கம்ப்யூட்டரில் முதல் அனுபவம் குறித்து அழைப்பு கொடுத்திருக்காங்க
எழில் இந்த பதிவு மூலமா நானும் “ஜோதியில்” கலக்கிறேன்.
கணிணி பற்றி ஒவ்வொருவரும் எழுதும் தொடரும் சுவாரசிமாக இருக்கிறது என் நினைவுகளையும் தூண்டி விட்டது. வலையுலகத்தை சுற்ற புதியவகை ரேவர் வாகனத்திற்கு எம்மையும் அழைத்து வெள்ளை கொடி அசைத்து துவக்கிவிட்ட
ராஜி அவர்களுக்கு நன்றி.
கணிப்பொறி பற்றி உயர்நிலை படிக்கும் போது அறிந்திருந்தாலும் அதைப்பற்றிய பெரிய ஆர்வம் இல்லை அதை பார்க்கும் வரைக்கும். சர்வஜன மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் போது PSG தொழில் நுட்ப கல்லூரியில் கண்காட்சியில் வைத்திருந்தார்கள். அப்போது கம்யூட்டர் படிப்பவர்கள் எனக்கு அந்தஸ்துள்ளவர்களாக தெரிந்தார்கள் இது நமக்கு எட்டாக் கனி என்று மனதில் பதிந்து விட்டது. தொழிநுட்ப படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக அது தவிர்க்கப்பட்டது. எனக்கு ஆலோசனை கூறுவதற்கும் யாரும் இல்லை. கோவை அரசு கலைகல்லூரியில் கணிதப்பிரிவில் எனது படிப்பை தொடர்ந்தேன். அங்கு போர்ட்ரான் ஒரு பாடமாக இருந்தது. ஆனால் அப்போதும் கண்பொறியை தொட்டுப் பார்த்ததில்லை. டைப்ரைட்டர் இயந்திரம் இதற்கு மாற்றாக (ஙே?!) என் கண்ணில் பட்டது. நண்பனின் தூண்டுதலால் டைப்ரைட்டர் கிளாசில் சேர்ந்து குறுகிய காலத்தில் ஹை ஸ்பீட் வரைக்கும் தேர்ந்தேன். அக்கவுண்டன்ஸி படிக்கல இருந்தாலும் ஒருத்தர்கிட்ட அரிசி கடை கணக்கு எழுதி கற்றுக்கிட்டேன்.
கல்லூரி படிப்பு முடிஞ்சு வேலை தேடிய போது நண்பன் உதவியால் ஒரு டெக்ஸ்டைல் மெசின் கம்பெனியின் முகவரி கொடுத்து பார்க்க சொன்னார்கள்.
அங்கே நாலஞ்சு கம்யூட்டர் இருந்துச்சு. காலர தூக்கி விட்டுக்கிட்டேன். ஆனா வேலை அங்க கிடையாது (போச்சா ! போச்சா ! ) அந்த ஆபிஸோட ப்யூன் இன்னொரு முகவரிக்கு என்னை கூட்டிட்டு போனான். அது அந்த கம்பெனியோட தொழில் முறை ஏஜெண்டு அட்ரஸ். அந்த பங்களாவின் மேல் மாடி அறைதான் ஆபீஸ். விசாரிப்பு அப்புரம் டெஸ்டு பத்து நிமிசத்தில பட படன்னு அடிச்சு கொடுத்தேன். வேலை கிடைத்தது ஆனா அங்கே டைப்ரைட்டர் ஒரு போன் மட்டுமே இருந்துச்சு.
முதலாளி பக்கத்தில ஒரு நாய் ஜெய்ஜாண்டிக்கா காலடியில் படுத்து கிடந்தது.
நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்க தயங்கி, தயங்கி இதுதான் “ஆபீஸா சார்”
ஆமாம்பா ஏன்?... நாளைக்கு புதன் கிழமை நல்ல நாளு ஒன்பதரை மணிக்கே வந்துருன்னாரு மொதலாளி.“சொக்கா உனக்கு வந்த சோதனைன்னு !” மனசில நினைச்சுகிட்டேன். ஆனா குடும்பசூழ்நிலை எந்த வேலைன்னாலும் சேர அப்ப ரெடியா இருந்தேன்.
