Pages

Sunday, June 9, 2013

கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளைத் தேடி ( பகுதி 6)

கொங்குமண்டலத்தில் வாழ்ந்த பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்கள் கோவை, பேரூர் பகுதியில் முன்பு கிடைத்திருக்கின்றன. ஈமச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கது முதுமக்கள் தாழி இறந்தவர்களை இந்த தாழியினுள் வைத்து புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. (முதுமக்கள் தாழிகள் தொல்லியல் துறை வசம் உள்ளது)

இறந்து போன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக்கொண்டுள்ளனர். இப்படி உடன் கட்டை ஏறும் பழக்கம் கொங்கு பகுதியில் இருந்து இருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
அவர் வம்ச வழி வந்தவர்கள் இதற்கு அடையாளமாக கல்வெட்டுக்கள் அமைத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வந்துள்ளனர்.

சமீபத்தில் உடுமலையில் கிடைத்த கல்வெட்டு இதை உறுதி செய்கிறது. இது பற்றிய தினமணி நாளிதழில் (ஜூன் 7 2013 ) வந்த செய்தியை இங்கு பகிர்கின்றேன்.

“தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகள், ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு”

உடுமலை அருகே தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகளும் பெருங்கற்படை ஈமச் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியைக் கடந்து சம்பக்காட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவு நடந்து சென்றால் வரும் மலைவாழ் கிராமம் தளிஞ்சி. பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த ஊரில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை கல்வெட்டு ஆராய்சியாளர் து.சுந்தரம் தொல்லியல் ஆர்வலர் ஜான்சன் கொடுத்த தகவலின் படி தளிஞ்சியில் ஆய்வு செய்தார். அவர் தெரிவித்த தகவல்கள்.

தளிஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களின் நடுவில் ஓரிடத்தில் கல் சிற்பங்கள் சிதறிக் கிடந்தன. அருகே இரண்டு துண்டாக உடைந்த கல்வெட்டு வரிகளுடன் கூடிய பலகைப் பாறைக்கல் இருந்தது. 2 நந்தி சிலைகளும், ஒரு நாகர் சிற்பமும், நந்தியின் தலைப்பகுதிச் சிற்பமும் குவியலாகக் கிடந்தது. பெண் தெய்வ சிற்பம் மூன்றாக உடைந்து கிடந்தது. பீடத்தோடு கூடிய பாதப்பகுதி, தலை மற்றும் உடல் பகுதி கிடந்தது.  நந்தி சிலை கிடந்ததால் இங்கு சிவன் கோவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.





படங்கள் உடுமலை அருகே தளிஞ்சியில் காணப்படும் கல்வெட்டுகள்

இக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், தென் கொங்கு பகுதியை ஆட்சி செய்த வீர கேரள அரசனான வீர நாராயணன் அதிசய சோழன் காலத்துடையது என்பது தெரிய வந்தது.

பழங்காலத்தில் வட கொங்கு, தென் கொங்கு ஆகிய இரு பகுதிகளாக இருந்தது.  இவர்கள் சுயாட்சி பெற்று சோழர்களுக்கு கீழ்படிந்தவர்களாக ஆண்டனர்.  இடைக்காலச் சேரர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினர் என்ற கருத்தும் உண்டு.

தென் கொங்கு பகுதியில் வீரகேரளர்கள் கி.பி. 945 முதல் கி.பி 1200 ஆம்ஆண்டு வரை ஆட்சி செய்துள்ளனர்.  வீரகேரள அரசர்களில் முதன்மையான அரசன் வீரகேரளன் வீரநாராயணன். இவரது மகனே தளிஞ்சி கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரநாராயணன் அதிசய சோழன்.  இவர் கி.பி 990 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1021 ஆண்டு வரை 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

 இதிலிருந்து இக்கல்வெட்டின் காலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது.  ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளிலும் வீரகேரள அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில், நெல் கொடையாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இங்கு குழலூதும் சிலை, திருமால்சிலை ஆகியவை கிடைத்துள்ளன.

கிருஷ்ணன் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி சில சிற்பங்கள் அடங்கிய பலகைக் கற்கள் உள்ளன. இறந்து போன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக்கொண்டதைக் குறிக்கும் நினைவுக்கற்கள் இவை. மற்றொரு சிற்பம், வீரர் ஒருவருக்காக எடுக்கப்பட்ட நடுகல். இங்குள்ள கொண்டம்மா கோயில் அருகில் பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னம் காணப்பட்டது.  இக்காலத்தைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து, அந்த இடத்தில் நினைவுச் சின்னங்கள் அமைத்து முன்னோர்கள் வழிபட்டனர்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தளிஞ்சியில் மக்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளது இக்கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.  இப்பகுதியில் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் தெரியவரும்.

**************

கோவை பகுதியை ஆண்ட கொங்கு அரசர்கள் மற்றும் வரலாறு குறித்து  சில தகவல்களை சுவடுகளைத்தேடி எனும் தலைப்பில் முன்பு பதிவிட்டிருந்தேன்.

பதிவுகளுக்கு செல்ல சொடுக்கவும் -  சுவடுகளைத் தேடி ( பகுதி 5)

3 comments:

  1. வியக்கவைத்த தகவல் குறிப்புகள்...பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பல வரலாற்று தகவல்களுக்கு நன்றி... தொடர்க...

    ReplyDelete
  3. மிக அருமையான வரலாற்று தகவல்... நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !