கோவையில் இருந்து வெளியாகும் ஆனந்தம் (சுய முன்னேற்ற - பல்சுவை )மாத இதழ் மார்ச் 2013 இதழ் “பெண்மை சிறப்பிதழ்” ஆக மலர்ந்துள்ளது.
இந்த இதழில் ”காத்திருப்பு - சுகமானதா ! “ எனும் எமது கட்டுரையை வெளியிட்ட ஆசிரியர்குழு, கோவை பதிவர் எழில் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சிறப்பிதழாக வெளியிட்டு சிறப்பித்து வருகிறது ஆனந்தம், மசாலா வார இதழ்களுக்கு இடையே ஒரு ”செந்தாமரை”
Pages
▼
Saturday, March 30, 2013
Tuesday, March 26, 2013
உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு
சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்படம் அமீர்கானின் "தலாஷ்” பார்த்தேன் இதில் ஒரு முக்கியமான கட்டம் பொலிஸ் அதிகாரியான அமீர் தன்னிடம் ஆவி பேசியது என்பதை பின்னால் ஒரு கட்டத்தில் உணர்கிறார். அந்த ஆவி கொலையை கண்டுபிடிப்பதற்காக உதவிகள் செய்கிறது ?!!. ( படத்தின் திருப்பு முனையே இதுதான்.) அவரின் உள்ளுணர்வு தூண்டுதலில் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தன்னிலை மறந்து தோண்டுவார். எலும்புக்கூடு கிடைக்கிறது அதன் கை விரலில் ஒரு மோதிரம் இறந்தவளினுடையது என்பது ஒரு ஆதாரம் குறியீடாக காட்டப்படுகிறது...
(இப்படத்தின் விமர்சனம் நண்பர் கோவை ஆவியின் பதிவில் ) http://kovaiaavee.blogspot.in/2013/03/talaash-hindi.html
இதே போல் அல்ல இதுமாதிரி உள்ளுணர்வினால் இறந்த ராஜாவின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது...நிஜத்தில் ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
மிஸ் லேங்லே(Miss Langley) (Richard III Society )மூன்றாம் ரிச்சர்ட் சொசைட்டியில் ஒரு உறுப்பினர் அதோடு சேனல்-நான்கிற்காக ”மூன்றாம் ரிச்சர்ட்” பற்றிய ஒரு ஆவணப்படத்திற்காக சார்ட் தயாரித்து வந்தவர்.
இவர் தான் லிசெஸ்டர் கவுன்சில் கார் நிறுத்துமிடத்தில் (Leicester city council car park )ராஜாவின்(Richard III ) எலும்புக்கூட்டை கண்டுபிடித்தவர்.
சண்டே டைம்ஸ் க்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்கிறார்...
ஒரு மித வெப்பமான தினத்தில் (August 2009) லிசெஸ்டர் கவுன்சில் கார் நிறுத்துமிடத்தில் கடந்து செல்லும் போது எனக்குள் ஒரு உள்உணர்வு ஏற்பட்டது. என் மயிர் கால்கள் சிலிர்த்தன சில்லென்ற உணர்வு அந்த இடத்தை கடக்கும் போது எனக்கு ஏற்பட்டது. விவரிக்க முடியாத உணர்வு அது...அந்த இடத்தில் தான் போரில் இறந்த அரசர் ரிச்சர்டின் சமாதி இருப்பதாக உணர்ந்தேன்.
"நான் ஒரு அறிவார்ந்த மனித வர்க்கம் ஆனால் என் மூலமாக உண்மை உணர்த்தப்பட்டபோது எனக்கு விவரிக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது”
ரிச்சர்ட் III இங்கிலாந்தின் ”ஹவுஸ் ஆப் யார்கின்” கடைசி அரசர் வாழ்ந்த காலம் (1452 – 1485) .
”ரோஜாக்களின் போர் ”(யோர்க் மற்றும் லாண்செஸ்டர் வம்சங்களுக்கிடையேயான போர்) என வர்ணிக்கப்படும் சண்டையில் ஏழாம் ஹென்றியுடனான போரில் தலை கவசம் இழந்த மூன்றாம் ரிச்சர்ட் தலையில் பலத்த வெட்டு காயங்களும் மண்டை எலும்பு உடைந்த நிலையில் போஸ்வொர்த் களத்தில் மரணம் அடைந்தார்( ம்..32 வயதிலேயே !).
நிலத்தின் மூன்றடிக்குள் கிடைத்த மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் இறந்த அரசனுடையதுதானா? என்பதற்கான சோதனையின் முதல் கட்ட ஆய்வில்...
எலும்புக்கூட்டின் நிலை அதாவது முகம் மற்றும் தலையில் எலும்புகள் உடைந்த நிலை,சண்டையில் உடைந்து வளைந்த முதுகு எலும்பு இவற்றை கொண்டு .( MRI scan)எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் உறுதி படுத்தப்பட்டது. இரண்டு வேதியல் ஆய்வுகள் செய்யப்பட்டன.
”ரேடியோ கார்பன் ஆய்வில்” எலும்பின் காலம் கணிக்கப்பட்டது(1455 லிருந்து 1540க்குள்). அடுத்து மரபியல்( டிஎன் ஏ )சோதனைக்காக அந்த அரசனுடைய வழித்தோன்றல்களிடமிருந்து பெறப்பட்ட டிஎன் ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டது.
(உறவு முறையின் வழித்தோன்றலான மைக்கேல் எப்சென் மரபியல் சோதனைக்கு உட்படுகிறார்)
சேக்ஸ்பியரின்(Shakespeare) ”ரிச்சர்ட் III ” என்ற நாடகம் அவரால் 1592 ல் எழுதப்பட்டிருக்கலாம். இதில் ரிச்சர்டின் இறப்பு குறித்த தகவல்கள் உண்மைதான் என்பது இந்த கண்டுபிடிப்பின் படி உறுதியாகிறது !! என்கிறார்கள்.
உள்ளுணர்வு பற்றி பின்னர் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.
Wednesday, March 20, 2013
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஆபத்து தவிர்க்க முடியாததா?
**கோடையின் காந்தளில்
வெறுமையாய் வரிசைகட்டி
தவமிருக்கும்
காற்று நிறம்பிய குடங்கள்... “
**உப்புக்காற்று உறத்து
சொல்கிறது...
உனக்கான
வேள்வித்தீயை
நீயே மூட்டிகொண்டாய்.. ! ”
ஏன் இந்த மாதிரி தலைப்பை வைத்து பீதியை கிளப்புறீங்க ? இது தான் பலரின் கேள்வி. நீங்கள் சிறுவயதில் அனுபவித்த பலவித சந்தோசங்களை உங்கள் வாரிசுகளுக்கு கொடுக்கிறீர்களா ? ஏன் இல்லாமல் ? சந்தோசம் என்பது நாம் எப்படி கொடுப்பது அவர்களாகவே உணரவேண்டிய ஒன்று என்றும் சொல்லலாம்.
சிறு வயதில் பளிங்கு போன்ற நொய்யல் நதியில் நான் விளையாடியிருக்கிறேன். நண்பர்களுடன் துண்டு விரித்து மீன் பிடித்திருக்கிறேன். நாவல் பழத்தை நதியில் கழுவி சுவைத்திருக்கிறேன். மணல் வீடு கட்டி விளையாடி இருக்கிறேன். ஏன் ரொட்டி துண்டைக்கூட கோவைகுற்றாலத்து நீரில் நனைத்து சாப்பிட்டு இருக்கிறேன். நம் குழந்தைகளுக்கு இந்த வாய்புகளை சந்தோசங்களை நாம் கொடுத்திருக்கிறோமா என்றால் ? ...மவுனமே இதன் பதில்.
" நீரின்றி அமையாது உலகு " திருவள்ளுவரின் தீர்க்கமான எதிர்காலம் குறித்த வாக்கு இது.
"22 மார்ச் 2013”
தண்ணீரின் அருமை எப்போது தெரிகிறது என்றால் அது இல்லாமல் கஷ்டப்படும் போது தான். குடிப்பதற்கு உபயோகப்படும் தண்ணீர் என்பது 3 சதவிகிதம் மட்டுமே மீதியெல்லாம் உவர்ப்பு நிலையில் உள்ள கடலாக இருக்கிறது.
இங்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.
தண்ணீர் இல்லாமல் வாழ்வு சுவைக்குமா ? [ குளிர் பானம்,வேறு பழச்சாறு எதை குடித்தாலும் அது ஒரு கோப்பை தண்ணீர் குடிப்பதற்கு ஈடு என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?
இயற்கை நமக்களித்த அற்புத பரிசு இது இல்லை ?
தண்ணீர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் இதை மறுக்க முடியுமா ?
இந்த தண்ணீருக்கு இணையான ஒன்றை உங்களால் காட்ட முடியுமா ? [மழைன்னு சொல்லாதீங்க..]