அங்கே தான் ஆங்கிலத்தில் போன்ல பேசி பழகி கிட்டேன். அடுத்த மாசத்திலேயே கம்ப்யூட்டரும் வந்திடுச்சு கூடவே ப்ரோக்ராம் படிச்ச பெண்ணும் வேலைக்கு சேர்ந்தாள். என் கண்ணு அந்த கம்யூட்டர் மேலேயே இருந்திச்சு, அட நம்புங்க !.. ஏன்னா அவள விட கம்யூட்டர் எனக்கு அழகா தெரிஞ்சது.
அவளுக்கு நடந்த உபசரிப்பு யப்பா! என் காதில் புகை வராத குறைதான். அவள் காஃபி டீ எல்லாம் சாப்பிட மாட்டாளாம் பால் தானாம்.
அவள் எப்படி மோனோக்ரோம் (கருப்பு வெள்ளை) கம்ப்யூட்டரை இயக்குகிறாள் என்பதையும் டாஸ் கமெண்ட்ஸ் களையும் மனப்பாடம் செஞ்சுகிட்டேன். அப்ப விண்டோஸ்-3 கிடையாது. ஒவ்வொரு புரோக்ராம் இருக்கும் டைரக்டரிக்கு உள்ள நுழைஞ்சு அந்த exe பைல்லோட பெயர தட்டினா புரோக்ராம் உள்ள நுழைஞ்சிடலாம் வெளியேறுவதற்கு பைல் எக்ஸிட் இப்படி C :\ ப்ராம்ப்டிற்கு திரும்ப வந்திடலாம்.
சமயம் கிடைக்கும் போது எப்படியோ தட்டு தடுமாறி சி ப்ராம்டில் இருந்து புரோக்ராம் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தெரிந்து கொண்டேன். அப்பதான் சிக்கல் ஆரம்பமாச்சு அடுத்த நாள் கம்யூட்டர் பூட் ஆகல. அவள் என்மேல் புகார் சொன்னாள் சரியா சட்டவுண் செய்யாம ஆப் செஞ்சதால் பூட் பைல் கரப்ட் ஆகி பூட் ஆகல.
மொதலாளி சொன்னாரு நீ டைப்ரைட்டர் மாதிரி பட படன்னு தட்டியிருப்ப ஃபெதர், ஃபெதர் டச் கொடுக்கனும்னாரு.
அப்ப ஏற்பட்ட கோபம், அது வெறியா மாறி எப்படியும் கம்ப்யூட்டர் கத்துகிறதுன்னு முடிவு பன்னினேன். முதலாளி வெளியூர் போகும் சந்தர்பமெல்லாம் எனக்கு அங்க தான் ஸ்டே. அவர் வாங்கி வெச்சு இருக்கும் கம்யூட்டர் புத்தகங்கள மேஞ்சேன். அதுக்கப்புரம் முதலாளியே ஆச்சர்யப்படும் படியா...வேர்ட்ஸ்டார், வேர்ட், லோட்டஸ்123, க்யூப்ரோ(அப்போதைய எக்ஸெல்), ஃபாக்ஸ்புரோ, டேலி எல்லாம் புகுந்து வருவேன். எல்லாம் “பழகு தப்பு நடந்தா பரவாயில்ல” (trial and error) பாணி தான். அந்த பெண்ணா அவள் ஏற்கனவே ஒருத்தர காதலிச்சு இருந்ததால திடீர் கல்யாணம் செஞ்சுகிட்டா அப்பீட்டு !.
