Pages

Tuesday, June 25, 2013

செம்மறி ஆட்டை உண்ணும் தாவரம் !

ஆடு உண்ணும் தாவரம் இல்லீங்க  "ஆட்டை உண்ணும் தாவரம்” தான். அது எப்படி தாவரத்திற்கு வாயா இருக்கு எப்படீங்க ? உங்க 'மைண்ட் வாய்ஸ்'  எனக்கு கேட்குது, மேல படியுங்க.

இது பூச்சி உண்ணும் தாவரங்களான வீனஸ் ப்ளை ட்ராப், பிட்ஷர் தாவரங்களை போல அல்ல, ஆனால் இந்த தாவரத்தின் செல்லப் பெயர் `sheep-eating  plant’அது மட்டும் இல்லை இதோட நடவடிக்கையை வைத்து தான் இப்படி அழைக்கப்படுது. இந்த தாவரத்தின் பூர்வீகம் சிலி. புவா சிலன்ஸிஸ் (Puya chilensis ) எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த தாவரம் 10 அடிகளுக்கும் மேலாக வளரக்கூடிய புதர் தாவரம்.

முட்கள் செடிகளை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் இந்த வகை தாவரத்திற்கு நீளமான கொக்கி போன்ற முட்கள் விலங்குகளை பிடிக்க பயன் படுகிறது. செம்மரி ஆடு அல்லது வேறு விலங்குகள், பறவைகள் இந்த புதர் நடுவில் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது. இறக்கும் விலங்குகள் மண்ணோடு மக்கி இந்த தாவரத்திற்கு (உணவாகிறது) உரமாகிறது.
(இது வெளிவிடும் பழ வாசனை விலங்குகள், பறவைகளை ஈர்க்கும் என நினைக்கிறேன் )


லண்டனில் உள்ள ராயல் தோட்டகலை கூடத்தில் (the Royal Horticultural Society's Garden- Wisley) கடந்த 15 வருடங்களாக வளர்க்கப்பட்டு வருகிறது.  இவ்வளவு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த தாவரம் பூக்க தொடங்கியுள்ளது. மனிதர்கள் குறிப்பாக குழந்தைகள் இதை நெருங்காத வண்ணம் கண்ணாடி கூண்டுக்குள் பாதுகாக்கப்படுவதாக கூறுகிறார்கள்.



காணொளி

தொடர்புடைய பதிவு : பூச்சியுண்ணும் தாவரம் எலியை உண்ணுமா ?

Sunday, June 23, 2013

கொங்கு சீமையின் முதுமக்கள் தாழி

பெண்கள் கட்டிக் கொள்ளும் தாலி தெரியும், இது என்ன முதுமக்கள் தாழி ?.

அப்போது எனக்கு வயது பதினான்கு இருக்கலாம், நண்பர்கள் பேரூர் (கோவை) ஏழூர் மாரியம்மன் கோவிலின் பின்னால் ஆற்று படுகைப்பகுதியில் இரண்டு தாழிகள் கிடைச்சிருக்காம் வாடா பார்கலாம் என அழைத்து போனார்கள்.  என் தலைக்கு மேலே ஒன்னரை அடி  உயரம் இருந்தது. எல்லோரும் அதில் எட்டி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  சிரமப்பட்டு நண்பனின் உதவியால் எட்டிப் பார்த்தேன்.  ஆளுயர பெரிய பானைக்குள் மண்ணோடு சேர்ந்து எழும்பு துண்டுகள் இருந்தன. அப்போதுதான் எனக்கு அறிமுகமானது “முதுமக்கள் தாழி”.

முதுமக்கள் தாழி பெருங்கற்காலத்தின் அடையாளம்.  வாழ்ந்து மறைந்த முன்னோர்களை இந்த தாழியில் அமர வைத்து மூடுவார்கள். நிலத்தில் ஊன்ற வசதியாக ஒரு தாழியின் அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அகன்ற மறு பக்கத்தில் அகலமான வாய் பகுதி இருக்கும். இதனுள் உடலை கிடத்தி பெருங்கற்பலகைகள் கொண்டு மூடி வைப்பார்கள். அடர்ந்த வன எல்லைப் பகுதியில் தான் முதுமக்கள் தாழியில் வைத்து அழியா வண்ணம் புதைக்கப்பட்டனர்.


காட்டுவிலங்குகள் மண்ணைத் தோண்டி எடுக்காவண்ணம் ஆழமாக இந்த தாழியை மண்ணில் புதைப்பார்கள்.  அந்த இடத்தின் அடையாளமாக பெருங்கற்பலகைகளை அடையாள குறிகளுடன் வைப்பர்.

தாழியில் உள்ளே என்னென்ன பொருட்கள் கிடைத்தன ?
முதுமக்கள் ஆசையாக பயன்படுத்திய பொருட்கள், சுடுமண் காதணிகள், வெட்டு கத்திகள்(கூரான பாறை), மர ஆபரணங்கள் இருந்தன.

