Followers

Monday, October 15, 2012

பாடும் பறவைகள் [Song birds]









பாடும் பறவைகளை பறவைகளில் சிறப்பு தன்மை உடைய பறவைகள் எனலாம். 4500 இனங்கள் உண்டு. இந்த லிஸ்டில் காகம், நைட்டிங்கேல், அண்டங்காக்கை பொதுவானவை.




சில பாடும் பறவைகள் :
காகம், ஃபிஞ்சஸ்(Finches), லார்குகள், மோக்கிங்(mocking), நைட்டிங்கேல் (nightingales),அண்டங்காக்கை(Ravens), சிட்டுகுருவி(Robins), த்ரஸ்ஷஸ்(thrushes), தூக்கனாங்குருவி(weaver bird), வாப்ளர் (Warblers)


பாடும் பறவைகளின் சிறப்பு அவற்றின் தொண்டையில் இருக்கும் குரல்வளை (Syringers) அமைப்பு. இவைதான் இவற்றிற்கு சப்தமெழுப்ப உதவுகிறது.  வுட் த்ரஸ் என்று சொல்லப்படும் பறவையின் குரல்வளை அமைப்பு பிரமாதமானது ஒரே சமயத்தில் இரண்டு விதமான பாடல்களைப் பாடும்.( டூ இன் ஒன் !)

பறவைகளின் மூளையில் இந்த பாடல்களை கிரகிக்க ஒரு சிறப்பு பகுதி உண்டு. இது ஒரு பாடலை கற்றுக்கொள்கிறது. ஞாபகம் வைத்துக் கொள்கிறது.

பறவைகள் ஏன் பாட வேண்டும் ?


பெரும்பான்மையான ஆண் பறவைகள் சப்தமிட்டுப் பாடும் இது பெண் பறவைகளை ஈர்ப்பதற்குத்தான் (விசிலடிச்சான் குஞ்சுகள் ! )
நன்றாக பாடும் ஆண் பறவையே பெண் பறவைக்கு பிடிக்கும்.

பறவைக் குஞ்சுகள் பாடுவதற்கு தந்தைதாய் பறவைகளைப் பார்த்தே கற்றுக்கொள்கின்றன.

சாதாரணமாக நீங்கள் பார்க்கும் பறவைகளில் 10 க்கு 8 பாடும் பறவை.

பாடும் பறவைகளின் ஆயுள் 5 வருடங்களே. பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாக முட்டையிட்டு குஞ்சு பொறித்துவிடும். பாடும் பறவைகளின் முட்டை பத்து நாட்களில் குஞ்சு எட்டிப்பார்க்கும்.
பாடாத பறவை அல்பட்ராஸ் (Albatross) குஞ்சு பொறிக்க 80 நாட்கள் ஆகிறது.




வுட் த்ரஸ் (wood thrush)  மெலடியாகப் பாடும் புல்லாங்குழல் இசைப்பதைப் போல. அதன் பாடலை கேளுங்கள்..









ஸ்டார்லிங்ஸ் விநோதமான பறவை மற்ற பறவைகளின் குரல்களை காப்பியடித்து அப்படியே பாடும் திறமை கொண்டது.

இந்த காணொலியில் பழக்கப்படுத்தப்பட்ட பறவை கேட்கும் குரல்கள் சப்தங்களை ஒலித்துக் காட்டுகிறது. நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.



Download As PDF

Saturday, October 13, 2012

காத்திருப்பு...சுகமானதா ?



காத்திருத்தல் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை கற்றுத்தருகிறது ;அனுபவங்களை தருகிறது.

காத்திருப்பதை பலரும் வெறுக்கின்றனர் ஏன்?. இதற்கு முக்கியமான காரணம் இது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. சலிப்பைத் தருகிறது. காத்திருத்தல் நேர விரயம் ; இப்படி பல காரணங்களை அடுக்குகிறார்கள் காத்திருந்தவர்கள்.

காத்திருத்தலை காலை எழுந்ததிலிருந்து தினமும் பல சமயங்களில் அனுபவிக்கிறோம்.

பஸ்-சுக்காக, ரயிலுக்காக,விமானத்திற்காக,டாக்டரிடம், ஏன் டாய்லெட்டிற்காகக் கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது. இண்டர்வியுவில் காத்திருத்தலே முக்கிய அவதானிப்பு.

இரண்டு நிமிட காத்திருத்தலை தவிர்த்ததினால் வாழ்க்கையின் பெரும் இழப்புகளை சந்தித்தவர்கள் உண்டு.  பல மணிநேர காத்திருத்தலினால் சாதித்தவர்களும் உண்டு.

சில நொடிகள் கூட காத்திருக்காமல் கம்யூட்டர் முன் பல "ஷிட்" போடுபவர்கள் உண்டு.

அதே போல சில நொடிகள் சிக்னலுக்கு காத்திருக்காமல் விபத்து எனும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் அல்லது  சார்ஜென்டிடம் சிக்குபவர்களை தினம் தினம் பார்க்கலாம்.


எங்கேயும் "Q" தான். மொபைல் போனில் " யூ ஆர் இன் க்யூ" என்றாலே தரையை உதைப்பார்கள் ஒரு சிலர்.

ஜப்பானில் சுனாமி வந்தபோது வரிசையில் காத்திருந்து பொட்டலம் வாங்கி சென்றதை செய்தியாக போட்டார்கள் ஏன் நம்மவர்களுக்கு அதிசயமே "அப்படி ஒரு ஒழுங்கு, பொருமை "


எந்த காரியத்திலும் நாம் முதலில் நெகட்டிவாக சிந்திப்பதே காத்திருத்தல் கசக்க காரணம் என்று சொல்லலாம்.

