Pages

Wednesday, July 4, 2012

[Nazca Lines] அழியாத கோட்டுருவங்களும்...அழிந்துபோன நாஸ்க்கா இனமும்...


[மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது. இயற்கை வளங்களை சுயநலத்திற்காக சுரண்டுவது. ஆறுகளை குப்பை மேடாக்குவது. 
நம் நிலமும் இதுபோல நீரில்லாத பாலைகளாக மாறாமல் காக்கப்படவேண்டும்.   இக் கட்டுரை...ஒரு சிறு சிந்தனை துளி ] 









" நாஸ்க்கா " பெரு நிலப்பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி இனத்தவர்கள்.  
"பெரு"  தென் அமெரிக்காவின் மேற்கு கரையோர நாடு.  
இவர்களை இகா வம்சா வழியினர் எனவும் சொல்கிறார்கள். 

நாஸ்கா எனும் நதி பெருவில் கொச கொச வென்று மேற்கிலிருந்து கிழக்காக பாயும் நதிக்கூட்டம் என்று சொல்லலாம்.  இந்த நதிகள் மற்ற நதிகளில் இருந்து வித்தியாசமானது தீடீரென்று நிலத்தினுள் சென்றுவிடும் இன்னோர் இடத்தில் நிலத்தில் இருந்து வெளியில் புறப்பட்டு செல்லும் விநோதம் மிக்கது.  கற்பனை செய்து பாருங்கள் நிரந்தரமான நதியல்ல பல இடங்களில் புற்றீசல் போல புறப்பட்டு மறையும்.   இந்த பெரும் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இனமே நாஸ்க்கா என அழைக்கப்படுகிறது.  


இவர்களின் காலம் 100 AD லிருந்து 750 AD அதாவது இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன் இருந்த இனம் என சொல்லலாம்.


ஒரு நாகரீகம் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து ஓரளவிற்கு மதிப்பிட்டுவிடலாம்.






இவர்கள் உருவாக்கிய செராமிக் கைவினைப்பொருட்கள் மிக அழகானது மட்டுமல்ல தொழிற்சிறப்பு வாய்ந்ததாகவும், துணி வகைகள் தரமிக்கதாகவும் அகழ்வாராய்சியினர் மதிப்பிடுகின்றனர்.




"ப்யூகியோஸ் " என்ற நிலத்தடி நீர் ஊற்றுக்களை அமைத்திருந்தனர்.  நம்மூர் கிணறு போல ஆனால் சுழற்படியில் கீழே இறங்கி செல்லவேண்டும். இது இன்றும் செயல் பாட்டில் இருக்கிறது.  


"ப்ரோசோபிஸ் பாலிடா "  எனும் ஒருவகை மரங்கள் தான் பஞ்சு உற்பத்திக்கும் நிலத்தின் உறுதி தன்மைக்கும் காரணாமாயிருந்தது.  ஒரு கட்டத்தில் இந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன.  இதனால் தீடீர் வெள்ளப் பெருக்கினால் இந்த இனத்தின் ஒரு பகுதியினர் அழிந்து போயிருக்கலாம்.


மனிதன் இயற்கை வளங்களை சுரண்டுவதும் சீரழிப்பதன் விளைவு என்னாகும் ?  ... ஆம், ஒரு கால கட்டத்தில் அற்புதமான நிலப்பகுதி அற்பமான நிலப்பகுதியாக மாறியது.  


அது ஒரு வறண்ட பூமியாக சொற்பமான தண்ணீருடன் ஏறக்குறைய பாலைவனப் பூமியாக போய்விட்டது. ஆனாலும் எஞ்சிய இந்த இனம் தொடர்ந்து பல இடர்பாடுகளுடன் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.  


இவர்களின் தீவிர இயற்கை கடவுள் வழிபாடும் இந்த இனத்தின் அழிவுக்கு ஒரு காரணமாக சொல்கின்றனர்.  


அது என்ன தீவிர வழிபாடு ?...நரபலி தான்.   
குவியல் குவியலாக தலை வெட்டப்பட்ட மண்டை ஓடுகள் அகழ்வாராய்சியினருக்கு கிடைத்தன.   அதிலும் சில மண்டை ஓடுகள் நடு நெற்றியில் துளையிடப்பட்டு கிடந்தன. [ நெற்றிப் பொட்டுக்கு பதில் ஓட்டை என கற்பனை செய்து கொள்ளுங்கள் ] எதற்கு ?  லாவகமாக கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம் அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளலாம். 