அதிலிருந்து கம்ப்யூட்டர் எனக்கு ஒரு தனி உலகத்தை காட்டிச்சு, அவள் என் கேர்ல் ப்ரெண்ட் ஆனாள்?. ஏன் தோழன் இல்லையா ? உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. நம் நாட்டு நதிகள் எல்லாம்(பெரும்பாலும்) பெண்களின் பெயரால இருக்குது அதனாலயே என்னமோ கம்ப்யூட்டர் எனக்கு பெண்ணாகவே தோற்றம் அளிக்கிறது. இது வரைக்கும் எனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு விவரிக்க முடியாத ஒன்று. எனக்கு பல விசயங்கள அவள் கற்றுக் கொடுத்திருக்கிறாள், இன்னும் நான் கற்றுகொண்டே இருக்கிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், அவளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
அப்ப ஆபீஸ்ல நடந்த ஒரு சம்பவம். புதுசா இரண்டு பெண்கள் வேலைக்கு சேர்ந்தாங்க. ஈட்டி க்கு ஆபிஸில் எல்லா இடங்களுக்கும் போகும் சுதந்திரம் இருந்தது. (ஈட்டியா..அந்த வளர்ப்பு நாய்ங்க!) நான் வெளி வேலையா... (என்ன வேலையா லெட்டர் போஸ்டிங் !) போய்ட்டு திரும்பி வந்தேன் ரெண்டு பேரும் கைய பிசஞ்சுகிட்டு நிக்கறாங்க நம்ம ஹீரோ பேக்ஸ் தாள கடிச்சு பிச்சு சுருட்டி முன்னங்காலுக்கடில வைச்சுகிட்டு வாலை ஆட்டி “இப்ப..என்ன செய்வீங்க.. இப்ப..என்ன செய்வீங்க..” என்ற ரேஞ்சில நின்னிட்டு இருக்காரு.
ஹா..ஹா..ஹா.. என்னால சிரிப்ப அடக்க முடியல, ஏன்னா இந்த அனுபவம் எனக்கு முன்னமேயே ஏற்பட்டிருக்கு.
கொரியன் பேக்ஸ் மெசின்ல பேக்ஸ் தகவல் தாளில் பிரிண்ட் ஆகி வெளிய வரும் முடிஞ்சதும் கட்டரினால் கட் செய்யப்பட்டு விழும்.
மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழ அதை கவ்வி துவம்சம் செஞ்சிட்டான் நம்ம ஹீரோ ஈட்டி. அவருக்கு எந்த பேப்பர் கீழே விழுந்தாலும் அவருக்குதான் சொந்தம். (ஹி..ஹி)
பேக்ஸ் மெசினில் காலிங் டேட்டா எடுத்து சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு போன போட்டு பிரச்சினைய தீர்தேன்.
பின்னாளில், “க்யூலிங்க்” மூலமாக கம்யூட்டரில் இருந்து எளிதாக பேக்ஸ் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் உபயோகித்தேன்.
கலர் மானிட்டர் வந்த பின்னாடி நிறுவனத்தின் விற்பனையை விரிவு படுத்தும் நோக்கில் மியூசிக்கோட “ஸ்லைட் ஷோ” பவர்பாய்ண்டில் தயாரிச்சு கொடுத்தேன் என் திறமையை வெளிக்காட்டுவதா அமைஞ்சது.
நூறு பேருக்கு சர்குளர் அனுப்பனும்னா ஃபாக்ஸ்புரோ புரோக்ராம் மூலமா ப்ரிண்டரில் லேபில் தயாரிச்சு பின் பொது லெட்டரை வேர்ட் மெய்ல் மெர்ஜ் மூலமாக பிரிண்ட் எடுத்து தயார் செய்து கொடுப்பேன்.
ஒரு வருட அக்கவுண்ட்சை ப்ரிண்ட்ல போட்டுட்டு டீ சாப்பிட வெளிய போய்டு வந்து எடுத்துப்பேன். (tvs printer ம் tally software ம் இந்தியரின் திறமைக்கு ஒரு சான்று) டேலி சொல்யூசன்ஸ் திரு.கோயங்கா(S.S. Goenka ) அவர்களால் துவக்கப்பட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் (NASSCOM) பெற்றுள்ளது
இன்னொரு சமயம் டேலியில் (tally) போட்டு வைச்சிருந்த ஒருவருட கணக்கு பேக்கப் எடுத்து வைக்காததால திரும்ப போடும் படியா ஆகிடுச்சு போர்ட் நைட்ல (14 நாள்) திரும்ப ரெடி செஞ்சு குடுத்தேன்.
எதுக்கு சொல்றேன்னா வேலையில் தவறு ஏற்படறது சகஜம் அதை ஏற்றுக் கொண்டு எப்படி தீர்கறது என்று பார்க்கவேண்டும். அதை சந்திக்கும் தைரியத்தை நாம் இழக்க கூடாது.
கம்யூட்டர் மேலிருந்த ஆர்வமே இன்றைக்கும் என்னை வலைப்பதிவு எழுதத்தூண்டியது.. எழுதி வருகிறேன். (ஸ் அப்பா...டா!)
நட்புடன்,
கலாகுமரன்.