என்ன சொல்றீங்க காத்திருத்தல் இனிக்குமா ? ஏன் இல்லை இதை தனது வருங்கால துணைக்காக காத்திருபவனிடமோ ;ளிடமோ கேளுங்கள் அந்த தவிப்பு அதன் பின் கிடைக்கும் சந்தோசத்தை அடுக்கடுக்காக சொல்லுவார்கள்.

குழந்தையின் பிறப்பிற்காக காத்திருக்கும் தாயின் சந்தோசம் பிரசவித்த பின் எல்லையற்றதாகிறது.  அது அவளுக்கு காத்திருத்தல் கற்றுக்கொடுத்த அனுபவம்.

ஓவியன்,இசைஞானி,கலைஞன்,கவிஞன்,விஞ்ஞானி,மாணவன்..நீங்கள், நானும் விரும்பும் மனப்பூர்வமான ரிசல்ட் வரும் வரை தான் உருவாக்கும் நிகழ்விற்காக காத்திருக் கிறான் ( ; காத்திருக்கிறோம்)

அப்படியானால் காத்திருத்தல் சுகமானது பின் ஏன் பல மன அலைக்கழிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது? .  அவரவர் மன பக்குவ நிலையை பொருத்ததே. வாழ்க்கையின் எக்ஸ்பீரியன்ஸே அந்த பக்குவத்தை நமக்கு அளிக்கிறது.  அந்த கஷ்ட சமயங்களில் இதுவும் கடந்து போம் என்றோ..?  இதுவும் நல்லதற்கே என்ற பாசிடிவ் எண்ணங்களை கைக்கொள்ள வேண்டும். எதையும் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவே...

சமீபத்தில் காத்திருத்தல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அந்த அரை மணி நேரத்தை எப்படி போக்குவது ? என்ற எண்ணம் என் மனதில் சும்மா எதையும் சிந்திக்காமல் வேடிக்கை பார்பது கூட நம் மனதில் பல தாக்கங்களை அனுபவங்களை ஏற்படுத்துகிறதோ ?

இன்னும் நேரம் இருக்கிறதே என்று மிக மெதுவாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் டக் கென்று வண்டியை நிறுத்தத் தோன்றியது.

அது ஒரு பூங்கா நுழைவாயிலின்  முன் இருபுறமும் பெரிய  மரங்கள் அம்மரங்களில் பல வெளவாள்கள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன இது கூட காத்திருப்பு தான் இரவில் தானே அவற்றிற்கு வேலை.

பள்ளிக்குழந்தைகள்  நுழைவு சீட்டுகளை வாங்கக் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கு வெயிலும் காத்திருத்தலும் ஒரு பொருட்டே அல்ல.

ஏனெனில் குதூகலமும்  ஆர்வமும் அவர்கள் மனதில். அக்குழந்தைகளின் குதூகலத்தை பார்க்கும் நாமும் அக்குழந்தைகளாக மாறிவிட ஏங்குகிறோம்.

பென்சன் வாங்கும் வயதானவர்கள் அந்த வெயிலிலும் ஓய்வில்லாமல் ஏதேதோ அரசு பாரம்களை எழுதிக்கொண்டும்,விவாதித்து கொண்டும் இருக்கின்றனர். ஏன் அவர்கள் ஓய்வெடுப்பதில்லை...

ரெப் வேலை செய்யும் இளைஞர்கள் போனின் அடுத்த காலுக்காக, உத்தரவுக்காக வெறுமனே அரட்டை அடித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்பு அவர்களுக்கு வேலை கொடுக்கிறது.

கார்ப்ரேசனில் ரோட்டை கூட்டி வேலை செய்யும் பெண்கள் மரநிழலில் ஓய்வெடுத்தபடி அடுத்த வேலைக்காக காத்திருக்கிறார்கள்.


ஒரு மொபைல் ஏடிஎம் வாகனம் கடந்து சென்றது. (டெக்னாலஜியில் எவ்வளவு முன்னேற்றம்)

சும்மா இருப்பதே சுகம் என சோம்பேறிகளும் ப்ளாட்பார ஓரங்களில் தூங்குகிறார்கள்.


ஒரு பைக்கின் முன் டூம் -விண்ட்ஷீல்ட் கண்ணாடியில் ஆங்கில வாசகத்தை செகுவேராவின் படத்தோடு எழுதி வைத்திருந்தான்.

 " ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் 
அவருக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமெடுக்காதே 
அவருக்கு வாழ்க்கை 
அவற்றை தாண்டிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது."

இப்படி பல காட்சிகள் விரிந்தன. இந்த காத்திருத்தலும்
இதை எழுதவும் என்னை தூண்டியது.
நமக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கிறது காத்திருத்தல்...,

(ஒரு கவிதை )


விருட்சத்திற்காக... விதையும்;

மலர்வதற்காக..மொட்டும்,

தென்றலுக்காக...கொடியும்;

தூரலுக்காக... துளிரும்;

விடியலுக்காக... இரவும்

தாயிற்காக.. குஞ்சும்;

எசமானருக்காக.. நாயும்;

விரல் மீட்டலுக்காக.. வீணையும்;
.....காத்திருக்கிறது.

காத்திருப்பாயா ?...
எனக்காக...நீ



Download As PDF

Friday, October 12, 2012

திமிங்கிலங்கள் [ whales ]


திமிங்கிலங்கள் [whales ] ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள். இது உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு. இவற்றில் 80 ரகங்கள் வகை பிரிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அல்லது மோபி டிக் Sperm whale -Moby dick

மிகப் பெரிய மூளையும், அதிக பற்களையும் கொண்டது.   இது 20.5 மீட்டர் நீளம் வளரக் கூடியது. மூன்று கிலோ மீட்டர்களுக்கு ஒரு டைவ்.  கடலின் அதிக ஆழத்தில் வசிக்கும் விலங்கு(7000 அடி).  அதிக சப்தம் எழுப்பும். I U C N ( International Union for Conservation of Nature )ஆல் ஆபத்தான மிருகம் என வகை படுத்தப்பட்டுள்ளது.