இவை ஒரு பரிசுப்பொருள் போல பாதுகாக்கப்பட்டிருந்தன.   பெரும்பாலான மண்டை ஓடுகளின் நடுப்பகுதிகள் இல்லை.  அவைகள் வண்ணம் தீட்டப்பட்ட அழகிய செறாமிக் கிண்ணங்களாக கிடைத்திருக்கின்றன [ பார்க்க படம் ]



நாஸ்க்கா கோடுகள்...


இன்றும் உயர் பாலைவனப்பகுதியாக இருக்கும் இந்த பகுதியில் நாஸ்க்கா இன மக்கள் உருவாக்கிவிட்டுப் போன பல உருவங்கள், வரைப்படங்கள் போன்ற கோடுகள் என 1500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இரைந்து கிடக்கின்றன. 










தரையில் இருந்து இவைகளைப் பார்த்தால் உருவங்கள் புலப்படுவதில்லை. ஒவ்வொரு படமும் 200 முதல் 500 அடி நீள அகலங்களில் விஸ்தாரமாக இருக்கின்றன. 


ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோட்டுப்படங்கள், திமிங்கிலம், மீன், சுருள் வட்டங்கள், சிட்டுக் குருவி,கருடன், கடற்பாசி, சிலந்தி, குரங்கு, மரம், பூ, உடும்பு, ஓணான், கொக்கு, கைகள்,ஏலியன்ஸ் இப்படி இதன் உருவங்கள் நீள்கின்றன.


படங்கள் தவிரவும், விமான ஓடு பாதை போல பட்ட பட்டையான கோடுகளும் கிழக்கு மேற்க்காக, தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.










இவையெல்லாம் எப்படி வரையப்பட்டன ?  
எதற்கு வரையப்பட்டன ? 
இத்துணை காலம் எப்படி அழியாமல் இருந்தன ? 
எப்போது அறியப்பட்டது ? 
இப்படி பல கேள்விகள் பார்க்கும் அணைவருக்கும் மனதில் தோன்றும்.


தரையில் ஒரு சிறிய படம் சுலபமாக வரைந்துவிடலாம் ஆனால் அதையே சங்கர் சார் திரைப்படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக வரைய வேண்டுமானால்...சரி வரைந்த படத்தை சரிபார்ப்பது ? இதன் முழு பரிமாணத்தையும் வானத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாம் எப்படி சாத்தியம் ?...ஆச்சர்யமாக இருக்கிறது.


இப்பகுதியின் நிலப்பரப்பு பழுப்பு சரளைக் கற்களால் நிரம்பியது...இக்கற்களை விலக்கினால் அதன் கீழ் பகுதியில் வெள்ளை நிற மணற்பகுதி.


கையில் ஒரு சிறிய ஸ்கெட்ஸ் வைத்துக்கொண்டு ஆங்காங்கே ஆப்பு வடிவ கற்களை நட்டு அவற்றிடையே கயிற்றைக்கட்டி வைத்து அல்லது கோடு போட்டுக்கொண்டு சரளைக்கற்கள் மண்களை சுவர் போல கரையாக கட்டி நடுவில் வண்டிப் பாதை போல உருவாக்கி இயற்கையான வெள்ளை திட்டு வரும் வரை சமன்படுத்தி இருக்கிறார்கள்.  இறுதியில் ஸ்கெட்சின் உருவம் பிரம்மாண்டமாக.


சுருள் வட்ட வடிவங்களும் துள்ளியமாக சரிவிகித ஆரங்களில் உள்ளன.


வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.


நாஸ்க்கா படங்கள் 1920 ல் பெருவில் விமான போக்குவரத்து துவங்கும் பொழுதே வெளி உலகிற்கு தெரிய வந்தன. அதற்கு முன் இல்லையா என்றால் ஆய்வு இருந்திருக்கிறது ஆனால் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவில்லை.


இந்த உருவங்கள் கோடுகள் குறித்து பலவித கருத்துகள் ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றன, அவைகள் ;


வேற்றுகிரக வாசிகள் தரையிறங்க அமைக்கப்பட்ட ஓடு பாதைகள்.  இதற்கு ஏலியன்ஸ் உருவம் மற்றும் குறுக்கும் நெடுக்குமான பாதைகள் புரியாத சின்ன உருவங்களை காட்டுகிறார்கள்.


பாதைகளாக தெரிவன பாசனக்கால் வாய்களாக இருந்திருக்கும்.


