மனச்சிறகு எனும் கவிதை தொகுப்பு மு.மேத்தா அவர்களால் எழுதப்பட்டது இப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1978 வெளிவந்தது.
இதை இப்போது படித்தாலும் புதிது போலவே இருக்கிறது.
இதைப் படிக்க கவிதை பற்றிய ஞானம் வேண்டியதில்லை அவ்வளவு எளிமை.
கவிதை எனக்குப் பிடிக்காது என்பவர்களும் இவற்றைப்படித்தபின்
கவிஞர்களாக மாறினாலும் ஆச்சர்யமில்லை. அப்புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை இங்கு பதிவேற்றியுள்ளேன்.
எளிய வார்த்தைகளை அவர் கையாண்ட விதம், எதுகை மோனை முக்கியமாக சந்தம் இன்றைக்கும் இக்கவிதையை புது மெருகோடு நம்மை வரவேற்கிறது.
ஞான ஜனனம்
ஆசைமீது மேடைகட்டி
மேடைமீது ஆடைகட்டும்
வேசையோடு பழகும்போது
தோனும்-பெண்மை
வீசைவிலை என்ன வென்ற
ஞானம் !
சொத்து வைத்த மெத்தைமேனிப்
புத்தகத்தில் வித்தைகற்றுப்
பத்துப்பிள்ளை பெத்தபின்பு
தோனும் - கட்டுப்
பாடு கொஞ்சம் வேணுமென்ற
ஞானம் !
நண்பரோடு அன்புசெய்து
என்புருகப் பழகிவிட்டுத்
துன்பமுறும் போதுவந்து
தோனும் - நட்பு
தோள் கொடுப்பதில்லையென்ற
ஞானம் !
கையிருப்பைத் தீர்த்துவிட்டுக்
கால்நடக்கும் பாதையிலே
பொய்யிருப்பைக் காணும்போது
தோணும் - பணத்தைப்
பூட்டிவைக்க வேண்டுமென்ற
ஞானம் !
கொள்கை கொள்கை என்று சொல்லிக்
கூத்தடித்து மேடைகளில்
துள்ளிவிட்டு ஓய்ந்தபின்பு
தோணும் - வாழ்க்கை
சொல்லுவதுபோல்
இல்லையென்ற
ஞானம் !
================
ஆயிரங் கோடி மனித மனங்களில்
ஆசை அழிகிறது
அதுதான் கவிஞன் நெஞ்சில் புகுந்து
கவிதை பொழிகிறது
பாயும் கண்ணீர் நதிகளில் வாழ்க்கைப்
படகுகள் தெரிகிறது
பகலும் இரவும் அதுதான் எனக்குப்
பாடலைத் தருகிறது !
நெருப்பில் நீந்தும் பாடகன் வந்தேன்
நின்றால் சில சொல் கின்றேன் - நீங்கள்
சென்றால் பின் தொடர் கின்றேன் !
====================
நான் சொல்லிக்கொள்வது இதுதான்
என் பழைய தவறுதல்களுக்காக நான் புதிதாக
வருத்தப்பட வேண்டியதில்லை - அவை தவறுகளாக
இருந்தால்,
என்னுடைய பழைய சாதனைக்களுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் அவை சாதனைகளாக இருந்தால்.
1978 - மனச்சிறகு முதல் பதிப்பில்;
=======================================
அமைதியைத் தேடி
தன்னந்தனித்தீவில்
தமிழ்க் கவிதை நூல்களுடன்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும்
உண்ணக் கனிவகைகள்
உறங்கிவிழ மர நிழல்கள்
எண்ணக் களஞ்சியத்தை
எழுதிவைத்த புத்தகங்கள்
வீசும் இளங்காற்று
விசிறிவிடத் தென்னைமரம்
ஆசைப் பறவைகளின்
அன்றாட புதுகீதம் !
போதும் இவை எனக்கு
போய்விடட்டும் என்கப்பல்
ஏதும் துயரமில்லை
எள்ளளவும் துன்பமில்லை!
வாழ்க எனும் வாழ்த்து
வாராத பூமியது !
வீழ்க எனும் முழக்கம்
மேவாத சீமை அது !
வஞ்ச மனமுடைய
மனிதர்களின் காற்சுவடு
நெஞ்சை மிதிக்காத
நிம்மதியின் இல்லமது !
ஆர்த்து முரசொலிப்போர்
அங்குவர மாட்டார்கள்
பார்த்துக் கெடுப்பவர்கள்
பக்கம் வர மாட்டார்கள் !
தன்னந் தனித் தீவில்
தடமறியாத் தொலைத்தீவில்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும் !
போதும் உலகோடு
போராட்டம் செய்ததெல்லாம்...
மீதம் எதுமிலை
வேண்டியது தனிமைநிலை!
தன்னத் தனித்தீவில்
தமிழ்க் கவிதை நூல்களுடன்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும் !
=======================
நாடும் நாமும்
எட்டுத் திட்டம் போட்டு விட்டு
எட்டி எட்டிப் பார்த்துவிட்டு
ஏங்குகிற நாட்டினிலே
வாழ்கிறோம் - பசி
இட்டு விட்ட கட்டளைக்குச்
சட்ட திட்டம் யாவும் விற்றுக்
கெட்டுவிட்ட காரணத்தால்
தாழ்கிறோம் !