Pilot whale பைலட் திமிங்கிலம் / [killer whale]


இதன் நடவடிக்கை சட்டென பார்ப்பதற்கு டால்பின் போல தோற்றம் தரும்.
டால்பின் இனத்தோடு சம்பந்தப்பட்டது. கப்பல்களை தொடர்ந்து நட்பு முறையில் பழக்ககூடியது. 15நிமிட அதி வேக நீச்சலில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஸ்கிவிட் களை தின்பதற்கு பாயும். அதே வேகத்தில் மூச்செடுக்க கடல் மட்டத்திற்கு மேல் வரும்.
வயதான பெண் திமிங்கிலங்களுக்கு இதுதான் வழிகாட்டி.

பறங்கி தலை திமிங்கிலங்கள் [melon headed whale]

இவற்றிற்கும் பைலட் திமிங்கிலங்களுக்கும் தொடர்பு உண்டு. கடலில் பரவலானது. அவ்வளவு சுலபமாக பார்க்ககூடியது அல்ல ஏனெனில் கடலின் ஆழத்தில் வசிக்ககூடியது. அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும்  இதை பறங்கி தலை திமிங்கலம் என்கின்றனர். குடும்பமாக வசிக்ககூடியது. இதன் கூட்டத்தின் எண்ணிக்கை ஏறக்குறைய 100.

Bow head whale -Baleen

படகுதலை திமிங்கிலம். 200 ஆண்டு காலம் உயிர் வாழக்கூடியது நீண்ட பெரிய வாயை கொண்டது. 136 டன் எடை கொண்டது. நீலத்திமிங்கிலத்திற்கு அடுத்தபடியாக பேசப்படுவது. ஆர்டிக் கடற்பகுதியில் வசிப்பவை. உணவுகளை பற்களில் வடிகட்டி விழுங்கும் இந்த பற்கள் அமைப்பை ஆங்கிலத்தில் பேலென் என்கிறார்கள்.

Fin whale -Baleen

மீன் துடுப்பு திமிங்கிலம் 27 மீ நீளம் வளரக்கூடியது போலார் கடற்பகுதி மற்றும் பெரும்பாலான கடல் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது அருகிவரும் கடல் விலங்கு. 85 - 95 வருடங்கள் உயிர் வாழும். இதில் சிலவகை 140 ஆண்டுகள் வாழும்.


திமிங்கிலங்களுக்கும் மீன் இனத்திற்கும் சம்பந்தம் கிடையாது. மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள் இவை வெப்பரத்தப் பிராணிகள். மீன்களுக்கு செதில்கள் உண்டு. இவற்றிற்கு கிடையாது.  இவற்றிற்கு நுறையீரல் உண்டு. குட்டி போட்டு பாலூட்டுபவை.

ஒலியை கிரகிக்கும்(எக்கோ லோகேசன்) சிறப்பான உணர் உறுப்புகள் உண்டு இவற்றை கொண்டு கடலின் ஆழம் திசை இவற்றை கணிக்கிறது. புத்திசாலிகள். வடதுருவப்பகுதியில் வசிப்பவை குளிர் காலங்களில் நிலநடுக்கோட்டு பிரதேசங்களுக்கு இடம் பெயர்கின்றன. இதன் உடலமைப்பு கடும் குளிரையும் தாங்கக் கூடியது.

தூக்கத்தில் பாதி மூளை விழித்திருக்கும். இது ஆட்டோமேடிக்காக கடலின் மேல் தளத்திற்கு மூச்செடுக்க வந்து செல்ல உணர்ந்தும்.

நீலத்திமிங்கிலம் 30 மீட்டர் நீளம்(சரசரியாக 100 அடி) உடைய உலகின் பெரிய விலங்கு இதன் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.

நீலத்திமிங்கிலத்தின் இதயம் 600 கிலோகிராம் இருக்கும் இதன் இதயம்  நிமிடத்திற்கு பத்து தடவை மட்டுமே துடிக்கும் என்பது ஆச்சர்யமானது.

பிறக்கும் போதே குட்டி நீலத்திமிங்கிலம் 3 டன் எடையுடன் 9 மீட்டர் நீளம் இருக்குமாம். தினமும் 200 லிட்டர் தாய்பால் குடித்து நாளொன்றுக்கு 90 கிலோ சதை போடும். நீலதிமிங்கிலதிற்கு ஒரு நாள் இயக்கத்திற்கு, 1.5 மில்லியன் கலோரி சக்தி தேவைப்படுகிறது (மனிதர்களுக்கு 2500 கலோரி ! )


ஆண் ஹம்பேக் திமிங்கிலங்கள் பாடக்கூடியது. நீண்ட நேரம் சப்தமிட்டு பாடும்.  இதன் ஃபிரிகுவன்சி  20 முதல் 9000 ஹெட்ஸ் கொண்டது. அதாவது பியானோவின் மீச்சிறு நாதம்  போலவும் வெளிப்படுத்தும்.
190 decibels சப்தம் பல ஆயிரம் மைல்களுக்கு கேட்கும். ஒன்றுகொன்று ஒலி சமிங்சைகள் மூலம் தொடர்பு கொள்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக (மைக்ரேசன்) 20,000 முதல் 30,000 கடல் மைல்கள் பயணிக்கும். நீலத்திமிங்கிலங்கள் உலகையே வலம் வந்து விடுகின்றன.

உலக திமிங்கில பாதுகாப்பு அமைப்பு 1986 முதல் திமிங்கிலங்களை கொல்வது தடைசெய்தது. ஆனாலும் தொடர்ந்து இவை வேட்டையாடப்படுகின்றன. அண்டார்டிக் பகுதியில் 1963 சர்வேயின் படி 2,50,000 இருந்தன இன்று சில ஆயிரம் மட்டுமே உள்ளன. 17 - 18 ஆம் நூற்றாண்டுகளில் இதன் கொழுப்பு எண்ணையில் விளக்கு எரித்தார்கள்.