வானியல் குறியீடுகள் இவை என்கின்றனர் ஒருசாரர்.


கடவுள் உருவ வழிபாட்டு பகுதிகள். இயற்கை இவர்கள் கடவுள் எனவே அவற்றின் உருவங்கள்.


இந்த இனத்தின் பல பிரிவுகள் இருந்திருக்கலாம் ஒவ்வொரு பிரிவிற்கும்
ஒவ்வொரு உருவங்கள் அதன் மையம் அவர்கள் கூடி வழிபாடு சடங்குகள் அமைவிடங்களாக இருந்திருக்கலாம்.  பூசை, தலை வாங்கும் சடங்குகள்  பலியிடமும் அதுதான் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள். இதற்கு சான்றாக ஆங்காங்கே இருக்கும் மேடைத்திட்டுகள் மண்டைஓட்டு குவியல்கள் என்கிறார்கள்.


ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு உருவ அடையாளம் அதனால் பல உருவங்கள்.


இவ்வளவு காலத்திற்கும் இவை எப்படி அழியாமல் இருந்தன?.  மழையற்ற பலைவனமான பகுதி என்பதால் இப்பகுதி குளிராலும் வெயிலாலும் கெட்டிப்பட்டிருக்கலாம். தடங்கள் மறையவில்லை.


நாஸ்க்கா இன மக்கள் இவ்வுலகத்திற்கு விட்டு சென்ற தடயங்கள் சொல்லும் பொதுவான கருத்து இதுவா ?


மரங்கள் இயற்கை அழிவே ஒரு இனம் அழிந்து போனதற்க்கான சாட்சி நாங்கள்... என்பதா?





14 comments:

  1. //மரங்கள் இயற்கை அழிவே ஒரு இனம் அழிந்து போனதற்க்கான சாட்சி நாங்கள்... என்பதா?//சிறப்பு,
    மிக விரிவாக எழுதி விட்டு முடித்த விதம் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மேலான கருத்திற்கு, எனது நன்றி.. :)

      Delete
  2. விரிவான பல தகவல்கள் சார் .தொகுப்பு அருமை .பழைய காலத்தை கொஞ்சம் எட்டி பார்த்த உணர்வு !

    ReplyDelete
    Replies
    1. தேங்ஸ் சக்தி, பழமை சில உண்மைகளை நினைவு படுத்தும் சரியே..

      Delete
  3. விரிவான விளக்கம் படங்களுடன் பிரமித்தேன், சிந்திக்க வேண்டிய பதிவு - தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. படங்களுடன் அளிக்கும் தகவல் நம் மனதில் நிறுத்த உதவுகிறது. இதில் உள்ள தகவல் எல்லாவற்றையும் மறந்துவிட்டாலும் மரங்களின் அழிவே மனிதனின் அழிவு எனபதை இந்த படங்கள் நினைவு படுத்துகிறது.

      Delete
  4. // அருமையான விரிவான மறைந்த ஒரு இனத்தின் கலாச்சாரத்தை பற்றி ஆய்வு நோக்கில் விவரிக்கப்பட்ட பதிவு /மேலும் // வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.//
    இந்த வரிகளில் இழையோடும் கவித்துவத்தையும் சொல்லியே ஆகவேண்டும் கலாகுமரன் உள்ளே இன்னும் புதைந்து கிடக்கும் வார்த்தைகளை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. கோவை சரளா அவர்களுக்கு எனது நன்றி.

      Delete
  5. நிறைய தகவல் திரட்டி சொல்லியிருக்குரீர்கள்.. இன்றைய சூழலில் தேவையான பதிவு..

    ReplyDelete
    Replies
    1. முழுமையான தகவல்கள் கொடுத்துள்ளதாக கருதுகிறேன். நன்றி கோவி.

      Delete
  6. Replies
    1. இந்த இனம் விட்டு சென்ற கோட்டுருவங்கள் நமக்கான ஆவேர்னெஸ். நன்றி தனபாலன் சார்.

      Delete
  7. இத்தனை படங்கள் எப்படி கிடைத்தன நண்பரே.? நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. படங்களுக்கு சற்று மெனக்கெட்டது உண்மைதான் படங்கள் இல்லாமல் இந்த பதிவு சுவாரசியமே இருக்காது. மேலும் அவை எனது கருத்துகளுக்கு வழு சேர்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு படங்களிலும் அந்த மக்களின் உழைப்பை காண்கிறேன். வரலாற்று சுவடுகளுக்கு எனது நன்றி.

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !