மர்மம்;  

இவையெல்லாம் கேட்பதற்கு ஏதோ சினிமா காட்சிகள் போலவே இருக்கிறது. ஆனால் உண்மை என்கிறார்கள் சென்று அனுபவப்பட்டவர்கள்.

இக்கப்பல் குறித்த சம்பவங்கள் உண்மையா..? 
என்னை பொருத்த வரை இவையெல்லாம் அந்த ஹோட்டலை நடத்த ஏற்படுத்தப்பட்ட வியாபார தந்திரங்களாக கூட இருக்கலாம்.  நடந்த சம்பவங்களை கதையாக கேட்டு அங்கு சென்றவர்களுக்கு பிரம்மையாகவும் இருக்கலாம்.  [ஒரு நடை நேரில் சென்று பார்த்து உறுதிபடுத்த நம்மால்  முடியுமா..? கேட்டுக்க... வேண்டியது தான். ]

பி.கு : ஸ்பிரிட் உள்ள இரு புகைப்படங்கள் கப்பலில் எடுக்கப்பட்டவை அல்ல அது... வேறு..

Saturday, June 16, 2012

துணுக்குகள் பிளஸ் துணுக்குகள்...








கி.பி 6 ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளிலும் பல பிரபலங்கள் பிறந்து வாழ்ந்தார்கள்.   சீனாவில் லாவோட்சே, கன்பூஷியஸ் ; 
இந்தியாவில் மகாவீரர், புத்தர்; 
யூதர்களில் ஜெர்மையா, எசக்சியல் ; 
பாபிலோனில் நேபுசாத்நேட்சர் ; 
ஈரானில் சைரஸ் ; கிரீஸ் தேல்ஸ், பிதகோரஸ் ; இப்படி பல பெரியவர்கள் தோன்றிய நூற்றாண்டு அது.

புத்தரின் போதனைகள் அவரது மறைவிற்கு பின் 200 வருடங்களுக்கு பிறகே ஆவணப்படுத்தப்பட்டன.  இவை " மாகதி " எனும் மொழியில் இருந்தது. இந்த மொழியே பின்னர் " பாலி " மொழி எனப்பட்டது.  பாலி என்றால் பாதுகாக்கும் எனப் பொருள்.  அதனாலே புத்தரின் மத நூல்கள் பாலி எனவே அழைக்கப் பட்டது.

இப்போது அந்த மொழி பிரயோகத்திலேயே புத்த சமய கிரியைகள் தொடர்கிறது.   இம் மதத்தவர் கோயில்கள் சைத்தியம் எனப் பெயர்.  புத்த பிக்குகள் வசிக்கும் இடம் விகாரங்கள் . அப்போது காஞ்சியை போன்று கட்டிடங்களாக சிலவே இருந்தன. பெரும்பாலும் குகைக் கோயில்கள் அஜந்தா எல்லோரா போன்று [ ஏழாம் அறிவு திரைப்படத்தில் புத்த மதம் மற்றும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பு சிறப்பாக காண்பிக்கப்பட்டதை உங்கள் ஞாபகத்தில் ரிவைண்ட் செய்து கொள்ளலாம் ..! ]

பிதகோரஸ், பிளாட்டோ இவர்கள் இந்திய ஞானிகளின் உபதேசங்களை கிரகித்து தங்கள் தத்துவங்களை எழுதினார்கள்.  நமது தத்துவங்களே... கிரேக்க தத்துவமானது. இதற்கு வரலாற்று சான்றுகளை மேற்கோல் காட்டப்படுகிறது.











தேவநகரி என்ற எழுத்து வடிவம் இந்திய லிபியான பிராமி எழுத்தின் திருந்திய வடிவம்.  இந்த பிராமி முதலில் சமஸ்கிருதத்திற்கும் பின்னர் ப்ராகிருத மொழிக்கும் பொதுவான எழுத்து வடிவமாக இருந்தது.  ஒலி வடிவங்கள் சுத்தமாக பிரதிபளிக்ககூடியது.  கி.மு 5 ஆம் நூற்றாண்டில் நல்ல வளர்ச்சி கொண்டிருந்தது.  அசோகர் கல்வெட்டுகள் ' பிராமி எழுத்துக்கள் தான்.