உணவுக்காகவும் கொழுப்பு எண்ணெய், எழும்புகளுக்காகவும் வேட்டையாடப் படுகிறது. இவற்றின் அடுத்த எதிரி மனிதனால் கொட்டப்படும் அணு கழிவுகள், கடல் மாசு(எண்ணை கழிவுகள்), சுற்று சூழல் பாதிப்புகள் இவை இவற்றின் அழிவுக்கு காரணம்.

சில கடற்கரைக்கு ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வதன் காரணம் தெரிய வில்லை.

மேலும் சில வகைகள் : fin whale, sei whale, humpback whale, Bryde’s whale, and minke whale.
கில்லர் திமிங்கில முத்தம்

திமிங்கிலம் குறித்து சில கேள்விகள் :

ப்ளப்பர் [blubber] என்பது என்ன ?

திமிங்கிலத்தின் உடலின் மேல் தோல் மற்றும் உடலின் சதைப்பகுதிக்கும் இடைப்பட்ட  கொளுப்பு பகுதியே ஆங்கிலத்தில் ப்ளப்பர் என்கிறார்கள்.  இதன் உடலை வெப்பமாக வைத்துக் கொள்ளவும் நீரில் மிதக்கவும் உதவுகிறது.

திமிங்கிலங்கள் குடும்பமாக வசிக்குமா ?

பொரும்பான்மையான இனங்கள் குடும்பமாகவே வசிக்கின்றன. கூட்டங்கூட்டமாக வசிக்கும் இவற்றை ஆங்கிலத்தில் போட்ஸ் [pods] என்று சொல்கிறார்கள். இனப்பெருக்கத்திற்காக இடம் விட்டு இடம் பெயர்கின்றன [மைக்ரேசன்]

மீனின் வாலிற்கும் திமிங்கில துடுப்பிற்கும் (Flukes) வித்தியாசம் உண்டா ?

வடிவத்தைப்பார்த்தால் ஒன்று போலவே தோன்றும். மீன் முன்னே நீந்தி செல்ல வால் பகுதியை இடது வலதாக அசைக்கும். திமிங்கிலங்கள் மேலும் கீழுமாக அசைக்கும்.

(Blow holes) ஊது துளைகள் எதற்கு ?

திமிங்கிலத்தின் தலைபகுதியில் உள்ள ஊது துளைகள் திமிங்கிலங்கள் சுவாசிக்கும் உறுப்பு. நீர் மட்டத்தின் மேல் பகுதிக்கு வரும் திமிங்கிலன்கள் காற்றை ஊதி உறிஞ்சும் போது நீருற்று கிளம்பும். இதை அடையாலம் கண்டே வேட்டை ஆடுகிறார்கள். 
Download As PDF

Thursday, October 4, 2012

தூங்கா நகரங்களின்...தூங்கா மனிதர்கள்


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே...

எவ்வளவு வாஸ்தவமான வார்த்தை வரிகள். ஒரு மனிதனுக்கு தூக்கம் மிக மிக அவசியமான ஒன்றே.  தூக்கம் இல்லாமல்  எவ்வளவு நாட்கள் ஒரு மனிதன் இருக்கமுடியும் ?

1964-ல் ராண்டி என்ற மாணவனால் நிரூபிக்கப்பட்ட தூக்கமற்ற நேரம் அதிக பட்சமாக 264 மணிகள்,15 நிமிடங்கள் சராசரியாக 11 நாட்கள்.   அதன் பின் அவனது விடாத நித்திரை 15 மணி நேரங்கள் நீடித்தது. இது நிகழ்த்தப்படுவதற்கு  முன் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லை என்றாலே  புத்தி சுவாதீனம் இல்லாமல் போகும் என்று கருதப்பட்டது.  இருப்பினும் தூக்கமின்மை மனிதனை பல உடல் மற்றும் மன ரீதியான இக்கட்டுகளை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

சரி ஒரு நாளுக்கு தூக்கம் எவ்வளவு மணிநேரம் அவசியம் ? சராசரியாக 8 மணிநேரம் இது அவரவர் பழக்கம் மட்டும் உடல் அமைப்பைப் பொருத்தது.  இந்த எட்டுமணிநேரம் பெரும்பாளானவர்களுக்கு இப்போது 7 மணியாக குறைந்துவிட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.  இதிலும் பெண்களுக்கு ஆண்களை விடவும் அதிக தூக்கம் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு; டீனேஜர்களுக்கு இன்னும் நீண்டநேரம் 9 மணிமுதல் 10 மணி நேரங்கள் தேவைப்படுகிறது.  ஆரோக்கியமான தூக்கம் குழந்தைகள் ஞாபக சக்தியை கூட்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தூங்கும் போது என்ன நடக்கிறது ? (தூக்கத்தில் நடப்பவர்களை சொல்லவில்லை) கண்ணை மூடுகிறோம் 5 அல்லது 7 நிமிடங்களில் உங்கள் மூளை தூங்குவதற்கான கட்டளையை செயல் படுத்த வேண்டும். சரி தூங்கிவிட்டோம் அதன் பிறகு தூக்கத்தைப் பல கட்டங்களாக பிரிக்கிறார்கள். மேல் நினைவு படிப்படியாக செயல் பாட்டை குறைத்துக் கொள்கிறது. மூச்சின் வேகம் ஒரு கட்டுப்பாட்டில் சீராக செல்கிறது. ஆழ்ந்த ஆரோக்கியமான தூக்கம் கனவுகளையும் உள்ளடக்கியது. ஞானிகளும் இதிலிருந்து தப்பமுடியாது. ஆழ்ந்த தூக்கத்தில் நடக்கும் கனவு பெரும்பாழும் ஞாபகம் இருக்காது. தூக்கம் நிகழும் போது ஹார்மோன்களால் உடல் முழுக்க இது உணர்த்தப்படுகிறது. ரத்த செல்களின் புதுப்பித்தல் நடக்கிறது.
ஆழ்மனம் விழித்திருக்கும் என்று சொல்கிறார்கள்.

ஆழ்ந்த தூக்கம் என்பது தூக்கத்தின் நடுவில் எழுந்திருக்காமையையே குறிக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நித்திரை விழிப்பு ஏற்பட்டு விடுகிறது. உலகம் மறந்த மிக அயர்ந்த தூக்கம் 90 நிமிசங்கள் நீடித்தாலே நல்ல தூக்கத்தை உணர முடியும்.

மூளை நினைவலைகளை CPS [Cycles per Second] எனும் அலகால் குறிப்பிடுகின்றனர். விளித்திருக்கும் போது இவ்வலையின் அளவு 14 CPS மற்றும் அதற்கு மேலும் இருக்கும்.

கவலை,மன அழுத்தம், எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு, ரத்தகொதிப்பு, நீரிழிவு, மறதி, மனோவியாதி,தலைவலி போன்ற உடல் நிலை பாதிப்புகளுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணம்.

அமெரிக்கர்களில் 60 சதவீதம் போர் தூக்கமின்மையினால் அவதிபடுகின்றனர் என்பது சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ள முடியாது. (இந்தியாவில் எவ்வளவு சதவீதம்? தெரியவில்லை)
சரிவர தூக்கம் இல்லாமல் போவது உற்பத்தி மற்றும் உடலுழைப்பு பாதிப்புகளை பொருளாதார ரீதியில் பாதிக்கிறது.  குடித்துவிட்டு விபத்து ஏற்படுவதைவிடவும் தூக்க பாதிப்பினால் அநேக விபத்துகள் ஏற்படுகிறது. [இரவு காரில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்தல் நலம்.]

2008ல் என்று நினைக்கிறேன், வோல்வோ கம்பெனி வண்டிகளில் கேமரா பொருத்தி டிரைவர் தூக்கத்தால் தடுமாறும் நிலையில், ஸ்டீரிங் கட்டுப்பாடு தவறும் பட்சத்தில் அலாரம் அடித்து உசார் செய்யும் படியான ஒரு சிஸ்டத்தை நிறுவினர். [ இந்திய ரோடுகளுக்கு இதெல்லாம் ஒத்துவராது ? ]

தூக்கம் அற்று அவதிப்படுவோர் சும்மாவானும் படுக்கையில் படுத்து உருள்வதில் பிரியோசனம் இல்லை. அவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தையோ அதிக சப்தமில்லாமல் சற்று நேரம் டீவி பார்பதையோ, மெல்லிசையோ கேட்கலாம் ஆனால் தூக்க மாத்திரைகளை போட்டுக் கொள்வதை தவிர்க்கவேண்டும்.

தூக்கம் அரோக்கிய உடல் நிலை மற்றும்  சமச்சீரான உடல் இம்யூனல் சிஸ்டத்திற்கு அவசியம்.

நித்திரை வராமல் போவதற்கு பல காரணிகள், மனரீதியான காரணம், படுக்கை,படுக்கைவிரிப்புகள்,தலயணை சரியில்லாதது, ரூமில் அதிக வெப்பம் அல்லது குளிராக இருப்பது, சிறு குழந்தைகள் விழித்து தொந்தரவு (குறிப்பாக பெண்களுக்கு), இருமல், குரட்டை(மற்றவர்களுக்கு)பொருளாதார நெருக்கடி, கோபம்,கவலை, தூங்குவதற்கு முன் காபி, மது, புகைத்தல்..சொந்தபிரச்சினை, சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்வது, வயதாகிப்போதல்...இப்படி பல காரணங்கள்.

துணையினால் குரட்டை தொந்தரவு என்று சொல்பவர்கள் விவாகரத்து கோராமல் காதில் பஞ்சை அடைத்து வைத்து கொண்டு தூங்குவது சிறந்தது.

தூக்கத்தின் இடையில் விழிப்பு ஏற்பட்டு பின் தூக்கம் வராமல் போவது. இது பெரும்பாழும் நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது.

மனிதன் தூங்கும் நிலைகளை வைத்து  இவருக்கு இன்னின்ன குணநலன்கள்  கொண்டவர் என்று கணிக்கிறார்கள்.

கடைசியாக... குட்டித்தூக்கம் (அ) பகல் தூக்கம் (அ) பூனைத்தூக்கம் அவசியமா ? அவசியமே இதனால் உடலுக்கு புது தெம்பு கிடைக்கிறது. பகல் தூக்கம் வெயிட் போட்டுரும் என்பதும் சரியே.

மீன்கள் கூட தூங்குகின்றன. டால்பின்கள் ஒன்னரை கண் தூக்கமும் போடுகிறது. யானை நின்னுகிட்டே தூங்கும்.

==========================================================
தூக்கத்தின் எதிரிகள் லிஸ்டில் விட்டு போனவை மூட்டைப்பூச்சி, கொசு தொந்தரவு, மின்சார துண்டிப்பு...

ஓட்டு போடும் எந்திரன் : அப்ப இதுக்கெதிரா அரசு மீது வழக்கு போட முடியுமா ?

போடலாம் தான் ஆனா...ஹாவ்...ஹாவ்
வழக்காடுபவரும்..நாட்டாமையும்
தூங்காம இருக்கோனுமே !