கட்டுக் கட்டு நோட்டடித்துக்
காரு சீரு பேரு வாங்கிக்
கதையளக்கும் சிலரையிங்கு
பார்க்கிறோம் - இதைக்
கட்டு செய்து வெட்டிவிட்டுக்
கதைமுடிக்க உதைகொடுக்கக்
கைவலிமை இல்லையென்று
வேர்க்கிறோம் !
மொட்டு மொட்டுப் பூக்க ளொத்த
முல்லை இளம் பிள்ளை களின்
முன்பு வருங் காலமென்ன
ஆவது ? - இந்த
முட்டுக் கட்டைக் கூட்டத் திற்கும்
முட்டுக் கொடுத்தே நிறுத்தும்
முட்டி உடைக்காமலா நாம்
போவது ?
=======================
கவிதை எப்போதும் கவிதைதான்.
அதில் புதிது
பழையது இல்லை. கவிதையாக இருந்தால்
அது ஒரு போதும் பழையதாவத்தில்லை.
=====================
புதிதாக்ப் பார்ப்பவனும் புதிதாக்கிச் சொல்பவனும்
தான் கவிஞன்.
================
மனச் சிறகு
உன்னுடன் வாழாமல்
உனக்காக வாழ்கிற பேதை - நான்
உன்னை நினைத்திந்த
மண்ணில் தவம் செயும் சீதை !
சூரியன் பாதையில்
சுற்றும் முகமலர் நெருஞ்சி - நான்
ஆருயிர்க் காதலன்
பேர்சொல மலர்ந்திடும் குறிஞ்சி!
தேர்வரும் வீதியில்
ஊர்வலம் காண்கிறேன் நெருங்கி - உன்
பார்வையில் வாழ்ந்திடும்
பாவனை கொள்கிறேன் மயங்கி !
உன்னுடன் வாழாமல்
உனக்காக வாழ்கிற பேதை - நான்
உன்னை நினைத்திந்த
மண்ணில் தவம் செயும் சீதை !
=--=======================
ஒரு கவியரங்கத்தில் கவிஞர்களுக்கு வாழ்த்துப்பா ..
முல்லைமலர் அல்லிமலர் மல்லி கைப்பூ
முத்துமலர் அத்தனையும் மொத்தம் சேர்த்து
மெல்ல மெல்லத் தொடுத்திட்ட மாலை போல
மேடையிலே பாப்பூக்கள் மலரச் செய்து
வெல்ல வெல்ல நல்லநல்ல கவிதை தன்னை
வீற்றிருக்கும் தோழரெல்லாம் பாடினார்கள்!
கொள்ளை கொள்ளை மகிழ்ச்சியிலே - இவர்கட் கெல்லாம்
கொடை கொடுக்கத் துடிக்கின்றேன் ; எதுவும் இல்லை!
பாரியைப்போல் நானிருந்தால் - இவர்கட் கெல்லாம்
பல்லக்கு தேர்யானை பரிசளிப்பேன்!
ஓரியெனும் மன்னவனாய் இருந்தால் - வில்லால்
உலகத்தை வென்றிவர்க்கு கொடை கொடுப்பேன் !
என்னிடத்தில் தமிழன்றி எதுவும் இல்லை!
ஏழைமகன்! என்ன செய்வேன்? குமணன் போல
என்னுடைய தலை கொடுக்கவருவேன் - ஆனால்
விலை கொடுக்க எவர் வருவார் ? ஆகையாலே
வார்த்தைக்குப் பஞ்சமில்லை; இருப்புத் தீர்ந்து
வற்றிவிடப் போவதில்லை ! எவரும் இங்கே
பாத்தியதை கொண்டாடி வழக்குப் போட்டுப்
பகைத்திருக்கப் போவதில்லை! ஆதலாலே
நேர்த்தியுடன் பாடிய இக் கவிஞர் தம்மை
நெஞ்சாரப் போற்றுகிறேன் வாழ்த்துகின்றேன் !
கீர்த்தியுடன் என்குலத்துக் கவிஞர் வாழ்க
கிளர்ச்சியுடன் செந்தமிழ்த்தாய் வளர்ச்சி சூழ்க!
======================================
தமிழக அரசு இவருக்கு வழங்கிய விருதுகள் :
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)
இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)
இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’
பொதுவாக நான் கவிதை புத்தகங்கள் விரும்பி வாசிப்பதில்லை.... இந்த பதிவை படித்ததும் என் என்னத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் போல் உள்ளதே?!
ReplyDeleteNarukenru thaikum kavidhaigal
ReplyDeleteஅருமையான கருத்து வரிகள். சமூக விரிசல்களை சுட்டிக்காட்டிய கருத்துகள்.
ReplyDeleteதாங்க முடியாத மகிழ்ச்சியால் மரங்கள் தலையாட்டுகின்றதே
ReplyDeleteபூமிக்கடியில் வேர்கள் புல்லாங்குழல்
வாசிக்கின்றதோ. மேத்தாவின் பூத்தாடும் வரிகள் இவை
This comment has been removed by the author.
ReplyDeleteமேலும் இதுபோன்ற பூக்கள் பற்றிய கவிதைகளை வரிகளை படிக்க 👇
ReplyDeletepookal kavithai in tamil