கோவை இருகூர் பகுதி முதுமக்கள் தாழிக்கும், ஈம பேழைக்கும் பெயர் பெற்றது.  இங்கு மட்டும் முன்னூறுக்கும் அதிகமான தாழிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  வீட்டின் அஸ்திவாரம் தோண்டும் போது இவை கிடைத்துள்ளன.

முதுமக்கள் தாழிகள் சுமார் 100 கிலோ முதல் 700 கிலோ வரை உள்ள பிரம்மாண்ட தாழிகளும் உண்டு. மண்ணால் செய்யப்பட்ட இந்த தாழிகள் கருங்கற்கலை விடவும் கடினமாக இருப்பது ஆச்சர்யமளிக்கும் தகவல்.

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இந்த பழக்கம், 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் கைவிடப்பட்டிருக்கிறது.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில்,  வெள்ளலூர், ஆலாந்துறை, சூலூர், பல்லடம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


வசதி படைத்த செல்வந்தர்கள் இறந்தால் சொகுசு தாழியில் (ஈமபேழை) அடக்கம் செய்தனர். இது சுமார் 5 அடிகள் முதல் 8 அடிகள் வரை உயரம் இருக்கும். இதனுள் இறந்தவர்களை படுக்க வைத்த நிலையில் புதைப்பர். சிறியவர்களுக்கு தொட்டில் பேழை.

முதுமக்கள் தாழி, ஈம பேழைகள் தமிழர் வாழ்வில் இருந்து காலப்போக்கில் அழிந்து விட்டது.

Saturday, June 22, 2013

கொங்கு நாட்டின் செப்பேடு இரகசியங்கள் !

ஓலைச் சுவடி காலத்திற்கு முந்தைய காலத்தில் அதாவது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் செப்பேடுகள் கொங்கு நாட்டில் நடைமுறையில் இருந்தன.

இந்த செப்பேடுகளில்  மன்னரின் ஆளுகைக்குட்பட்ட விவரங்கள், அரசு உத்தரவுகள்(ஆணைகள்), மானியங்கள், இன்னபிற தகவல்கள்,  தானமாக பெற்ற கிராமங்கள், அசையும் அசையா சொத்துக்கள் போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

செப்பேடுகளில் பிராமி மற்றும் வட்டெழுத்து முறை எழுத்துக்களால் எழுதப்பட்டவை.

சோழர்கால வட்டெழுத்துக்கள்




செப்பேடுகள் இரும்பு, வெண்கலம், ஐம்பொன் போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்டன.

செப்பேடுகளில் எழுதுவதற்கு நீண்ட நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

கோவையில் பேரூர் நொய்யல் ஆற்றில் இவ்வகை செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன (தற்போது அல்ல). பேரூர் தமிழ் கல்லூரியில் அமைந்துள்ள பேரூராதீனத்தில் ஐம்பொன்னாலான செப்பேடுகள் பராமரிக்கப்படுகிறது.



கோவையில் பேரூர், போளுவாம்பட்டி, ஆலாந்துறை, வெள்ளலூர், இருகூர், சூலூர், பட்டணம் பகுதியில் செப்பேடு பதிவுகள் அதிகம் நடந்திருக்கிறது.

சில இரகசியங்களை அடுத்த தலை முறையினருக்கு உணர்த்துவதற்காகவும் இந்த செப்பேடுகள் பயன் பட்டிருக்கின்றன.

பாட்டன் பூட்டன் காலத்திய செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் காலப்போக்கில் மங்கியதால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.


செப்பேடுகளை சிலர் தங்களின் முன்னோரின் நினைவாக பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அதில் உள்ள விவரங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை.  இன்னும் வெளியே தெரியாத பல செப்பேடுகள் இரும்பு பெட்டிகளில் ஒளிந்திருப்பதாக தொல்லியல் துறையினர் நம்புகின்றனர். 

Monday, June 17, 2013

மதுரை நாயக்கர் அரண்மனை (பகுதி 2)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாயக்கர் அரண்மனையின் உயரமான தூண்கள்  வியப்பில் ஆழ்த்தி நம்மை வரவேற்கிறது.

இந்த மகாலில் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி உயரமும், 5 அடி விட்டமும் கொண்டது. (பெரியவர்கள் மூன்று பேர் தூணை சுற்றி கை கோர்க்கலாம் ! )

இப்போது நாம் காணும் நாயக்கர் அரண்மனை அழிவில் இருந்து மீதமான நான்கில் ஒரு பங்கு மட்டுமே என்பது நம்முள் அதன் வரலாறு குறித்த ஆர்வத்தை தூண்டுகிறது.  (குறிப்பிட்ட பகுதி மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறது)


அக்காலத்திய நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரண்டு பகுதிகள் இருந்திருக்கின்றன.
கி.பி.1639 ஆண்டு இந்தோ- சார்ஸெனிக் ( Indo-saracenic) கட்டிடக்கலை முறைப்படி ஒரு இத்தாலிய பொறியியல் வல்லுனரின் கைவண்ணத்தில் கட்டப்பட்டது.