அமெரிக்காவுல மூட்டைப்பூச்சி எதிரிப்பு இயக்கம் [ஜெயின்ட் பெட்பக்] ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்களாம் இவங்க மூட்டைப்பூச்சியை ஒழிப்பது எப்படின்னு பயிற்சி கொடுக்கராங்க. அது மட்டுமில்ல மூட்டைபூச்சி மற்றும் முட்டைகளை தேடி ஒழிக்க நாய்களை பழக்கி வாடகைக்கு விடுராங்களாம். ...அவ்...நம்ம நடிகர் வடிவேல் கிட்ட ஐடியா கேட்காம விட்டுட்டாங்களே..!
======================================================
Download As PDF

Monday, October 1, 2012

கண்ணதாசனின் நகைச்சுவைகள்..[ஜோ...க்...ஸ்]


திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை  "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"  நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள்.  "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.


அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான்  " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத் தூங்க வைத்தாள்.

கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ?  பாசம் என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே !

கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே !

********************************************************************
இல்லற இன்பம்

பாகவதர் : கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...

சிஷ்யன் : ஏன் ?

பாகவதர் : என் மனைவி பெயர் கல்யாணி...

*******************************************************************
பகுபதம் !

வெள்ளைச் சாமி ஒரு நாள் பொதுக் கூட்டத்திற்கு போயிருந்தார். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது ;

"ஒரு பச்சை யானை வெள்ளை முட்டை போட்டது. அதிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு வெளிவந்து, ஒரு சிங்கத்தை கொன்று விட்டது. அந்தச் சிங்கம் ஒரு யானையின் உயிரை வாங்கிக் கொண்டு மீண்டும் வந்துவிட்டது...."

அவர் பேச்சை கேட்ட வெள்ளைச்சாமி பக்கத்தில் இருந்த நண்பரிடம் " இவர் யார் ?" என்று கேட்டார்.

இவர் தான் பெருவாரியான வோட்டுகளில் ஜெயித்த எம்.எல்.ஏ " என்றார் நண்பர்.

*************************************************************************
கணக்கில் வராத பணம் !

ஊரெங்கும் கருப்புப் பணம், கருப்புப் பணம் என்று பேசிக் கொண்டார்கள்.
வெள்ளைச்சாமிக்கு அது என்னவென்று புரியவில்லை.

அவரி கையில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கட்டு ஒன்று இருந்தது.

அதிகாரி ஒருவரைப் பார்த்து " ஐயா..கருப்பு பணம் என்றால் என்ன? என்று கேட்டார்.

கணக்கில் வாராத பணம் ...என்று சொன்னார் அதிகாரி.

வெள்ளைச் சாமி தன்னிடம் இருந்த ஒரு ரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். மொத்தம் தொண்ணூற்றொன்பது ரூபாய்தான் இருந்தது.

ஓஹோ...ஒரு ரூபாய் கருப்புப் பணம் போலிருக்கிறது..! என்று முணுமுணுத்தார் வெள்ளைச்சாமி.

************************************************************************
வாக்குச்சீட்டின் மகிமை !

ஒரு அரசியல் கூட்டத்திற்குப் போய் அமைதியாக உட்கார்ந்தார், வெள்ளைச்சாமி.  பேசத்தொடங்கிய ஒருவர்  " தாய்மார்களே...! " என்று ஆரம்பித்தார்.

"நிறுத்தையா...என்று கத்தினார் வெள்ளைச்சாமி.

உனக்குக் கொஞ்சமாவது மானம்..வெட்கம்...இருக்குதா ?

இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் அசிங்கமாகப் பேசுகிறாயே..!

"தாயே.." என்று கூப்பிடுங்கள் என்றார்.

****************************************************************************
பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம்  ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

****************************************************************************
நீங்கள் வருவீர்கள் !

வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி "மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும் என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார். அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார் கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார் அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார். பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார். பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார்.   நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் : நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!

*******************************************************************************

ஞானத் தொழிற்சாலை

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.   பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!  ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....

*******************************************************************************

Download As PDF

Friday, September 28, 2012

காப்பாற்றப்படும் ஸ்லவுத் -அழிவின் நிலை விலங்கு



மத்திய மற்றும் தென் அமெரிக்கக் காடுகளில் வளரும் ஸ்லவுத் [Sloth] எனும் இவ்விலங்கு ஒரு மந்தமான விலங்கு. சட்டென பார்க்கும் போது நம்மூர்  தேவாங்கு [குரங்கு] போல் இருக்கிறது.


இதன் பெயருக்கு ஏற்றார் போல் இது ஸ்லோதான்.  மில்லியன் ஆண்டு களில் எப்படியோ தப்பி பிழைத்து வந்த அரிய விலங்கு இனம் இது.  இதன் அழிவுக்கு பேராசையும் சுயநலமும் மிக்க மனிதர்களே காரணம்.
இது மரங்களின் மேலேயே  வசிக்கிறது. மிகவும் சாதுவான விலங்கு.
அதிலும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் இலைகளை மட்டுமே சாப்பிடுகிறது.  இந்த இலைகளை வயிரார இது சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இதனுடைய செரிமான அமைப்பு அப்படி.

இது மரத்திற்கு மரம் தாவுவதில்லை மரத்தின் மேலும் கீழுமே இயங்கும்.கால்களில் பாவ் என்று சொல்லப்படும் விரல் அமைப்பு இல்லை நீண்ட மூன்று நகம் போன்று இருக்கும்.

நகர மயமாக்கல்; காடுகளை அழித்தல்; சாலைகளை அமைத்தல் போன்ற காரணிகள் இந்த விலங்கு இனத்தையும் அழிவுக்கு கொண்டு சென்றது.
மரங்களை வெட்டி அழிக்கும் போது மேலிருந்து விழுந்தே பல இறந்து போயின.

இதனுடைய சோம்பேரித்தனமான தோற்றம் மற்றும் நடவடிக்கை மனிதனை கவரவில்லை.  இல்லை யென்றால் இதை வளர்ப்பு பிராணியாக வளர்த்திருப்பர்.