பைபிள் என்ற வார்த்தை கிரேக்க சொல்லான "பிப்லாஸ்" என்ற வார்த்தையில் இருந்து உதித்தது.  பைபிள் ஒரு தனி நூல் அல்ல 64 புத்தகங்களின் தொகுப்பு. கிறித்துவின் காலத்திற்கு முற்பட்டது பழைய ஏற்பாடு இது எபிரேபிய மொழியில் எழுதப்பட்டது. கிறித்துவின் காலத்திற்கு பின் ஏற்பட்டது புதிய ஏற்பாடு இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

பகோடா [ இங்கு மொறு மொறு தின்பண்டம் அல்ல ] கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வெளியிட்ட நாணயம். மேற்கு கரைப்பகுதிக்கு போர்துக்கீசியர் வந்த போது பகவதா என்ற நாணயம் புழக்கத்தில் இருந்தது அவர்கள் வாயில் வெளிப்பட்ட வார்த்தை பகோடா... இதில் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது.

Wednesday, June 13, 2012

ஏமாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளும் சில தீர்வுகளும்...!



ஏமாற்றம் என்று சொல்லும் போதே,  "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறேதே, ஏமாறாதே ....." என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிகள் உங்கள் மனதில் ஓடுவதை தவிர்க்க முடியாது.

ஏமாற்ற உணர்வு எப்போது நம்மில் தூண்டப்படுகிறது ? ஆம் குழந்தைப் பருவத்தில்.  ஒரு குழந்தையின் நடவடிக்கையை கட்டுப்படுத்துகிறோம் அது நல்லதற்கா என்ற காரண காரியங்களை அக்குழந்தை ஆராய்வதில்லை.  ஆனால் நாம் அதன் மீது ஆதிக்கம் செலுத்துவது மட்டுமே அதற்குப் புரிகிறது. அதற்கு கட்டுபடுவதில்லை எதிர் விளைவை நம்மிடம் காட்டுகிறது.  ஆனால் அதன் உள்ளத்தில் ஏமாற்ற உணர்வு பதிக்கப்படுகிறது.  

இதனால் நாம் அதற்கு கற்பிக்கும் நல்ல பழக்கங்கள் கூட எதிர் விளைவையே ஏற்படுத்தி பிடிவாத குணத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்துகிறது.

இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இந்த பிடிவாத குணத்தை காணலாம்.

ஆனால் அன்பு குழந்தைகளை கட்டுப்படுத்துகிறது ஒரு புரிதலை எற்படுத்துகிறது.

இதே போல் வயது வந்த இளைஞனை குழந்தை போல நடத்துவது அது எவ்விதமான நல்லதாக இருந்தாலும் அவர்களிடம் ஏமாற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏமாற்றம் என்னவெல்லாம் சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தவறான வழியில் நடத்தல், பள்ளிப் படிப்பில் ஏற்படும் தோல்வி, இளமையில்  தான் தோன்றி தனம், மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கை, வியாபார தொல்லை, விரும்பத்தகாத மனித நடவடிக்கை, சிறுபான்மையர் மீதான இன வெறி, தொழிலாளர் போராட்டம், கலவரங்கள், புரட்சிகள், போர்கள் ஆகியவை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் விரும்புவதை செய்ய என்னை அனுமதிக்காத போது ஏமாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக ஆக்கிரமிப்பு உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த போக்கு தவறானது.  எல்லா சந்தர்பங்களிலுமா என்று சொன்னால் இல்லை என்றே சொல்லலாம்.

ஏமாற்றத்தில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி ?

முதலில் ஏமாற்றதை நீங்களே ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.  தேவையற்ற கட்டுப்பாடுகளை பிறர் மீது செலுத்தாமல் இருத்தல், கோபதாபங்களை பொருத்துக் கொள்ளல்.

தேவைக்கதிகமாக ஒரு நபரையோ குழுவையோ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலாதீர்கள்.

மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.

நியாயமான இலட்சியத்தை நோக்கி அவர்கள் செல்வதை தடுக்காதீர்கள்.

மற்றவரோடு முரண்பட்டு விவாதம் செய்வதை தவிர்க்கலாம்.

மற்றவர்களை தொல்லைக் குள்ளாக்காதீர்கள்.

உங்கள் எண்ணங்களை பிறர் மீது திணிக்காதீர்கள்.

உங்கள் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரி என்று அவர்கள் எண்ணுகிற சுழ்நிலையை ஏற்படுத்துங்கள்.

மற்றவர்களை குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள். புகழை குறைக்க முயலாதீர்கள்.  ஏனெனில் ஒவ்வொருவரும் தான் பாராட்டப் பட வேண்டும். மற்றவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைக்கவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள்.

ஏமாற்றத்தை அப்புரப்படுத்துங்கள் இது பிறர் மீதான உங்கள் ஆக்கிரமிப்பை தடுக்கும்.

இறுதியாக ஏமாற்ற உணர்வை நீக்குவது ரொம்ப சுலபம் மற்றவர்களை பாராட்டி விடுங்கள்.