மைசூர் அரண்மனை, தாஜ்மஹால், மும்பை தாஜ் ஹோட்டல்...இந்தோ- சார்ஸெனிக் கட்டிடக்கலைக்கு  உதாரணமா சொல்லலாம்.
சொர்க்க விலாசம் மன்னர் திருமலைநாயக்கரின் வசிப்பிடமாகவும்,. ரங்கவிலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.


சொர்க்கவிலாசம் பூஜை மண்டபம்,அரியணை மண்டபம்,இசை மண்டபம்,படைகலன் பகுதி, தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை,பல்லக்கு சாலை, மலர் வன மண்டபம், பணியாளர் பகுதி இப்படி.பல பகுதிகளை கொண்டிருந்தது.


சொர்க்க விலாசத்தின் நடுவில் ஒரு கல் பீடத்தின் மேல் தந்ததிலான மண்டபம் இருந்தது. அதில் ரத்தினத்தினாலான மன்னரின் அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினார் (இப்பொழுது இல்லை !!)





இந்த அரண்மனையில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதை இருந்தது. காலப்போகில் அழிந்து போய்விட்டது.

நாயக்கர்கள் மதுரையை 200 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர். மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529 ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார்.

விஜயநகர பேரரசின் புகழ்வாய்ந்த மன்னர் கிருஷ்ண தேவராயர் அவரின் தளபதி நாகம நாயக்கன். அவரை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். மதுரையை கைப்பற்றிய நாகம நாயக்கன் தானே அரசன் என முடிசூட்டி கொள்கிறார். நாகம நாயக்கனின் மகன் விஸ்வநாத நாயக்கன் மதுரையின் மீது படையெடுத்து தன் தந்தையை சிறைபிடித்து தேவராயர் முன் நிறுத்தினான்.  ஏன் இந்த துரோகத்தை செய்தாய் என கேட்ட கிருஷ்ண தேவராயருக்கு தனது மகனுக்காகவே அவ்வாறு செய்ததாக கூறுகிறார்.  பின் வெற்றி கொண்ட விஸ்வநாத நாயக்கனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக்கேட்டார். கிருஷ்ண தேவராயர்,  விஸ்வநாத நாயக்கன் தன் தந்தையின் உயிர் வேண்டும் எனகேட்டதாக சொல்லப்படுகிறது.


கூரையின் மேல் பகுதி காட்சி 

அக்கால அரண்மனையின் ஓவிய காட்சி 

திருமலை நாயக்கர்

நாயக்கர் வம்சத்தில் ஏழாவது அரசர் திருமலை நாயக்கர். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயனு. இவரி 36 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளார் (கி.பி 1623 - 1659). இவரின் தந்தை முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். அமைதியான செல்வ செழிப்பான சிறப்பான ஆட்சி திருமலை நாயக்கருடையது.  அனேக கோயில்கள், பல ஏரிகள்,தெப்பகுளங்கள், மதுரை மாநகரின் அகண்ட வீதிகளும் இவரால் நிர்மானிக்கப்பட்டது. மதுரையின் பல விழாக்கள் இவரால் ஏற்படுத்தப்பட்டது. சைவம் வைணவம் இவற்றை ஒரு சேர பாவித்தார் என்பது சைவ கோயில் அருகிலேயே வைணவ கோயில்களையும் அமைத்தார்.  கிருத்துவ மத போதகர்களை ஆதரித்தார். முஸ்லிம் மக்கள் தர்க்காக்களும் இவர் காலத்தில் இருந்தது.

திருமலை நாயக்கரின் பேரரசு என்பது 76 பாளையப்பட்டுகள் சேர்ந்தது, தஞ்சாவூர் தவிர. வீரப்பெண் மணி ராணி மங்கம்மா இவரின் வழிதோன்றல். நாயக்கர் 76 வயது வரை வாழ்ந்தார்.

மருது பாண்டிய சகோதரர்கள், வீர பாண்டிய கட்ட பொம்பன் போன்றோர் பாளையக்காரர்களின் வழி தோன்றல்கள்.
கோயில் கோபுரங்களின் வடிவமைப்பில் ராய கோபுரம் என்பது சிறப்பு வாய்ந்தது. தமிழக அரசின் முத்திரையில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ர சாயி கோயில் கோபுரம்.  திருமலை நாயக்கரின் சிலை இந்த கோயில் வளாகத்தில் உள்ளது.