எவ்வளவு பெரிய கோடீஸ்வரருக்கும் ஏதுமற்ற ஏழைக்கும் இது ஒரு பெரிய சொத்து இது பொய்யா ?
உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.
ஒவ்வொரு பதினைந்து செகண்டுக்கு ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்த மான நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறது இது ஐநாவின் கணக்கீடு.
ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் இது சென்ற ஆண்டு கணக்கு.
அதிகமான நிலத்தடி நீரை உருஞ்சுவதால் பல தேசங்களில் நிலத்தடி நீர் வரண்டு விட்டது.
எண்ணை வளம் தீர்ந்து போவதற்கு முன் தண்ணீர் வளம் காணாமல் போகும் என்று ஒரு கணிப்பு உண்டு.
தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலையும் ஒரு புறம் உயர்கிறது. தண்ணீர் கிடைக்காமல் போவது பசிக்கொடுமையை ஏற்படுத்துகிறது.
உலகத்தோடு சில ஒப்பீடுகள் : மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது.
தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.
பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது.
[தலைப்பிற்கு வருகிறேன்..]
தமிழ் நாட்டை பொருத்தவரை 72 மில்லியன் மக்கள் தொகையில் தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக இருக்கிறது. அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது. நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.
நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது.தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, வீணான விரயம், உலக வெப்பமயமாதல்.
இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலையாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் கேள்வி : இதற்காக நான் என்ன செய்யமுடியும் ?
தண்ணீருக்கான சேமிப்பை உத்திரவாதத்தை நீங்கள் தரவேண்டும். நிலமையை ஓரளவு சமாளிக்க முடியும்.
உங்கள் பிள்ளைகளுக்கு தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை கற்றுக் கொடுங்கள். குளிப்பதற்கு 2- 3 பக்கெட்டுகள் தண்ணீர் செலவழிப்பதை ஒன்றாக குறையுங்கள். பெரிய ப்ளஸவுட் தொட்டிகளில் சிறியதை பயன்படுத்தலாம். நம் வீட்டு குழாய்களில் லீக்கேஜ் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
தினமும் துவைப்பதை வாரம் இரண்டு முறையாக்கலாம். சாப்பிடும் தட்டுகளுக்கு பதில் இலைகளை உபயோகிக்கலாம். தண்ணீர் விளையாட்டுகளை குறைத்துக் கொள்ளலாம். வீடுகளில் மழைநீர் சேமிப்பு நடைமுறைபடுத்துவது. மழை வரும் போது கார்களை திறந்த வெளியில் நிறுத்தலாம். வீட்டை சுற்றி சிமிண்ட் தரைகளை அமைப்பதற்கு பதில் ப்ளாக்குகளை உபயோகிக்கலாம். ஹோட்டல்களில் போதுமான தண்ணீரை கேட்டு வாங்கி குடியுங்கள். உணவை வீணாக்காமல் இருப்பது.
தண்ணீரை வீணாக்க மாட்டேன் என ஒவ்வொருவரும் சபதமெடுப்போம் கடைபிடிப்போம்.
[ இந்த கட்டுரைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர் Er.S. சிவலிங்கம், நீர் மேலாண்மை இயக்ககம் (water resources Organisation) அவருக்கு எனது இதயப்பூர்வமான நன்றி ]
Monday, March 11, 2013
எதிர்காலத்தில் குளோனிங் குழந்தை உருவாக்கம் சாத்தியமா?
மனித குளோனிங் குழந்தை இன்னும் 50 ஆண்டு காலத்திற்குள் பிறக்கும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் சர் ஜான் கர்டன் (Sir John Gurdon).
உடலின் ஒவ்வொரு செல்லும் மரபு அணுக்களை கொண்டு இருக்கும் என்ற ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். அதை தொடர்ந்து (1958 ) தவளையின் குடல் செல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ வை பிரிதொரு தவளையின் கருமுட்டையில் வைத்து அந்த தவளையின் குலோனிங்கை உருவாக்கி காட்டினார். அப்போதைய கால கட்டத்தில் இது மறுக்கப்பட்ட உண்மையாக இருந்தது.
(1996 ) Prof.வில்மத் (Wilmut)டாலி எனும் செம்மறி ஆட்டை குளோனிங் செய்து காட்டினார். இதை தொடர்ந்து Prof.யமனகா (Yamanaka) மனிதனின் முதிர் செல்லை ஸ்டெம் செல்லாக “ரீ புரோக்ராம்” செய்து மருத்துவத்தில் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தினார் (2006) (adult cells can be "reprogrammed" into stem cells for use in medicine. )
ஒரு நோயாளியின் பழுதடைந்த டிஸ்யூ செல்லுக்கு மாற்றாக இன்னொருவரின் தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லினை கொண்டு உருவாக்கப்பட்ட டிஸ்யூ வை கொண்டு அந்த நோயாளிக்கு வைத்தியம் பார்க்க முடியும்.