ஒரு கட்டத்தில் இந்த இனம் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது.


20 வருடங்களுக்குமுன் [1992] ஒரு நாள் நோய் வாய் பட்ட  ஒரு பெண் குட்டி ஏதேச்சையாக குழந்தைகளால் காப்பாற்றப்பட்டு ஜுடி ஏவி எரோயோ எனும் பெண்மணியிடம் சேர்க்கப்பட்டது அதற்கு முதல் உதவி; மருத்துவம் செய்து காப்பாற்றினார்.


அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த விளங்கிற்கென கோஸ்டோரிக்காவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விலங்கிற்காக ஒரு சரணாலயம் அமைத்தார் ஜுடி. செல்லப்பிராணியாக குழந்தைபோல் தேவையான கவனிப்புகளுடன் இங்கு இவை வளர்க்கப்படுகின்றன.


ஸ்லவுத் பாது காப்பு மற்றும் வளர்ப்பு மையத்தில் இவைகள் குட்டியிலிருந்து உணவு கொடுத்து பராமரிக்கப்படுகின்றன. சிறந்த மருத்துவ கவனிப்புகளுக்கு உட் படுத்தப்படுகின்றன. அடிபட்ட இவ் விலங்குகளும் இங்கு பராமரிக்கப்பட்டு பின் காட்டில் விடப்பட்டுகின்றன.

குட்டிகள் நன்கு வளர்ந்த நிலையில் [ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர்] இவை சுயமாக காட்டின் சூழ்நிலையை புரிந்து கொண்டு வளர கற்றுக் கொடுக்கப்படுகிறது. பின் இவற்றை அந்த காட்டு பகுதியில் [லிமோன்] விடப்படுகிறது.

இப்பகுதியில் இவற்றின் தற்போதைய எண்ணிக்கை நூற்றைம்பது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.


Download As PDF

Monday, September 24, 2012

மனச்சிறகு தந்த மு. மேத்தா கவிதைகள்


மனச்சிறகு எனும் கவிதை தொகுப்பு மு.மேத்தா அவர்களால் எழுதப்பட்டது இப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1978 வெளிவந்தது.
இதை இப்போது படித்தாலும் புதிது போலவே இருக்கிறதுஇதைப் படிக்க கவிதை பற்றிய ஞானம் வேண்டியதில்லை அவ்வளவு எளிமை.
கவிதை எனக்குப் பிடிக்காது என்பவர்களும் இவற்றைப்படித்தபின்
கவிஞர்களாக மாறினாலும் ஆச்சர்யமில்லைஅப்புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை இங்கு பதிவேற்றியுள்ளேன்.

எளிய வார்த்தைகளை அவர் கையாண்ட விதம், எதுகை மோனை முக்கியமாக சந்தம் இன்றைக்கும் இக்கவிதையை புது மெருகோடு நம்மை வரவேற்கிறது.

ஞான ஜனனம்

ஆசைமீது மேடைகட்டி
மேடைமீது ஆடைகட்டும்
வேசையோடு பழகும்போது
            தோனும்-பெண்மை
            வீசைவிலை என்ன வென்ற
            ஞானம் !

சொத்து வைத்த மெத்தைமேனிப்
புத்தகத்தில் வித்தைகற்றுப்
பத்துப்பிள்ளை பெத்தபின்பு
            தோனும் - கட்டுப்
            பாடு கொஞ்சம் வேணுமென்ற
            ஞானம் !
நண்பரோடு அன்புசெய்து
என்புருகப் பழகிவிட்டுத்
துன்பமுறும் போதுவந்து
            தோனும் - நட்பு
            தோள் கொடுப்பதில்லையென்ற
            ஞானம் !

கையிருப்பைத் தீர்த்துவிட்டுக்
கால்நடக்கும் பாதையிலே
பொய்யிருப்பைக் காணும்போது
            தோணும் - பணத்தைப்
            பூட்டிவைக்க வேண்டுமென்ற
            ஞானம் !

கொள்கை கொள்கை என்று சொல்லிக்
கூத்தடித்து மேடைகளில்
துள்ளிவிட்டு ஓய்ந்தபின்பு

            தோணும் - வாழ்க்கை
           சொல்லுவதுபோல் இல்லையென்ற
           ஞானம் !

================
ஆயிரங் கோடி மனித மனங்களில்
ஆசை அழிகிறது
அதுதான் கவிஞன் நெஞ்சில் புகுந்து
கவிதை பொழிகிறது

பாயும் கண்ணீர் நதிகளில் வாழ்க்கைப்
படகுகள் தெரிகிறது
பகலும் இரவும் அதுதான் எனக்குப்
பாடலைத் தருகிறது !

நெருப்பில் நீந்தும் பாடகன் வந்தேன்
நின்றால் சில சொல் கின்றேன் - நீங்கள்
சென்றால் பின் தொடர் கின்றேன் !

====================

நான் சொல்லிக்கொள்வது இதுதான்
என் பழைய தவறுதல்களுக்காக நான் புதிதாக
வருத்தப்பட வேண்டியதில்லை - அவை தவறுகளாக
இருந்தால்,
என்னுடைய பழைய சாதனைக்களுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் அவை சாதனைகளாக இருந்தால்.

1978 - மனச்சிறகு முதல் பதிப்பில்;
=======================================

அமைதியைத் தேடி

தன்னந்தனித்தீவில்
தமிழ்க் கவிதை நூல்களுடன்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும்

உண்ணக் கனிவகைகள்
உறங்கிவிழ மர நிழல்கள்
எண்ணக் களஞ்சியத்தை
எழுதிவைத்த புத்தகங்கள்

வீசும் இளங்காற்று
விசிறிவிடத் தென்னைமரம்
ஆசைப் பறவைகளின்
அன்றாட புதுகீதம் !