தொடர்புடைய பதிவு  : மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்

எதிர்கால உலகை காக்கப்போகும் காளான் படை

சாதாரணமாக சூப் மற்றும் துரித உணவு வகைகளில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும்,காளான்கள் "எதிர்கால உலகை காக்கப்போகும் காளான் படை" இது உளரல் இல்லை.. எதிர்காலத்தில் காளான் பல விதங்களில் பயன்பாடு மிக்க ஒரு தாவரமாக உருமாற்றம் பெறப்போகிறது.

பூஞ்சைகள் (பூஞ்சானங்கள்) இந்த பூமியில் பில்லியன் (1ஒன்றுக்கு அடுத்து 9 பூஜ்ஜியங்கள்) ஆண்டுகளாக காலனி ஆதிக்கம் செய்து வருகின்றன.இதில் ஈஸ்ட் மற்றும் பாசிகள், காளான்களை உருவாக்கும் மேக்ரோ பூஞ்சைகளும் அடக்கம். இதன் பங்களிப்பு அழுகியவற்றை மக்கச்செய்வது. அதுமட்டுமல்ல மைசீலியா எனும் நுண்ணிய இழைகளில் இருந்து கசியும் என்சைம்களாலும், அமிலங்களாலும் பாறைகளில் உள்ள சத்துக்களானது; மிக நுண்ணிய சிதைவுற்று அதிலிருந்து சத்துக்கள் பிரிக்கப்பட்டு மண்ணில் கலக்கின்றன.  நிலத்தின் உயிர்ச்சத்துக்கள் பூஞ்சைகளாலேயே உருவாக்கப்படுகின்றன.

காளான்கள் ஒட்டுண்ணிகள் அல்லது சாறுண்ணிகள் என்ற வகையின் கீழ் வகைபடுத்தப்படுகிறது.

அக்காலத்தில் ”அமெடு” (amadou) என்பது  முதல் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பூஞ்சை காலான் இதைகொண்டு வெட்டுக்காயங்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். (ஹிப்போகிராட்ஸ் (hippocrates காலம் கி.மு 450) குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது ).

ஒரு காலானின் மைசீலியம் எனும் மிக நுண்ணிய வேர் இழைகளை எலக்ட்ரான் உருப்பெருக்கி மூலமாக காணும்போது அவை மனித மூளைசெல்களை ஒத்து இருப்பவை போல தோற்றம் தருகின்றன. (காண்க படம்)

மைசீலியம் சுற்றுப்புறத்தில் இருக்கும் சத்துக்களுக்கு தக்கவாறு தமது வளர்ச்சியை, மற்றும் குண நலன்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் வளர்கிறது. இந்த செய்கை ஆங்கிலத்தில் ”செல்லுலார் இண்டெலிஜெண்ட்” என குறிப்பிடப்படுகிறது.

மைகோரிஜல் (mycorrhizal) எனும் பூஞ்சை வகையானது தாவர வேர்களில் வளர்ந்து தங்களுக்கு தேவையான சக்கரைசத்தை பெற்று நிலத்தில் இருந்து நைட்ரஜன் மற்றும் நீர்சத்து உப்புக்களையும் வேர்களுக்கு அளிக்கின்றன.

Pioppino mushrooms (agrocybe agegerita)

சக்கரை நோய் மற்றும் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு பியோபினோ காலான்களில் மருந்து தயாரித்து கொடுக்கப்பட்டதில் பயனளித்திருக்கிறது.

ஈஸ்டுகள் (yeasts) ஒற்றை செல் (யுனிசெல்லுலார்) உடையவை.  கண்ணுக்கு தெரியாத ஸ்போர்ஸ் (விதைகள்) மூலமாக சாதகமான ஈரப்பதமும் வெப்பமும் கிடைக்கும்போது பூஞ்சைகள் அல்லது பூஞ்சானங்கள் மைசீலியா எனும் மிக நுண்ணிய வேர் இழைகள் தரையில் ஊடுருவி படர்ந்து வளர்கின்றன.  

ஈஸ்டுகள் இல்லை என்றால் தயிர்,ரொட்டி, வெண்னை,கேக்குகள் பியர்,வைன் ஏன் தோசை,இட்லி கூட இல்லை தான்.

மைசீலியா(mycelia) மற்றும் ஸ்போர்கள் (spores) மண் மற்றும் பாறைகளில் இருந்து உயிர் சத்துக்கள் வெளிவரவும் உயிர்ச்சூழல் நிலவவும் முக்கிய காரணிகள். (மைசீலியத்தில் இருந்து கசியும் என்சைம்கள் மற்றும் அமிலங்கள் இதை செய்கிறது)

1929  அலெக்ஸாண்டர் பிளமிங் எதிர்பாராமல் கண்டுபிடித்த மருந்து பென்ஸிலின் பூஞ்சையில் இருந்துதான்.

காளான்களால் எப்படி உலகை காப்பாற்ற உதவ முடியும்?