2012 ல் யமணகாவுடன் இணைந்து இவருக்கு (Physiology or Medicine ) நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
இவரின் 15 ஆவது வயதில் இவருக்கு வழங்கப்பட்ட ரிப்போர்ட் கார்டை சட்டம் போட்டு வைத்திருக்கிறார் 79 வயதான சர் ஜான் கர்டன். அந்த சர்டிபிகேட்டில் அறிவியலில் இவருக்கு போதிய கவனம் இல்லை என்று குறிபிடப்பட்டிருக்கிறது (தெளிவா சொல்லனும்னா ”too stupit”). அந்த சர்டிபிகேட் உங்கள் பார்வைக்காக.
பள்ளியின் அறிவியல் ரிப்போர்ட் கார்டுடன் ஜான் கர்டன் at Gurdon Institute in Cambridge
இவரின் அனுமானம்... இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் குளோனிங் உயிரினங்கள் மற்றும் குளோனிங் மனிதன் உருவாக்கப்படலாம்.
ஆனால்...நடைமுறை படுத்துதலில் பல சிக்கல்கள் உள்ளது எதிக்ஸ், சட்டசிக்கல்கள், மனித உரிமை இப்படி.. எதிர்காலம் தான் இதற்கு விடையளிக்கும்...
Friday, March 8, 2013
பூச்சியுண்ணும் தாவரங்கள் எலியை உண்ணுமா ?
சமீபத்தில் எமது குடியிருப்பு பகுதியில் கொசுத் தொல்லைக்கு என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, சாக்கடையின் மேல் சிமெண்ட் பலகைகளை அமைக்க யோசனை சொல்லப்பட்டது. இன்னொருவர் கொசு பிடித்து உண்ணும் செடியை வளர்க்களாமா? என்றார். கொடுமைக்கார பாவிகளை இந்த மாதிரி பிடிச்சு சாப்பிடும் மரத்தில போட்டிடனும் என்றார் இன்னொருவர் ? ! இப்படி சுவரசியாமாக போய் கொண்டிருந்தது பேச்சு...
சரி விசயத்திற்கு வருவோம் பூச்சியுண்ணும் தாவரம் பற்றி (கேரளா) திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில் பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றன இது புழு பூச்சிகளை எளிதில் கவர்கிறது. (அவதார் திரைப்படத்தில் இது போன்ற தாவரங்கள் காட்டப்பட்டது)
இதற்கு முன் இவ்வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்று உலக ஆய்வாளர்கள் கூறிவந்தனர் என்பது கவனிக்க தக்கது.
பூச்சியுண்ணும் தாவரம் கோப்பை போன்ற பூக்களை கொண்டிருக்கும் அதனுள் சுவையான நீர்மம் நிறம்பிக் காணப்படும். உட்பாகம் வழுவழுப்பான மெழுகு போன்ற சுவர் அமைப்பு உடையது. சிக்கிக்கொள்ளும் எறும்பு, பூச்சி, புழுக்கள்,சிலந்திகள் இதிலிருந்து வெளியேர முடியாமல் மூழ்கிவிடும் இந்த பூவின் மேலுள்ள மூடி போன்ற அமைப்பு இதை மூடி விடுகிறது. உள்ளே சிக்கிய பூச்சிகள் அந்த நீர்மத்தில் கரைந்து ( ingested)அந்த தாவரத்திற்கு உணவாகி விடுகிறது.
போர்னியோ, சுமத்திரா தீவு மழைக்காடுகளில் சுமார் 100 வகையான இத்தகைய ( largest carnivorous plants) ஊன் உண்ணும் தாவரங்கள் காணப்படுகின்றன.
”Giant meat-eating plants / munkey cup plant ”
டிராபிகல் பிட்சர் (Tropical pitchers )எனும் தாவரம் சிறு எலிகள், பல்லிகளை உணவாக்கி கொள்கிறது. இந்த கொடி வகை தாவரம் பெரிய கோப்பை (மங்கி கப்) போன்ற பூக்களை கொண்டது மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வளர்கிறது. இதனுள் உள்ள திரவம் இவற்றை செரிக்க செய்கிறது. ஊன் உண்ணும் மனிதர்கள்,விலங்குகள் போல இவையும் அசைவம் மட்டுமே சாப்பிடுகிறது.
