கோபால்சாமி துரைசாமி நாயுடு இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று அன்பாக அழைக்கப்ட்ட பல்துறைகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் ஊருக்கு வந்த சர்வேயர் (பிரிட்டிஸ்காரர்) ஒருவரின் மோட்டார் பைக்கை பார்த்து ஆசைப்பட்டு வீட்டை விட்டு கோவைக்கு வந்து ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்து மூன்று ஆண்டுகளில் ரூ.400 சேர்த்து வைத்தார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அதே பிரிட்டிஸ்காரரின் காலடியில் வைத்து தனக்கென சொந்த பைக்கை அவரிடம் இருந்து பெற்று அதை வைத்து பல ஆராய்சிகள் செய்தார். பின்னர் 1920ல் பஸ் போக்குவரத்து நிறுவனம் ( UMS ) ஆரம்பித்தார்.
இவர் வியத்தகு சாதனைகள் புரிந்த துறைகள் எலக்டிரிகல், மெக்கானிகல், விவசாயம் (வீரிய ஒட்டு ரகங்கள்), மற்றும் ஆட்டோமோபைல்.
கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்கள் எழுதிய சுய சரிதை நூலுக்கு முகவுரை எழுதி இருந்தார்
ஜெர்மனியிலிருந்து 25.8.1960 ல் ஜி.டி நாயுடு அவர்கள் எழுதிய அந்த முகவுரை யிலிருந்து சில பகுதிகள், அப்படியே தருகிறேன்
என்னை பொறுத்த வரையில் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவின் வழிகளையும் ஆலோசனைகளையும் கொண்டுதான் அப்பொழுதே எலெக்டிரிக் மோட்டார்களையும், ஷவர பிளேடுகளையும் உற்பத்தி செய்வதற்கும், இவைகளுக்கான இயந்திரங்களை செய்வதற்கும் ஆரம்பித்தேன்.
இங்கு செய்த இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட சவர பிளேடுகளுக்கு 1936 ல் ஜெர்மனியிலேயே முதல் பரிசு கிடைத்தது. இங்கு தயாரிக்கப்பட்ட எலெக்டிரிக் மோட்டார்கள், அலிப்பூரிலும், கிண்டியிலும் செய்த பரிட்சைகளில், மேலை நாடுகளில் செய்யப்பட்ட மோட்டார்களை விட சிறந்தவை என நிரூபனம் செய்யப்பட்டது.
சமீப வருசத்தில் ஒரு நாள் நான், திரு. ஆர்.வி. சுவாமிநாதன், மைசூர் ராஜ்ய முன்னால் தொலில் மந்திரி திரு. சித்தலிங்கையா ஆகிய மூவரும் சர். எம். விஸ்வேஸ்வரய்யாவின் வீட்டில் இருந்த போது, நாங்கள் சில கடிதங்களை படித்துக் கொண்டிருந்தோம். நாங்களெல்லோரும் மூக்கு கண்ணாடி உபயோகித்து படிப்பதை அவர் கவனித்து தானும் ஒரு பத்திரிக்கையை எடுத்து கண்ணாடியின் உதவியின்றி படிக்க ஆரம்பித்தார்.
பிறகு எப்படி அவரால் கண்ணாடி இல்லமல் படிக்க முடிந்தது என்று நான் கேட்டதற்கு, கண் பார்வையைச் சரிவர பாது காப்பதற்கு தினமும் விழியை இடது புறமும் வலப்புறமும் 70 தடவைகளும், மேலும் கீழுமாக 40 தடவைகளும் அசைத்து பிறகு கண் இமையை விரல்களினால் சில விநாடிகளுக்கு அழுத்தி விட வேண்டுமென்ற ஒரு எளிய பயிற்சியை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
இந்த முறையை விடாமல் அனுசரித்தால் கண்ணாடியின் உதவி இல்லாமல் படிபதற்கு உங்கள் கண்கள் எப்பொழுதும் தயாராக இருக்கும் என்றும் சொன்னார்.
மேலும் அவர் கூறியதாவது நல்ல ஓய்வும் தூக்கமும் பெறுவதற்கு தினமும் சில மைல்கள் நடக்க வேண்டும் வயிறு புடைக்கச் சாப்பிடாமல் தேவையான அளவு மாத்திரமே சாப்பிட வேண்டும். அதனால் நல்ல பசி ஏற்படும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது அற்ப சந்தோசங்களில் மன நாட்டம் கொள்ளாதீர். நீங்கள் இவைகளைப் பின்பற்றினால் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியளிக்கும்.
இப்பொன்மொழிகளை நான் மறக்க இயலாது. தினமும் அவர் இந்தப் பயிற்சிகளை செய்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.