அமெரிக்காவைச்சேர்ந்த(சேலம்) பால் ஸ்டமெட் (Paul Stamet) என்பவர் ஒரு பூஞ்சை ஆராய்சியாளர் (mycologist )  காலான் மற்றும் பூஞ்சைகள் குறித்த ஆராய்சி மேற்கொண்டு மைசீலியம் ரன்னிங் (mycelium Running) எனும் புத்தகத்தை 2005 ல் வெளியிட்டு உள்ளார். இந்த புத்தகம் உலகை காப்பாற்றுவதில் காலான்களின் பங்கு என்ன என்பதை பற்றி விரிவான தகவல்களை தருகிறது. (இன்னொரு புத்தகம் mushroom cultivator)

வாஸிங்டனில் பண்ணை (20 ஏக்கர்) அமைத்து கடல் கடந்து காளான்கள் வியாபாரம் செய்து வருகிறார் அது மட்டுமல்ல மைக்ரோ டெக்னாலஜிஸ்டுகளை கொண்டு காளான்கள் பற்றி விரிவான பல ஆராய்சிகளும் செய்து வருகிறார்.

அதில் முக்கியமான ஒன்று அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட நிலங்களைக்கூட காளான் மற்றும் பூஞ்சைகளால் கதிர்வீச்சின் தாக்கத்தை முற்றிலும் குறைக்க முடியும்; நீக்க முடியும் என்கிறார். ஜப்பானில் இது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது.

மனிதர்களுக்கு தீங்கு இல்லாத பூச்சி கொல்லியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்,ஸ்டமெட். சில வகை பூஞ்சானங்கள் ஸ்போர்கள் மூலமாக பூச்சிகளை அழிக்கிறது. (இது ஒருவகையான எதிர்ப்பு சக்தி) அப்படிப்பட்ட பூஞ்சானம் ஒன்று மெடரிஜியம் அனிசோபைல் (metarhizium anisopliae). இந்த பூஞ்சானங்களை அரிசியில் வளரவிட்டு ஆய்வு செய்தார். இது எறும்புகள் மற்றும் கரையான்களை கொல்கிறது.

பெட்ரோலியம் உண்ணும் காளான்கள்:


"வைட் ராட்” எனும் வெண் பூஞ்சை காளான்கள் (Pleurotus chrysoporium) பெட்ரோலியக் கழிவுகளில் உள்ள சிக்கலான ஹைட்ரோ கார்பன்களை நியூட்ரியஸ் கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றுகிறது. இந்த வகை காளான்களை கொண்டு எண்ணெய் நில மாசுக்களை குறைத்து பின் நீக்கமுடியும்.

கழிவு நீர் காளான்கள்:

மைசிலியல் கழிவுநீர் (mycelial wasterwater) சோதனையில் ஸ்ட்ரோபரியா (stropharia) எனும் காளான் வகை பரிசோதிக்கப்பட்டதில் இதை வளர்ப்பதால் சுற்றுப்புற சுகாதாரத்தை  பாதுகாக்கவும் பாக்டீரியல் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் முடியும் என்கிறார்கள்.


மைகோரெஸ்டோரேஸன் வளர்ப்பு கூடத்தில் வளர்க்கப்படும் ”சிங்க தாடி”  காளான்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு (உண்மையில் இது நோய் அல்ல !) மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் (antioxidants) தாயாரிக்க காளான்கள் பயன்படுகின்றன சில உதாரணங்கள்
மருந்து - காளான் வகை

கேனோமைசின் (ganomycin) - ரெய்ஷி
காம்பஸ்ரிடின் (campestrin)  - மெடோ
கால்வாஷின் (calvacin)           - ஜெயண்ட்

பறவை காய்சல் (H5N1 - bird flu), பன்றி காய்சல்களுக்கு(H1N1 - swine flu) காளான்களில் இருந்து மருந்து தயாரிக்கலாம்.

83 வயதான ஸ்டமெடின் தாய்,  மார்பு புற்று நோயால் தாக்கப்பட்டார்( stage IV) வழக்கமான மருந்துகளுடன் துருக்கி டெயில் காலானில் செய்யப்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டதில் குணமடைந்தார் என்பது வியப்பான விசயம். இந்த மருந்து வணிக பயன்பாட்டிற்கு வந்தால் அனேகம் பேர் பயன் அடைவார்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட புக்குஷிமாவில் ரோடியோ ஆக்டிவ் ஐசோடோபுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை மைகோரிஜல் பூஞ்சையை வளர்த்துதல் பயனளிக்கும் என்கிறார்கள். (nuclear forest recovery Zone ) நியூக்ளியர் காடு மீட்பு எனும் இந்த திட்டம் கடந்த ஆண்டுமுதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

எதிர்கால காளான் /பூஞ்சை வளர்ப்பு மற்றும் ஆய்வுகள் விரிவடையும் துறைகள்:


Environmental cleanup    பெட்ரோ கெமிகலால் பாதிக்கப்பட்ட ரேடியேஷன் பாதிப்பு அடைந்த நிலம் மற்றும் நீர்

Waste water filtration  சாயம் மற்றும் மருத்துவ கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் மாசை நீக்குதல்.