உலகத்திலேயே நிபந்தஸ் ரஜா (Nepenthes rajah ) என்பதுதான் பெரிய ஊன் உண்ணும் தாவரம் இதனுடைய திரவ கொள் அளவு இரண்டு லிட்டர்.
வீனஸ் பிளை டிராப் சட்டென 20 நொடிகளில் பூச்சியை பிடித்து உண்கிறது. மிக மெதுவான காணொளியில் இதை காணலாம்.
Monday, March 4, 2013
ஆண்டுக்கு 10 கோடி சுறாக்கள் கொல்லப்படுகின்றன
தொடர்புடைய பதிவு : திமிங்கிலங்கள் [ whales ]
ஆண்டுதோறும் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்படலாம் என்று இது குறித்த மிகவும் துல்லியமான கணிப்பு என்று கருதப்படும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தமது வாழ்நாளில் சற்றே தாமதமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மைகொண்ட சுறாக்கள் இந்த அளவுக்கு கொல்லப்படுவது அபாயகரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனர்கள் தாம் அருந்தும் ''சூப்''புகளில் சுறா செதில்களை பயன்படுத்துவதே சுறா மீன்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
சரியான புள்ளிவிவரங்கள் இல்லாது இருப்பதால் உலகளாவிய அளவில் சுறாக்கள் பிடிக்கப்படுவது குறித்து துல்லியமாக கூறுவது கடினமாக உள்ளது. ஏராளமான சுறா மீன்கள் பிடிக்கப்பட்டவுடன் அதன் செதில்கள் வெட்டியெடுக்கப்பட்டு பிறகு மீண்டும் கடலில் வீசப்படுகின்றன. இப்படிக் கொல்லப்படும் சுறாக்கள் அதிகார பூர்வ புள்ளி விவரங்களில் இடம்பெறுவதில்லை.
விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சத்தில் இருந்து 27 கோடியே 30 லட்சம் வரையிலான சுறாக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படலாம் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தனர்.
அதாவது இந்த மீன்கள் பிடிக்கப்படும் வேகம் அதன் இனப் பெருக்க வேகத்தை விட அதிகமாக இருக்கிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நீயுயார்க் ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேமியன் சேப்மேன், மிகவும் மோசமான புள்ளி விவரங்கள் காரணமாகவே எவ்வளவு சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பது குறித்த கணிப்பீட்டில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் அதிக பட்ச எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது என்றும் ஆனால் ஆண்டுதோறும் 10 கோடி சுறாக்கள் கொல்லப்படலாம் என்பது ஒரு இடைப்பட்ட சிறப்பான கணிப்பீடு என்றும் கூறினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையே சுறா மீன்கள் பிடிக்கப்படுவதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. தேவையை ஈடுகொடுக்க மீன்பிடிக் கப்பல்கள் சுறாக்களை பிடிக்கும் இடங்களையும் பிடிக்கப்படும் சுறா இனங்களையும் மாற்றியுள்ளன. இதனால் சுறாக்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சி அடையும் என்ற அச்சம் இருக்கிறது. சிலவகைச் சுறா இனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன மேலும் இவற்றின் இனப் பெருக்க வீதம் மிகவும் குறைவானது என்பதால் சுறாக்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகறித்துள்ளன.
வரும் ஞாயிற்றுக் கிழமையன்று பாங்காக்கில் 178 நாடுகளின் பிரதிநிதிகள் அருகிவரும் உயிரினங்களின் வர்த்தகம் குறித்த சர்வதேச மாநாட்டில் சந்திக்க உள்ளனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 சுறா இனங்களின் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு திட்டம் இதில் முன்வைக்கப்பட உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இம் மாநாட்டில் சுறாக்களை பாதுகாக்கும் முடிவை நிறை வேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒரு சில வாக்குகளால் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் இம்முறை இந்தத் தீர்மானத்துக்கு வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் மத்தியில் ஒரு பரந்துபட்ட ஆதரவு இருப்பதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி : பி.பி.சி செய்தி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மார்ச், 2013 - 14:06 ஜிஎம்டி
தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும்
தொடர்புடைய பதிவு : தூங்கா நகரங்களின்...தூங்கா மனிதர்கள்
முறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.
நன்றி :பி.பி.சி செய்திகள் : கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 12:58 ஜிஎம்டி