ஆழ்மனதின் ஆக்கிரமிப்பு உணர்ச்சியை கட்டுப்படுத்தினாலே உங்களின் ஏமாற்றத்தை இல்லாமல் செய்துவிடலாம்.

Monday, June 11, 2012

மரங்கள் மற்றும் பறவைகளை காக்கும் கோவைபதிவர்களின் முயற்சி..!


கோவையின் நகரின் சுற்றுப்புரங்களில் மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என கோவையின் அனைத்து முக்கியப் பகுதிகளும் மரங்கள் இல்லாமல் போய்விட்டது.   சீசன் மழையும் பெய்யவா..? என யோசிக்கிறது.

வாகனங்களின் நச்சு புகையை இந்த மரங்கள் வடிகட்டி சுத்தப் படுத்தி வந்ததை மறுக்க இயலுமா...? மரங்களை வெட்ட ஆணையிட்டவர்களால்..

வாகனங்கள் எண்ணிக்கை பெருமளவு பெருகிவிட்ட சுழ்நிலையில் சாலைகளை நவீனப்படுத்தப் படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே... ஆனால் வெப்பத்தின் தாக்கம் மற்றும் நச்சு புகையின் அளவை குறைக்க பெரும் பங்கு வகிக்கும் மரங்களை மறந்து விடுவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்..?..!

மரங்களை வெட்ட தடுப்பவர்களுக்கு தடை போட்டு வெட்டி முடித்த நகராட்சி மரங்களை திரும்ப சாலை ஓரங்களில் நட முயற்சி செய்யுமா..?  தனியார் இடங்களில் மரக்கன்று களை நட விரைந்து நடவடிக்கை எடுக்குமா ..? சந்தேகமே.

பறவைகள் மரங்களில் உள்ள பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்தி வந்தன.( சிட்டு)  நூற்று கணக்கான சிறிய பறவை இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பறவைகளுக்கு நாம் உணவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றின் வாழ்வாதாரமான மரங்களை வெட்டுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

தேவையற்ற மரங்களை வெட்டுங்கள்..ஆனால் அதே சமயம் தனியார் நிருவனங்கள், வீடுகளில் மரம் வளர்க்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

எஞ்சிய பறவைகள் மொபைல் டவர்களிலும், உயர் மின் கோபுரங்களிலும் தஞ்சம் அடைய வேண்டிய சூழ்நிலையை மனிதன் ஏற்படுத்திவிட்டான்.

கோவை வருபவர்கள் ஊருக்கே ஏசி போட்ட மாதிரி இருக்கே...என்ற பேச்சு பழங்கதையாகி விட்டது.

பறவைகளின் சப்தங்களை கேட்டு வாழும் மனிதன் வாகனங்களின் இரைச்சலை மட்டுமே.. கேட்டு வாழ்பவன் அவன் மனநிலை எப்படி இருக்கும் அதனால் ஏற்படும் குடும்ப நிலை பாதிப்பு இவைகளை யோசிக்க வேண்டிய கருத்து.

பேருர் செல்பவர்கள் ரோட்டின் ஓரத்தில் உங்களை வரவேற்கும் பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கல கலப்பு ஒலியை காலை மற்றும் மாலை நேரங்களில் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கலாம்...உணரலாம்.

கோவை ப்ளாக்கர் குழுமம் கோவை வலைப்பதிவர்கள் பங்கேற்ற தனது முதல் அறிமுக கூட்டத்தை 10.6.2012 அன்று நடத்தியது( கோவை காந்திபுரம் லால்குடி ஹால்)

முதல் கட்டமாக 100 மரகன்றுகளை நேசம் சார்பாகவும், கோவை வலைப்பதிவர்கள் சார்பாகவும் வழங்கப்பட்டது.

பெற்றுக்கொண்ட இயற்கை ஆர்வலர் திரு.யோகநாதன் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை இது போன்ற பரிசு அதைவிட மேலாக கருதுவதாகவும்...வாங்கிய காகித விருதுகள் எலிகள் நாசம் செய்து விட்டதாகவும்..குறிப்பிட்டார். மரகன்றுகளை பாசத்துடன் குழந்தையை வாரி அணைப்பது போல அன்பாக பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியான தருனம். (புகைப்பட உதவி வீடு.சுரேஸ்குமார்)


தமது சிந்தனை செயல் மூலம் கோவை பதிவர்களை ஒருங்கிணைக்கும் சங்கவி, சம்பத் மற்றும் உறுதுணையாயிருக்கும் அணைத்து பதிவர்கள், சமூக ஆர்வலர் அணைவருக்கும் இப்பாராட்டு உரித்தாகட்டும்.