Pesticides உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் பாதிப்படைந்த நில மாசு நீக்கம்.

Medicines மருத்துவ ஆராய்சி நோய் எதிர்ப்பு மருந்துகள், சிமோதெரப்பி, வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.

Forestry காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் காளான்கள் மூலமாக நில மேம்பாடு பின் துரித மரவளர்பு

Agriculture கெமிக்கல் மருந்துகளை ஒழித்து மைகோர்ஜியல் பூஞ்சைகள் மூலமாக நிலமேம்பாடு மற்றும் புஞ்சை காளான் இயற்கை உரம்.

Biofuel காளான்களை கொண்டு பயோ எரிபொருள்

விண்வெளி பயணத்தில், விண்வெளி ஆய்வு கூட சோதனை, ரேடியேஷனை தாங்கும் பூஞ்சைகள், மண் வளப்படுத்த இப்படி பயன் படுத்தப்பட இருக்கிறது.

காளான் (mushroom)ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் புது வார்த்தைகள்:
mycorestoration, mycofiltration,mycoremediation, mycoforestry, mycopesticides

Monday, June 10, 2013

மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்

மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்.

மதுரை...பல பெருமைகளுக்கு உரித்தான இந்த மண் ஒவ்வொரு வகையிலும் தமிழனின் பெருமையை, உணர்வை ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்து கொண்டே இருக்கிறது.

மதுரைக்கே உரித்தான வட்டார பேச்சு மொழியும், நையாண்டியும், உணவுகளும், விழாக்களும் கொண்டாட்டங்களும் மற்ற பிரதேச காரர்களுக்கு ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, எப்போதும் புதிதாய் தோற்றம் தருகிறது, இந்த பழமையான நகரம்.

சமீபத்தில் ஒரு கல்வெட்டை நாயக்கர் அரண்மனையில் பார்க்க நேர்ந்தது. ( "நாயக்கர் மஹால் ” என மாற்றி அழைக்க வைத்தது யார்? ) ஆர்வத்துடன் அந்த கல்வெட்டு குறித்த வரலாற்றை தேட ஆரம்பித்தேன்.
ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்தன.

அந்த கல்வெட்டு ஒரு ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது. அவர் பெயர் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இவர் சென்னை மாஹானத்தின் ஆட்சியராக (1810-19) இருந்திருக்கிறார். தமிழ் ஆர்வம் காரணமாக இம்மொழியை கற்றுக்கொண்டார். அதோடுகூட திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரையும் எழுதியுள்ளார். (புத்தகம் பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை)

1819 ம் வாக்கில் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதை போக்க சென்னை பகுதியில் இருபத்தி ஐந்திற்கு மேற்பட்ட கிணறுகளை வெட்ட ஏற்பாடு செய்தார். அதில் ஒரு இடம் இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் கிணறு அங்கு பதிக்கப்பட்ட கல்வெட்டே நாயக்கர் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு.


இந்த கல்வெட்டில் என்ன எழுதி இருக்கிறது ? (முழுமையாக தெரியவில்லை)

புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
.......    .......  .........
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து''


மேற்படி கல்வெட்டை ஒரு ஆய்வின் போது கண்டறிந்து வெளிப்படுத்தியவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் அவர்கள் என அறிகிறோம்.

மேலும் எல்லிஸ் துரையின் கல்லறை திண்டுகல்லில் உள்ளதாக தெரிகிறது அந்த கல்லறையின் மீது பொறிக்கப்பட்ட வாசகம்

திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ்செப்பியருள்
குறணூறு ளறப்பாலினுக்குத்
தங்கு பலநூறு தாரண கடலைப் பெய்
திங்கிலீசு தனிலிணங்க மொழிபெயர்த்தோன்''


அவரின் தமிழார்வத்தை பறைசாற்றுகிறது.

கொசுறு தகவல் :

எல்லிஸ் தமிழை மட்டுமல்ல வடமொழியும் பயின்றார். ( வடமொழி = இந்தி அல்லது சமஸ்கிருதமாக இருக்கலாம்?!)

தொடர்புடைய பதிவு : மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம் 

Sunday, June 9, 2013

கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளைத் தேடி ( பகுதி 6)

கொங்குமண்டலத்தில் வாழ்ந்த பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்கள் கோவை, பேரூர் பகுதியில் முன்பு கிடைத்திருக்கின்றன. ஈமச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கது முதுமக்கள் தாழி இறந்தவர்களை இந்த தாழியினுள் வைத்து புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. (முதுமக்கள் தாழிகள் தொல்லியல் துறை வசம் உள்ளது)

இறந்து போன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக்கொண்டுள்ளனர். இப்படி உடன் கட்டை ஏறும் பழக்கம் கொங்கு பகுதியில் இருந்து இருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
அவர் வம்ச வழி வந்தவர்கள் இதற்கு அடையாளமாக கல்வெட்டுக்கள் அமைத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வந்துள்ளனர்.