போதும் இவை எனக்கு
போய்விடட்டும் என்கப்பல்
ஏதும் துயரமில்லை
எள்ளளவும் துன்பமில்லை!

வாழ்க எனும் வாழ்த்து
வாராத பூமியது !
வீழ்க எனும் முழக்கம்
மேவாத சீமை அது !

வஞ்ச மனமுடைய
மனிதர்களின் காற்சுவடு
நெஞ்சை மிதிக்காத
நிம்மதியின் இல்லமது !

ஆர்த்து முரசொலிப்போர்
அங்குவர மாட்டார்கள்
பார்த்துக் கெடுப்பவர்கள்
பக்கம் வர மாட்டார்கள் !

தன்னந் தனித் தீவில்
தடமறியாத் தொலைத்தீவில்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும் !

போதும் உலகோடு
போராட்டம் செய்ததெல்லாம்...
மீதம் எதுமிலை
வேண்டியது தனிமைநிலை!

தன்னத் தனித்தீவில்
தமிழ்க் கவிதை நூல்களுடன்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும் !

=======================

நாடும் நாமும்

எட்டுத் திட்டம் போட்டு விட்டு
எட்டி எட்டிப் பார்த்துவிட்டு
ஏங்குகிற நாட்டினிலே
வாழ்கிறோம் - பசி

இட்டு விட்ட கட்டளைக்குச்
சட்ட திட்டம் யாவும் விற்றுக்
கெட்டுவிட்ட காரணத்தால்
தாழ்கிறோம் !

கட்டுக் கட்டு நோட்டடித்துக்
காரு சீரு பேரு வாங்கிக்
கதையளக்கும் சிலரையிங்கு
பார்க்கிறோம் - இதைக்

கட்டு செய்து வெட்டிவிட்டுக்
கதைமுடிக்க உதைகொடுக்கக்
கைவலிமை இல்லையென்று
வேர்க்கிறோம் !

மொட்டு மொட்டுப் பூக்க ளொத்த
முல்லை இளம் பிள்ளை களின்
முன்பு வருங் காலமென்ன
ஆவது ? - இந்த

முட்டுக் கட்டைக் கூட்டத் திற்கும்
முட்டுக் கொடுத்தே நிறுத்தும்
முட்டி உடைக்காமலா நாம்
போவது ?


=======================
கவிதை எப்போதும் கவிதைதான்அதில் புதிது
பழையது இல்லை. கவிதையாக இருந்தால்
அது ஒரு போதும் பழையதாவத்தில்லை.

=====================
புதிதாக்ப் பார்ப்பவனும் புதிதாக்கிச் சொல்பவனும்
தான் கவிஞன்.
================

மனச் சிறகு

உன்னுடன் வாழாமல்
உனக்காக வாழ்கிற பேதை - நான்
உன்னை நினைத்திந்த
மண்ணில் தவம் செயும் சீதை !

சூரியன் பாதையில்
சுற்றும் முகமலர் நெருஞ்சி - நான்
ஆருயிர்க் காதலன்
பேர்சொல மலர்ந்திடும் குறிஞ்சி!

தேர்வரும் வீதியில்
ஊர்வலம் காண்கிறேன் நெருங்கி - உன்
பார்வையில் வாழ்ந்திடும்
பாவனை கொள்கிறேன் மயங்கி !

உன்னுடன் வாழாமல்
உனக்காக வாழ்கிற பேதை - நான்
உன்னை நினைத்திந்த
மண்ணில் தவம் செயும் சீதை !

=--=======================
ஒரு கவியரங்கத்தில் கவிஞர்களுக்கு வாழ்த்துப்பா ..

முல்லைமலர் அல்லிமலர் மல்லி கைப்பூ
முத்துமலர் அத்தனையும் மொத்தம் சேர்த்து
மெல்ல மெல்லத் தொடுத்திட்ட மாலை போல
மேடையிலே பாப்பூக்கள் மலரச் செய்து

வெல்ல வெல்ல நல்லநல்ல கவிதை தன்னை
வீற்றிருக்கும் தோழரெல்லாம் பாடினார்கள்!
கொள்ளை கொள்ளை மகிழ்ச்சியிலே - இவர்கட் கெல்லாம்
கொடை கொடுக்கத் துடிக்கின்றேன் ; எதுவும் இல்லை!

பாரியைப்போல் நானிருந்தால் - இவர்கட் கெல்லாம்
பல்லக்கு தேர்யானை பரிசளிப்பேன்!
ஓரியெனும் மன்னவனாய் இருந்தால் - வில்லால்
உலகத்தை வென்றிவர்க்கு கொடை கொடுப்பேன் !

என்னிடத்தில் தமிழன்றி எதுவும் இல்லை!
ஏழைமகன்! என்ன செய்வேன்? குமணன் போல
என்னுடைய தலை கொடுக்கவருவேன் - ஆனால்
விலை கொடுக்க எவர் வருவார் ? ஆகையாலே

வார்த்தைக்குப் பஞ்சமில்லை; இருப்புத் தீர்ந்து
வற்றிவிடப் போவதில்லை ! எவரும் இங்கே
பாத்தியதை கொண்டாடி வழக்குப் போட்டுப்
பகைத்திருக்கப் போவதில்லை! ஆதலாலே

 நேர்த்தியுடன் பாடிய இக் கவிஞர் தம்மை
நெஞ்சாரப் போற்றுகிறேன் வாழ்த்துகின்றேன் !

கீர்த்தியுடன் என்குலத்துக் கவிஞர் வாழ்க
கிளர்ச்சியுடன் செந்தமிழ்த்தாய் வளர்ச்சி சூழ்க!
======================================


தமிழக அரசு இவருக்கு வழங்கிய விருதுகள் :

பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)

இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’ 
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)