சமீபத்தில் உடுமலையில் கிடைத்த கல்வெட்டு இதை உறுதி செய்கிறது. இது பற்றிய தினமணி நாளிதழில் (ஜூன் 7 2013 ) வந்த செய்தியை இங்கு பகிர்கின்றேன்.

“தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகள், ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு”

உடுமலை அருகே தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகளும் பெருங்கற்படை ஈமச் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியைக் கடந்து சம்பக்காட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவு நடந்து சென்றால் வரும் மலைவாழ் கிராமம் தளிஞ்சி. பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த ஊரில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை கல்வெட்டு ஆராய்சியாளர் து.சுந்தரம் தொல்லியல் ஆர்வலர் ஜான்சன் கொடுத்த தகவலின் படி தளிஞ்சியில் ஆய்வு செய்தார். அவர் தெரிவித்த தகவல்கள்.

தளிஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களின் நடுவில் ஓரிடத்தில் கல் சிற்பங்கள் சிதறிக் கிடந்தன. அருகே இரண்டு துண்டாக உடைந்த கல்வெட்டு வரிகளுடன் கூடிய பலகைப் பாறைக்கல் இருந்தது. 2 நந்தி சிலைகளும், ஒரு நாகர் சிற்பமும், நந்தியின் தலைப்பகுதிச் சிற்பமும் குவியலாகக் கிடந்தது. பெண் தெய்வ சிற்பம் மூன்றாக உடைந்து கிடந்தது. பீடத்தோடு கூடிய பாதப்பகுதி, தலை மற்றும் உடல் பகுதி கிடந்தது.  நந்தி சிலை கிடந்ததால் இங்கு சிவன் கோவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.





படங்கள் உடுமலை அருகே தளிஞ்சியில் காணப்படும் கல்வெட்டுகள்

இக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், தென் கொங்கு பகுதியை ஆட்சி செய்த வீர கேரள அரசனான வீர நாராயணன் அதிசய சோழன் காலத்துடையது என்பது தெரிய வந்தது.

பழங்காலத்தில் வட கொங்கு, தென் கொங்கு ஆகிய இரு பகுதிகளாக இருந்தது.  இவர்கள் சுயாட்சி பெற்று சோழர்களுக்கு கீழ்படிந்தவர்களாக ஆண்டனர்.  இடைக்காலச் சேரர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினர் என்ற கருத்தும் உண்டு.

தென் கொங்கு பகுதியில் வீரகேரளர்கள் கி.பி. 945 முதல் கி.பி 1200 ஆம்ஆண்டு வரை ஆட்சி செய்துள்ளனர்.  வீரகேரள அரசர்களில் முதன்மையான அரசன் வீரகேரளன் வீரநாராயணன். இவரது மகனே தளிஞ்சி கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரநாராயணன் அதிசய சோழன்.  இவர் கி.பி 990 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1021 ஆண்டு வரை 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

 இதிலிருந்து இக்கல்வெட்டின் காலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது.  ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளிலும் வீரகேரள அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில், நெல் கொடையாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இங்கு குழலூதும் சிலை, திருமால்சிலை ஆகியவை கிடைத்துள்ளன.

கிருஷ்ணன் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி சில சிற்பங்கள் அடங்கிய பலகைக் கற்கள் உள்ளன. இறந்து போன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக்கொண்டதைக் குறிக்கும் நினைவுக்கற்கள் இவை. மற்றொரு சிற்பம், வீரர் ஒருவருக்காக எடுக்கப்பட்ட நடுகல். இங்குள்ள கொண்டம்மா கோயில் அருகில் பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னம் காணப்பட்டது.  இக்காலத்தைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து, அந்த இடத்தில் நினைவுச் சின்னங்கள் அமைத்து முன்னோர்கள் வழிபட்டனர்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தளிஞ்சியில் மக்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளது இக்கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.  இப்பகுதியில் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் தெரியவரும்.

**************

கோவை பகுதியை ஆண்ட கொங்கு அரசர்கள் மற்றும் வரலாறு குறித்து  சில தகவல்களை சுவடுகளைத்தேடி எனும் தலைப்பில் முன்பு பதிவிட்டிருந்தேன்.

பதிவுகளுக்கு செல்ல சொடுக்கவும் -  சுவடுகளைத் தேடி ( பகுதி 5)

Thursday, June 6, 2013

தவளையின் உடலில் இருந்து...தோன்றிய முதல் மின் கலன்

மீச்சிறு தூண்டுதல் பல பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.

1800 ல் இத்தாலியன் இயற்பியலாளர் அலெஸாண்ரோ வோல்டா முதல் மின்கலனை (BATTERY) கண்டுபிடித்தார்.

அந்த முதல் பேட்டரி இதுதான்

இந்த பேட்டரி பார்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்ட குழாய்துண்டு போல் காட்சி அளிக்கும்.  சம அளவில் இருக்கும் வட்ட வடிவ தாமிர(copper) மற்றும் துத்தநாக(zinc) தகடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவற்றின் இடை இடையே உப்புத்தண்ணீரால் தோய்க்கப்பட்ட காகிதங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உலோகத்தகடும் கெட்டியான உலோக கம்பியால் இணைக்கப்பட்டு இருக்கும்.

இவர் இந்த பேட்டரி கண்டு பிடிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது இன்னொரு நிகழ்வு.

லூகி கால்வனியின் (Luigi Galvani) பரிசோதனை கூடத்தில், தாமிர கம்பியில் தொங்கவிடப்பட்ட ஒரு இறந்த தவளையின் காலருகில் கொண்டு செல்லப்பட்ட மெல்லிய இரும்பு தகடு அதன் காலில் அசைவை ஏற்படுத்தியது எப்படி ? என்ற சிந்தனையே வோல்ட்டாவிற்கு பேட்டரியை கண்டுபிடிக்க தூண்டுதலாக இருந்து இருக்கிறது.

இதே போல வோல்டா ஏற்படுத்திய முதல் மின் தூண்டல் பின்னாலில் 1821 ல் மைகேல் பாரடேவிற்கு மின்மோட்டாரை கண்டுபிடிக்க ஏதுவானது.


தொடர்புடைய பதிவு பாக்தாத் பேட்டரி

கொசுறு தகவல்

1951 ல் இடாஹோவில் ஆரம்பிக்க பட்ட நியூக்ளியர் அணு உலையில் கிடைத்த சக்தி 4 பல்புகளை மட்டுமே எறிய வைக்க முடிந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து கிடைக்கும் சக்தி உலக அளவில் 5 சதவீதமாகும்.
                                                                             ***

ஸ்காட்டிஸ் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஃபிளமிங்கோ விடுமுறையில் கவனிக்காமல் விட்டு சென்ற ஒரு ஆராய்ச்சியில் தோன்றிய ஸ்டாபைலோ ஹோக்கி என்ற (fungus) நொதியால் சுற்றியிருந்த பாக்டீரியா கிருமிகள் அழிந்து போயிருப்பதை கண்டார் இந்த நொதிப் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தே பென்சிலின். உலக அளவில் லட்சோப லட்சம் பேரின் உயிரை காக்கும் அரு மருந்து.

Tuesday, June 4, 2013

ஆச்சர்யமூட்டும் கடல் சுழல் ஆய்வுக்கூடம்


கடல் ஆராய்சியாளர்களுக்கென்றே பிரத்தியோகமாக வடிவாக்கப்படும் ஒரு கடல் சுழல் ஆராய்சிக்கூடம் "ஸீ ஆர்பிட்டர்”

ஸ்பேஸ் ஆர்பிட்டர் போல கடலினுள் செல்லும் படி வடிவமைக்கப்படும் ஒரு ஆய்வுக்கூடம் தான் "ஸீ ஆர்பிட்டர்”

அறிவியல்-காண் திரைப்படங்களில் காண்பதை நிஜமாக்கி வருகிறார்கள். 51 மீட்டர்கள் (சுமார் 167 அடிகள் நீளம்) உயரம் கொண்ட இந்த ஆய்வுகூடத்தினை வடிவமைத்தவர் பிரெஞ்சு கட்டட கலைவல்லுனர் ஜாகுவிஸ் ராக்ரி (Jacques Rougerie).

கடினமான கடல் சூழலிலும், கடல் நீர் அழுத்தத்திலும் இது பாதுகாப்பானது என்கிறார்கள். இயங்க‌ தேவையான மின்சாரம் காற்றாலை மற்றும் சூரிய சக்தியை கொண்டு பெறப்படும்.

இந்த ஆய்வுக்கூடத்தை கொண்டு கடலினடியில் ஆய்வு மற்றும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்போகிறார்கள்.

ஆரம்ப கட்டமாக மூன்று மீட்டர்கள் உயரமுடைய கடலாய்வுகூடத்தை நார்வே கடலில் வெற்றிகரமாக பரிசோதித்து விட்டார்கள். இதன் முழுமையான வடிவம் 2014 ல் கட்டி முடிக்கப்பட்டு, மொனாக்கோவில் முதல் பயணத்தை தொடங்கும். மெடிட்டேரியன் கடலில் ஆய்வு செய்து பின் இரண்டாண்டுகள் கல்ப் நீரோட்டத்தில் ஆய்வை தொடரும்.

இதன் பல்வேறு பாகங்கள் மற்றும் வடிவமைப்பை படத்தில் காணலாம்.




ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மற்றும் நாசா இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.